Thursday, December 30, 2010

வாவ்... தாஜ்...


Sunday, December 26, 2010

தாஜ்மஹால் தரிசனம்

தாஜ்மஹால்.. இதை பாடாத கவிஞர்கள் இந்தியாவில் இல்லை.. இதை வரையாத ஓவியர்கள் இல்லை.. இதன் குறிப்புக்கள் இல்லாத பாடபுத்தகங்களும் இல்லை.. காலங்காலமாய் காதலின் கருப்பொருளாய் அழகின் அடையாளமாய் சித்தரிக்கப்பட்ட ஒரு மாளிகை.. இந்திய சுற்றுலாவின் சின்னம்..

சின்ன வயதிலிருந்தே ஓவியங்களாகவும் புகைப்படங்களாகவும் திரைப்படங்களாகவும் மனதில் பதிந்த ஒரு பிம்பத்தை நேரில் பார்க்கும் போது எப்படியிருக்கும்? ஆக்ரா பிரதான சாலையிலிருந்து தாஜ்மஹால் இருக்கும்  இடத்திற்கு ஒட்டகத்தில் வந்து இறங்கினோம். முன்னால் ஒரு பெரு மண்டபம்... சற்றே குறுகலான வாயில்.. அதன் வாசலை நெருங்கும் வரை தாஜ்மஹால் இருக்கும் இடமே தெரியவில்லை. அதைக்கடந்தவுடன் நம் முன்னால் வாவ்.. நிஜ தாஜ்மஹால்... உலக அதிசயத்தை தரிசித்துக்கொண்டிருகிறோம் என்கிற பிரமிப்பே வாய் பிளக்கவைகிறது.  சட்டென்று தாஜ்மஹாலை தரிசிக்கும்போது நம் உடலில் ஏற்படும் மெல்லிய சிலிர்ப்பை அடக்க முடியவில்லை.

தாஜ்மஹால் ஏன் உலக அதிசயம்? இதில் மூன்று விஷயங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.. இதன் அழகு, இதிலுள்ள அதிநுட்ப நுணுக்கம் மற்றும் இதன் நேர்த்தி.. இந்த மூன்றும் சேர்ந்துதான் இன்று தாஜ்மஹாலை உலகத்தின் சிறந்த கலைப்படைப்பாக விளங்க வைக்கிறது. தாஜ் அழகுபற்றி சொல்லவே வேண்டாம். இருபுறமும் உள்ள தோட்டங்களை ரசித்துவிட்டு தாஜ்மஹால் செல்வதற்கே கொஞ்ச நேரம் பிடிக்கிறது. தாஜ்மகாலில் ஒவ்வொன்றும் மிக நுட்பமாக  அதி கவனத்துடன்  அமைக்கப்பட்டிருகிறது. முதல் வாயிலைக்கடந்தவுடன் கொஞ்சம் சிறியதாக தெரியும், அனால் அருகே செல்ல செல்ல அதன் பிரமாண்டம் அதிகரிக்கும். பின் அந்த பளிங்கு மாளிகையின் படிகளில் ஏறினால் மேல்கூரைகூட தெரியாது. தாஜ்மஹாலை சுற்றியுள்ள நான்கு தூண்களும் சற்றே சாய்ந்து இருக்கும். ஏதாவது அசம்பாவிதம் நடந்து அந்த தூண்கள் விழுந்தாலும் தாஜ்மஹாலில் விழாது. தாஜ்மஹால் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் உலோக தூண் பாரசீக மற்றும் இந்து குறியீடுகளை கொண்டது. முதலில் தங்கத்தினால் செய்யப்பட்ட இதை எடுத்துவிட்டு  ஆங்கிலேயர்கள் பித்தளை தூணாக மாற்றினார்.

இந்த அதிஅற்புதமான கட்டிடதுக்குப்பின் 22000 பணியாளர்களின் 20 வருட உழைப்பு இருக்கிறது, உலகின் தலை சிறந்த நிபுணர்களின் கைவண்ணம் இருக்கிறது. மேலும் இதன் பணிகளுக்கு கிட்டத்தட்ட ஆயிரம் யானைகள் உபயோகப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. அந்த காலத்திலேயே 3.5 கோடி ருபாய் செலவு பிடித்தது  (அப்போது சுப்ரீம் கோர்ட் எல்லாம் இல்லை.. யாரும் பொதுநலவழக்கு தொடரமுடியாது).. இருக்காத பின்னே.. இங்கு பதிக்கப்பட்ட ஒவ்வொரு கற்களும் உலகத்தின் பலதிசைகளிருந்து எடுத்து வரப்பட்டன.. ராஜஸ்தானிலிருந்து பளிங்கு கற்கள், சீனாவிலிருந்து நீலப்பச்சை கற்கள் மற்றும் படிகங்கள், அரேபியாவிலிருந்து இரத்தினக்கல், பஞ்சாபிலிருந்து சிலிகன் கற்கள், இலங்கையிலிருந்து நீலக்கல், மற்றும் ஆப்கனிஸ்தான், திபெத், ஐரோப்பாவிலிருந்துகூட சில பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

ஆனால் இவையெல்லாம் விட அந்த வெள்ளை மாளிகையில் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது. எவ்வளவு முறை திரைப்படங்களிலும் புகைப்படங்களிலும் பார்த்திருந்தாலும், நேரில் பார்க்கும்போது தாஜ்மஹாலின் அழகிலும் நேர்த்தியிலும் லயித்துபோகாமல் இருக்கமுடியவில்லை. இதற்கு காதல் பின்னணியும் ஒரு காரணமாக இருக்கலாம்.. ஏனென்றால் முகலாய சாம்ராஜ்யத்திலும் சரி.. மற்ற சாம்ராஜ்ஜியகளிலும் சரி.. இன்று பாரம்பரிய இடங்களாக திகழ்பவை கோட்டைகளும் அரண்மனைகளும், சமாதிகளும் தான்.. கோட்டைகள் தங்கள் வெற்றியை நிலைநாட்டவும் தங்களின் பாதுகாப்புக்காகவும் கட்டப்பட்டவைகள்.. அரண்மனைகள் தான் எவ்வளவு பெரிய சக்கரவர்த்தி என்பதை உலகுக்கு காட்டுவதற்காக கட்டப்பட்டவை.. பெறும் பொருட்செலவில் கட்டப்படும் சமாதிகளும் இதே  காரணங்களுக்காகத்தான்.. ஆனால் தாஜ்மஹால் அன்பினால் காதலினால் ஈர்க்கப்பட்டு ரசித்துக் கட்டப்பட்டது.. அதனால்தான் அந்த மாளிகையில் 400 வருடங்கள் கடந்தும் இன்னும் ஒரு ஜீவன் இருப்பதை மறுக்கமுடியாது.

தாஜ்மஹால் ஒரு காதல் சின்னம் என்பதில் கருத்து வேறுபாடுகள் இல்லை. ஆனாலும் சில விஷயங்கள் நெருடுகிறது. ஷாஜஹானுக்கு மும்தாஜ் மூன்றாவது மனைவிதான். (மற்ற இரு மனைவிகளுக்கும் தாஜ்மஹலுக்கு இடப்புறமும் வலப்புறமும் 'கொஞ்சம் சாதரணமான' சமாதிகள்.. அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று தெரியவில்லை..) ஷாஜஹானுடன் வாழ்ந்த 18 வருடங்களில் 14 குழந்தைகளை ஈன்றெடுத்து, கடைசி பிரசவத்தில் இறந்து போனார் மும்தாஜ். தன் வாழ்நாளில் பாதிநாட்கள் கர்ப்பிணியாகவே இருந்திருக்கிறார். அதுமட்டும்இல்லாமல் போர்க்களத்துக்கு செல்லும்போதும் கூட ஷாஜஹான் மும்தாஜை கூடவே அழைத்துச்சென்றதாக குறிப்புகள் உள்ளது. இதனால் மும்தாஜ் ஷாஜஹானுடன் சந்தோஷமாக நிம்மதியாக வாழ்திருப்பது சந்தேகம்தான். ஷாஜஹான் மும்தாஜை ஒரு அழகுப்பதுமையாக பார்த்து கண்மூடித்தனமாக காதலித்தாரே தவிர ஒரு மனைவிக்கு  உண்டான  மரியாதையை கொடுத்திருக்கமாட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. இது ஷாஜஹானுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கலாம். இதனால்தான் மும்தாஜ் இறந்தபிறகு, தான் ஒரு சக்கரவர்த்தி என்பதையே மறந்து அரசு அலுவல்களில் கவனம் செலுத்தாமல் சில ஆண்டுகள் சோகமாக இருந்திருக்கிறார். கருமையாக இருந்த அவர் தலைமுடி திடீரென முழுவதும் நரைத்துவிட்டதாக செய்திகள் கூறுகின்றன. அதனால் திடீரென மும்தாஜ் நினைவாக ஒரு மாளிகை கட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார்.. ஏற்கனவே பர்ஹான்பூர்  என்கிற இடத்தில்  புதைக்கப்பட்ட மும்தாஜ் உடல் தோண்டிஎடுக்கப்பட்டு இபோது தாஜ்மகால் உள்ள இடத்தில்  அடக்கம்  செய்யப்பட்டது. பின் 20 ஆண்டுகள் தாஜ்மகாலை  கட்டுவதிலேயே  மும்முரமாக  இருந்தார் ஷாஜஹான்.

இது ஒருபுறம் இருக்க பின் பல காரணங்களால் எரிச்சலடைந்த ஔரங்கசீப் (மும்தாஜின் இரண்டாவது மகன்) ஆட்சியை கைப்பற்றி தன் தந்தையை சிறையில் அடைத்தார். ஔரங்கசீப் ஒரு முசுடு.. ஷாஜஹனுக்கு இருந்த கலை ஆர்வம் அவருக்கு இல்லை.. இதுபோன்று மாளிகைகள் கட்டுவதெல்லாம் வீண்செலவு என்று நினைப்பவர். ஷாஜஹானை கைது செய்து ஆக்ரா கோட்டையில் அடைத்த ஔரங்கசீப், அங்கிருந்து ஒரு ஜன்னல் வழியே தாஜ்மஹாலை பார்பதற்கு மட்டும் அனுமதி அளித்திருந்தார். பிறகு ஷாஜஹான் உடல்நலம்குன்றி படுத்தபடுக்கையானபோது ஜன்னல் அருகே ஒரு கண்ணாடி வைத்து அதில் தாஜ்மஹால் பிம்பத்தை கண்டுகொண்டிருந்தார்.  கடைசியாக அந்தக் கண்ணாடியை பார்த்த நிலையிலேயே அவர் உயிர் பிரிந்திருக்கிறது. இப்படியாக எல்லா காதல் சரித்திரங்களைப்போலவே ஷாஜகனின் காதல் கதையும் சோகமாகவே முடிந்திருகிறது. 

ஒரே ஒரு சந்தேகம்...ஷாஜஹான் மும்தாஜை நேசித்தது வேண்டுமென்றால் உண்மையாக இருக்கலாம். ஆனால் மும்தாஜ் ஷாஜஹானை எவ்வளவு தூரம் நேசித்தார் என்று தெரியவில்லை..!

எது எப்படியோ... தாஜ்மஹால் இந்தியாவின் காதல் சின்னம்.. அழகியலுக்கான ஒரு அடையாளம்.. அத்தனை வெளிநாட்டவருக்கும் இந்தியா என்றால் முதலில் நினைவுக்கு வருவது தாஜ்மகால்தான்..
 
இந்தியனாகப் பிறந்துவிட்டு தாஜ்மஹாலை தரிசிக்காமல் இருப்பதில் அர்த்தம் இல்லை.

- இனி என் கேமிரா வழியே தாஜ்மஹால்...

Thursday, December 9, 2010

ஆக்ரா பற்றி...

ஆக்ராவில் நாங்கள் தங்கியிருந்தது தாஜ் மஹால் செல்லும் வி.ஐ.பி சாலையில்.. ஆக்ரா ரயில் நிலையத்திலிருந்து தாஜ் மஹால் செல்லும் சாலை, மற்றும் இந்த வி.ஐ.பி சாலை பிரமாதமாக அமைக்கப்பட்டிருக்கிறது, பல வெளிநாட்டவர் வந்து போவதால்.  ஆனால் இந்த வி.ஐ.பி சாலையில் இருப்பது பெறும் தொல்லை என்கிறார்கள் அங்கு வசிக்கும் மக்கள். யாராவது வி.ஐ.பி வந்தால் பாதுகாப்பு கெடுபிடிகள் எக்கச்சக்கமாக இருக்குமாம். கிளிண்டன், முஷாரப் வந்தபோது நான்கு நாட்கள் வீட்டைவிட்டே வெளியில் வரமுடியவில்லையாம்.

அவர்கள் சொன்னமாதிரியே, அன்று தாஜ்மஹாலை பார்க்க காமன்வெல்த் வீரர்கள் வருவதால் அந்த சாலை  போக்குவரத்துக்கு தடை செய்யப்படிருந்தது. முதலில் ஆக்ரா கோட்டை போக தீர்மானித்தோம். ஒரு ஆட்டோக்காரர் குறுக்கு  வழியில் அழைத்துப்போவதாக சொன்னார். மெயின் ரோடுக்கே வராமல் ஆட்டோவை ஆக்ராவின் சந்து பொந்து சாக்கடை மேலெல்லாம் ஒட்டினர். இருபுறம் கழிவுநீர்களுடன் ஒருவர் மட்டும் நடந்து செல்லக்கூடிய பாதைகளில் குடிசைகளை உரசியவாறு சென்றது ஆட்டோ. சில இடங்களில் இரு சக்கரத்தில் மட்டுமே பயணித்தது. தாஜ் மகாலையும் ஆக்ரா கோட்டையையும்  ரசிக்க வந்த நாங்கள் முதலில் கண்டது ஆக்ராவின் சேரிகளைத்தான்.. ஒரு பக்கம்  வி.ஐ.பிக்களை  வரவேற்பதற்காக அழகான தூய்மையான சாலைகள்.. அதே சாலை பக்கத்தில் மிகவும் அசுத்தமான சேரிகள்...

ஆக்ரா கோட்டை.. பல முகலாய மன்னர்கள் வாழ்ந்த இடம்... ஷாஜஹான் சிறை வைக்கப்பட்ட இடம்... இன்று  யுனஸ்கோவால்  அங்கீகரிக்கப்பட்ட கலாச்சார மையம். கோட்டைக்குள் உள்ளுக்குள் பல கட்டிடங்கள் பற்பல வேலைப்பாடுகள், அலங்காரங்கள் இருக்கின்றன.. பல மன்னர்களால் புதுபிக்கப்பட்ட இந்த கோட்டையின் ஒரு மாடத்திலிருந்து தூரத்தில் அந்த பளிங்கு மாளிகை தெரிகிறது. 

ஆக்ராவில் எல்லா முகலாய மன்னர்களுக்கும் அவர்கள் மனைவிகளுக்கும் சமாதிகள் இருக்கிறது.. சில இடங்களில் பல சமாதிகள் ஒரே கட்டிடத்துக்குள் அமைந்துள்ளன. இவற்றுள் என்னை கவர்ந்தது ஆக்ரா அருகே சிகந்தரில் உள்ள அக்பர் சமாதி. இருபக்கமும் உள்ள பெரிய புல்வெளிகளில் மான்களும் மயில்களும் மேய்ந்துகொண்டிருக்க கிட்டத்தட்ட 120 ஏக்கரில் அமைந்துள்ளது. பார்பதற்கு ஹுமாயுன் சமாதி போலவே இருக்கிறது.

கடைசியாக தாஜ் மகாலுக்கு செல்வதற்கு ஆட்டோவில் ஏறினோம். முன்பு வந்தவர் அதிரடி ஆட்டோக்காரர் என்றால் இவர் அப்பாவி ஆட்டோகாரர். 20 ரூபாய் கேட்டார்..  ஏறி உட்கார்ததும் தாஜ்மகால் திறக்க இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது என்றார் 'இதை முதலிலேயே சொல்லவேண்டியதுதானே.. அத்தனை நேரம் நாங்கள் என்ன செய்வது' என்று லேசாக கடித்துகொண்டோம். அதற்கு அவர் 'பிரச்சனையில்லை.. உங்களை மார்கெட் பகுதியில் இறக்கி விடுகிறேன்.. நீங்கள் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்.. அதுவரை காத்திருக்கிறேன்' என்றார். ஒரு 20 ரூபாய்க்காக முக்கால் மணிநேரம் காத்திருந்து எங்களை தாஜ்மகால் வாசலில் இறக்கி விட்டார். அதேபோல தாஜ் வாசலிலிருந்து தாஜ்மஹால் வரை ஒட்டக சவாரி 4 பேருக்கு வெறும் 20 ருபாய்...! தாஜ்மகாலில் ஒரு கைடு 100 ரூபாய்க்கு 2 மணி நேரம் எங்களுடனே இருந்து எல்லாவற்றையும் அற்புதமாக விளக்கினார். காலையிலிருந்து நீங்கள்தான் முதல் போணி என்று வேறு சொன்னார். உலகத்தின் முக்கியமான ஒரு சுற்றுலாதலத்தில் அதுவும் வெளிநாட்டவர்கள் மொய்க்கும் ஒரு இடத்தில் ஏன் இப்படி ஒரு வறுமை என்று புரியவில்லை.

இனி தாஜ் தரிசனம்..!

- பயணம் தொடரும்

Monday, December 6, 2010

பலூன் படகு பயணம்

ரிஷிகேஷ் செல்பவர்கள் 'river rafting ' என்னும் பரசமூட்டும் நதி படகு பயணத்தை அனுபவித்தே ஆகவேண்டும். நதியின் வேகத்தோடு பயணிப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை காற்றடைக்கப்பட்ட பலூன் படகுகள். அவை நதியின் சீற்றத்துடன் ஈடுகொடுக்கக்கூடியவை.. பாறைகளில் மோதினாலும் உடையாதவை.. கங்கை நதியில் பலூன் படகு பயணம் செல்ல ரிஷிகேஷத்தில் பல இடங்களில், பல விடுதிகளில் இதற்காக முன்பதிவு செய்துகொள்ளலாம். 12 கி.மீ. பயணத்துக்கு 450 ருபாய், 24 கி.மீ.க்கு 750 ருபாய் என்று விதவிதமான பயணங்கள் உண்டு. சில இடங்களில் கங்கை கரையோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கூடாரத்தில் இரவு தங்கும் வசதியும் உண்டு (ரூ 1000 முதல் 2000 வரை)

நாங்கள் சோமானியா பவனிலேயே பதிவு செய்துகொண்டு காலை 8 மணிக்கு  கிளம்பினோம்.  ஒரு ஜீப்பில் கிளம்பி படகு காற்றடிக்கும் இடத்தை அடைந்தோம்.  எங்களுக்காக ஒரு பெரிய பலூன் படகு தயாராக இருந்தது. அதில் 8பேர்  தாராளமாக  அமர்ந்துகொள்ளலாம்.  சிலர் அந்த பலூன் படகை எடுத்து ஜீப்பின் மேல் போட்டார்கள்.. துடுப்புகளை ஜீப்பின் பின்னால் போட்டு விட்டு நம்மோடு ஏறிக்கொண்டார்கள். ஒரு அரைமணிநேரம் மலைமேல் பயணித்து பிரம்மபுரி (ரிஷிகேஷிலிருந்து 12  கி.மீ) என்ற இடத்தை அடைத்தோம். பிறகு ஒரு மலைச்சரிவில் இரண்டு பேர் படகைத் தூக்கிக்கொண்டு வர நாங்கள் துடுப்புகளை எடுத்துகொண்டு நடந்தோம்.. அதோ.. அழகிய கங்கை நங்கை மலைகளூடே ஆர்பரித்து வந்து கொண்டிருகிறாள். காலைக்கதிரில் கங்கை நதி தங்க நதியாக உருகி ஓடிவருவதை  காணும்போது மனம் குதூகலித்தாலும், அதன் நடுவே பயணிக்க வேண்டும் என்றவுடன் லேசாக பயம் கவ்விக்கொண்டது. கரையை அடைந்ததும் அனைவரும் 'லைப் ஜாக்கெட்' மற்றும் தலைகவசம் அணிந்துகொண்டோம்.  படகை ஆற்றங்கரையில் வைத்துவிட்டு காலை எங்கு வைக்கவேண்டும், துடுப்பை எப்படி செலுத்தவேண்டும் என்கிற  வழிமுறைகளை ஆங்கிலம் கலந்த இந்தியில் சொன்னார்கள். பிறகு நம் செல்போன், பர்ஸ், கேமிரா எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு ஒரு பையில் போட்டு பின்னால் வைத்து விடுகிறார்கள்.

எல்லோரும் படகில் உட்கார்துகொண்டு துடுப்பை கையில் பிடித்துகொண்டோம். 'ஹோய்' என்ற சத்தத்துடன் படகை இரண்டுபேர் தள்ளிவிட படகு கங்கையில் மிதக்கத் தொடங்கியது... கொஞ்சம் துடுப்பு போட்டவுடன் படகு வேகமாக நகரத்தொடங்கியது. தெளிவான  குளிர்ந்த  தண்ணீர்  நம்மீது தூறல் போட்டுக்கொண்டே  வந்தது..  மெதுவாக  நகர்ந்து நகர்ந்து இப்போது நடு கங்கைக்கு வந்து விட்டோம்.  ஒரு இளைஞர் கூட்டம் நம்மை விட அதிவேகத்தில் படகை செலுத்திக்கொண்டு கைஅசைத்துக்கொண்டே விரைவாக கடந்து சென்றனர். நாங்கள் என்னவோ மெதுவாகத்தான் துடுப்பு போட்டுக்கொண்டிருந்தோம். நதியும் ஆர்பட்டமிலாமல் எங்களுடன் சமாதானமாக இருந்தது.   'அமைதியான நதியினிலே ஓடம்' என்று நான் பாட நினைத்ததுதான் தாமதம். அதுவரை அமைதியாக இருந்த நதி ஒரு வளைவு வந்ததும் தன் சீற்றத்தை மெல்ல ஆரம்பித்ததும் படகும் துள்ளிக்குதிக்க ஆரம்பித்தது. கொஞ்ச நேரம்தான்... ஆர்பரித்துவரும் நதியலையில் மோதி படகு செங்குத்தாக மேலே ஏறி இறங்கியது.. அவ்வளவுதான்.. எங்களை கடந்து சென்ற ஒரு பேரலை எங்களை தொப்பலாக நனைத்து விட்டது.  பின் 'அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்' என்று பாடினேன்.

அந்த வளைவைக் கடந்ததும் கங்கை கொஞ்சம் அமைதியானது.. 'வேண்டுமென்றால் நீங்கள் இறங்கலாம்' என்று சமிக்கை கொடுத்தார் படகுக்காரர். அருகிலிருந்த ஒருவர் 'தொப்' என்று நதியில் குதித்து படகிலிருந்த கயிறை பிடித்துக்கொண்டார்..  பின்  படகின்  பின்னால் நீந்திக்கொண்டே வந்தார்.. நானும் இறங்கலாமா என்று யோசிப்பதற்குள் 'நதியின் வேகம் கூடிவிட்டது.. படகில் ஏறுங்கள்' என்ற அறிவிப்பு வந்தது. கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு இடத்தில் சில பாறைகள் தெரிந்தன. கடல் அலைகள் சுவரில் மோதினால் ஏற்படுமே அதுபோல உயர அலைகள். படகு நிலைகொள்ளாமல் ஆடியது.. படகுக்காரர்கள் லாவகமாக படகை திசை திருப்பினார்கள். நாங்கள் கையில் துடுப்பை வைத்துகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். மீண்டும் ஒரு வளைவு.. அதே ரோலர் கோஸ்டர் பயணம்... இப்படி பல ரோலர் கோஸ்டர் பயணத்தில் எங்களுடன் மோதிய அலைகள்  எங்களை  சொட்ட சொட்ட நனைய வைத்துவிட்டது.  செல்போன், கேமிராவை தனியாக எடுத்து வைத்ததன்  அர்த்தம் புரிந்தது.

இப்போது நாங்கள் லக்ஷ்மன் ஜூலாவை கடந்து விட்டோம்.. நீரின் வேகம்  குறைந்தவுடன்  'இறங்கலாம்' என்றார் படகுக்காரர். இந்தமுறை நான் தயாராகிவிட்டேன். கயிறை பிடித்துகொண்டு நடு கங்கையில் குதித்தேன். உடல் முழுவதும் ஜில் என்ற பரவசம்.. காலுக்கு அடியில் பல அடி ஆழம் இருக்கும் என்று தெரிந்தது (50௦அடியாம்). லைப் ஜாக்கெட் அணிந்திருந்ததால் ஜாலியாக மிதந்து கொண்டிருந்தேன். ஐந்து நிமிடம்தான்.. அச்சம், குளிர் எல்லாம் பறந்து விட்டது. இப்போது கயிறையும் விட்டு விட்டு ஆனதமாக நடு கங்கையில் நீந்திக்கொண்டிருந்தேன். படகை விட்டு கொஞ்ச தூரம் தள்ளி மிதக்கும் அளவுக்கு தைரியம் வந்தது. எப்படியும் மார்புக்கு மேலே தண்ணீர் போகாது என்கிற தைரியம்... அலுக்க சலிக்க கங்கையில் நீந்திவிட்டு பின் படகில் ஏறிக்கொண்டேன். கிட்டத்தட்ட ஒரு மணிநேர பயணத்துக்குப் பிறகு கடைசியாக எங்களை நாங்கள் தங்கியிருந்த விடுதியின் பின்புறம் இறக்கி விட்டதுதான் பரவசத்தின் உச்சகட்டம்.

ஏதோ கங்காஸ்நானம் என்று சொல்லிக்கொண்டு தம்மாதூண்டு சொம்பில் கங்கைநீரைக் கொண்டுவந்து தலையில் தெளித்துக்கொள்வார்களே... அதெல்லாம் வீண்... இனி ஏழேழு ஜன்மங்களுக்கும் சேர்த்து கங்காஸ்நானம் செய்தாகிவிட்டது. அவ்வளவு முறை கங்கையில் முங்கி எழுந்தாகிவிட்டது.

ரிஷிகேஷ் செல்பவர்கள் பலூன் படகு சவாரியை அனுபவிக்காமல் வாராதீர்கள். சில  யோசனைகள் - நதியில் இறக்கிவிடுவீர்களா என்று முன்பே கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.. சாதாரண கனமில்லாத உடைகளையே  அணிந்துகொள்ளுங்கள்..  ஜீன்ஸ் வேண்டாம்.. ஷூ வேண்டாம்.. செருப்பு அணிந்து கொள்ளுங்கள்..

இனி மொகலாய ஆட்சியின் சின்னம்.. ஆக்ரா நகரம்..!

- பயணம் தொடரும்...

Thursday, November 18, 2010

ரம்யமான ரிஷிகேஷம் - ஒரு வடஇந்தியப் பயணம்

அமிர்தசரசிலிருந்து ஹரித்வார் வந்து இறங்கினோம். அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து ரிஷிகேஷ் சென்றோம். அங்கு எல்லாமே நம்மவூர் ஷேர் ஆட்டோ  அளவுக்கு  இருக்கிறது.. ஒரு மணிநேரம் அந்த 'லோட லோட' ஆட்டோவில் பயணித்து ரிஷிகேஷ் வந்து சேர்ந்தோம். நடுநடுவே கங்கையின் பல கிளை நதிகளைப் பார்க்க முடிந்தது.

ரிஷிகேஷில் வந்து இறங்கியது ஜானகிதேவி சோமானி பவன். அது ஹோட்டல் அல்ல..குறைந்த அளவில் அறைகளை கொண்டு நடத்தப்படும் ஒரு அறக்கட்டளை. அறை கிடக்க கொஞ்சம் நேரமானது. அதற்குள் எங்காவது குளித்துவிட்டு சிற்றுண்டி சாப்பிடலாமா என்று ரிசப்ஷனில் கேட்டேன். 'செய்யலாம்..பின்புறம் செல்லுங்கள்' என்றார்கள். சரி பின்னால் ஏதோ ஒரு பொது குளியலறை இருக்கும் என்று சென்றால்... என்ன ஆச்சரியம்.. என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை...

அகண்ட கங்கை  நதி  பிரவாகமெடுத்து ஓடிக்கொண்டிருகிறது.. பின்னால் ஓங்கி உயர்ந்து நிற்கும் இமயமலைச் சாரல்... 'ஒ'வென்ற ஓசையுடன் நகர்துகொண்டிருக்கும் தண்ணீரின் சலசலப்பைத்தவிர வேறெந்த சப்தமும் இல்லை. நான் என்னை மறந்த நிலையில் நின்றுகொண்டிருந்தேன். கங்கை நதியில்தான் என்ன ஒரு கம்பீரம், என்ன ஒரு ரம்யம், இந்தியாவுக்கு இயற்கை அளித்த கொடை இந்த கங்கையும் இமயமும்...  சிறிது நேரம் கழித்துதான் நான் பார்ப்பது நிஜம் என்ற உணர்வே வந்தது. ரொம்பநாள் பசியோடு இருந்தவன் அவசரஅவசரமாக உண்பதைப்போல, எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு அந்த இயற்கை கொஞ்சும் எழிலை என் இரு கண்களில் பதித்துக்கொண்டேன். கங்கையின் பயணம் மிகப்பெரியது..இயத்தில் உள்ள பனிப்பாறைகள் உருகி கங்கோத்ரியில் துவங்கி பாகிரதி நதியாக தேவப்பிரயாகை வந்து அடைகிறது. இதோடு இன்னொரு பக்கம் அலக்நந்தா நதி இணைத்துக்கொள்ள அங்கிருந்து கங்கை நதி தன் பயணத்தை துவக்குகிறது. ரிஷிகேஷத்தில் இமயமலையை விட்டு இறங்கி ஹரித்வாரம், கான்பூர், காசி, பாட்னா, கொல்கத்தா வழியாக சென்று, 2500 கி.மீ பயணித்து, வங்காள விரிகுடாவில் கலக்கிறது.. இமயத்திலிருந்து நேரடியாக வருதால் ரிஷிகேசத்தில்  மாசுபடாத கங்கை சாம்பல்நிறத்தில் ஓடிக்கொண்டிருகிறது. 


சோமானி பவன் பின்புறம்

கங்கையின் அருகே நின்று ரசிப்பதற்கு ஒரு படித்துறை.. இறங்குவதற்கு சில படிகள். கங்கையின் வளைவு நெளிவுகளூடே இந்தப்படிதுறை  கிட்டத்தட்ட  ரிஷிகேஷம் முழுவதும்  நீண்டுகொண்டே செல்கிறது. அங்கங்கு தூவப்படும் சம்மங்கிப் பூக்கள் நதியோடு  பயணித்துக்கொண்டிருகிறது. வெளியில் வெயில்.. ஆனால் கங்கையில் காலை வைத்தால் ரத்தம் உறைந்துபோகுமோ என்று நினைக்கும்  அளவுக்கு குளிர்ச்சி...!  நம் உடல் உஷ்ணம் அந்த குளிர்த நீருடன் ஒத்துபோவதற்க்கு கொஞ்ச நேரம் பிடிக்கிறது. பிறகென்ன.. ரிஷிகேஷத்தில் இருந்த இரண்டு நாட்களும் கங்கையில் ஆனந்த குளியல்தான்..அந்த சுகானுபவத்தை அனுபவிக்கத்தான்  முடியும்.. வார்த்தையில் விவரிக்க முடியாது. அனால் அங்கு கங்கையின் வேகம் அதிகம். இரண்டு படிகளுக்கு மேல் கிழே இறங்கினால் கால்  நழுவுகிறது. (ஏதோ படித்துறையில் நின்று கொண்டு குளித்ததையே பெரியதாக நினைத்துக்கொண்டிருந்தேன்.. அனால் அடுத்தநாள் நடு கங்கையில் இறங்கப்போகிறேன் என்று அப்போது தெரியாது.. அதை அடுத்த பதிவில் பாப்போம்)

 
லக்ஷ்மன் ஜுலா
 ரிஷிகேஷத்தில் கங்கையை கடக்க லக்ஷ்மன் ஜூலா, ராமன்  ஜூலா என்று இரண்டு தொங்கு பாலங்கள் இருக்கின்றன. நடந்து செல்வதற்கு மட்டுமே அமைக்கப்பட்ட மிகவும் குறுகலான இந்த பாலத்தில் இருசக்கர வாகனங்களும் செல்கின்றன..கூடவே ஆடு மாடுகளும்..கையில் உணவுப்பொருட்கள் ஏதாவது வைத்திருந்தால் லபக் என்று அபகரிக்கும் வானரங்கள்... இவற்றுக்கு நடுவே லேசாக ஆடிக்கொண்டிருக்கும் பாலம்... கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.. ஆனால் 1937ல் கட்டப்பட்ட பாலம் இன்னும் வலிமையாகத்தான் இருக்கிறது..

ரிஷிகேஷதிலும் சரி ஹரித்வரதிலும் சரி அந்தி சாயும் நேரத்தில் கங்கைக்கு மங்கள ஆரத்தி காண்பிக்கும் நிகழ்ச்சி மிகப்பிரபலம். மாலை கீழே ஹரித்வாருக்கு இறங்கி வந்தோம். ஹரித்வார கங்கை ரிஷிகேஷ் அளவுக்கு சுத்தம் இல்லை.ஆனாலும் ரிஷிகேஷ் போலவே படித்துறைகள்.. அங்கங்கு பல இடங்களில் ஆரத்தி நிகழ்ச்சி நடந்துகொண்டிருகிறது.. மக்கள் சிறு சிறு கூட்டமாக நின்று கொண்டு ஆரத்தியில் கலந்துகொள்கிறார்கள்.. பின் அனைவரும் கங்கையில் இறங்கி  ஒரு சிறிய பூக்கூடையில் விளக்கு ஏற்றி நதியில் விடுகிறார்கள்.. கங்கைக்கரை முழுவதும் இந்த பூவிளக்குகள் ஊர்ந்து செல்வதே கொள்ளை அழகு. அதுவும் இருள் சூழ்ந்த கங்கை நதியில் மின்மினிப் பூசிகள் போல அங்கங்கே கண்சிமிட்டிக்கொண்டு நகர்கிறது  பூவிளக்குகள்.  இங்கு கரை முழுவதும் சாமியார்கள் ஆதிக்கம் அதிகம். ஒரு சாமியார் சங்கு ஊதிக்கொண்டிருகிறார்.. ஒரு சாமியார் கங்கைக்கரையில் தியானத்தில் இருக்கிறார்.. ஒருவர் உடல்முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு அகோரி வேடத்தில் கோவணத்துடன் காட்சியளிக்கிறார். இவர்கள் முற்றும் துறந்த சன்யாசிகளா அல்லது பண்டாரங்களா.. இல்லை போலிச் சாமியார்களா.. என்று குழப்பம் ஏற்படுத்தும் கலவை அது.

ரிஷிகேஷிலும் இதுபோல நிறைய இடத்தில் ஆரத்தி நிகழ்சிகள் உண்டு. பரமார்த் என்ற கோவில் அருகே உள்ள படிக்கட்டில் ஆரத்தியுடன் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இங்கு பல வெளிநாட்டவர் கலந்துகொள்கின்றனர். இங்குள்ள ஆசிரமத்தைச் சேர்ந்த பல குருகுல மாணவர்கள் காவி உடை அணிந்து தினமும் மாலையில் கங்கை முன்னால் உள்ள படிக்கட்டுகளில் அமர்து இசை முழங்குகிறார்கள். இசைக்கு தாளமிட்டபடியே படித்துறையை உரசிச்செல்கிறது கங்கை. அதற்கு எதிரே  கங்கைக்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் சிவன் சிலை செவ்வானத்தில் பிரகாசிக்கிறது. சூரியன் மறைந்து இருள் கவியும் நேரத்தில் சலசலத்து ஓடும் கங்கையில் நின்று கொண்டு கேட்ட அந்த இசையில் மனம் கரைந்தது.  ஏகாந்தம் என்பார்களே.. அது இதுதானோ..

அங்கு வாழும் மக்களுக்கு கங்கைதான் தெய்வம். காலங்காலமாய்  தங்களை  வாழ்வித்துக்கொண்டிருக்கும் இந்த ஜீவநதியை தினமும் வணங்கி, மலர் தூவி, ஆரத்தி எடுத்து நன்றி தெரிவிக்கிறார்கள். இது ஏதோ சம்பிரதாயத்துக்காக   செய்யப்படும் நிகழ்ச்சி அல்ல..'ஜெய் ஜெய் கங்கா மாதா' என்று உள்ளன்புடன் கங்கையை தொட்டு கும்பிடும்போது  அவர்கள் வாழ்க்கையில் கங்கையும் ஒரு அங்கம் என்று புரிகிறது. 

இனி கங்கையின் நடுவே ஒரு சாகசம்.. பலூன் படகு பயணம்...!

- பயணம் தொடரும்... 


மங்கள ஆரத்தி

காலை நேர கங்கை
இசை நிகழ்ச்சி

Thursday, November 11, 2010

இந்திய பாகிஸ்தான் எல்லை - ஒரு வடஇந்தியப் பயணம்

ஒன்றுபட்ட இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் வாஹா என்ற கிராமம், 1947 பிரிவினைக்குபிறகு கிழக்கு பகுதி இந்தியாவுக்கும் மேற்கு பகுதி பாகிஸ்தானுக்கும் பிரிக்கப்பட்டது. இன்று இந்தியாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் ஒரே சாலைவழி மார்க்கம் இந்த வாஹா எல்லை. இங்கிருந்து 25 கி.மீ தொலைவில் இந்தப்பக்கம் அமிர்தசரஸ் நகரம்.. அந்தப்பக்கம் லாகூர் நகரம்.

தினமும் அந்தி சாயும் வேளையில் இங்கு ராணுவ மரியாதையுடன் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. அருகே சென்று பார்க்கவேண்டும் என்றால் கொஞ்சம் சீக்கிரமே சென்றால்தான் இடம் கிடைக்கும் என்று பலர் சொன்னார்கள். மாலை 5.30க்கு துவங்கும் நிகழ்ச்சிக்கு 4.45க்கு போய் நின்றேன். அனால் அதற்குள் சாலையின் இருபக்கமும் இருக்கும் பார்வையாளர்களின் மாடம் நிரம்பி வழிந்தது... மாடத்துக்கு வெளியே நின்றுகொண்டுதான் வேடிக்கை பார்க்க முடிந்தது. அதேபோல் அந்தப்பக்கம் பாகிஸ்தான் பார்வையாளர்களின் மாடத்திலும் நல்ல கூட்டம். சராசரியாக ஒரு நாளில் இந்தியப்பகுதியில் மட்டும் 8000 பேர் வருகிறார்களாம்.

இரு மாடங்களுக்கும்  இடையே  சில  அடி  தூரம்தான்..  இருபக்கமும் இரும்பு வாயிற்கதவு... இங்கு காக்கி நிற உடையிலும் அங்கு கரும்பச்சை உடையிலும் எல்லையோர காவல் படையினர்... அந்த இடமே அவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இந்திய நுழைவில் 'இந்தியா' என்று ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதப்பட்டு மேலே மூவர்ணக்கொடி பறந்துகொண்டிருகிறது.. அந்தப்பக்கம் பாகிஸ்தான் கொடி..கூடவே ஜின்னாவின் படம். (இந்தியாவில் காந்தி படம் இல்லை..காந்தி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பொதுவானவர் என்று விட்டு விட்டார்களோ?).

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்  இருபக்கமும்  வாயிற்கதவின் முன் ஒரு பெறும்   கூட்டம்  நடனமாடிக்கொண்டிருகிறது,  தங்கள்  தேசியக்   கொடியுடன்..! பல தேசபக்திப்பாடல்கள் ஒளிபரப்பப்படுகின்றன ('ஜெய் ஹோ'வும் உண்டு). நம் பக்கம் 'ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்', 'பாரத் மாதாகி ஜே', 'வந்தே மாதரம்' போன்ற கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.. ராணுவத்தை சேர்ந்த ஒரு அதிகாரி வேறு கையை உயர்த்தி 'இன்னும் இன்னும்' என்று கூட்டத்தை உசுப்பேத்திவிடுகிறார்.. இதேபோல பாகிஸ்தான் பக்கமும்...! இதெல்லாம் முடிந்தபிறகு நிகழ்ச்சி தொடங்கியது. இரண்டு இரண்டு பேராக ராணுவ வீரர்கள் அதிவேகமாக நடந்து கதவு அருகே நின்று கொள்கிறார்கள். பிறகு சிலர் கிட்டத்தட்ட தலைக்குமேல் காலை உயர்த்தி சத்தத்துடன் தரையில் அடித்து நடந்து செல்கிறார்கள்.  இதற்கு இணையாக பாகிஸ்தான் பக்கமும் அணிவகுப்பு நடைபெற்றுக்கொண்டிருகிறது. பாகிஸ்தான் வீரர்கள் வெடுக்கென தலையை திருப்பி கையை உயர்த்தி உடலை சிலிர்த்துக் கொள்கிறார்கள். அது என்ன ராணுவ சைகை என்று புரியவில்லை. பிறகு சடாரென்று கதவு திறக்கப்படுகிறது. இந்திய பாகிஸ்தான் வீரர்கள் ஏதோ போருக்கு தயாராவதுபோல நின்றுகொண்டு கைகுலுக்கிக்கொள்கிறார்கள். பிறகு சரியாக சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் இரு கொடிகளும் இறக்கப்டுகின்றன. பிறகு கதவு மீண்டும் வேகமாக மூடப்படுகிறது. அவ்வளவுதான்.. நிகழ்ச்சி முடிந்தது.

அங்கு இருக்கும் போது சில அடிதூரத்தில் இன்னொரு நாட்டைப்பார்ப்பது ஒரு திரில்லான அனுபவம்தான். கொஞ்சம் தேசப்பற்று வருவது என்னமோ உண்மைதான். ஆனால் ஒரு நாட்டின் எல்லையில் நிற்கும்போது எதற்காக இவ்வளவு கோஷங்கள், ஆர்பாட்டங்கள் ஏன் என்று புரியவில்லை. ஏதோ தேசபக்தியை வேண்டுமென்றே திணிப்பதாக எனக்குப்பட்டது. இதுபோன்ற ஒரு இடத்தை மக்காவ்-சீன எல்லையில் பார்த்திருக்கிறேன். (அப்போது மக்காவ் தனி நாடு - போர்சுகல் காலனியாக இருந்தது). அங்கு மக்கள் அமைதியாக இரு நாடுகளுக்கும் சென்று வந்து கொண்டிருப்பார்கள்.. ஆர்ப்பாட்டம் எதுவும் இருக்காது. ஐரோப்பாவிலும் இதுபோல இருநாடுகளுக்கும் சாலைப் போக்குவது இருக்கிறது எந்தவித கோஷங்களும் இல்லாமல்...! அனால் இந்தியா-பாகிஸ்தான் எல்லை என்றதும் அதற்கு ஒரு தனி வீரியம் வந்துவிடுகிறது.

நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும் போதே ஒரு பறவைக்கூட்டம் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பறந்து கொண்டிருந்தது... "ஏ மனிதப்பிறவிகளே...! ஆறறிவு படைத்த  உங்களுக்குத்தான் இத்தனை நாடுகள், இத்தனை பிரிவினைகள், இனங்கள், மதங்கள் எல்லாம்.. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல விசா, பாஸ்போர்ட் எல்லாம்.. நாங்கள் சுதந்திரப்பறவைகள்.. எங்களை எந்த எல்லையும் தடுக்கமுடியாது" என்று நம்மைப் பார்த்து ஏளனம் செய்து பறந்தன..!

இனி பஞ்சாபிலிருந்து நேராக இமயத்தின் அடிவாரத்தில் ஒரு ரம்யமான பிரதேசம்.. ரிஷிகேஷம்..

- பயணம் தொடரும்

Saturday, November 6, 2010

ஜாலியன்வாலா பாக் - ஒரு வடஇந்தியப் பயணம்

காந்தி திரைப்படத்தை எந்தனை முறை பார்த்திருப்பேன் என்று தெரியாது. ஆனால் ஒவ்வொரு முறையும் ஜாலியன் வாலாபாக் காட்சியைப் பார்க்கும் போதும் என் கண்களில்  கண்ணீர் எட்டிப்பார்ப்பதைத் தவிர்க்கமுடியாது. 91 ஆண்டுகளுக்குமுன் கொடூர நிகழ்வு நடந்த அந்த இடத்தை நேரில் காணப்போகிறோம் என்றதும், ஒரு சோகம் கலந்த படபடப்புடன் ஜாலியன்வாலா பூங்காவுக்குள் நுழைந்தேன்.

பொற்கோவிலில் இருந்து ஐந்து நிமிடநடை தூரத்தில் இருக்கிறது ஜாலியன்வாலா பாக். சென்னை ஜார்ஜ் டவுன் மாதிரியான ஒரு இடத்தில் ஒரு  குறுக்கிய  சாலையின் ஓரத்தில் இருக்கும் அந்த இடத்துக்கு வரும் மக்கள் கூட்டம் இன்னமும் அதிகம். உள்ளே நுழையும்போதே ஒரு மாபெரும் சரித்திரத்தில் காலடி வைக்கப்போகிறோம் என்ற உணர்வு மேலோங்கியது. நுழைவாயிலில் உள்ள அறிவிப்புபலகையில் அந்த சோகவரலாறு எழுதப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் 13, 1919.. அன்று 'பைசாக்கி' எனப்படும் சீக்கியர்களின் புத்தாண்டு தினம், இந்திய சரித்திரத்தில் ஒரு கனத்த நாளாக மாறிப்போனது. அது ரௌலட் சட்டம் அமலில் இருந்த காலகட்டம். அதை கண்டித்து நாடு முழுவதும் குறிப்பாக பஞ்சாபிலும் லாகூரிலும் ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக அமிர்தசரஸில் ஜாலியன்வாலா பாக் என்கிற திடலில் ஒரு கண்டனக்கூட்டம் ஏற்பாடு செய்யப்படிருந்தது. மாலை 4.30 மணிக்கு ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக கிட்டத்தட்ட 15000 மக்கள் கூடியிருந்தனர் தங்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்தை அறியாமல்..!

இதை அறிந்த பிரிட்டிஷ் ராணுவ ஜெனரல் ரெஜினால்ட் டையர் 100 சிப்பாய்களுடன்  ஜாலியன்வாலா பாக் திடலுக்குள் உள்ளே நுழைந்தான். எந்தவித முன்அறிவிப்போ எச்சரிக்கையோ இல்லாமல் கூட்டத்தை நோக்கி சுட உத்தரவிட்டான். அந்த திடலில் ஒரேஒரு குறுகலான நுழைவாயில் மட்டுமே உள்ளது. அங்கிருந்துதான் சிப்பாய்கள் மக்களை நோக்கி சுட்டனர். யாரும் வேறு எப்படியும் வெளியே செல்ல முடியாது. தொடர்ந்து 20 நிமிடங்கள் இடைவெளியே இல்லாமல் துப்பாக்கிச் சூடு... 1650 ரவுண்டு குண்டுகள் தீர்ந்தபின்னரே நிறுத்தப்பட்டன. முடிவில் கிட்டத்தட்ட 1500 மக்கள் பலியானார்கள். தப்பிப்பதற்காக அருகே உள்ள கிணற்றில் குதித்து 120 பேர் உயிரிழந்தனர்.

இன்று ஜாலியன்வாலா பாக் இந்திய அரசாங்கத்தால் பராமரிக்கப்பட்டு ஹிரோஷிமா போல கொடூரத்தின் நினைவுச் சின்னமாய் காட்சியளிகிறது. இங்கு அந்த இடத்தில் ஒரு நினைவுத்தூண் இருக்கிறது... ஒரு அணையா விளக்கு இருக்கிறது... அந்த கிணறு அப்படியே பாதுகாக்கப்படுகிறது. சுடப்பட்ட இடத்திலிருந்து  100 அடி  தள்ளி  இருக்கும் சுவர்களில் இன்னமும் குண்டு துளைத்த தடயங்கள் இருக்கிறது.  சுவரையே துளைத்திருக்கும் குண்டுகள் மனித உடலை எப்படி சல்லடையாக்கியிருக்கும் என்று நினைக்கும்போதே உள்ளம் பதபதைக்கிறது. ஜாலியன்வாலா பாக்கில் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் நெஞ்சம் கனத்துக்கொண்டே போனது...!

இந்த படுகொலைக்காக நடைபெற்ற விசாரணை கமிஷனில் நீதிபதிகள், ஜெனரல் டையரிடம் இப்படிக் கேட்டார்கள்:  "அந்த நுழைவாயில் மிக குறுகலாக இருந்ததால் நீங்கள் கொண்டுவந்திருந்த பீரங்கிகளை உள்ளே எடுத்துசெல்ல முடியவில்லை.. முடிந்திருந்தால் பீரங்கியாலும் மக்களை சுட்டிருப்பீர்கள்..இல்லையா?" - இதற்கு  டையரின் பதில் - "ஆமாம்.. நிச்சயமாக..!".. மேலும் காயமடைந்தவர்களுக்கு என்ன முதலுதவி செய்தீர்கள் என்ற கேள்விக்கு, "அது என் வேலை இல்லை.. மருத்துவமனை அருகில்தான் இருக்கிறது..வேண்டுமென்றால் அவர்கள் அங்கு சென்றிருக்கலாம்" என்று பதிலளித்தான் டையர்.

அந்த காலகட்டத்திலும் சரி.. இப்போதும் சரி.. உலகெங்கும் பல கொடுங்கோல் ஆட்சி நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்கு இந்தியாவில் இருக்கும் சாட்சி ஜாலியன்வாலா பாக். அனால் என்னதான் சாட்சிகள் இருந்தும் என்ன பலன்?  ஜெனரல் டையர்கள் ஹிட்லர்கலாகவும் ராஜபக்சேக்களாகவும் இந்த உலகில் தோன்றிக்கொண்டுதானே  இருக்கிறார்கள்?

இனி அமிர்தசரஸில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு இடம்... இந்தியாவும்  பாகிஸ்தானும் முத்தமிடும் வாஹா எல்லை... 

 - பயணம் தொடரும்...

நினைவுத்தூண்
குறுகிய நுழைவாயில்
   

குண்டு துளைத்த சுவர்

மரணக் கிணறு



Sunday, October 31, 2010

பொற்கோவில் - ஒரு வடஇந்தியப் பயணம்

தில்லி பயணத்தை முடித்துக்கொண்டு நேரே அமிர்தசரஸ் கிளம்பினோம்.. ரயில் பேரே கோல்டன் டெம்பிள் எக்ஸ்பிரஸ்.

யாரையாவது கண்ணைக்கட்டி நேரே அமிர்தசரஸில் இறக்கிவிட்டால், பஞ்சாப் மாநிலத்தில் இருக்கிறேன் என்று ஒரு நிமிடத்தில் சொல்லிவிடுவார்கள். ஆணாகட்டும் பெண்ணாகட்டும்..  நூற்றுக்கு  தொண்ணூறு  பேர்  பஞ்சாபி  உடையிலேயே திரிகிறார்கள். சில ஆண்கள் மார்பில் குறுக்கே ஒரு பட்டையில் கத்தியெல்லாம் வைத்துக்கொண்டு 'தீவிர' பஞ்சாபி உடையில் இருகிறார்கள். ஒரு பெண்ணாவது ஜீன்ஸ்-டிஷர்ட் அல்லது சேலை அணிந்துகொள்ளடுமே..ஹும்ஹும்.. எல்லோருமே பஞ்சாபி சுடிதார்தான்..

அமிர்தசரசில் எல்லா ஹோட்டலுமே பொற்கோவிலின் நடை தூரத்திலேயே இருக்கிறது. தேவைப்பட்டால் ரிக்க்ஷாவில் செல்லலாம்.


நான்கு பக்கமும் தண்ணீர் சூழ  தகதகவென  மின்னிக்கொண்டிருக்கிறது பொற்கோவில். அதை அடைவதற்கு ஒரு பக்கத்திலிருந்து மட்டும் ஒரு பாலம். எந்தப்பக்கத்தில் பார்த்தாலும் அற்புதமாக இருக்கிறது பொற்கோவில். மெல்லியதாக பக்திப்பாடல்கள் பஞ்சாபியில் ஒலித்துக்கொண்டிருக்க, அந்த சூழலே தெய்வீகமாக இருக்கிறது. தலைமுடியை மூடாமல் குருத்வாராவுக்குள் செல்லமுடியாது.. கைக்குட்டையாவது கட்டிக்கொண்டு செல்லவேண்டும். அதேபோல் கால் கழுவாமலும் உள்ளே செல்ல முடியாது. உள்ளே தூய்மை என்றால் அப்படி ஒரு தூய்மை. அந்த வளாகம் முழுவதும் மார்பிள் கற்களால் இழைக்கப்படிருக்கிறது.  பலர் புனித நீராடினாலும் அப்படி தூய்மையாக பாதுகக்கபடுகிறது அந்த குளம்.


நாங்கள் அங்கு சென்றது ஒரு  ஞாயிற்றுக் கிழமை... நல்ல கூட்டம்.. ஆனால் நெரிசல் இல்லை..கூச்சல் குழப்பம் இல்லை.. பொதுவாக எல்லோருமே அமைதியை கடைபிடிக்கிறார்கள்.. இங்கு எல்லோரும் சமம்..ஏழை பணக்காரன் வித்தியாசம் கிடையாது.. சிறப்பு கட்டணம், தரிசனம் எதுவும் கிடையாது.  யாராயிருந்தாலும்  ஒரே வரிசையில்தான் நிற்கவேண்டும். குருத்வாராவுக்குள் எந்த விதமான பணம் வசூலிக்கும் கவுண்டரையும் நான் பார்க்கவில்லை. 

குருத்வாராவுக்கு அருகிலேயே இலவச உணவு மையம். கிட்டத்தட்ட வந்தவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டுத்தான் செல்கிறார்கள்.

எண்பதுகளில்  யுத்த பூமியாக இருந்த பஞ்சாப்.. தீவிரவாதிகளில் புகலிடமாக இருந்த பொற்கோவில், இன்று அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. 1984 ல் ஆபரேஷன் புளு ஸ்டார் என்ற பெயரில் இந்திய  ராணுவம்  உள்ளே  நுழைந்த பொற்கோவிலுக்கு இன்று எந்தவித பாதுகாப்பு பரிசோதனையும் இல்லாமல் மக்கள் உள்ளே நுழைய முடிகிறது. மாற்றங்கள்தான் ஒரு இனத்தின் வளர்ச்சியை நிர்ணயிக்கிறது என்பதற்கு பஞ்சாப் ஒரு சாட்சி. இந்த பாஞ்சால பூமியில் ஏற்பட்டுள்ள  மாற்றம் மகத்தானது. ஆனால் நாம்  அதற்க்கு கொடுத்த விலை? இந்திரா காந்தியின் உயிர் மற்றும்  பல ஆயிரக்கணக்கான  சீக்கியர்களின் உயிர்... பொற்கோவிலைப்பற்றி நினைக்கும்போது ஏனோ இதை நினைக்காமல் இருக்க முடியவில்லை.. அதுவும் இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் நாள் - இந்திரா காந்தியின் நினைவு நாள்.

இனி இந்தியா சுதந்திர வரலாற்றிலேயே ஒரு கருப்பு நாள். 90 வருடங்கள் கடந்தும் நெஞ்சை பதறவைக்கும் ஒரு நிகழ்வு - ஜாலியன் வாலாபாக்...

- பயணம் தொடரும்

Monday, October 25, 2010

காந்தி நேரு வாழ்ந்த இடங்கள் - ஒரு வடஇந்தியப் பயணம்

காந்தி ஸ்மிருதி..... காந்தி கடைசியாக வாழ்ந்த பிர்லா மாளிகை..

உள்ளே நுழைந்தவுடன் காந்தி வாழ்கையில் நடந்த சில சம்பவங்களை பொம்மை வடிவில் சித்தரிக்கும் ஒரு சிறு கண்காட்சி.. தென்ஆப்ரிக்க ரயில் பயணம், தண்டி போராட்டம், அந்நிய துணிகள் எரிப்பு, கஸ்தூரிபாய் மரணம், காந்தி சுடப்பட்டது, பின் இறுதி சடங்கு என்று பல நிகழ்வுகள் தத்ரூபமாக அமைக்கப்படிருந்தன...அங்கு வந்த அனைவரின் மனதையும் கவர்ந்தது.


பொம்மை வடிவில் காந்தி கண்காட்சி
 
காந்தியின் கடைசி பயணம்
ஜனவரி 30 , 1948 .. மாலை ஐந்து மணி.. காந்தி கடைசியாக  பிரத்தனைகாக வெளியே வந்த அறை கதவு இன்றும் அப்படியே இருக்கிறது (காந்தி படத்தில் முதல்  காட்சியே  இதுதான்) அந்த அறையிலிருந்து அவர் சுட்டு கொல்லப்பட்ட இடம் வரை அவர் காலடி தடங்கள் பதிக்கப்பட்டு உள்ளது.. அவர் சுடப்பட்டு வீழ்த்த இடத்தில ஒரு சிறு மண்டபம் அமைக்கபட்டிருகிறது... பத்து பேர் அடங்கிய ஒரு வெளிநாட்டு குழுவுக்கு இந்தியா பெண்மணி ஒருவர் காந்தியின் கடைசி நிமிடங்களைப் பற்றி விவரித்துக்கொண்டிருந்தார்... கூட்டத்துக்கு நடுவே  கோட்சே  எப்படி  வந்தார்,  சுட்டவுடன் காந்தியின் என்ன சொன்னார், பின் என்ன நடந்தது  என்பதையெல்லாம்  சொல்லி கொண்டிருக்கும்போது,  ஒருவர் மிகவும் அக்கறையாக 'கோட்சேக்கு என்ன ஆயிற்று' என்று விசாரித்தார்.  'கூட்டம் அவரை எதுவும் செய்யவில்லை.. அஹிம்சையின் உச்சம் அது.. பின்னர் நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கியது' என்ற பதிலை கேட்டவுடன் அவர் முகத்தில் திருப்தி...!

இதே இடத்தில காந்தியின் மல்டி-மீடியா மியூசியம் என்று ஒன்று இருக்கிறது.. அது அவ்வளவு சுவாரசியமாக இல்லை. காந்தியை மல்டி-மீடியா விஷுவல் விளைவுகளோடு பொருத்திப்பார்க்கும் முயற்சி அது. காந்தியின் எளிமைக்கு சற்று முரண்பட்டதாக இருந்தது.

முதலில் காந்தி ஸ்மிருதி செல்லவேண்டும் என்றவுடன் டாக்ஸி டிரைவர்  இந்திரா காந்தி மெமோரியல் சென்று விட்டார்.. பிறகு 'மகாத்மா காந்தி ஸ்மிருதி' என்றவுடன் பின் சரியான இடத்துக்கு அழைத்துச் சென்றார். தில்லியில் வெறும் காந்தி என்று சொன்னால் குழப்பம் வந்து விடுமோ?  

தீன் மூர்த்தி பவன் ..பிரதமராக நேரு பவனி வந்த இடம்..  தில்லி கனார்ட் பிளேசில் காந்தி காந்தி ஸ்மிருதிக்கும் தீன் மூர்த்தி பவனுக்கும் அதிக தூரம் இல்லை.

இதில் நேருவை பற்றி 'AtoZ' இருக்கிறது - நேருவின் வாழ்க்கை கண்முன் நிறுத்தும் புகைப்படங்கள், அவர் படித்த புத்தகங்கள், அவருடைய பேச்சு ஒலி நாட்கள், அவர் எழுதிய கடிதங்கள், அவர் உபயோகித பொருட்கள்.. கடைசியாக நேரு உயிர் பிரிந்த அறை...

சின்ன வயது புகைப்படங்களில் ஒரு இளவரசனின் கம்பீரத்தோடு நேரு மிளிர்கிறார் நேரு..ஒரு 'royal family 'யில் வளர்த்தவர் என்று கண்கூடாக தெரிகிறது. அவர் தன தந்தை மோதிலால் நேருவுக்கு எழுதிய கடிதங்களில் ஆங்கிலப் புலமை வெளிப்படுகிறது. தன தாய்க்கு மட்டும் ஹிந்தியில் கடிதம் எழுதிருக்கிறார். இளம் வயதில் இந்தியப் பாரம்பரியத்தோடு மேற்கத்திய பாணியில் அவர் வாழ்கை முறை அமைந்திருகிறது.

இந்தியா சுதந்திரம் கிடைத்தபோது மற்றும் காந்தி கொலையுண்டபோது அவர் ஆற்றிய உரை ஒலி நாடாக்கள் கேட்பதற்கு சிலிர்ப்பூடுகின்றன..

தில்லி செல்லப்போகிறேன் என்றதும் 'அங்கு காமன் வெல்த் கேம்ஸ் நடக்கிறது.. எக்கச்சக்க போக்குவரத்து நெரிசல் இருக்கும்.. பாதி இடங்களுக்கு செல்லவே முடியாது...' என்று ஆளாளுக்கு பயமுறுத்தினார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லை.. போக்குவரத்து மிக சீராக இருந்தது.. முக்கிய சாலைகளில் CWG க்கு தனி பாதைகள் உண்டு. சைக்ளிங், மராத்தான் போட்டிகள் நடக்கும் தேதியில் மட்டும் சில பிராதன சாலைகள் மூடப்பட்டன. எல்லா மெட்ரோ நிலையத்திலும் உதவி மையம், அங்கங்கே அறிவுப்புகள் என்று பிரச்னை இல்லாமல் இருந்தது. நாங்கள் சென்ற பல இடங்களில் CWG விளையாட்டு வீரர்களும் வந்திருந்தார்கள். (நிறைய பேர் தென்பட்டது அக்ஷர்தாமில்). தில்லியில் நான் மெட்ரோ, ஆட்டோ, டாக்ஸி, சைக்கிள் ரிக்க்ஷா என்று எல்லாவிதமான போக்குவரத்திலும் சென்றேன். 

எல்லா இடங்களிலும் பொதுவான ஒரு விஷயம் - கோவிலாகட்டும், மசூதியாகட்டும், கோட்டைகளாகட்டும், காந்தியாகட்டும், நேருவாகட்டும் - பாதுகாப்பு எக்கச்சக்கம்.. பல பரிசோதைகளை கடந்துதான் உள்ளே செல்லவே முடிகிறது..

இனி சீக்கியர்களின் புனிதத்தலமான அமிர்தசரஸ் பொற்கோவில்...

- பயணம் தொடரும்...

 

Friday, October 22, 2010

தில்லி உலா - ஒரு வடஇந்தியப் பயணம்

காந்தி சமாதி
தில்லியில் அடுத்தநாள் காலையில் காந்தி சமாதியுடன் துவங்கினோம்.. ஒருசில வெளிநாட்டவர் தவிர யாரும் இல்லை.. அவர்களும் சமாதி அருகே வரவில்லை.. பல வருடங்களுக்கு முன்பு ஒரு முறை காந்தி சமாதி வந்திருக்கிறேன்.. விடுமுறை நாட்களில் காலைவேளையில் பலர் சமாதியை சுற்றி உள்ள புல்வெளியில் அமர்ந்திருப்பார்கள். இந்தமுறை நானும் காந்தியும் மட்டும் தனியே.. காந்தியை போலவே ஆர்ப்பாட்டம் இல்லாமல் எளிமையான இருக்கிறது அந்த இடம்... ஹே ராம் என்ற எழுத்துகளுடன்..

செங்கோட்டை
பிறகு செங்கோட்டை (Red fort)... 17ம்  நூற்றாண்டில் ஷாஜகான் கட்டிய கோட்டை.. பின்னர் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்  இருந்து  விடுதலைக்கு பிறகு இந்தியா இராணுவத்தின் கட்டுபாட்டில் இருந்தது. 2003 ல் தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.. இன்று யுனஸ்கோவால்  அங்கீகரிக்கப்பட்ட 'உலகப் பாரம்பரிய' இடங்களுள் ஒன்று.  

இதற்குள் இந்தியா விடுதலை இயக்கத்தின் கண்காட்சி வைத்திருகிறார்கள். சிப்பாய் கலகத்திலிருந்து 1947 வரை நடந்த பல நிகழ்வுகள்  புகைப்படங்களாகவும் காட்சிகளாகவும் வைக்கப்படிருந்தன. அதில் சுபாஷ் சந்திரபோசின் அறிய புகைப்படங்கள் நிறைய இருந்தன... அவர் எப்படி காங்கிரசில் இணைந்தார், பின் இந்தியா தேசிய ராணுவம்  அமைத்தது, வீட்டுக்காவலில் இருந்தவர் எப்படி தப்பித்தார், அவரின் மர்ம மரணம் போன்ற விவரங்களுடன்... அவர் தப்பியது பற்றிய விவரங்களும் அங்கே உண்டு - சுபாஷ் அறையில் எப்போதும் விளக்கு எரிந்து கொண்டிருக்குமாம்.. பல நாட்கள் சவரம் செயாமல் தாடி வளர்த்துகொண்டு உருவத்தை மாற்றி பிரிட்டிஷ் போலீசின் கண்களில் மண்ணை தூவிவிட்டு தப்பித்திருக்கிறார். வெளியே தன்னை ஒரு முஸ்லிம் இன்சூரன்ஸ் ஏஜென்ட் என்று அறிமுகம் செய்துகொண்டு இந்தியா எல்லையை கடந்திருக்கிறார். பிறகு கைபர் கணவாய் வழியாக வளைகுடா சென்று அங்கிருந்து மாஸ்கோ சென்று பின் பெர்லினை அடைந்திருக்கிறார்.. ஹிட்லைரை சந்திபதாற்காக..வெளியே வரும்போது 'சுபாஷ் எப்பேர்பட்ட போராளி..' என்று  நினைக்கத் தோன்றுகிறது..

இந்தியா கேட்
குடியரசு தினத்தன்று நாம் டி.வி யில் பார்க்கும் இந்தியா கேட்-ராஷ்டபதி பவன் சாலை நேரில் ரொம்பவே அழகு. அதை சுற்றி உள்ள புல்வெளி, தடாகங்கள் கூடுதல் அழகு. முப்படைகளின் கொடிகள் பறக்க இந்தியா கேட்டில் அமைந்துள்ள 'அமர் ஜவான்' ஜோதிக்கு ஒரு ராயல் சல்யுட்  அடித்துவிட்டு அந்த இடந்தை விட்டு நகர்ந்தோம்.

ஹுமாயுன் சமாதி
தில்லிக்கு சுற்றுலா செல்பவர்கள் நிறையபேர் ஏனோ ஹுமாயுன் சமாதியை பார்க்க தவறிவிடுவார்கள். (பிரகதி மைதான் மெட்ரோவில் இறங்கி 10 நிமிடத்தில் ஆட்டோவில் செல்லாலாம்). இது 'வாவ்' என்று வியக்கத்தக்க இடம்.. முகலாய  கட்டிடகலையின்  சிறப்பை  தெரிந்துகொள்ள  இந்த இடத்திற்கு செல்லலாம்.  பிரமாதமான வடிவமைப்பு.. முதலில் தோன்றிய ஒரு கட்டம்தான் ஹுமாயுன் சமாதி என்று அருகே சென்று பார்த்தால் அது வெறும் முகர்ப்புதான்.. அங்கிருந்து அடுத்த கட்டிடத்துக்கு கொஞ்ச தூரம் நடக்க வேண்டும். இதை கட்ட அந்த காலத்திலேயே 15 லட்ச ருபாய் ஆனதாம் (1571 ). இதுவும் யுனஸ்கோவின் உலக பாரம்பரிய இடம்.

குதுப்பினார்
12 ம்நூற்றாண்டின் அதிசயம்.. முகமது கோரியை போரில் வென்றதற்காக குத்புதீன் ஐபக் கட்டியது..  (சின்ன வயதில்  பாடப்புத்தகத்தில் படித்ததையெல்லாம் கஷ்டப்பட்டு  நினைவுக்கு  கொண்டுவர வேண்டியிருக்கிறது). மிக குறுகிய விட்டதிலிருந்து ஆரம்பித்து 237 அடி உயரத்திற்கு கட்டிடம் எழுப்பியிருக்கிறார்கள்.


 


இனி காந்தி நேரு வாழ்ந்த இடங்கள்...

....... பயணம் தொடரும்....

 

Tuesday, October 19, 2010

வடஇந்தியப் பயணம் - அக்க்ஷர்தாம், தில்லி

பல வருடங்களாக முயற்சித்து கடைசியில் இந்த வருடம் அக்டோபர் மாதம் வடஇந்திய சுற்றுலா செல்வதென்று தீர்மானித்தேன்.. தில்லி, அமிர்தசரஸ், ரிஷிகேஷ், ஆக்ரா சென்றுவரலாம் என்று திட்டம்.. ஜூலை மாதத்திலிருந்து திட்டம் தீட்டி இனிதே முடிந்தது என் பயணம். ஒவ்வொரு இடமும் ஒவ்வொருவிதமான அனுபவம். இந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு இடுகை போதாது.. விவரமாக விஸ்தாரமாக பல வாரங்களுக்கு உங்களுடன் பகிர்துகொள்ள பல செய்திகள் உள்ளன.

முதலில் தில்லி...

ஆரம்பமே கொஞ்சம் பதற்றம்தான்.. 7.20  மணி விமானத்துக்கு 6.20௦க்கு சென்னை விமானநிலையத்தில் நுழைந்தபோது ஸ்பைஸ் ஜெட் அதிகாரிகள் 'counter closed ' என்றார்கள். அப்புறம் கொஞ்சம் மிஞ்சி பிறகு கெஞ்சி போர்டிங் பாஸ் வாங்கினோம். பிறகுதான் தெரிந்தது அந்த விமானம் 7 மணிக்காம்.. மூன்று மாதத்துக்கு முன்னால் பதிவு செய்த டிக்கெட்டில் 7.20 என்று இருந்தது.

புதிதாக திறக்கப்பட்ட தில்லி விமான நிலையம் சர்வதேச தரத்துக்கு இருக்கிறது. உலகில் சிறந்த விமானநிலையங்களில் ஒன்று என்று தாரளமாக சொல்லலாம்.

தில்லியில் மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆசை. கரோல் பாக் ரயில் நிலையத்திலிருந்து அக்ஷர்தாம் கோவிலுக்கு (16 ருபாய்) மெட்ரோவில் சென்றபோது ரயில் லண்டன்-சிங்கப்பூர் மெட்ரோக்களை நினைவுறுத்தினாலும் கூட்டம் மும்பை  ரயில்களை நினைவுறுத்தியது.

அக்க்ஷர்தாம்

இந்தியாவின் பிரமாண்ட ஐந்து நட்சத்திர கோவில். இதை கோவில் என்பதைவிட இந்தியாவில் ஆன்மீக கலாச்சார பண்பாட்டு மையம் என்றே அழைக்கிறார்கள். ஏனென்றால் இங்கு கோவிலுக்கு உண்டான ஆகம விதிகள் எதுவும் கிடையாது. 18ம் நூற்றாண்டில் குஜராத்தில் வாழ்ந்த சுவாமிநாராயண பகவான் பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோவிலுக்கு அவர்தான் முக்கிய மூலவர்.

100 ஏக்கர் பரபளவில் அமைந்திருக்கும் இந்த கோவில் முழுவதும் பழுப்பு கற்களாலும் இத்தாலிய பளிங்கு கற்களாலும் மட்டுமே கட்டபடிருகிறது. உருக்கு, கான்க்ரீட் எங்கும் உபயோகப்படுத்தவில்லை. இவ்வளவு கலைநயத்துடனும் சிற்பங்களுடனும் ஒரு கோவிலை இதற்குமுன் கண்டதில்லை.. ஒவ்வொரு தூணிலும் உள்ள நுணுக்கமான சிற்பங்களிலிருந்து நம் கண்கொள்ளாத அளவிற்கு பிரம்மாண்ட சிற்பங்கள் கொண்ட கலைநயம்... இழைத்து இழைத்து பார்த்து பார்த்து செய்யப்பட சிற்ப வேலைகள்.. மொத்தம் 234 அலங்கரிக்கப்பட்ட தூண்கள், 9 மாடங்கள், தத்ரூபமான பல கோணங்களில் உள்ள யானை சிலைகள் - இவையெல்லாம் எண்ணிக்கையில் வரும் சில விஷயங்கள்.. எண்ணமுடியாதவை எத்தனையோ..

இவையெல்லாம் ரசித்துவிட்டு பகவான் சுவாமிநாராயணன் சிலை இருக்கும் மண்டபத்துக்குள் நுழைந்தால்.. அப்பப்பா.. மயக்கமே வந்துவிடும் போலிருந்தது.. என்ன ஒரு ஜொலிஜொலிப்பு.. என்ன ஒரு பளபளப்பு... பெயர் சொல்லமுடியாத பல விலையுயர்ந்த கற்களாலும் ஆபரணங்களாலும் உலோகங்கழலும் மினுமினுகிறது அந்த மண்டபம். நடுவில் தங்க முலாம் பூசப்பட்ட ௧௧ அடி பகவான் சுவாமிநாராயணன் சிலை.. சுற்றி அவரின் சீடர்கள் சிலை.. அந்த இடம் பிரமிக்க வைக்கிறது.. வாய் பிளக்க வைக்கிறது.. ஆனால் தெய்வீகம்? அது மட்டும் ஏனோ வரவில்லை..!

கோவிலுக்கு உள்ளே கேமிரா, செல்போன் அனுமதி இல்லை... அதேபோல் கொஞ்சம்கூட தூசு குப்பைகள் இல்லை..ஒரு நட்சத்திர ஹோட்டல் போல் பராமரிக்கிறார்கள்.

அந்தி நேரத்தில் காட்டப்படும் இசை நீரூற்று பற்றி கண்டிப்பாக குறிப்பிடவேண்டும்.. இசைக்கு ஏற்றால் போல் நடனமாடும் வண்ண நீரூற்றுகள்... நீரூற்றின் வேகத்துக்கு முழங்கும் இசை.. ஆஹா..என்ன ஒரு கனகச்சிதம்..அற்புதமான கோர்வை..அதிலும் கடைசியாக சிவனின் ருத்ரதாண்டவத்துக்கு அதிரும் இசையும் நீரின் வேகமும் அதன் வண்ணங்களும் நம்மை மிரள வைக்கின்றன.

உள்ளே நல்ல உணவகம் உண்டு.. படகு சவாரி உண்டு..இதை ஒரு கோவில், பக்தி என்றெல்லாம் குழப்பிக்கொள்ளாமல் ஒரு அருங்காட்சியகம் போல ஜாலியாக போய் பார்த்துவிட்டு வரலாம். இருந்தாலும் என்னை குழப்பிய ஒரு கேள்வி - இதை கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் பணம் எங்கிருந்து வருகிறது?

இனி தில்லியின் மற்ற இடங்கள்...

- பயணம் தொடர்கிறது.....

Sunday, September 5, 2010

என் பின்னால் வா - மாவோ

மாவோ: என் பின்னால் வா - மருதன் எழுதிய மாவோ எனப்படும் மாவோ சேதுங்கின் வரலாறு நான் தற்போது படித்த புத்தகம்... சீனத் தலைவர் மா சேதுங்கை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இந்தப் புத்தகத்தை படிக்கலாம். 

இருநூறு ஆண்டு காலமாக ஐரோப்பா மற்றும் ஜப்பானியர்களுக்கு அடிமைப்பட்டுக்கிடந்த சீனாவை சுதந்திர காற்றை சுவாசிக்க வைத்தவர்.  முதன்முதலில் சீனாவில் உழைக்கும் மக்கள் ஆட்சியை மலர செய்தவர் என்ற பெருமைகள் மாவோவுக்கு உண்டு...

மாவோவின் பதிமூன்று வயதிலிருந்து தொடங்குகிறது இந்தப் புத்தகம். நாம் எல்லோரும் நினைப்பதுபோல மாவோ வறுமையில் வாடியவர் இல்லை. கொஞ்சம் வசதியான சூழலில்தான் வளர்ந்தார். கொஞ்சம் பிடிவாதக்காரராக வளர்ந்த மாவோவின் பள்ளிபடிப்பு, கல்லூரி வாழ்கை, விவசாயிகள்-தொழிலாளர்கள் பிரச்னையில் ஈடுபாடு, மாக்சியத்தில் ஈடுபாடு, கம்யூனிஸ்ட் கட்சியில் சேருதல், நீண்ட பயணம், சீனப் புரட்சி, சீனாவைக் கைப்பற்றுதல், அதிபரானபின் வரும் பிரச்சனைகள் என்று மாவோவின் வாழ்கைபாதையை தெளிவாக,  விவரமாக அலசுகிறது இந்தப் புத்தகம்.

'முயற்சித்தால் எதுவும் முடியும்' என்பதற்கு மாவோவின் வாழ்க்கை ஒரு உதாரணம். உலகின் பெரிய நாடான சீனாவை, மிகுந்த இறைநம்பிக்கை பல மூடநம்பிக்கைகளை கொண்ட சீன மக்களை கம்யூனிச பாதையில் அழைத்துச் செல்வது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதேபோல சீனாவில் அப்போது இருந்த ராணுவத்தையும், ஜப்பான் மற்றும் ஐரோப்பிய படையையும் தன செம்படை மூலம் விரட்டி அடித்து மொத்த சீனாவையும் மாவோ கைப்பற்றுவார் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். இன்று சீனா சிதறுண்டு போகாமல் (தைவானை தவிர) மொத்தமாக ஒரே ஆட்சியில் கீழே இருக்கிறது என்றால் அதற்க்கு மாவோ அமைத்துக்கொடுத்த அடித்தளம்தான் காரணம்.

மாவோவின் தத்துவம் எப்படி மக்களை சென்றடைந்தது? அவர் எப்படி மக்கள் தலைவரானார்? ஏனெனில் மாவோ வெறும் கொரில்லா போராளி மட்டும் அல்ல. அவர் மக்கள் பிரச்சனையை அறிந்து மக்களோடு போராடினார். எந்த காரணம் கொண்டும் மக்களை துன்புறுத்தவில்லை. தனது செம்படையை மக்கள் சேவைக்கும் ஈடுபடுத்தினார். கிராமம் கிராமமாக சென்று விவசாயிகள் நிலையை கண்டறிந்தார். வரலாற்று சிறப்பு மிக்க நெடும்பயணத்தில் மாவோவோடு விவசாயிகளும் நடந்தே சென்றனர்... கிட்டத்தட்ட ஒரு வருடம்.. பத்தாயிரம் கிலோமீட்டர்கள்... தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருந்தார்கள்... இந்த முயற்சிதான் மக்கள் மத்தியில் மாவோவின் செல்வாக்கை உயர்த்தியது. அதனால்தான் 'என் பின்னால் வா' என்று மாவோ அழைத்தவுடன் சீன தேசமே அவர் பின்னல் அணி திரண்டது. 

மாவோ மாக்சியத்தில் எப்படி ஈடுபாடு கொண்டார், எப்படி கம்யூனிசம் அவரை ஈர்த்தது என்பதுபற்றி இந்த நூலில் அதிக விளக்கங்கள் இல்லை. நூலகத்தில் பல புத்தகங்களை படித்தார்,  சோவியத்தை  உதாரணமாக  எடுத்துகொண்டார்  என்று மட்டும் இருக்கிறது. அதே போல் மாவோவுக்கு மிகுந்த அவப்பெயர் வாங்கிகொடுத்த 'கலாச்சார புரட்சி' பற்றி இதில் எதுவும் விளக்கவில்லை. சுருக்கமாக சொன்னால் மாவோவின் மறுபக்கம் இந்த புத்தகத்தில் இல்லை.

இந்தப்புத்தகத்தில் மாவோ சேதுங் என்ற முழுப்பெயர் எங்கும் இடம்பெறவில்லை. மாவோ என்றே இருக்கிறது.

'தெளிவான அரசியல் கொள்கை... தீர்க்கமான போர்த் தந்திரம், அசர வைக்கும் மக்கள் பலம்' - இந்த மூன்று ஆயுதங்களைப் பயன்படுத்தி மாவோ நிகழ்த்திக்காட்டிய புரட்சி சீனாவை ஒரு புதியதிசையில் செலுத்தியது... உழைக்கும் மக்கள் வரலாற்றில் மாவோ ஒரு வீர சகாப்தம்' என்ற பின்னூட்டத்துடன் முடிகிறது இந்த நூல்.

  

Sunday, August 29, 2010

இணைய கள்ளர்கள்

வர வர இணையத்தில் உளவு பார்க்கும் வேலை அதிகரித்துவிட்டது. நம் கணணியை இணையத்தில் இணைத்துவிட்டால் கண்டவர்கள் நம் கோப்புகளை களவாடுகிறார்கள். நம் cookies மற்றும் browsing history மூலம் பல தகவல்கள் திருடப்படுகின்றன.

எனக்கு சென்ற வாரம் ஏற்பட்ட அனுபவம் இதோ..

அக்டோபர் மாதத்தில் அமிர்தசரஸ், டேராடூன், ஆக்ரா போகலாம் என்று திட்டம். இதற்காக டேராடூனிலிருந்து  ஆக்ராவுக்கு ஏதாவது விமானம் இருகிறதா என்று ஒரு வலை பக்கத்தை மேய்ந்தேன்... என் விவரம்,   மின்அஞ்சல் எதையும்  கொடுக்கவில்லை. குறிப்பிட்ட வழித்தடத்தில் எந்த விமானமும் இல்லை என்று தெரிந்தவுடன் இணையத்தை துண்டித்துவிட்டேன். மறுநாள் என் ஹாட்மெயிலில் மின்அஞ்சல்களைப்  பார்த்துகொண்டிருந்தபோது ஓரத்தில் ஒரு விளம்பரம்.... 'Flights  from  Dehradun  to  Agra   - lowerst  fare ' என்று இருந்தது...

ஆஹா.. என் அதிஷ்டத்தை நினைத்து எனக்கே மெய்சிலிர்த்தது.. நமக்கு தேவைப்படும் நேரத்தில் ஏதோ ஒரு நிறுவனம் புதிதாக இந்த வழித்தடத்தில் விமான சேவையை தொடங்கியிருகிறதே என்று ஆசை ஆசையாய்  அந்த விளம்பரத்தை கிளிக் செய்தேன்... கடைசியில் அதே வலைப்பக்கம்.. அப்படி எந்த ஒரு விமானமும் பறக்கவில்லை. பிறகுதான் தெரிந்தது.. அந்த குறிப்பிட்ட வலைத்தளம் என் browsing history, cookies   மூலம் என் தகவல்களை களவாடி, நான் ஹாட்மெயிலை திறக்கும் போது எனக்கு மட்டுமே உரித்தான ஒரு விளம்பரத்தை கொடுத்திருக்கிறது.

பின் ஒருமுறை அமிர்தசரஸ் ஹோட்டல்களை பற்றி கூகுளில் மேய்ந்தபோது மறுநாள் அமிர்தசரஸ் ஹோட்டல்கள் பற்றிய ஒரு விளம்பரம் என் ஹாட்மெயிலில்  வந்தது.

முன்பெல்லாம் எந்த ஊரிலிருந்து இணையத்தை இணைக்கிறீர்களோ அந்த ஊர் சம்பந்தப்பட்ட தகவல்கள் வரும். ஒரு இணையத்தளத்தில் ஒரு செய்தியை தேடும்போது அது சம்பந்தமான விளம்பரம் அதே இணையத்தளத்தில் வரும். ஆனால் இந்த இணைய கள்ளர்கள் நவீன மென்பொருள் மூலம் நம் தகவல்களை நம் குணங்களை, நம் விருப்பங்களை அலசி ஆராய்ந்து இதுபோல 'தானியங்கு' விளம்பரங்களை அளிக்கிறார்கள். நமக்கு தெரியாமலேயே நம்மை பின்தொடரும் உளவாளிகள் இவர்கள்.

இணையத்தில் ரகசியம் என்பதே எதுவும் கிடையாது போலிருக்கிறது. ரகசியத்தை வெளியே சொல்லக்கூடாது என்பதற்கு 'இரண்டு என்பது சகவாசம்... மூன்று என்பது கூட்டம்' என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.. இதில் இணையம் என்பது...?

Saturday, August 21, 2010

கடைகளுக்கு தண்டனை... சினிமாவுக்கு சலுகை..

சென்னையில் எல்லா கடை பெயர்களும் இப்போது தமிழாக்கம் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் பெயர் வைக்கவேண்டும் என்று உத்தரவு போட்டதுமட்டுமல்லாமல், சென்னை மாநகராட்சி என்னென்ன கடைகளை எப்படியெல்லாம் அழைக்கலாம் என்று யோசனையும் கூறியிருக்கிறது. தமிழ் பெயர் வைக்காதவர்களுக்கு லைசன்ஸ், மன்னிக்கவும்... உரிமம் ரத்து செய்யப்படுமாம்.

மாநகராட்சியின் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.. அதே சமயம் இதை ஏன் அரசு தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் செல்லவில்லை என்றும் புரியவில்லை..

சென்னை தெருக்கள் முழுவதும் இப்போது தமிழ் மணம் வீசுகிறது.. உதாரணத்துக்குச் சில...

மெடிகல்ஸ் - மருந்தகம்
கலர் லேப் - வண்ணக் கூடம்
செல் வேர்ல்ட் - அலைபேசி உலகம்
பியுட்டி பார்லர் - அழகூட்டு நிலையம்
ஸ்டேஷனரி - எழுது பொருளகம்
பேக்கிரி -  அடுமனை அல்லது வெதுப்பகம்
ஆப்டிகல்ஸ் - கண்ணாடியகம்
பிசினஸ் சென்டர் - வர்த்தக நடுவகம்
ஸ்நாக்ஸ் - நொறுவைகள்
ஹார்ட்வேர் - வன்பொருளகம்       

இருந்தாலும் ஒரு விஷயம் நெருடுகிறது.. கடைகளில் தமிழ்ப் பெயர் இல்லையென்றால் தண்டனை.. சினிமாவுக்கு தமிழ்ப் பெயர் வைத்தால் சலுகை..

என்ன நியாயம் இது? ஏன் இந்த பாரபட்சம்?

Sunday, July 25, 2010

'மாணவ' தற்கொலைகள் - ஆசிரியர் மட்டும் காரணமா?

இந்த வாரம் ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை படித்தேன். கடலூர் மாவட்டத்தில் ஒரு பள்ளிகூட ஆசிரியை ஐந்தாம் வகுப்பு மாணவியை திட்டியதால் அவமானப்பட்ட அந்த மாணவி மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீ வைத்துகொண்டு தற்கொலை செய்துகொண்டாளாம். ஆசிரியர் திட்டியதால், மதிப்பெண் குறைந்ததால் நடக்கும் தற்கொலைகளைப் பற்றி அடிக்கடி செய்தி வந்துகொண்டிருக்கிறது.

ஆசிரியர்கள் பொதுவாக கண்டிப்பாக இருக்கவேண்டியவர்கள்தான்.. அதேசமயம், அந்த கண்டிப்பு எல்லை மீறும்போது கண்டிக்கபடவேண்டியர்வர்கள்தான்..! ஆனால் இது போன்ற தற்கொலைகளுக்கு ஆசிரியரும் பள்ளிக்கூடமும் மட்டும்தான் காரணமா? இந்த ஒரு சிறிய அவமானத்தால் சிறுமியை தற்கொலை செய்துகொள்ள தூண்டுவது எது? 'தற்கொலை செய்துகொள்' என்று எந்த ஆசிரியரும் சொன்னதும் இல்லை.. 'தற்கொலை செய்துகொள்வது எப்படி' என்று எந்த பாடபுத்தகத்திலும் விளக்கம் இல்லை.

புடவையை உத்திரத்தில் மாட்டி தூக்கு போட்டுக்கொள்வது, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துகொள்வது, அரளி விதையை சாபிடுவது, ரயிலில் தலை வைத்துப் படுப்பது போன்று விதவிதமான தற்கொலைகளை விளாவாரியாக  காட்டுவது நம் சினிமாவும் டிவி மெகா தொடர்களும்தான். இவை இல்லாமல் தற்கொலை பற்றி இவ்வளவு விவரங்கள் ஒரு 10  வயது சிறுமிக்கு தெரிய வாய்ப்பில்லை. அதுவும் நம் சினிமாக்களில் எப்படி எண்ணையை ஊற்றிகொள்வது, தூக்கு எந்த அளவுக்கு இறுக்கமாக இருக்கவேண்டும் என்று ஒரு விஷுவல் பாடமே எடுக்கிறார்கள். சினிமாவில் பாதி தற்கொலைகள் ஹீரோக்களால் காப்பற்றப்படுகின்றன. அனால் நிஜத்தில்?

தனக்கு ஒரு அவமானம் ஏற்பட்டால் தன் உடலை அழித்துக்கொள்ளவேண்டும் என்று போதிப்பதே நம் சினிமாதான். எந்த ஒரு ஆங்கில படத்திலும் தற்கொலை காட்சிகளை நான் பார்த்ததில்லை.

இதற்கும் மேலாக அரசியல் தற்கொலைகளை 'உயிர் தியாகம்' என்று கொண்டாடும் நம் அரசியல்வாதிகளும் ஒரு காரணம். கடந்த வருடம் YSR மறைந்தபோது ஆந்திராவில் நடந்த 'உயிர் தியாகங்கள்' போன்று உலகில் வேறு எங்கும் நடந்ததில்லை.

அவமானங்களை தாங்கும் உறுதியும் அதை மீண்டுவரும் மனத்திடத்தையும் திறமையையும் நம் கல்விமுறை கற்றுக்கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் இதுபோன்ற 'மாணவ' தற்கொலைகளுக்கு பள்ளிகளையும் ஆசிரியர்களையும் மட்டும் குறைசொல்லி பயனில்லை.

குறைந்த பட்சம் புகை பிடிக்கும் மது அருந்தும் காட்சிகளை தடை செய்ததுபோல சினிமாவில் தற்கொலை காட்சிகளையும் சென்சார் செய்யவேண்டும். புகை, மது போன்று இதுவும் ஒரு 'சமூக சீரழிவு' தான்..!

Wednesday, June 30, 2010

புன்னகை


எல்லோரிடமும் ஒரேமாதிரி
புன்னகைக்கிறாய்..
இருந்தாலும் நீ உதிர்த்த
சில கூடுதல் புன்னகைகளை
எனக்கென எண்ணி
அள்ளிக்கொண்டேன்..!

Sunday, March 28, 2010

குஷ்பூ விவகாரமும் நீதிமன்றத்தின் விவாதங்களும்

குஷ்பூ விவகாரத்தில் உச்சநீதி மன்றத்தின் விவாதங்கள் விநோதமாக இருக்கிறது.

'திருமணத்துக்குமுன் உறவு பற்றி குஷ்பூ பேசுவதற்கு உரிமை இருக்கிறதா இல்லையா அல்லது அவர் பேசியதால் சமூகத்தில் பெரிய பாதிப்பு ஏற்பட்டதா இல்லையா' என்பது மட்டுமே விவாதத்தின் சாராம்சமாக இருக்க முடியுமே தவிர அவர் பேசியது சரியா தவறா என்பது பற்றி அல்ல. 'இதைபற்றி பேசுவதற்கு யாருக்கும் உரிமை இருக்கிறது.. இதற்கெல்லாம் வழக்கு தொடர முடியாது' என்று சொல்வதை விட்டு விட்டு ஏதேதோ  கேள்விகள் கேட்டிருக்கிறார்கள் நீதிபதிகள்.

'எவ்வளவு பெண்கள் குஷ்பூ பேச்சை கேட்டு சீரழிந்திருக்கிரார்கள்... உங்களுக்கு மகள் உண்டா.. அப்புறம் உங்களுக்கு என்ன பிரச்னை' என்றெல்லாம் வழக்கு தொடர்ந்தவர்களைப் பார்த்து  கேட்டிருகிறார்கள்  திருமணத்துக்கு முன் உறவு, சேர்ந்து வாழுதல் என்பதெல்லாம் பெண்கள் பிரச்னை மட்டும் இல்லை. இது சமூக பிரச்னை.  அப்படியே ஓரிரு பெண்கள் நடந்துகொண்டார்கள் என்று நிரூபித்தாலும் குஷ்பூவை கைது செய்ய முடியுமா? அப்படியானால் எவ்வளவு இளைஞர்கள் நம் சினிமா கதாநாயகர்களைப் பார்த்து சிகரெட் பிடிக்க கற்றுகொண்டார்கள்? எவ்வளவு பேர் வன்முறையில் ஈடுபட்டார்கள்? (சில சினிமாக்களில் வருவதுபோலத்தான் கொலை செய்தேன் என்று சில கொலையாளிகளே வாக்குமூலம் கொடுத்திருகிறார்கள்) அதற்காக நம் கதாநாயகர்களையும் கைது செய்ய முடியுமா?

 நீதிபதிகள் கடைசியாக 'புராணத்தில் கிருஷ்ணரும் ராதையும் சேர்ந்து வாழ்ந்தார்களே' என்று கேட்டிருப்பது அபத்தத்தின் உச்சம். ஒரு புராண உதாரணத்தை எப்படி நீதிமன்றத்தில் பேசமுடியும் என்று புரியவில்லை. புராண சம்பவங்களை உதாரணம் காட்டும் நீதிபதிகள், இது சேது சமுத்திர வழக்கில் தனக்கு எதிராக திரும்பும் என்று நினைத்துப் பார்த்தார்களா? புராண சம்பவங்கள் மட்டுமல்ல... சமூக கலாச்சாரம் சம்மந்தப்பட்ட எந்த விவாதத்திலும்   இந்த  காலகட்டத்துக்கு  ஒவ்வாத  எந்த  கருத்துகளும் எடுபடாது. அக்பர் பல பெண்களை மணந்தார்... கிளியோபட்ரா பல ஆண்களை மணந்தார் என்றெல்லாம் உதாரணம் சொல்லிகொண்டிருக்க முடியுமா என்ன?

திருமணத்துக்கு முன் உறவு, சேர்ந்து வாழுதல் போன்றவையெல்லாம் சமூக கலாச்சார சிக்கல்கள். இவற்றுக்கெல்லாம் ஒரு சட்ட வடிவம் கொடுத்து 'சரியா தவறா' என்று நிர்ணயிக்க முடியாது. இவை பற்றிய பார்வையெல்லாம் ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏன் ஒவ்வொரு தனிமனிதனுக்கும்  மாறுபடும். அதே சமயம் இவைபற்றி யாரும் பேசக்கூடாது என்றும் சொல்ல முடியாது. அவரவர் கருத்துக்கு அவரவருக்கு உரிமை உண்டு.

இனி தமிழ் கலாச்சார காவலர்களுக்கு...

ஏதோ நாலு பேர் படித்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கக் கிளம்பிய ஒரு செய்தியை இவ்வளவு பெரிசாக ஊதி, உச்சநீதிமன்றமே  அதை  அங்கீகரிக்கும்  நிலையை கொண்டுவந்து, தன முகத்தில் தானே கரிபூசி... தேவையா இதெல்லாம்? குஷ்பூ பேசியதால் தமிழ் கலாச்சாரத்தின் 'moral values ' சீரழிந்துவிட்டது என்று கொடிதூக்குகிறீர்களே.. தமிழ் சினிமாவில் காமெடி என்கிற பெயரில் நடக்கும் கலாசார சீரழிவுக்கு உங்களுக்கு கோபமே வராதா?

Friday, February 26, 2010

சச்சின் டெண்டுல்கரின் ஆனந்த தாண்டவம்

அது 1997ம்  ஆண்டு.. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டி.முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் மளமளவென ரன்களை குவித்துக்கொண்டிருந்தார்.  பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிக்கொன்டிருந்தார். அனில் கும்ப்ளேவின் ஒரு ஓவரில்  வரிசையாக மூன்று சிக்சர்கள் அடித்தார்.

50 , 100 , 150  என்று ரன்களை கடந்துகொண்டிருந்தார் சயீத் அன்வர். ஸ்டேடியத்தில் உட்கார்ந்து மேட்ச் பார்த்துகொண்டிருந்த எனக்கும் என் நண்பர்களுக்கும் எங்கேயாவது 200 ௦ரன்கள் எடுத்துவிடுவாரோ பக் பக் என்று அடித்துகொண்டிருந்ததது... கடைச்யாக 194  ரன்களில் அவுட் ஆனார் அன்வர். அப்போது என்றாவது ஒருநாள் இந்த சாதனையை சச்சின் முறியடிப்பார் என்று நினைத்தேன்.  13 வருடங்கள் கழித்து குவாலியர் மாட்சில் சச்சின் அந்த சாதனையை நிகழ்த்தியிருகிறார்.

ஆனால் அன்வரின் ஆட்டத்துக்கும் சச்சினின் ஆட்டத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. சயீத் அன்வர் அதிரடியாகவும் அதே சமயம் ஆர்ப்பாட்டதுடனும் ஆடினார். அவருக்கு முந்தய சாதனையான வீவியன் ரிச்சர்ட்சின் 189  ரன்களை கடந்தபோது பேட்-அப் செய்தார். 200 ௦ ரன்கள் எடுக்கவேண்டும் என்ற பதட்டத்தில் 194 ரன்களில் அவுட் ஆனார். அன்று அவர் பொறுமையாக ஆடியிருந்தால் 200 ரன்கள் எடுத்திருக்க முடியும். சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற குறிக்கோளில் விளையாடியதால் பதட்டம் அவரை  தொற்றிக்கொண்டது. அவுட் ஆனதும் மனமில்லாமல் மைதானத்தைவிட்டு வெளியேறியது கண்கூடாகத் தெரிந்தது.

அதற்க்கு நேர் எதிர் சச்சின். குவாலியர் மாட்ச்சில் 194 ரன்களை கடந்தபோது சச்சின் பேட்-அப் செய்யவில்லை. 200  ரன்களை கடக்க அவசரப்படவில்லை. சச்சின் 190  ௦ ரன்களில் இருக்கும்போது கேப்டன் தோனியே அதிகம் விளையாடினர்.. சச்சினுக்கு வாய்ப்பே வரவில்லை. 50வது ஓவரின் நடுவில் கிடைத்த ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்து சரியாக 200 ரன்கள் எடுத்தார். அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் கூட போயிருக்கலாம். அதற்காக சச்சின் கவலைப்படவில்லை. இதே போல் போன மாதம் பங்களாதேஷ் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றிபெற சொற்ப ரன்களே இருந்தபோது, சச்சின் 96  ரன்களில் இருந்தார். அப்போது எதிர்முனையில் விளையாடிக்கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்து இலக்கை கடந்தார். சச்சின் நினைத்திருந்தால் தான் 100 எடுக்கவேண்டும் என்ற விருப்பத்தை தினேஷ் கார்த்திக்கிடம் வெளிப்படுத்தியிருக்க முடியும். ஆனால் கடைசிவரை '96 நாட்-அவுட்' ஆகவே இருந்தார். இதுவே சச்சின் சாதனைகளை குறிவைத்து ஆடவில்லை என்பதற்கு சாட்சி. சாதனைக்கு ஆடாததால்தான் அவரால் சாதிக்க முடிகிறது.

அன்று அன்வர் ஆடியது ருத்ர தாண்டவம். இன்று சச்சின் ஆடியது ஆனந்த தாண்டவம். நாளை சச்சினின் சாதனையை யாரவது முறியடிக்கலாம்.. ஆனால் சச்சின் மாதிரி அடக்கமான பணிவான ஒரு கிரிக்கெட் வீரரை பார்ப்பது அரிது.

Saturday, February 20, 2010

பாம்பு பயம்

சின்ன வயதில்
பின்கதவைத் திறந்தவுடன்
பாம்பு கண்ட பயம்
ஆறாவது மாடி
குடியிருப்பில் கூட
அகலவில்லை

Saturday, January 16, 2010

சாதாரண காமிராவிலிருந்து சூரிய கிரகணம்


நேற்றைய சூரிய கிரகணத்தை சாதாரண சோனி டிஜிட்டல் காமிராவின் முன் சிறப்பு கண்ணாடியை வைத்து எடுக்கப்பட்ட படம். கிரகணத்தின்போதும் நேரடியாக சூரியனை கிளிக் செய்தால் கடைசி புகைபடம்போல்தான் இருக்கும்.

 

Sunday, January 3, 2010

கர்நாடக சங்கீதத்தின் '2009 டாப் 5' பாடகர்கள்

சென்னையில் மார்கழி இசைவிழா இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது. ஒருமாத காலம் இசை மழையில் நனைத்தபின் தலைதுவட்டி நிதானமாக   கர்நாடக சங்கீதத்தின் '2009 டாப் 5' பாடகர்கள் யார் என்று யோசித்தேன்.  ரசிகர்கள் கூட்டம், ஆரவாரம், ரசனை, பரபரப்பு, விளம்பரங்கள்  இவற்றை வைத்து பார்த்ததில் என்னுடைய கணிப்பு இது.  

1. அருணா சாய்ராம்: கர்நாடக சங்கீதத்தில் சிலிர்ப்புகளுக்கு பஞ்சம் இல்லை என்று நிரூபித்த பாடகி. மூன்று மணிநேரம் ரசிகர்களை வசியம் செய்து மெய்மறக்கச் செய்யும் இசை வழங்குபவர் அருணா..  இவர்  கச்சேரிக்கு வரும் கூட்டமும் நேயர்களின் ஆரவாரம் மட்டுமே இவரை முதல் இடத்தில வைத்திருக்கிறது.


2. ஜேசுதாஸ்: நாற்பது வருடமாக ஒலிக்கும் அதே குரல்... அதே ரசிகர் கூட்டம்...  இன்னமும்  கொஞ்சம்கூட தொய்வில்லாத கச்சேரி. கடைசியில் அவர் பாடும் துக்கடாக்களுக்காகவே காத்திருக்கும் ரசிகர்கள்.  பல சாமான்ய  ரசிகர்களுக்கு ஜேசு மூலம்தான் கர்நாடக இசைக்கே அறிமுகம்  கிடைத்தது. சங்கீதப் பெருங்கடலின் ஆழம் தொட்ட மகாகலைஞன்.


3. சுதா ரகுநாதன்: சலனமற்று ஓடும் நீரோடை போன்றது சுதாவின் இசை.  ஒரு நல்ல, இனிய, சம்பிரதாயமான அதே சமயம் ஜனரஞ்சகத்துக்கும்  குறைவில்லாத இசைக்கு உத்திரவாதம் சுதாவின் கச்சேரிகள். ஒவ்வொரு கச்சேரியிலும் ஒரு மெல்லிய பரவச உணர்வை  நம்மை ஆட்கொள்வதை தவிர்க்க முடியாது.


4. டி.எம்.கிருஷ்ணா: சம்பிரதாயமான விஷயங்களை கொஞ்சம் மாற்றி ஒரு புது தொனியில் பாடுவதால் கர்நாடக  சங்கீதத்தில் இவர் கிராப்  கிடுகிடுவென  மேலே  எறிக்கொண்டிருகிறது. பல மொழிபாடகனாகவும் பிரபலமாகிக்கொண்டிருகிறார் கிருஷ்ணா.  இசை பிரியர்களின் நாடி பிடித்து பாடுவதில் இவர் முன்னணியில் இருக்கிறார்.


5. சஞ்சய் சுப்ரமணியம்: 'சாஸ்த்ரீயம்' மாறாமல் அதே சமயம்  மெய்சிலிர்க்கும்  கர்நாடக இசை ரசிக்க விரும்புபவர்களின் முதல் சாய்ஸ் சஞ்சய். நீண்ட நெடிய ஆலாபனைகள், சுவரஸ்தானங்கள் என்று அந்த காலத்து பாணியில் பயணித்தாலும் ரசிகர்களை இசைக்கடலில் மூழ்கடிக்கமுடியும் என்று நிரூபித்துக் கொண்டிருக்கும் பாடகர்.