Saturday, November 29, 2008

சமாதானப் புறாக்களுக்கு எதிரே தீவிரவாதம்


அரபிக் கடல் அலைமோதிச் செல்லும் மும்பை கேட் வே ஆப் இந்தியாவில் நின்றுகொண்டு புறாக்களுக்கு தானியங்களை இறைத்தபடி எதிரே உள்ள தாஜ் ஹோட்டலின் அழகை ரசித்தவர்களின் நானும் ஒருவன்.

மும்பையின் அடையாளமாக இருந்த தாஜ் ஹோட்டல் இந்த வாரம் உலகத்தின் எல்லா நாளிதழ்களிலும் தலைப்புசெய்தியாக இடம் பெற்றது. இந்தப்பக்கம் பல நூறு புறாக்கள் சமாதான மொழி பேசிக்கொண்டிருக்க தாஜ் ஹோட்டல் தீவிரவாதிகளின் கூடாரமானது. இந்தியாவின் இந்த வருட தொடர் வெடிகுண்டுகளுக்கெல்லாம் உச்சம், தீவிரவாதிகள் கடைபிடித்திருக்கும் இந்த புதிய முறை.

வழக்கம்போல ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் அறிக்கை விட்டுகொண்டிருந்தாலும் இந்தமுறை மக்களும் ஊடகங்களும் விடுத்திருக்கும் புதிய குரல் : "அரசில்வாதிகளே.. உங்கள் சண்டையை நிறுத்துங்கள்.. தீவிரவாதத்தை எதிர்க்க இப்போது ஒற்றுமை தேவை.."

ஆம்.. இப்போதைய தேவை சட்ட மாற்றங்களோ, வெறும் அறிக்கைகளோ, சம்பிரதாய கூட்டங்களோ அல்ல.. ஒற்றுமையான ஒரு அணுகுமுறை..

குண்டு எந்த மாநிலத்தில் வெடித்தது என்பதை பொறுத்து மாநில அரசையோ மத்திய அரசையோ புகார்கூறாத அணுகுமுறை.. இந்திய இராணுவம் - கடலோர காவல் படை - மத்திய மற்றும் மாநில புலனாய்வுத்துறை - அதிரடிப்படை - மாநில காவல் துறை அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படும் அணுகுமுறை..

இந்த அணுகுமுறைதான் செப்டம்பர் 11 க்கு பிறகு தீவிரவாதம் தலைதூக்காமல் அமெரிக்காவை காப்பாற்றியது.

பிரிந்து கிடந்த இந்தியாவை சுலபமாகக் கைப்பற்றியது பிரிட்டன். காந்திக்கு முன் நடந்த எந்த போராட்டமும் வெற்றி பெறவில்லை. மத-இன-மொழி உணர்வுகளைக் கடந்து சிதறிக்கிடந்த இந்தியாவை ஒன்று சேர்த்துப் போராடி வெற்றி கண்டார் காந்தி.

இன்றும்
இந்தியா சிதறிக் கிடப்பதுதான் தீவிரவாதிகளின் சாதகமான விஷயம். இப்போதைய தேவை ஒரு சுதந்திரப்போராட்டத்துக்கான ஒற்றுமை, உறுதி. ஆனால் அதை வழிநடத்திச்செல்லக்கூடிய தலைவன் யார்?

Friday, November 28, 2008

வி.பி.சிங்...

மும்பை வெடிகுண்டு சத்தங்களுக்கு நடுவில் இந்தியாவின் ஒரு உண்மையான, ஊழலற்ற அரசியல்வாதி மறைந்துபோன செய்தி ஊடகங்களில் அதிகம் இடம் பிடிக்கவில்லை.

பிரதமர் பதவியோடு பல பதவிகளை வகித்த வி.பி.சிங் பெயர் எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டிலும், குதிரை பேரத்திலும், ஆட்சி கவிழ்ப்பிலும், தரமற்ற அரசியலிலும் இடம் பெற்றதில்லை. பிராந்திய அடையாளங்கள் இல்லாமல், மத-இன உணர்வுகள் இல்லாமல், இந்தியாவை ஒரு தேசிய கண்ணோட்டத்தில் பார்த்த பிரதமர்களில் வி.பி.சிங் ஒருவர்.

உ.பி முதலமைச்சராக இருந்தபோது குறிப்பிட்ட நாட்களுக்குள் சாம்பல் கொள்ளையர்களை அடக்குவேன் என்று சபதமிட்டு அது நடக்காமல் போனதும் பதவியை துறந்தவர்..!

காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக ராணுவ அமைச்சராக இருந்தபோதும் fairfax, bofors முறையீடுகளை எந்தவொரு சமாதானத்திற்கும் இடம்கொடுக்காமல் வெளியுலகத்துக்கு கொண்டு வந்தவர்..! காங்கிரஸ் ஆட்சிக்கு நிதிஉதவி செய்துவந்த அம்பானி அமிதாப் போன்றவர்களிடம் வருமானவரி சோதனை நடத்திய நடுநிலையாளர்..!

பிரசார் பாரதி அறிக்கை முலம் இந்தியாவின் தாராளமயமாக்கல் கொள்கைக்கு விதை ஊன்றியவர்..!

இரு துருவங்களான கம்யூனிஸ்டுகளையும் ப.ஜா.காவையும் ஒரே அலைவரிசையில் இணைத்த சாதனையாளர். அதே சமயம், கூடவந்தவர்களின் கூட்டணி அரசியலையும், காங்கிரஸின் காலைவாரும் அரசியலையும், பா.ஜா.காவின் காவி அரசியலையும் தாக்குப்பிடிக்கமுடியாமல் தோற்றுப் போனவர்..! சந்திரசேகர் - ராஜீவ் காந்தி - அத்வானியின் மும்முனைத் தாக்குதலில் வீழ்ந்து போனவர்.

காங்கிரஸிலேயே நீடித்திருந்தால், ராஜீவின் மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவராக, நரசிம்மராவுக்கு பதிலாக பிரதமராகியிருக்கக் கூடியவர்..!

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உண்மையிலேயே கவலைப்பட்டவர்..!

தன்
உடலில் புற்று நோய் தொடங்கியதை அறிந்தவுடன் அரசியலைத் துறந்தவர். கிட்டத்தட்ட பதினேழு வருடமாக புற்று நோயுடன் போராடிய தன்னம்பிகையாளர்..!

கடைசியாக, வாரிசு அரசியலில் நம்பிக்கையில்லாத சொற்ப இந்திய அரசியல்வாதிகளில் ஒருவர்..!

விஸ்வநாத் பிரதாப் சிங் இந்திய ஜனநாயகத்தின் இலக்கணங்களுக்கு ஏற்ற அரசியல்வாதியாக இருந்தார். ஆனால் இந்திய ஜனநாயகத்தைப்போலவே பலர் இவரை சரியாக புரிந்துகொள்ளவில்லை.

Saturday, November 22, 2008

பாத சேவை

இரண்டு கறுப்பின மக்கள் வெள்ளையர்களின் காலணிகளுக்கு பாலிஷ் போடும் இந்தக் காட்சியை அமெரிக்காவில் உள்ள ஆர்லாண்டோ நகரத்தில் அண்மையில் படம் பிடித்தேன்.

இது எங்கோ தெருவோரத்தில் நடந்தது அல்ல. வங்கி தொடர்பான ஒரு சர்வதேச கண்காட்சியில், பல நாட்டவர்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் இந்தப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இது போல காட்சியை மும்பை நரிமன் பாயிண்ட்டில் உள்ள ஷூ பாலிஷ் சிறுவர்களாக பார்த்துப் பழகிய நமக்கு அமெரிக்காவில் இப்படி நடப்பது ஆச்சரியமாக இருக்கலாம்.

இதை ஒரு 'சேவை' என்று தொழில் ரீதியாக அங்கீகரித்தாலும் ஒரு கறுப்பினத்தவனுக்கு வெள்ளையன் இதுபோல பாத சேவை செய்யும் காட்சி அமெரிக்காவில் பார்க்க முடியுமா என்பது சந்தேகமே..!

ஒபாமா... உண்மையான 'மாற்றத்தை' காண்போமா?

Thursday, November 13, 2008

வருங்கால வழக்கறிஞர்கள்..

சென்னை சட்டக்கல்லூரியில் நடந்த இந்த வன்முறை தொலைக்காட்சியிலும் நாளிதழ்களிலும் வெளிவந்ததால் பரபரப்பானது. இவர்கள்தான் வருங்காலத்தில் சட்டத்தை மேம்படுத்தும் வக்கீல்களாகவும் நீதியை நிலை நாட்டும் நீதிபதிகளாகவும் வலம் வரப்போகிறவர்கள்..! சட்டத்தை கையில் எடுக்கும் இவர்களை நம்பித்தான் நாம் சட்டத்தை ஒப்படைக்கப்போகிறோம்..

கொஞ்சம்கூட மனிதத்தன்மையே இல்லாத மிருககுணம் இந்த மாணவர்களுக்கு எங்கிருந்து வந்தது? சினிமாவின் பாதிப்பா அல்லது அரசியலின் பாதிப்பா?

ஆனால் நமக்கு இதெல்லாம் நகைச்சுவை காட்சிகள்தானே? திரையில் கவுண்டமணி செந்திலைப் போட்டு அடிக்கும்போதும் வடிவேலு தர்ம அடி வாங்கும்போதும் குடும்பத்தோடு பார்த்து கைதட்டி ரசித்தவர்கள்தானே நாம்..! இதையும் ரசித்துவிட்டுப்போவோமே..!

Wednesday, November 5, 2008

ஒபாமா வெற்றி

அப்ரகாம் லிங்கனும் மார்டின் லுதர் கிங்கும் சிந்திய இரத்தத்துக்கு அமெரிகர்கள் இன்று அர்த்தமுள்ள பதில் கொடுத்திருக்கிறார்கள். காலங்காலமாய் நசுக்கப்பட்ட கறுப்பின மக்களுக்கு இன்று ஒரு மகத்தான நாள். எந்த இனம் அமெரிக்காவில் அடிமைப்படுத்தப்பட்டதோ, எந்த இனம் அங்கு அருவருப்பாக நோக்கப்பட்டதோ அதே இனத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று அமெரிகாவின் அதிபர் பதவியில் அமரப் போகிறார். இது ஒபாமாவுக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல.. ஒரு இனத்திற்கே கிடைத்த வெற்றி.

ஆனால் இந்த மாறுதல் அமெரிக்காவில் நிகழ 200 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. கீழை நாடுகளில் நடந்த அரசியல் மாற்றங்களின் வேகம்கூட அமெரிக்காவில் இல்லை.

இங்குஒரு தலித் முதல்வராகியிருக்கிறார்..

ஒரு பெண் முஸ்லீம் நாட்டை ஆண்டிருக்கிறார்..

தெற்காசிய நாடுகள் பல பெண் அதிபர்களை, போராளிகளை சந்தித்திருக்கிறது..

வெற்றி பெற்றவுடன் ஒபாமா சொல்லியிருக்கிறார்: "அமெரிக்கா எந்த மாற்றத்தையும் எதிர்கொளும் என்பதில் சந்தேகம் இருப்பவர்களுக்கு இதுதான் விடை...!"

இன்னும் சந்தேகம் இருக்கிறது ஒபாமா... அமெரிக்காவில் இதுவரை ஒரு பெண் ஜனாதிபதியகவில்லை...!

Tuesday, November 4, 2008

என் நீண்ட விமானப் பயணம்

இதுவரை எனது நீண்ட விமானப்பயணம், அர்ஜெண்டினா தலைநகர் 'பியூனோஸ் ஏரிஸ்' நகரிலிருந்து சென்னை வந்ததுதான். என் விமான வழித்தடம் பியூனோஸ்ஏரிஸ் - நியுயார்க் - டோக்கியோ - சிங்கப்பூர் - சென்னை... நான்கு விமானங்கள்.. 50 மணி நேரப் பயணம். சனிக்கிழைமை இரவு தொடங்கிய பயணம் செவ்வாய்க்கிழமை மாலை சென்னையில் முடிந்தது. கிட்டத்தட்ட பூமியை மேலும் கீழும் இடமும் வலமும் அளந்து பார்க்கக்கூடிய ஒரு சோர்வுப் பயணம்.

கிழக்கு-மேற்கு மாறி மாறி வருவதால் எந்த திசையில் இருக்கிறோம், என்ன கால நேரம் என்பதெல்லாம் புரியவேயில்லை.. விமானத்திலிருந்து வெளியே பார்த்தால் வெயில் அடிக்கிறது.. சில மணி நேரங்களில் திடீரென்று கும்மிருட்டாகி பௌர்ணமி நிலவு ஜொலிக்கிறது.. மீண்டும் இரண்டு மணி நேரத்தில் நல்ல வெளிச்சம்... உச்சி வெயில்.. கொஞ்ச நேரத்தில் மீண்டும் நிலா.. ஒரு குத்து மதிப்பாகத்தான் எந்த கிழமையில் இருக்கிறோம் என்று கணிக்க முடிந்தது.

விமானத்தில் சைவ உணவைப்பற்றி கேட்கவே வேண்டாம்... எனக்குக் கிடைத்தது காய்ந்த ரொட்டி.. கொஞ்சம் இலை தழைகள்.. அவ்வப்போது ஆரஞ்சு பழரசம்.. அவ்வளவுதான். ஒரு விமானத்தில் மட்டும் ரொம்ப பரிதாப்பட்டு காய்கறிகளை வெட்டி சாலட் மாதிரி எதாவது செய்து தரட்டுமா என்று கேட்டார்கள்.. கேட்டதே கொஞ்சம் வயிறு நிரம்பியது.

என்னிடம் பேசிக்கொண்டிருந்த சில விமான பணிபெண்கள் 'இவ்வளவு நீண்ட பயணமா' என்று ஆச்சரியப்பட்டார்கள். அவர்களே ஆதங்கப்பட்டது கொஞ்சம் ஆறுதலான விஷயம்...!

சிங்கப்பூர் வந்தவுடன் செங்கல்பட்டு வந்ததுபோல இருந்தது. (கொஞ்ச நேரத்தில் சென்னை வந்துவிடும்..!). விமானம் சென்னையை அடைந்த பொது ஏதோ போர்க்கைதிகள் தாயகம் திரும்புவதைப்போன்று ஒரு உணர்வு ஏற்பட்டது.. மூன்று நாள் தாடி, காய்ந்த வயிறு, தள்ளாடும் உடல், உறக்கம் கெஞ்சும் கண்கள், இவற்றோடு வீடு வந்து சேர்ந்தோம்.

இந்த ஹைடெக் உலகில் என்னதான் குளோபல் வில்லேஜ் என்று பேசினாலும் உலகத்தை சுற்றி வருவது ரொம்ப கடினமான காரியம்தான்.. ஞானப் பழத்தைப் பெற உலகத்தைச் சுற்றி வராமல் சிவன்-பார்வதியை மட்டும் சுற்றி வந்த பிள்ளையாரின் தந்திரம் அப்போதுதான் புரிந்தது..