Thursday, December 30, 2010

வாவ்... தாஜ்...


Sunday, December 26, 2010

தாஜ்மஹால் தரிசனம்

தாஜ்மஹால்.. இதை பாடாத கவிஞர்கள் இந்தியாவில் இல்லை.. இதை வரையாத ஓவியர்கள் இல்லை.. இதன் குறிப்புக்கள் இல்லாத பாடபுத்தகங்களும் இல்லை.. காலங்காலமாய் காதலின் கருப்பொருளாய் அழகின் அடையாளமாய் சித்தரிக்கப்பட்ட ஒரு மாளிகை.. இந்திய சுற்றுலாவின் சின்னம்..

சின்ன வயதிலிருந்தே ஓவியங்களாகவும் புகைப்படங்களாகவும் திரைப்படங்களாகவும் மனதில் பதிந்த ஒரு பிம்பத்தை நேரில் பார்க்கும் போது எப்படியிருக்கும்? ஆக்ரா பிரதான சாலையிலிருந்து தாஜ்மஹால் இருக்கும்  இடத்திற்கு ஒட்டகத்தில் வந்து இறங்கினோம். முன்னால் ஒரு பெரு மண்டபம்... சற்றே குறுகலான வாயில்.. அதன் வாசலை நெருங்கும் வரை தாஜ்மஹால் இருக்கும் இடமே தெரியவில்லை. அதைக்கடந்தவுடன் நம் முன்னால் வாவ்.. நிஜ தாஜ்மஹால்... உலக அதிசயத்தை தரிசித்துக்கொண்டிருகிறோம் என்கிற பிரமிப்பே வாய் பிளக்கவைகிறது.  சட்டென்று தாஜ்மஹாலை தரிசிக்கும்போது நம் உடலில் ஏற்படும் மெல்லிய சிலிர்ப்பை அடக்க முடியவில்லை.

தாஜ்மஹால் ஏன் உலக அதிசயம்? இதில் மூன்று விஷயங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.. இதன் அழகு, இதிலுள்ள அதிநுட்ப நுணுக்கம் மற்றும் இதன் நேர்த்தி.. இந்த மூன்றும் சேர்ந்துதான் இன்று தாஜ்மஹாலை உலகத்தின் சிறந்த கலைப்படைப்பாக விளங்க வைக்கிறது. தாஜ் அழகுபற்றி சொல்லவே வேண்டாம். இருபுறமும் உள்ள தோட்டங்களை ரசித்துவிட்டு தாஜ்மஹால் செல்வதற்கே கொஞ்ச நேரம் பிடிக்கிறது. தாஜ்மகாலில் ஒவ்வொன்றும் மிக நுட்பமாக  அதி கவனத்துடன்  அமைக்கப்பட்டிருகிறது. முதல் வாயிலைக்கடந்தவுடன் கொஞ்சம் சிறியதாக தெரியும், அனால் அருகே செல்ல செல்ல அதன் பிரமாண்டம் அதிகரிக்கும். பின் அந்த பளிங்கு மாளிகையின் படிகளில் ஏறினால் மேல்கூரைகூட தெரியாது. தாஜ்மஹாலை சுற்றியுள்ள நான்கு தூண்களும் சற்றே சாய்ந்து இருக்கும். ஏதாவது அசம்பாவிதம் நடந்து அந்த தூண்கள் விழுந்தாலும் தாஜ்மஹாலில் விழாது. தாஜ்மஹால் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் உலோக தூண் பாரசீக மற்றும் இந்து குறியீடுகளை கொண்டது. முதலில் தங்கத்தினால் செய்யப்பட்ட இதை எடுத்துவிட்டு  ஆங்கிலேயர்கள் பித்தளை தூணாக மாற்றினார்.

இந்த அதிஅற்புதமான கட்டிடதுக்குப்பின் 22000 பணியாளர்களின் 20 வருட உழைப்பு இருக்கிறது, உலகின் தலை சிறந்த நிபுணர்களின் கைவண்ணம் இருக்கிறது. மேலும் இதன் பணிகளுக்கு கிட்டத்தட்ட ஆயிரம் யானைகள் உபயோகப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. அந்த காலத்திலேயே 3.5 கோடி ருபாய் செலவு பிடித்தது  (அப்போது சுப்ரீம் கோர்ட் எல்லாம் இல்லை.. யாரும் பொதுநலவழக்கு தொடரமுடியாது).. இருக்காத பின்னே.. இங்கு பதிக்கப்பட்ட ஒவ்வொரு கற்களும் உலகத்தின் பலதிசைகளிருந்து எடுத்து வரப்பட்டன.. ராஜஸ்தானிலிருந்து பளிங்கு கற்கள், சீனாவிலிருந்து நீலப்பச்சை கற்கள் மற்றும் படிகங்கள், அரேபியாவிலிருந்து இரத்தினக்கல், பஞ்சாபிலிருந்து சிலிகன் கற்கள், இலங்கையிலிருந்து நீலக்கல், மற்றும் ஆப்கனிஸ்தான், திபெத், ஐரோப்பாவிலிருந்துகூட சில பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

ஆனால் இவையெல்லாம் விட அந்த வெள்ளை மாளிகையில் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது. எவ்வளவு முறை திரைப்படங்களிலும் புகைப்படங்களிலும் பார்த்திருந்தாலும், நேரில் பார்க்கும்போது தாஜ்மஹாலின் அழகிலும் நேர்த்தியிலும் லயித்துபோகாமல் இருக்கமுடியவில்லை. இதற்கு காதல் பின்னணியும் ஒரு காரணமாக இருக்கலாம்.. ஏனென்றால் முகலாய சாம்ராஜ்யத்திலும் சரி.. மற்ற சாம்ராஜ்ஜியகளிலும் சரி.. இன்று பாரம்பரிய இடங்களாக திகழ்பவை கோட்டைகளும் அரண்மனைகளும், சமாதிகளும் தான்.. கோட்டைகள் தங்கள் வெற்றியை நிலைநாட்டவும் தங்களின் பாதுகாப்புக்காகவும் கட்டப்பட்டவைகள்.. அரண்மனைகள் தான் எவ்வளவு பெரிய சக்கரவர்த்தி என்பதை உலகுக்கு காட்டுவதற்காக கட்டப்பட்டவை.. பெறும் பொருட்செலவில் கட்டப்படும் சமாதிகளும் இதே  காரணங்களுக்காகத்தான்.. ஆனால் தாஜ்மஹால் அன்பினால் காதலினால் ஈர்க்கப்பட்டு ரசித்துக் கட்டப்பட்டது.. அதனால்தான் அந்த மாளிகையில் 400 வருடங்கள் கடந்தும் இன்னும் ஒரு ஜீவன் இருப்பதை மறுக்கமுடியாது.

தாஜ்மஹால் ஒரு காதல் சின்னம் என்பதில் கருத்து வேறுபாடுகள் இல்லை. ஆனாலும் சில விஷயங்கள் நெருடுகிறது. ஷாஜஹானுக்கு மும்தாஜ் மூன்றாவது மனைவிதான். (மற்ற இரு மனைவிகளுக்கும் தாஜ்மஹலுக்கு இடப்புறமும் வலப்புறமும் 'கொஞ்சம் சாதரணமான' சமாதிகள்.. அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று தெரியவில்லை..) ஷாஜஹானுடன் வாழ்ந்த 18 வருடங்களில் 14 குழந்தைகளை ஈன்றெடுத்து, கடைசி பிரசவத்தில் இறந்து போனார் மும்தாஜ். தன் வாழ்நாளில் பாதிநாட்கள் கர்ப்பிணியாகவே இருந்திருக்கிறார். அதுமட்டும்இல்லாமல் போர்க்களத்துக்கு செல்லும்போதும் கூட ஷாஜஹான் மும்தாஜை கூடவே அழைத்துச்சென்றதாக குறிப்புகள் உள்ளது. இதனால் மும்தாஜ் ஷாஜஹானுடன் சந்தோஷமாக நிம்மதியாக வாழ்திருப்பது சந்தேகம்தான். ஷாஜஹான் மும்தாஜை ஒரு அழகுப்பதுமையாக பார்த்து கண்மூடித்தனமாக காதலித்தாரே தவிர ஒரு மனைவிக்கு  உண்டான  மரியாதையை கொடுத்திருக்கமாட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. இது ஷாஜஹானுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கலாம். இதனால்தான் மும்தாஜ் இறந்தபிறகு, தான் ஒரு சக்கரவர்த்தி என்பதையே மறந்து அரசு அலுவல்களில் கவனம் செலுத்தாமல் சில ஆண்டுகள் சோகமாக இருந்திருக்கிறார். கருமையாக இருந்த அவர் தலைமுடி திடீரென முழுவதும் நரைத்துவிட்டதாக செய்திகள் கூறுகின்றன. அதனால் திடீரென மும்தாஜ் நினைவாக ஒரு மாளிகை கட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார்.. ஏற்கனவே பர்ஹான்பூர்  என்கிற இடத்தில்  புதைக்கப்பட்ட மும்தாஜ் உடல் தோண்டிஎடுக்கப்பட்டு இபோது தாஜ்மகால் உள்ள இடத்தில்  அடக்கம்  செய்யப்பட்டது. பின் 20 ஆண்டுகள் தாஜ்மகாலை  கட்டுவதிலேயே  மும்முரமாக  இருந்தார் ஷாஜஹான்.

இது ஒருபுறம் இருக்க பின் பல காரணங்களால் எரிச்சலடைந்த ஔரங்கசீப் (மும்தாஜின் இரண்டாவது மகன்) ஆட்சியை கைப்பற்றி தன் தந்தையை சிறையில் அடைத்தார். ஔரங்கசீப் ஒரு முசுடு.. ஷாஜஹனுக்கு இருந்த கலை ஆர்வம் அவருக்கு இல்லை.. இதுபோன்று மாளிகைகள் கட்டுவதெல்லாம் வீண்செலவு என்று நினைப்பவர். ஷாஜஹானை கைது செய்து ஆக்ரா கோட்டையில் அடைத்த ஔரங்கசீப், அங்கிருந்து ஒரு ஜன்னல் வழியே தாஜ்மஹாலை பார்பதற்கு மட்டும் அனுமதி அளித்திருந்தார். பிறகு ஷாஜஹான் உடல்நலம்குன்றி படுத்தபடுக்கையானபோது ஜன்னல் அருகே ஒரு கண்ணாடி வைத்து அதில் தாஜ்மஹால் பிம்பத்தை கண்டுகொண்டிருந்தார்.  கடைசியாக அந்தக் கண்ணாடியை பார்த்த நிலையிலேயே அவர் உயிர் பிரிந்திருக்கிறது. இப்படியாக எல்லா காதல் சரித்திரங்களைப்போலவே ஷாஜகனின் காதல் கதையும் சோகமாகவே முடிந்திருகிறது. 

ஒரே ஒரு சந்தேகம்...ஷாஜஹான் மும்தாஜை நேசித்தது வேண்டுமென்றால் உண்மையாக இருக்கலாம். ஆனால் மும்தாஜ் ஷாஜஹானை எவ்வளவு தூரம் நேசித்தார் என்று தெரியவில்லை..!

எது எப்படியோ... தாஜ்மஹால் இந்தியாவின் காதல் சின்னம்.. அழகியலுக்கான ஒரு அடையாளம்.. அத்தனை வெளிநாட்டவருக்கும் இந்தியா என்றால் முதலில் நினைவுக்கு வருவது தாஜ்மகால்தான்..
 
இந்தியனாகப் பிறந்துவிட்டு தாஜ்மஹாலை தரிசிக்காமல் இருப்பதில் அர்த்தம் இல்லை.

- இனி என் கேமிரா வழியே தாஜ்மஹால்...

Thursday, December 9, 2010

ஆக்ரா பற்றி...

ஆக்ராவில் நாங்கள் தங்கியிருந்தது தாஜ் மஹால் செல்லும் வி.ஐ.பி சாலையில்.. ஆக்ரா ரயில் நிலையத்திலிருந்து தாஜ் மஹால் செல்லும் சாலை, மற்றும் இந்த வி.ஐ.பி சாலை பிரமாதமாக அமைக்கப்பட்டிருக்கிறது, பல வெளிநாட்டவர் வந்து போவதால்.  ஆனால் இந்த வி.ஐ.பி சாலையில் இருப்பது பெறும் தொல்லை என்கிறார்கள் அங்கு வசிக்கும் மக்கள். யாராவது வி.ஐ.பி வந்தால் பாதுகாப்பு கெடுபிடிகள் எக்கச்சக்கமாக இருக்குமாம். கிளிண்டன், முஷாரப் வந்தபோது நான்கு நாட்கள் வீட்டைவிட்டே வெளியில் வரமுடியவில்லையாம்.

அவர்கள் சொன்னமாதிரியே, அன்று தாஜ்மஹாலை பார்க்க காமன்வெல்த் வீரர்கள் வருவதால் அந்த சாலை  போக்குவரத்துக்கு தடை செய்யப்படிருந்தது. முதலில் ஆக்ரா கோட்டை போக தீர்மானித்தோம். ஒரு ஆட்டோக்காரர் குறுக்கு  வழியில் அழைத்துப்போவதாக சொன்னார். மெயின் ரோடுக்கே வராமல் ஆட்டோவை ஆக்ராவின் சந்து பொந்து சாக்கடை மேலெல்லாம் ஒட்டினர். இருபுறம் கழிவுநீர்களுடன் ஒருவர் மட்டும் நடந்து செல்லக்கூடிய பாதைகளில் குடிசைகளை உரசியவாறு சென்றது ஆட்டோ. சில இடங்களில் இரு சக்கரத்தில் மட்டுமே பயணித்தது. தாஜ் மகாலையும் ஆக்ரா கோட்டையையும்  ரசிக்க வந்த நாங்கள் முதலில் கண்டது ஆக்ராவின் சேரிகளைத்தான்.. ஒரு பக்கம்  வி.ஐ.பிக்களை  வரவேற்பதற்காக அழகான தூய்மையான சாலைகள்.. அதே சாலை பக்கத்தில் மிகவும் அசுத்தமான சேரிகள்...

ஆக்ரா கோட்டை.. பல முகலாய மன்னர்கள் வாழ்ந்த இடம்... ஷாஜஹான் சிறை வைக்கப்பட்ட இடம்... இன்று  யுனஸ்கோவால்  அங்கீகரிக்கப்பட்ட கலாச்சார மையம். கோட்டைக்குள் உள்ளுக்குள் பல கட்டிடங்கள் பற்பல வேலைப்பாடுகள், அலங்காரங்கள் இருக்கின்றன.. பல மன்னர்களால் புதுபிக்கப்பட்ட இந்த கோட்டையின் ஒரு மாடத்திலிருந்து தூரத்தில் அந்த பளிங்கு மாளிகை தெரிகிறது. 

ஆக்ராவில் எல்லா முகலாய மன்னர்களுக்கும் அவர்கள் மனைவிகளுக்கும் சமாதிகள் இருக்கிறது.. சில இடங்களில் பல சமாதிகள் ஒரே கட்டிடத்துக்குள் அமைந்துள்ளன. இவற்றுள் என்னை கவர்ந்தது ஆக்ரா அருகே சிகந்தரில் உள்ள அக்பர் சமாதி. இருபக்கமும் உள்ள பெரிய புல்வெளிகளில் மான்களும் மயில்களும் மேய்ந்துகொண்டிருக்க கிட்டத்தட்ட 120 ஏக்கரில் அமைந்துள்ளது. பார்பதற்கு ஹுமாயுன் சமாதி போலவே இருக்கிறது.

கடைசியாக தாஜ் மகாலுக்கு செல்வதற்கு ஆட்டோவில் ஏறினோம். முன்பு வந்தவர் அதிரடி ஆட்டோக்காரர் என்றால் இவர் அப்பாவி ஆட்டோகாரர். 20 ரூபாய் கேட்டார்..  ஏறி உட்கார்ததும் தாஜ்மகால் திறக்க இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது என்றார் 'இதை முதலிலேயே சொல்லவேண்டியதுதானே.. அத்தனை நேரம் நாங்கள் என்ன செய்வது' என்று லேசாக கடித்துகொண்டோம். அதற்கு அவர் 'பிரச்சனையில்லை.. உங்களை மார்கெட் பகுதியில் இறக்கி விடுகிறேன்.. நீங்கள் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்.. அதுவரை காத்திருக்கிறேன்' என்றார். ஒரு 20 ரூபாய்க்காக முக்கால் மணிநேரம் காத்திருந்து எங்களை தாஜ்மகால் வாசலில் இறக்கி விட்டார். அதேபோல தாஜ் வாசலிலிருந்து தாஜ்மஹால் வரை ஒட்டக சவாரி 4 பேருக்கு வெறும் 20 ருபாய்...! தாஜ்மகாலில் ஒரு கைடு 100 ரூபாய்க்கு 2 மணி நேரம் எங்களுடனே இருந்து எல்லாவற்றையும் அற்புதமாக விளக்கினார். காலையிலிருந்து நீங்கள்தான் முதல் போணி என்று வேறு சொன்னார். உலகத்தின் முக்கியமான ஒரு சுற்றுலாதலத்தில் அதுவும் வெளிநாட்டவர்கள் மொய்க்கும் ஒரு இடத்தில் ஏன் இப்படி ஒரு வறுமை என்று புரியவில்லை.

இனி தாஜ் தரிசனம்..!

- பயணம் தொடரும்

Monday, December 6, 2010

பலூன் படகு பயணம்

ரிஷிகேஷ் செல்பவர்கள் 'river rafting ' என்னும் பரசமூட்டும் நதி படகு பயணத்தை அனுபவித்தே ஆகவேண்டும். நதியின் வேகத்தோடு பயணிப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை காற்றடைக்கப்பட்ட பலூன் படகுகள். அவை நதியின் சீற்றத்துடன் ஈடுகொடுக்கக்கூடியவை.. பாறைகளில் மோதினாலும் உடையாதவை.. கங்கை நதியில் பலூன் படகு பயணம் செல்ல ரிஷிகேஷத்தில் பல இடங்களில், பல விடுதிகளில் இதற்காக முன்பதிவு செய்துகொள்ளலாம். 12 கி.மீ. பயணத்துக்கு 450 ருபாய், 24 கி.மீ.க்கு 750 ருபாய் என்று விதவிதமான பயணங்கள் உண்டு. சில இடங்களில் கங்கை கரையோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கூடாரத்தில் இரவு தங்கும் வசதியும் உண்டு (ரூ 1000 முதல் 2000 வரை)

நாங்கள் சோமானியா பவனிலேயே பதிவு செய்துகொண்டு காலை 8 மணிக்கு  கிளம்பினோம்.  ஒரு ஜீப்பில் கிளம்பி படகு காற்றடிக்கும் இடத்தை அடைந்தோம்.  எங்களுக்காக ஒரு பெரிய பலூன் படகு தயாராக இருந்தது. அதில் 8பேர்  தாராளமாக  அமர்ந்துகொள்ளலாம்.  சிலர் அந்த பலூன் படகை எடுத்து ஜீப்பின் மேல் போட்டார்கள்.. துடுப்புகளை ஜீப்பின் பின்னால் போட்டு விட்டு நம்மோடு ஏறிக்கொண்டார்கள். ஒரு அரைமணிநேரம் மலைமேல் பயணித்து பிரம்மபுரி (ரிஷிகேஷிலிருந்து 12  கி.மீ) என்ற இடத்தை அடைத்தோம். பிறகு ஒரு மலைச்சரிவில் இரண்டு பேர் படகைத் தூக்கிக்கொண்டு வர நாங்கள் துடுப்புகளை எடுத்துகொண்டு நடந்தோம்.. அதோ.. அழகிய கங்கை நங்கை மலைகளூடே ஆர்பரித்து வந்து கொண்டிருகிறாள். காலைக்கதிரில் கங்கை நதி தங்க நதியாக உருகி ஓடிவருவதை  காணும்போது மனம் குதூகலித்தாலும், அதன் நடுவே பயணிக்க வேண்டும் என்றவுடன் லேசாக பயம் கவ்விக்கொண்டது. கரையை அடைந்ததும் அனைவரும் 'லைப் ஜாக்கெட்' மற்றும் தலைகவசம் அணிந்துகொண்டோம்.  படகை ஆற்றங்கரையில் வைத்துவிட்டு காலை எங்கு வைக்கவேண்டும், துடுப்பை எப்படி செலுத்தவேண்டும் என்கிற  வழிமுறைகளை ஆங்கிலம் கலந்த இந்தியில் சொன்னார்கள். பிறகு நம் செல்போன், பர்ஸ், கேமிரா எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு ஒரு பையில் போட்டு பின்னால் வைத்து விடுகிறார்கள்.

எல்லோரும் படகில் உட்கார்துகொண்டு துடுப்பை கையில் பிடித்துகொண்டோம். 'ஹோய்' என்ற சத்தத்துடன் படகை இரண்டுபேர் தள்ளிவிட படகு கங்கையில் மிதக்கத் தொடங்கியது... கொஞ்சம் துடுப்பு போட்டவுடன் படகு வேகமாக நகரத்தொடங்கியது. தெளிவான  குளிர்ந்த  தண்ணீர்  நம்மீது தூறல் போட்டுக்கொண்டே  வந்தது..  மெதுவாக  நகர்ந்து நகர்ந்து இப்போது நடு கங்கைக்கு வந்து விட்டோம்.  ஒரு இளைஞர் கூட்டம் நம்மை விட அதிவேகத்தில் படகை செலுத்திக்கொண்டு கைஅசைத்துக்கொண்டே விரைவாக கடந்து சென்றனர். நாங்கள் என்னவோ மெதுவாகத்தான் துடுப்பு போட்டுக்கொண்டிருந்தோம். நதியும் ஆர்பட்டமிலாமல் எங்களுடன் சமாதானமாக இருந்தது.   'அமைதியான நதியினிலே ஓடம்' என்று நான் பாட நினைத்ததுதான் தாமதம். அதுவரை அமைதியாக இருந்த நதி ஒரு வளைவு வந்ததும் தன் சீற்றத்தை மெல்ல ஆரம்பித்ததும் படகும் துள்ளிக்குதிக்க ஆரம்பித்தது. கொஞ்ச நேரம்தான்... ஆர்பரித்துவரும் நதியலையில் மோதி படகு செங்குத்தாக மேலே ஏறி இறங்கியது.. அவ்வளவுதான்.. எங்களை கடந்து சென்ற ஒரு பேரலை எங்களை தொப்பலாக நனைத்து விட்டது.  பின் 'அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்' என்று பாடினேன்.

அந்த வளைவைக் கடந்ததும் கங்கை கொஞ்சம் அமைதியானது.. 'வேண்டுமென்றால் நீங்கள் இறங்கலாம்' என்று சமிக்கை கொடுத்தார் படகுக்காரர். அருகிலிருந்த ஒருவர் 'தொப்' என்று நதியில் குதித்து படகிலிருந்த கயிறை பிடித்துக்கொண்டார்..  பின்  படகின்  பின்னால் நீந்திக்கொண்டே வந்தார்.. நானும் இறங்கலாமா என்று யோசிப்பதற்குள் 'நதியின் வேகம் கூடிவிட்டது.. படகில் ஏறுங்கள்' என்ற அறிவிப்பு வந்தது. கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு இடத்தில் சில பாறைகள் தெரிந்தன. கடல் அலைகள் சுவரில் மோதினால் ஏற்படுமே அதுபோல உயர அலைகள். படகு நிலைகொள்ளாமல் ஆடியது.. படகுக்காரர்கள் லாவகமாக படகை திசை திருப்பினார்கள். நாங்கள் கையில் துடுப்பை வைத்துகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். மீண்டும் ஒரு வளைவு.. அதே ரோலர் கோஸ்டர் பயணம்... இப்படி பல ரோலர் கோஸ்டர் பயணத்தில் எங்களுடன் மோதிய அலைகள்  எங்களை  சொட்ட சொட்ட நனைய வைத்துவிட்டது.  செல்போன், கேமிராவை தனியாக எடுத்து வைத்ததன்  அர்த்தம் புரிந்தது.

இப்போது நாங்கள் லக்ஷ்மன் ஜூலாவை கடந்து விட்டோம்.. நீரின் வேகம்  குறைந்தவுடன்  'இறங்கலாம்' என்றார் படகுக்காரர். இந்தமுறை நான் தயாராகிவிட்டேன். கயிறை பிடித்துகொண்டு நடு கங்கையில் குதித்தேன். உடல் முழுவதும் ஜில் என்ற பரவசம்.. காலுக்கு அடியில் பல அடி ஆழம் இருக்கும் என்று தெரிந்தது (50௦அடியாம்). லைப் ஜாக்கெட் அணிந்திருந்ததால் ஜாலியாக மிதந்து கொண்டிருந்தேன். ஐந்து நிமிடம்தான்.. அச்சம், குளிர் எல்லாம் பறந்து விட்டது. இப்போது கயிறையும் விட்டு விட்டு ஆனதமாக நடு கங்கையில் நீந்திக்கொண்டிருந்தேன். படகை விட்டு கொஞ்ச தூரம் தள்ளி மிதக்கும் அளவுக்கு தைரியம் வந்தது. எப்படியும் மார்புக்கு மேலே தண்ணீர் போகாது என்கிற தைரியம்... அலுக்க சலிக்க கங்கையில் நீந்திவிட்டு பின் படகில் ஏறிக்கொண்டேன். கிட்டத்தட்ட ஒரு மணிநேர பயணத்துக்குப் பிறகு கடைசியாக எங்களை நாங்கள் தங்கியிருந்த விடுதியின் பின்புறம் இறக்கி விட்டதுதான் பரவசத்தின் உச்சகட்டம்.

ஏதோ கங்காஸ்நானம் என்று சொல்லிக்கொண்டு தம்மாதூண்டு சொம்பில் கங்கைநீரைக் கொண்டுவந்து தலையில் தெளித்துக்கொள்வார்களே... அதெல்லாம் வீண்... இனி ஏழேழு ஜன்மங்களுக்கும் சேர்த்து கங்காஸ்நானம் செய்தாகிவிட்டது. அவ்வளவு முறை கங்கையில் முங்கி எழுந்தாகிவிட்டது.

ரிஷிகேஷ் செல்பவர்கள் பலூன் படகு சவாரியை அனுபவிக்காமல் வாராதீர்கள். சில  யோசனைகள் - நதியில் இறக்கிவிடுவீர்களா என்று முன்பே கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.. சாதாரண கனமில்லாத உடைகளையே  அணிந்துகொள்ளுங்கள்..  ஜீன்ஸ் வேண்டாம்.. ஷூ வேண்டாம்.. செருப்பு அணிந்து கொள்ளுங்கள்..

இனி மொகலாய ஆட்சியின் சின்னம்.. ஆக்ரா நகரம்..!

- பயணம் தொடரும்...