Sunday, July 25, 2010

'மாணவ' தற்கொலைகள் - ஆசிரியர் மட்டும் காரணமா?

இந்த வாரம் ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை படித்தேன். கடலூர் மாவட்டத்தில் ஒரு பள்ளிகூட ஆசிரியை ஐந்தாம் வகுப்பு மாணவியை திட்டியதால் அவமானப்பட்ட அந்த மாணவி மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீ வைத்துகொண்டு தற்கொலை செய்துகொண்டாளாம். ஆசிரியர் திட்டியதால், மதிப்பெண் குறைந்ததால் நடக்கும் தற்கொலைகளைப் பற்றி அடிக்கடி செய்தி வந்துகொண்டிருக்கிறது.

ஆசிரியர்கள் பொதுவாக கண்டிப்பாக இருக்கவேண்டியவர்கள்தான்.. அதேசமயம், அந்த கண்டிப்பு எல்லை மீறும்போது கண்டிக்கபடவேண்டியர்வர்கள்தான்..! ஆனால் இது போன்ற தற்கொலைகளுக்கு ஆசிரியரும் பள்ளிக்கூடமும் மட்டும்தான் காரணமா? இந்த ஒரு சிறிய அவமானத்தால் சிறுமியை தற்கொலை செய்துகொள்ள தூண்டுவது எது? 'தற்கொலை செய்துகொள்' என்று எந்த ஆசிரியரும் சொன்னதும் இல்லை.. 'தற்கொலை செய்துகொள்வது எப்படி' என்று எந்த பாடபுத்தகத்திலும் விளக்கம் இல்லை.

புடவையை உத்திரத்தில் மாட்டி தூக்கு போட்டுக்கொள்வது, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துகொள்வது, அரளி விதையை சாபிடுவது, ரயிலில் தலை வைத்துப் படுப்பது போன்று விதவிதமான தற்கொலைகளை விளாவாரியாக  காட்டுவது நம் சினிமாவும் டிவி மெகா தொடர்களும்தான். இவை இல்லாமல் தற்கொலை பற்றி இவ்வளவு விவரங்கள் ஒரு 10  வயது சிறுமிக்கு தெரிய வாய்ப்பில்லை. அதுவும் நம் சினிமாக்களில் எப்படி எண்ணையை ஊற்றிகொள்வது, தூக்கு எந்த அளவுக்கு இறுக்கமாக இருக்கவேண்டும் என்று ஒரு விஷுவல் பாடமே எடுக்கிறார்கள். சினிமாவில் பாதி தற்கொலைகள் ஹீரோக்களால் காப்பற்றப்படுகின்றன. அனால் நிஜத்தில்?

தனக்கு ஒரு அவமானம் ஏற்பட்டால் தன் உடலை அழித்துக்கொள்ளவேண்டும் என்று போதிப்பதே நம் சினிமாதான். எந்த ஒரு ஆங்கில படத்திலும் தற்கொலை காட்சிகளை நான் பார்த்ததில்லை.

இதற்கும் மேலாக அரசியல் தற்கொலைகளை 'உயிர் தியாகம்' என்று கொண்டாடும் நம் அரசியல்வாதிகளும் ஒரு காரணம். கடந்த வருடம் YSR மறைந்தபோது ஆந்திராவில் நடந்த 'உயிர் தியாகங்கள்' போன்று உலகில் வேறு எங்கும் நடந்ததில்லை.

அவமானங்களை தாங்கும் உறுதியும் அதை மீண்டுவரும் மனத்திடத்தையும் திறமையையும் நம் கல்விமுறை கற்றுக்கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் இதுபோன்ற 'மாணவ' தற்கொலைகளுக்கு பள்ளிகளையும் ஆசிரியர்களையும் மட்டும் குறைசொல்லி பயனில்லை.

குறைந்த பட்சம் புகை பிடிக்கும் மது அருந்தும் காட்சிகளை தடை செய்ததுபோல சினிமாவில் தற்கொலை காட்சிகளையும் சென்சார் செய்யவேண்டும். புகை, மது போன்று இதுவும் ஒரு 'சமூக சீரழிவு' தான்..!