Sunday, November 22, 2009

உலகை உலுக்கிய புகைப்படங்கள்





















இந்த வாரம் ஆனந்த விகடனில் 37 வருடங்களுக்கு முன்னால் உலகை உலுக்கிய வியட்நாம் யுத்தப் புகைப்படத்தில் தோன்றும் சிறுமியின் பேட்டி  வெளியாகியிருக்கிறது.. அதைப் படித்தவுடன் சில எண்ணங்கள்..

உலகில் நடக்கும் பல போர்க்குற்றங்களை, இயற்கையின் சீரழிவை, பல கட்டுரைகள் விளக்க முடியாததை ஒருசில புகைப்படங்கள் விளக்கி விடும். விஷுவல் மீடியாவுக்கு அந்த அளவுக்கு வலிமை உண்டு. நேபாம் குண்டு வெடித்து தீக்காயங்களுடன் ஓடிவரும் இந்த சிறுமியின் புகைப்படம் அமெரிக்காவையே உலுக்கியது. வியட்நாம் யுத்தம் முடிவுக்குவர இதுவும் ஒரு காரணமாக இருந்ததது. அதேபோல், இராக் போர்கைதிகளை அமெரிக்கா நடத்திய விதத்தை பலர் விமர்சனம் செய்தாலும், இந்த புகைப்படம் வெளிவந்த பிறகுதான் சில மாற்றங்கள் ஏற்பட்டது.

விஷவாயு தாக்கிய ஒரு குழந்தையை புதைக்கும் இந்தப் படம் போபால் துயரத்தை உலகுக்கு உணர்த்தியது. சூடானில் சிறுவன் சாவுக்காக காத்திருக்கும் கழுகின் படம் பஞ்சத்தின் கொடுமையை உணர்த்தியது. (இதை எடுத்த புகைப்படக்காரர் மூன்று மாதங்களில் தற்கொலை செய்துகொண்டார்).

ஆனால் இதைவிட அவலம் மிகுந்த போர்குற்றங்கள், போர்கைதிகளை நடத்தியவிதம், பாலியல் கொடுமைகள் எல்லாம் நடந்து முடிந்த இலங்கையில் இது போன்ற ஒரு ஆவணம் கிடைக்கவில்லை. கிளஸ்டர் குண்டுவீச்சு, விசாரணை என்றபெயரில் வன்கொடுமைகள், குழந்தைகள் நோயாளிகள் மீது குண்டுவீச்சு போன்றவை கட்டுரை மட்டும் பேட்டிகள் மூலம் மட்டுமே நமக்கு கிடைத்திருக்கிறதே தவிர, இது போல ஒரு விஷுவல் பதிவு இல்லை. இதை உணர்ந்துதான், இலங்கை அரசு எந்த ஒரு பத்திரிகையாளரையும், ஏன் தொண்டு நிறுவனங்களைக்கூட நெருங்க விடவில்லை.

தனக்கு ஏற்பட்ட அவலங்களை சொல்லிக்கொள்ளக் கூட இதுபோல ஒரு ஆவணம் இல்லை என்பதுதான் இலங்கைத்  தமிழனின் வரலாற்றுக் கொடுமை...!

Monday, November 16, 2009

சச்சின் டெண்டுல்கர் மராட்டியனா.. இந்தியனா..

இதுவரை எந்த சர்ச்சையிலும் மாட்டிக்கொள்ளாத சச்சின் டெண்டுல்கர் இப்போது சிவசேனா பால் தாக்ரேயிடம்  சிக்கிக்கொண்டு விட்டார்.  "நான் மராட்டியன் என்பதில் பெருமை கொள்கிறேன்.. ஆனால் இந்தியன் என்பதுதான் முதலில்" என்று சச்சின் சொல்லப்போக, கோபமடைந்த தாக்ரே  "நீ கிரிக்கெட் மட்டும் விளையாடு.. அரசியல் விளையாடதே" என்று கடித்திருகிறார்.

முதலில் மராட்டியன் முதலா இந்தியன் முதலா என்கிற விவாதமே முட்டாள்தனம். தமிழன், மராட்டியன், குஜராத்தி என்பதெல்லாம் இனம். ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு மொழி கலாச்சாரம் உண்டு. இந்தியா என்பது நாடு. இதையும் அதையும் ஒப்பிடவே முடியாது. ஒருவனுக்கு நாட்டுப்பற்று எவ்வளவு அவசியமோ அவ்வளவு இனப்பற்றும் மொழிபற்றும் அவசியம். இதில் எது முதலாவது என்ற கேள்விக்கே இடமில்லை.. இரண்டுமே தேவை. இனப்பற்று  இருப்பதனால்தான் இலங்கை தமிழர்கள் படும் இன்னல்களை கண்டு நாம் கண்ணீர் வடிக்கிறோம். நாட்டுப்பற்று இருப்பதால்தான் இந்தியா-இலங்கை கிரிக்கெட் போட்டி நடந்தால் இந்தியா வெற்றிபெற வேண்டும் என்று மட்டுமே நினைப்போம்  - ஒருவேளை  இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அத்தனைபேரும்  தமிழர்களாக  இருந்தாலும் கூட.

 ஜப்பான், ஜெர்மனி போல நாடும் இனமும் ஒன்றாகிவிட்டால் இந்தப் பிரச்சனையே இருக்காது. ஆனால் அது இந்தியாவில் சாத்தியமில்லை. அதனால் இது முதலா அது முதலா என்று கேள்வி கேட்காமல், உணர்ச்சியின் அடிப்படையில் பார்க்காமல்,  இரண்டுமே தேவை என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இல்லாவிட்டால் நாட்டுபற்றும் இல்லாமல் மொழிபற்றும் இல்லாமல் 'நான் முதல்ல இந்தியன்.. அப்புறம்தான் தமிளன்..' என்ற விஜயகாந்த் வசனங்களை மட்டுமே  கேட்டுக்கொண்டிருப்போம்.

அதுசரி.. இந்த 'முதலில் எது' விளையாட்டு விளையாடுபவர்கள் மாநிலங்களுக்கு கீழே போவதில்லை.. 'நீ முதலில் தமிழனா அல்லது தஞ்சவூரானா' அல்லது 'நீ முதலில் தஞ்சவூரானா அல்லது மாயவரத்தானா' என்றெல்லாம் யாரும் கேட்பதில்லை. அதேபோல் 'நான் முதலில் ஒரு ஆசியன்.. பிறகுதான் இந்தியன்..' என்று யாரும் சொல்வதில்லை. அவரவர் வசதிக்கு ஏற்ப அரசியலிலும் சினிமாவிலும் மட்டுமே விளையாடப்படும் விளையாட்டு இது.

சச்சின் டெண்டுல்கரால் மராட்டிய இனத்துக்குப் பெருமை.. இந்திய நாட்டுக்குப்  பெருமை...என்பதை சச்சின், பால் தாக்கரே இருவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

Thursday, November 5, 2009

திகில் ஹைக்கூ

நிலவில் இறங்கிய
ஆம்ஸ்ராங் கண்டான்
மனிதக்காலடித் தடங்கள்...!

விண்ணில் குதித்த
யூரிகாகரின் கேட்டான்
பறவைகளின் படபடப்பு...!

இடுகாட்டின்
கல்லறைக்குள்
பேச்சுச் சத்தம்...!

எதிர்வெயிலில்
முன்னால் விழுந்தது
என் நிழல்...!

நடுவானில்
ஒரு முக்கிய அறிவிப்பு
பைலட்டுக்கு நெஞ்சுவலி...!