Thursday, November 11, 2010

இந்திய பாகிஸ்தான் எல்லை - ஒரு வடஇந்தியப் பயணம்

ஒன்றுபட்ட இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் வாஹா என்ற கிராமம், 1947 பிரிவினைக்குபிறகு கிழக்கு பகுதி இந்தியாவுக்கும் மேற்கு பகுதி பாகிஸ்தானுக்கும் பிரிக்கப்பட்டது. இன்று இந்தியாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் ஒரே சாலைவழி மார்க்கம் இந்த வாஹா எல்லை. இங்கிருந்து 25 கி.மீ தொலைவில் இந்தப்பக்கம் அமிர்தசரஸ் நகரம்.. அந்தப்பக்கம் லாகூர் நகரம்.

தினமும் அந்தி சாயும் வேளையில் இங்கு ராணுவ மரியாதையுடன் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. அருகே சென்று பார்க்கவேண்டும் என்றால் கொஞ்சம் சீக்கிரமே சென்றால்தான் இடம் கிடைக்கும் என்று பலர் சொன்னார்கள். மாலை 5.30க்கு துவங்கும் நிகழ்ச்சிக்கு 4.45க்கு போய் நின்றேன். அனால் அதற்குள் சாலையின் இருபக்கமும் இருக்கும் பார்வையாளர்களின் மாடம் நிரம்பி வழிந்தது... மாடத்துக்கு வெளியே நின்றுகொண்டுதான் வேடிக்கை பார்க்க முடிந்தது. அதேபோல் அந்தப்பக்கம் பாகிஸ்தான் பார்வையாளர்களின் மாடத்திலும் நல்ல கூட்டம். சராசரியாக ஒரு நாளில் இந்தியப்பகுதியில் மட்டும் 8000 பேர் வருகிறார்களாம்.

இரு மாடங்களுக்கும்  இடையே  சில  அடி  தூரம்தான்..  இருபக்கமும் இரும்பு வாயிற்கதவு... இங்கு காக்கி நிற உடையிலும் அங்கு கரும்பச்சை உடையிலும் எல்லையோர காவல் படையினர்... அந்த இடமே அவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இந்திய நுழைவில் 'இந்தியா' என்று ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதப்பட்டு மேலே மூவர்ணக்கொடி பறந்துகொண்டிருகிறது.. அந்தப்பக்கம் பாகிஸ்தான் கொடி..கூடவே ஜின்னாவின் படம். (இந்தியாவில் காந்தி படம் இல்லை..காந்தி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பொதுவானவர் என்று விட்டு விட்டார்களோ?).

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்  இருபக்கமும்  வாயிற்கதவின் முன் ஒரு பெறும்   கூட்டம்  நடனமாடிக்கொண்டிருகிறது,  தங்கள்  தேசியக்   கொடியுடன்..! பல தேசபக்திப்பாடல்கள் ஒளிபரப்பப்படுகின்றன ('ஜெய் ஹோ'வும் உண்டு). நம் பக்கம் 'ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்', 'பாரத் மாதாகி ஜே', 'வந்தே மாதரம்' போன்ற கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.. ராணுவத்தை சேர்ந்த ஒரு அதிகாரி வேறு கையை உயர்த்தி 'இன்னும் இன்னும்' என்று கூட்டத்தை உசுப்பேத்திவிடுகிறார்.. இதேபோல பாகிஸ்தான் பக்கமும்...! இதெல்லாம் முடிந்தபிறகு நிகழ்ச்சி தொடங்கியது. இரண்டு இரண்டு பேராக ராணுவ வீரர்கள் அதிவேகமாக நடந்து கதவு அருகே நின்று கொள்கிறார்கள். பிறகு சிலர் கிட்டத்தட்ட தலைக்குமேல் காலை உயர்த்தி சத்தத்துடன் தரையில் அடித்து நடந்து செல்கிறார்கள்.  இதற்கு இணையாக பாகிஸ்தான் பக்கமும் அணிவகுப்பு நடைபெற்றுக்கொண்டிருகிறது. பாகிஸ்தான் வீரர்கள் வெடுக்கென தலையை திருப்பி கையை உயர்த்தி உடலை சிலிர்த்துக் கொள்கிறார்கள். அது என்ன ராணுவ சைகை என்று புரியவில்லை. பிறகு சடாரென்று கதவு திறக்கப்படுகிறது. இந்திய பாகிஸ்தான் வீரர்கள் ஏதோ போருக்கு தயாராவதுபோல நின்றுகொண்டு கைகுலுக்கிக்கொள்கிறார்கள். பிறகு சரியாக சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் இரு கொடிகளும் இறக்கப்டுகின்றன. பிறகு கதவு மீண்டும் வேகமாக மூடப்படுகிறது. அவ்வளவுதான்.. நிகழ்ச்சி முடிந்தது.

அங்கு இருக்கும் போது சில அடிதூரத்தில் இன்னொரு நாட்டைப்பார்ப்பது ஒரு திரில்லான அனுபவம்தான். கொஞ்சம் தேசப்பற்று வருவது என்னமோ உண்மைதான். ஆனால் ஒரு நாட்டின் எல்லையில் நிற்கும்போது எதற்காக இவ்வளவு கோஷங்கள், ஆர்பாட்டங்கள் ஏன் என்று புரியவில்லை. ஏதோ தேசபக்தியை வேண்டுமென்றே திணிப்பதாக எனக்குப்பட்டது. இதுபோன்ற ஒரு இடத்தை மக்காவ்-சீன எல்லையில் பார்த்திருக்கிறேன். (அப்போது மக்காவ் தனி நாடு - போர்சுகல் காலனியாக இருந்தது). அங்கு மக்கள் அமைதியாக இரு நாடுகளுக்கும் சென்று வந்து கொண்டிருப்பார்கள்.. ஆர்ப்பாட்டம் எதுவும் இருக்காது. ஐரோப்பாவிலும் இதுபோல இருநாடுகளுக்கும் சாலைப் போக்குவது இருக்கிறது எந்தவித கோஷங்களும் இல்லாமல்...! அனால் இந்தியா-பாகிஸ்தான் எல்லை என்றதும் அதற்கு ஒரு தனி வீரியம் வந்துவிடுகிறது.

நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும் போதே ஒரு பறவைக்கூட்டம் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பறந்து கொண்டிருந்தது... "ஏ மனிதப்பிறவிகளே...! ஆறறிவு படைத்த  உங்களுக்குத்தான் இத்தனை நாடுகள், இத்தனை பிரிவினைகள், இனங்கள், மதங்கள் எல்லாம்.. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல விசா, பாஸ்போர்ட் எல்லாம்.. நாங்கள் சுதந்திரப்பறவைகள்.. எங்களை எந்த எல்லையும் தடுக்கமுடியாது" என்று நம்மைப் பார்த்து ஏளனம் செய்து பறந்தன..!

இனி பஞ்சாபிலிருந்து நேராக இமயத்தின் அடிவாரத்தில் ஒரு ரம்யமான பிரதேசம்.. ரிஷிகேஷம்..

- பயணம் தொடரும்

3 comments:

a said...

நான் ரசித்த பதிவு........

கிரி said...

நீண்ட வருடங்களாக இந்த நிகழ்ச்சியை காண வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன். டிவி யில் பார்த்து அதன் ஆர்வம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது நீங்களும் கொஞ்சம் உசுப்பேத்தி விட்டீர்கள் :-)

பகிர்ந்தமைக்கு நன்றி

Unknown said...

அருமையான,விபரமான வர்ணனை
நான் 15 ஆண்டுகள் முன்பு நேரில் பார்த்திருக்கிறேன்

Post a Comment

உங்கள் கருத்துக்கள்