Monday, February 23, 2009

ஆஸ்கார் வென்ற தமிழன்


கடைசியில்
அந்த சாதனையை நிகழ்த்திவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.

சின்ன சின்ன ஆசையாய் தன் இசை பயணத்தை துவங்கியவர், திரையுலகத்தின் உச்சகட்ட ஆசையான ஆஸ்கார் விருதை வென்றுவிட்டார். இவர் இசைப்புயல் மட்டுமல்ல... ஆடம்பரமும் கவர்ச்சியும் மிளிரும் ஆஸ்கார் விழாவில் ஆர்பாட்டமில்லாமல் விருது வாங்கிய அமைதிப்புயல்... 'எல்லாப்புகழும் இறைவனுக்கே' என்று அடக்கத்தோடு சொன்ன ஆன்மீகப்புயல்.. ! 'அடக்கம் அமரருள் உய்க்கும்' என்ற வள்ளுவர் வாக்குப்படி புகழ் தன் தலை தொடாதபடி பார்த்துக்கொண்டதனால்தான் ரஹ்மானால் இந்த உச்சத்தை அடைய முடிந்தது.

பல அரசியல் சண்டைகளால் தலை குனிந்து நிற்கும் தமிழர்களை சில அங்குலங்களாவது தலைநிமிரச்செய்த ரஹ்மானுக்கு ஒவ்வொரு தமிழனும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறான்.

ஆஸ்கார் அரங்கில் தமிழில் நன்றி சொன்னதற்காக ரஹ்மானுக்கு இன்னொரு சிறப்புப் பூங்கொத்து...!

Sunday, February 22, 2009

சென்னை முதலைப் பண்ணை



Wednesday, February 11, 2009

எது அதிசயம்?


அண்மையில் நான் படித்த புத்தகம் சத்குரு ஜக்கி வாசுதேவின் 'கேளுங்கள்... கொடுக்கப்படும்'... சத்குருவின் கேள்வி-பதில் தொகுப்பு.. அதில் ஒரு கேள்வி-பதில்.. தலையில் பொளேர் என்று அடித்தாற்போல இருந்தது .

கேள்வி: திருவண்ணாமலையில் ஒரு யோகி ஆசனத்தில் அண்ணாந்து பார்த்து அமர்ந்தபடி அப்படியே காற்றில் எழுவதை இணையதளத்தில் பார்த்தேன். என் கண்களையே நம்பமுடியவில்லை.. இது சாத்தியமா?

பதில்
: சாத்தியம்தான். அனால் உண்மையான் யோகிகள் இந்த சர்க்கஸ் வேலைகள் செய்துகாட்டிக்கொண்டு இருக்க மாட்டார்கள். வாழ்க்கை என்பதே மிக வியக்கத்தக்க அதிசயம். ஒரே மண்ணிலிருந்து ஒவ்வொரு விதையும் வெவ்வேறு மரமாக வெளிவருவது அதிசயம். உண்பதை உடலின் பகுதியாக மாற்றும் உயிரின் அமைப்பு அதிசயம். சேற்றில் செந்தாமரை பூப்பது அதிசயம்.. பூமி சுழல்வது அதிசயம்.

இத்தனை அதிசயங்களை செய்துகாட்டும் இயற்கை ஆர்ப்பாட்டமிலாமல் இருக்கிறது. இந்தப் பேரதிசயங்களின் ஆழத்தை உணரும் ஆர்வத்தை விட்டுவிட்டு, நீங்கள் என்ன அதிசயங்கள் செய்துகாட்ட விரும்புகிறீர்கள்?

இதுபோல ஏதோ கொஞ்சம் திறமையை வைத்துக்கொண்டு சித்து வேலையை காண்பிக்கும் யோகிகள் இயற்கையின் முன்னால் தோற்றுபோவார்கள் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். கையிலிருந்து விபூதி வரவழிப்பது, வாயிலிருந்து லிங்கம் எடுப்பது, அந்தரத்தில் மிதப்பதுபோல் தோற்றம் அளிப்பது.. இவையெல்லாம் என்ன பெரிய பிரமாதம்? ஒரு பூ மலர்வதை விடவும், பல மைல்கள் பறந்து வேடந்தாங்கலை அடையும் பறவைகளைவிடவும், மயிகளின் தோகை அழகை விடாவா இவையெல்லாம் அதிசயம்? நாம் ஏன் இயற்கையை மறந்து இதுபோல செயற்கை அதிசயங்களை ரசித்துக்கொண்டிருகிறோம்?

இயற்கையை விட்டுத்தள்ளுங்கள்.. மனிதன் தன் திறமையால் பல அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறான்.. கட்டிடக்கலை வளர்ச்சியடையாத காலத்தில் வெறும் பாறைகளை வைத்து கட்டப்பட்ட எதிப்திய பிரமிடுகள், காற்றின் ஒலியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இசை, ஒலியிலிருந்து முதிர்ந்த மொழி வடிவம்.. இவையெல்லாம் மனிதன் செய்துகாட்டிய அதிசயங்கள்.. இவற்றோடு ஆன்மிகம் சேரும்போதுதான் அது பிரச்சினையாகிறது.. கொல்கத்தா விக்டோரியா அரண்மனையை சில நிமிடங்கள் காணாமல்போகச்செய்த பி.சி.சர்க்காரை 'மாஜிக் நிபுணர்' என்று கூறும் நாம், சித்து விளையாட்டில் ஈடுபடுவோரை கடவுளோடு ஒப்பிடுகிறோம்..

என்ன செய்வது... கடவுள்தன்மை கொண்ட மனிதர்களை நம்புவதற்குக்கூட நமக்கு அதிசயங்கள் தேவைப்படுகிறது. நெல்லிக்கனியை தங்கமாகியவர் என்றும், உயிர்த்தெழுந்து வந்தவர் என்றும் சொன்னால்தானே நாம் ஆதிசங்கரரையும் ஏசுநாதரையும் ஏற்றுக்கொள்வோம்?

Sunday, February 1, 2009

தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின்

இத்தனை நாள்வரை நம்மையெல்லாம் சிரிக்க வைத்துக்கொண்டிருந்த நகைச்சுவை திலகம் நாகேஷ் இன்று நம்மை கண்கலங்க வைத்துவிட்டார்..! நாகேஷ் நினைவில் மூழ்கிய நான், அவரின் சில படங்களை அசைபோட்டேன்.

நீர்க்குமிழி, எதிர்நீச்சல் போன்ற படங்களில் சோகத்தை உள்ளடக்கிக்கொண்டு வெளியே கலகலப்பாக இருக்கும் கதாபாத்திரம் நாகேஷுக்கு..! கிட்டத்தட்ட இதே போன்ற பாத்திரத்தில் நடித்த 'மார்டன் டைம்ஸ்' படத்தின் சார்லி சாப்ளினுக்கு இணையாக நடித்திருப்பார். இரண்டும் கே.பாலச்சந்தரின் படங்கள். கே.பி இயக்கத்தில் அவர் மின்னிய மற்ற படங்களின் ஒன்று 'அனுபவி ராஜா அனுபவி'.. இதில் இரட்டை வேடம். இரண்டுமே மிகைபடுத்தாத இயற்கையான நடிப்பு.. (மறக்க முடியுமா 'முத்துக்குளிக்க வாரீகளா' பாடலை..!) இன்னொரு படம் 'பாமா விஜயம்'. பாலையா, மேஜர், முத்துராமனோடு கலக்கிய காமெடி..

நாகேஷின் மைல்கல் படம் கே.பி வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய 'சர்வர் சுந்தரம்'.. கதாநாயகனாகவும் காமெடியனாகவும் பின்னியெடுத்திருப்பார்..

நாகேஷின் 'கிளாசிக் காமெடி' திருவிளையாடல்தான்.. இன்றும் தமிழகத்தின் பட்டிதொடியிலும் கேட்கப்படும் ஒலிச்சித்திரம். வேறொரு புலவரின் பாடலை அரசவையில் பாடி பரிசு பெரும் அவசரத்தையும், மாட்டிக்கொண்டவுடன் உண்டான பதட்டத்தையும், தன் இயலாமையை நினைத்து தனியாக புலம்புவதையும் மிக அற்புதமாக சித்தரித்திருப்பார்..!

இயக்குனர் ஸ்ரீதரும் நாகேஷை அமர்களமாக கையாண்டிருக்கிறார்.. காதலிக்க நேரமில்லை படத்தில் ஒரு சினமா இயக்குனராகவும் (ஓஹோ ப்ரொடக்க்ஷன்ஸ்) ஊட்டி வரை உறவு படத்தில் டாக்டராகவும் நடித்திருப்பார்.

தில்லானா மோகனாம்பாள் படத்தில் நகைச்சுவை வில்லன் வேஷம் (இந்த வைத்தியை தெரியாதவங்க யாரவது இருக்க முடியுமோ..) 'காமெடி டிராக்' என்று தனியாக இல்லாமல் கதையோடு இழைந்திருக்கும் பாத்திரம். எல்லோரையும் ஏகவசனத்தில் அழைத்துக்கொண்டு சர்வசாதரணமாக நடித்திருப்பார் நாகேஷ்.

சிவாஜி படங்களில் நாகேஷ் நகைச்சுவை பிரமாதமாக இருக்கும். சிவாஜிக்கு இணையாக இருக்கும் (உ.ம் கலாட்டா கல்யாணம்). மாற்ற நடிகர்களோடு அவர் கலக்கிய முக்கியமான படங்கள் - ஜெய்சங்கரோடு பட்டினத்தில் பூதம், ஜெயலலிதாவோடு மேஜர் சந்திரகாந்த், ரவிச்சந்திரனோடு நான் (கொமட்ல குத்துவேன்). அதேசமயம் எம்.ஜி.ஆர் படங்களின் அவர் அவ்வளவாக சோபித்ததில்லை. மேலும் நாகேஷ் இயக்குனரின் நடிகர்.. கே.பி, ஸ்ரீதர் ஏ.பி.என் போன்றவர்கள்தான் நாகேஷின் நடிப்பு உச்சத்தை வெளிக்கொணர்த்திருக்கிறார்கள். நாகேஷை வீணடித்த படங்களும் உண்டு (தளபதி, தசாவதாரம்)

நாகேஷின் மாறுபட்ட நடிப்பை 'நம்மவர்' படத்தில் பார்க்கலாம். தன் பெண் தற்கொலை செய்தியை கேட்டு ஓடிவந்தவர் ஒரு சொட்டு கண்ணீர்கூட விடாமல் வெறும் வசனம் மட்டும் பேசி மற்றவர்களை கலங்கடித்துவிடுவார்..
இன்று தமிழ் திரைப்படங்களின் காமெடி மலிந்துவிட்டது. 'non-ethical' விஷயங்கள் மட்டுமே காமெடியாக கருதப்டுகிறது.. பெண்களை 'ஈவ் டீசிங்' செய்வது, தண்ணி அடித்து கும்மாளம் போடுவது , பத்துபேர் சேர்ந்து ஒருவரை அடிப்பது, காலால் எட்டி உதைப்பது, இரட்டை அர்த்த வசனங்கள்.. இவைகள்தான் இந்தக்காலத்து நகைச்சுவை காட்சிகள்.. ஒரு சிலபடங்களில் விபச்சாரமும் நகைச்சுவையாக காண்பிக்கப்பட்டிருக்கிறது. காமெடி என்ற பெயரில் இதுபோன்ற வக்கிர விஷயங்கள் நம் குழந்தைகளின் மூளையில் விஷமாக ஏறிக்கொண்டிருப்பதை நாம் தவிர்க்க முடியாது.

நாகேஷின் எந்த ஒரு படத்திலும் இந்தமாதிரி அசிங்கங்கள் இருந்ததில்லை. சார்லி சாப்ளின் படங்களைப்போன்று இன்றைக்கும் குடும்பத்தோடு ரசிக்ககூடியதுதான் நாகேஷின் நகைச்சுவை.