Tuesday, July 17, 2012

கட்சி கொடி இருந்தால் சுங்கம் ரத்து


கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பழைய மகாபலிபுரம் சாலையில் (ராஜீவ் காந்தி சாலை) பெருங்குடி முதல் நாவலூர் வரை சுங்கசாவடி அமைத்து கார், பஸ் மற்றும் கனரக வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்துக்கொண்டிருக்கிறார்கள். இதை நிர்வகிப்பது தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்துறை (TNRDC). ஏற்கனவே இது மிக அதிகம் என்று பலர் புலம்பிக் கொண்டிருக்கும் வேளையில் இப்போது ஜூலை முதல் கட்டணத்தை வேறு உயர்த்தியிருக்கிறார்கள். புதிய கட்டணத்தின்படி இந்த சாலையில் ஒருமுறை சென்று திரும்புவதற்கு கார்களுக்கு 38 ரூபாயும் பஸ்களுக்கு 100 ரூபாயும் வசூலிக்கப்போகின்றனர்.


ஆனால் இந்த கட்டணமெல்லாம் சில குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டும் கிடையாது... அது வேறு எதுவும் இல்லை.. கட்சி கொடியோ அரசியல் தலைவர்கள் படங்களோ உள்ள வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்பது இங்கு எழுதப்படாத விதி. அவர்கள் மட்டும் இலவசமாக எவ்வளவுமுறை வேண்டுமானாலும் இந்த சாலையை உபயோகப்படுத்தாலாம். கட்சி கொடிகள் உள்ள வாகனங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது என்பது தினமும் நடக்கும் ஒரு நிகழ்வு. நான் இதைப் பற்றி அந்த சுங்கசாவடி அதிகாரிகளிடம் பலமுறை கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்கள் "என்ன சார் செய்வது.. அவர்களிடம் கட்டணம் கேட்டால் தகராறு செய்கிறார்கள்.. அதனால் அவர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்பது மேலிடத்து உத்திரவு" என்றார்.

ஆனால் ஒன்று... இந்த 'கட்சி கொடி' சலுகையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது... எல்லோருக்கும் இந்த சலுகையில் சமத்துவம். என்ன.. போன வருடம் மே மாதம் வரை தி.மு.க வாகனங்கள் பெரும்பான்மையாக இருக்கும்.. இப்போது அ.தி.மு.க வாகனங்கள்... அவ்வளவுதான் வித்யாசம். சில தே.தி.மு.க, ப.ம.கா கொடிகள் உள்ள வாகனங்கள் கூட கட்டணம் செலுத்தாமல் செல்வதை நான் பார்த்திருக்கிறேன். இந்த நாட்டில் பொதுமக்களுக்கு ஒரு விதி, அரசியல்வாதிகளுக்கு ஒரு விதி என்பது சுங்கக்கட்டணத்திலும் கூட பிரதிபலிக்கிறது.

இந்த சாலையில் தினமும் காரில் பயணிபவர்களுக்கு ஒரு டிப்ஸ்... 50 ருபாய் செலவழித்து எதாவது ஒரு கட்சிக்கொடியை உங்கள் காரில் மாட்டிவிட்டால் போதும்... தினமும் 38 ருபாய் மிச்சப்படுத்தலாம்.

Monday, July 9, 2012

அவிழும் பிரபஞ்ச ரகசியம்

இந்த பிரபஞ்சத்தின் துவக்க புள்ளிதான் இதுவரை கண்டுபிடிக்கப்படாத ஒரு பிரம்மாண்ட ரகசியம். மனிதனின் அறிவியல் அறிவு வளரவளர அவன் தன் தோற்றத்தின் ரகசியம், தனக்கு முன் தோன்றிய உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி என்பதிலிருந்து உயிரினங்கள் தோன்றுவதற்கு முன் இந்த பூமியின் அமைப்பு, சூரியனின் பிறப்பு, பால்வீதி மண்டலம் உருவானது, அதற்கெல்லாம் முன்னதாக ஒரு மகா வெடிப்பின் மூலம் இந்த பிரபஞ்சம் உருவானது வரை எல்லாம் கண்டறிந்துவிட்டான். அனால் அந்த மகா வெடிப்பின் காரணம் மட்டும் இன்னும் கண்டுபிடிக்க படாமலே இருந்தது. அங்கேதான் கடவுள் இருக்கிறார்.. அங்கேதான் கடவுளின் படைப்பு துவங்குகிறது என்று எல்லா மதங்களும் சொல்லி வந்தன.

இந்த மகா வெடிப்பு நிகழ்ந்தது 13 .75 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு.. அங்கிருந்துதான் பிரபஞ்ச சரித்திரம் துவங்குகிறது.... அதற்க்கு முன் எந்த சரித்திரத்துக்கும் வாய்ப்பு இல்லை. பல அணுத்துகள்களின் ஒட்டுதல்-உரசுதல் காரணமாக நடந்த அந்த மகாவெடிப்பின் பயனால் பல நட்சத்திர மண்டலங்கள் உருவாகி அவற்றிலிருந்து பல நட்சத்திரங்கள், அதிலிருந்து கோள்கள், துணை கோள்கள் என்று பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. அந்த வெடிப்புக்கு உறுதுணையாக இருந்த முக்கியமாக இருந்த ஒரு அணுத்துகளை கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானிகள் குழம்பிக்கொண்டிருந்தார்கள். அந்த அணுத்துகள் இப்படிப்பட்ட தன்மைதான் கொண்டிருக்கும் என்று பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானி 1964 ல் கூறியதால் அவர் பெயரையே அதற்கு வைத்து ஹிக்ஸ் துகள் என்றார்கள். இதைப்பற்றி யாருக்கும் ஒன்றும் புரியாததால் பின் 'சரி இது ஏதோ கடவுளின் செயல் போலிருக்கிறது என்று நினைத்து 'கடவுள் துகள்' என்று நாமகரணம் சூட்டிவிட்டார்கள்.

இன்று அந்த ரகசியமும் அவிழ்ந்து விட்டது. ஐரோப்பிய அணு ஆராய்ச்சி கழகம் (CERN ) ஒரு செயற்கை மகாவெடிப்பை நிகழ்த்தி ஆய்வுசெய்து கடவுள் துகள் தன்மையை ஒத்த ஒரு அணுத்துகளை கண்டுபிடித்து விட்டார்கள். படைப்பின் மூலம் அறியப்பட்டு விட்டது. இனி இதுதான் கடவுள் துகளா என்று ஆராயவேண்டும்.. இது ஒரு ஆரம்பம்தான், இன்னும் கண்டறியவேண்டியது நிறைய இருக்கிறது. இந்த பிரபஞ்சத்துக்கு முன்னால் எதாவது இருந்ததா அல்லது இதைபோல் வேறு பிரபஞ்சகள் உண்ட என்ற கேள்விகள் விஞ்ஞானிகளின் மூளையை குடைந்துகொண்டே இருக்கும்..!