Wednesday, December 31, 2008

தமிழ்நாடு 2008


எதிர்பாராத
திருப்பம்
:
இரு குடும்பங்கள் மோதல், தீ வைப்பு, உயிரிழப்பு, வியாபார மோதல் என்று மெகா சீரியல் கணக்காக ஓடிக்கொண்டிருந்த கலைஞரின் குடும்பக் கதை, திடீரென ஒரு குரூப் போட்டோவோடு சுபமாக முடிந்தது.

மிகப்பெரிய இழப்பு: தமிழனை வெவ்வேறு தளங்களில் படிக்கத் தூண்டிய எழுத்தாளர் சுஜாதாவின் மரணம்.

பெரிய ஏமாற்றம்: ஆளுங்கட்சி பல இடங்களில் சறுக்கிக்கொண்டிருக்க, முக்கியமான பிரச்சனைகளில் அவர்களை உலுக்காமல் 13ம் வார்டில் தண்ணீர் வரவில்லை, 123ம் வார்டில் ரோடு போடவில்லை என்று போராட்டம் நடத்திக்கொண்டிருந்த ஜெயலலிதா.

தொடரும் சோகம்: முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இலங்கையில் தமிழர்கள் படுகொலை தொடர இன்னும் அதை அரசியலாக்கும் தமிழக அரசியல் கட்சிகள், இன்னும் அதை விடுதலை புலிகளின் கண்ணோட்டத்திலேயே பார்க்கும் மேதாவி பத்திரிகையாளர்கள் மற்றும் தமிழர்களுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் மௌனம் சாதிக்கும் மத்திய அரசு.

புது வரவு: காவேரி பிரச்னை, இலங்கை பிரச்னை, காஷ்மீர் பிரச்னை இவைகளோடு சேர்ந்துகொண்ட ஒகேனக்கல் பிரச்னை.

வடநாட்டு திடீர் நண்பர்கள்: சேதுவில் தலையிட்ட சாதுக்கள், இதுவரை தமிழ்நாடு இந்தியாவின் எந்த திசையில் இருக்கிறது என்பதைக்கூட கண்டுகொள்ளாத ஆனால் தமிழ்நாடு கடலோரத்துக்கு மட்டும் உரிமை கொண்டடும் ராஜ்நாத் சிங் மற்றும் அசோக் சின்கால்.

பண்டிகை மாற்றம்: தமிழ்ப் புத்தாண்டை தை முதல் தேதிக்கு மாற்றி அதை சட்ட சபையில் சட்டமாக நிறைவேற்றி சாதனை படைத்தார் முதல்வர். இந்த வருடம் தீபாவளியை மே மாதத்துக்கும் கிருஸ்துமஸ் பண்டிகையை ஆகஸ்ட் மாதத்துக்கும் மாற்றி அமைப்பார் என்று நம்பலாம். சட்ட வல்லுனர்கள் கவனிக்க... தீபாவளி தேதி மாற்றத்தை இந்திய பாராளுமன்றமும் கிருஸ்துமஸ் தேதி மாற்றத்தை அமெரிக்க பாராளுமன்றமும் அங்கீகரிப்பது முக்கியம்... போப்பாண்டவரைப் பற்றி கவலையில்லை..

தமிழ்நாட்டின் சாதனையாளர்கள்: சந்திராயன் அண்ணாமலை, சதுரங்க ஆனந்த், கேரம் இளவழகி, ஹிதேன்திரனுடைய பெற்றோர்.

தமிழ்நாட்டின் வேதனையாளர்கள்: சட்ட கல்லூரி மாணவர்கள்.

தமிழ்நாட்டின் ரோதனையளர்கள்: சுப்ரமணிய சுவாமி, டி.ராஜேந்தரோடு இந்த வருடம் சேர்ந்துகொண்ட ரஜினிகாந்த்.

தமிழ்நாட்டின் அபாயம்: நிஷா புயல் மற்றும் விஜயகாந்தின் வளர்ச்சி.

Sunday, December 21, 2008

அபினவ் பிந்திராவும் துப்பாக்கியும்

ஒலிம்பிக்ஸ் தங்கம் வென்ற அபினவ் பிந்திராவையும் மும்பை தீவிரவாதத்தில் உயிரிழந்த கமாண்டோக்களையும் ஒப்பிட்டு ஒரு முட்டாள்தனமான மின்அஞ்சல் உலவிவருகிறது. இரண்டுபேரும் துப்பாக்கி ஏந்தியிருக்கிறார்களாம். அனால் இந்திய அரசு பிந்திராவுக்கு 3 கோடியும் உயிரிழ்ந்த கமாண்டோவுக்கு வெறும் 5 லட்ச ரூபாயும் கொடுத்ததாம். 'என்ன தேசம் இது.. ' என்று விவரிக்கிறது அஞ்சல்.

இப்படி ஒரு சொடுக்கில் பலருக்கு மினஞ்சல்அனுப்புவார்கள் எவ்வளவுபேர் உயிரிழந்தவர்களுக்கான வீரவணக்க கூட்டங்களில் கலந்துகொண்டார்கள் என்று தெரியவில்லை..!

நாட்டுக்காக தியாகம் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் போதாது என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.. பண உதவி மட்டுமல்ல அவர்கள் குடும்பங்களை பாதுகாக்க வேண்டியது அரசு மற்றும் ஒவ்வொரு இந்தியனின் கடமை..

அனால் எதற்காக ஒரு விளையாட்டு வீரரை வம்புக்கு இழுக்கவேண்டும்? இதேபோல் கார்கில் போர் நடந்தபோது ராணுவத்தினரையும் சச்சின் டெண்டுல்கரையும் ஒப்பிட்டு ஒரு மினஞ்சல் உலவியது. இவையெல்லாம் நம் தெளிவான சிந்தனையை மழுங்கடிக்கக்கூடிய செய்திகள்.

ராணுவத்தினர் துப்பாக்கி வைத்திருப்பதால் துப்பாக்கிசுடும் வீரருடன் ஒப்பிடமுடியுமா? காலால் எட்டி உதைத்தால் கால்பந்து வீரருடன் ஒப்பிடுவார்களா? ஒரு ராணுவ வீரர் ஓடிப்போய் தீவிரவாதியைப் பிடித்ததால் பி.டிஉஷாவோடு ஒப்பிடுவர்களா?

இருவேறு துறைகளில் இருப்பவர்களை எப்படி ஒற்றுமைப்படுத்த முடியும்? அப்படியென்றால் சினிமாவில் காஷ்மீர் தீவிரவாதிகளை தமிழ் டயலாக் பேசியே திருத்தும் கேப்டன்களையும், பத்து அடியாட்களை ஒரே சமயத்தில் புரட்டி எடுக்கும் சூப்பர் ஸ்டார்களையும் ஏன் இந்த நிஜ ஹீரோக்களோடு ஒப்பிடக்கூடாது? (இந்த நிழல் ஹீரோக்கள் நிஜ ஹீரோக்களிவிட, விளையாட்டு வீரர்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்)

விளையாட்டு வீரர்களும் ராணுவ வீரர்களும் நம் நாட்டுக்கு வெற்றியை தேடித் தருகிறார்கள்.. நம் நாட்டை எண்ணி பெருமிதம் கொள்ள வைகிறார்கள்.. பணத்தின் அடிப்படையில் அவர்களை ஒப்பிடுவது மாபெரும் தவறு. இந்த நியதி எல்லா நாட்டிற்கும் பொருந்தும். உலகில் எந்த நாட்டிலும் ராணுவத்தினர் விளையாட்டு வீரர்களைவிட அதிகம் சம்பாதிப்பது இல்லை.

உங்களிடம்
மினஞ்சல் வசதியிருந்தால் உயிரிழ்ந்த கமாண்டோக்களுக்கு அதிக உதவி செய்ய அரசை வற்புறுத்துங்கள்.. ராணுவ பட்ஜெட்டில் இதற்காக அதிக நிதி ஒதுக்க சொலுங்கள். தேவையில்மால் இந்தியாவுக்கு தங்கம் வாங்கிகொடுத்த அபினவ் பிந்திராவின் தலையை போட்டு உருட்டாதீர்கள்...!

இதுபோல வெட்டி செய்திகளால் உயிரிழந்தவர்களுக்கும் உபயோகமில்லை..! பிந்திராவுக்கும் நிம்மதியில்லை..!

Monday, December 8, 2008

நாணம்..!

மேகஆடையை அவிழ்த்து
ஆட்டம்போட்ட
மழைகண்டு
நாணத்தில்
ஒளிந்து கொண்டது ..!

ஆட்டம் முடிந்ததும்
வெட்கத்தோடு மெதுவாக
எட்டிப்பார்த்தது
ஐந்துமணிச் சூரியன்..!



Sunday, December 7, 2008

வைரமுத்துவின் பாற்கடல்

அண்மையில் நான் படித்துமுடித்த புத்தகம் வைரமுத்துவின் 'பாற்கடல்'. குமுதம் இதழில் வந்த கேள்வி-பதில்களின் தொகுப்பு.

வாசகர்களின் 378 கேள்விகளுக்கு தேன் தோய்த்த பலாச்சுளையாய் விடையளித்திருக்கிறார் கவிஞர். 'கேட்கப்படாத கேள்விகளுக்காய் பூட்டிக்கிடக்கும் பூமி' என்ற முன்னுரையுடன் தொடங்கும் இந்தப் புத்தகம் அரசியல், சினிமா, அறிவியல், இசை, மருத்துவம் மற்றும் கலைஞர் என்று பல திசைகளில் பயணிக்கிறது.

கவிப்பேரரசு வைரமுத்து கொழுத்து திரண்டு நிற்கும் ஒரு கறவை பசு. அவரிடன் இலக்கியப் பாலையும் தமிழ் பாலையும் கறக்காமல் வெறும் நுகர்ந்து பார்த்திருக்கிறார்கள் வாசகர்கள்.. கலைஞரிடன் உங்களுக்கு பிடித்த நகைச்சுவை, உங்களுக்கு பிடித்த பாடகர்கள், இசையமைப்பாளர்கள், உங்கள் காலை உணவு என்ன - என்று பல கேள்விகள் இதே ரகம். இதையும் தாண்டி ஒருசில புத்திசாலித்தனமான வினாக்களும் உண்டு -

நெள
எழுத்தில் தொடங்கும் சொல் உண்டா? (நெள என்றல் மரக்கலம், நெளவி என்றல் மான் என்கிறார் கவிஞர்)

பாரதி
காலத்திலேயே அவரை விமர்சித்தவர்?

காந்திக்கு
ஏன் நோபல் பரிசு கொடுக்கவில்லை?

மரணத்துக்குப்பின்
வாழ்வு?

படைப்பாளிகள்
பதிலளிக்க கடமைப்பட்டவர்களா? .. இப்படி சில..

வைரமுத்துவின் தமிழ் ஆளுமையும் புலமையும் சேர்ந்து புத்தகத்துக்கு சுவை கூட்டுகிறது. பல் தேய்ப்பது எப்படி என்ற கேள்விக்குக்கூட பல விளக்கங்களுடன் ரசனையோடு பதிலளித்திருக்கிறார். காலை நடைபயிற்சிக்கு முக்கியமானது எது, ரோடு போடுவது எப்படி, நிலா எப்படி தோன்றியது என்ற கேள்விகளின் பதில்கள் ரசிக்கத்தக்கவை.

வைரமுத்து வாசகர்களின் கேள்விகளைக் கொண்டு இந்தப் பாற்கடலை கடைந்திருக்கிறார்... இதில் அமுது மட்டுமே வழிந்தோடுகிறது.