Tuesday, April 14, 2009

சர்ச்சில் தோற்றது ஏன்?

இந்தியாஅடுத்த பாராளுமன்ற தேர்தலை சந்திக்கப்போகிறது. என்னதான் இங்கு அரசியல் சீரழிந்தாலும் இந்திய ஜனநாயகம் அசைக்கமுடியாத தூணாக இருக்கிறது... பல பெரும் தலைவர்களையே புரட்டிப்போட்டிருக்கிறது.
ஆனால் இவை எல்லாவற்றையும் விட ஜனநாயகத்தின் வலிமையை இங்கிலாந்து மக்கள் ஒரு முறை நிரூபித்திருகிறார்கள்.

அது 1945ம் வருடம்.. இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்த நேரம். இங்கிலாந்துக்கு மட்டும் அல்ல, ஐரோப்பாவுக்கே மகத்தான வெற்றியை தேடித்தந்தார் வின்சென்ட் சர்ச்சில். போரின் இடையில் இங்கிலாந்தில் பிரதமராக பதவியேற்ற சர்ச்சில், தன் பேச்சாற்றல், அபாரமான போர்த்திறன் மூலம் மக்கள் மனதில் ஒரு மகத்தான தலைவனாக இடம் பிடித்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் 83 % மக்கள் சார்ச்சில்தான் உண்மையான் ஹீரோ என்றனர். இந்த சமயத்தில்தான் இங்கிலாந்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. சர்ச்சில் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியும் லேபர் கட்சியும் களத்தில் குதித்தன.

வெற்றிக்களிப்பில் தேர்தலை சந்தித்தார் சர்ச்சில்..! எல்லோரும் கன்சர்வேடிவ் கட்சி மாபெரும் வெற்றிபெறும், சர்ச்சில்தான் மீண்டும் பிரதமர் என்பதில் இமியளவும் சந்தேகம் இல்லை என்று நம்பினார்.

ஆனால் முடிவு எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்தது... சர்ச்சில் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அதுவரை இல்லாத அளவுக்கு தோல்வியை தழுவியது.. எதிர்கட்சியான லேபர் கட்சி மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

சர்ச்சிலை தோற்கடித்தற்கு மக்கள் சொன்ன காரணம்: "சர்ச்சில் ஒரு சிறந்த அரசியல் வித்தகர். போரை கையாள்வதில் வல்லவர்.. அவரைத்தவிர யுத்த காலத்தில் ஒரு சிறந்த பிரதமர் இருக்க முடியாது. ஆனால் இப்போது போர் முடிந்துவிட்டது. உடைந்துபோன பொருளாதாரத்தை நிலை நிறுத்தவேண்டும்.. இங்கிலாந்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.. இவற்றுக்கெல்லாம் லேபர் கட்சிதான் சரி.. சர்ச்சிலோ, கன்சர்வேடிவ் கட்சியின் கொள்கைகளோ இதற்க்கு உதவாது.. அவர்கள் போர் முனையில் கெட்டிக்காரர்கள்.. அனால் பொருளாதார சீரமைப்புக்கு அவர்கள் உதவமாட்டார்கள்..!"

தனிப்பட்ட ஒருவரின் சாதனையையும் ஒரு கட்சியின் கொள்கைகளையும் பிரித்துப்பார்க்கும் அளவுக்கு இங்கிலாந்து மக்களின் சிந்தனை மேம்பட்டு இருந்தது. சினிமா பிம்பங்களையும், வெற்று கோஷங்களையும், மரணங்களையும் நம்பி ஓட்டு போடும் நம் மக்கள் எப்போது இதுபோல் சிந்தித்து ஓட்டு போடப்போகிறார்கள்?

Saturday, April 4, 2009

தன் ஃபெராரி காரை விற்ற துறவி


சமீபத்தில்
நான் படித்த புத்தகம்... ராபின் சர்மா எழுதிய 'the monk who sold his ferrari' ... 2007ல் வெளியான பிரபலமான இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு இப்போதுதான் நேரம் கிடைத்தது.

வாழ்கையில் கொடிகட்டிப் பறந்த ஒரு கோடீஸ்வர வழக்கறிஞர் இமயமலை சென்று அங்குள்ள சிவானா யோகிகளிடம் சென்று வாழ்கையில் உண்மையை உணர்த்து கொள்கின்றார். மேர்க்கத்திய நாகரீகத்தில் திளைத்து பணம், தொழில் ஒன்றையே குறிக்கோளாக நம்பி, வாழ்கையின் இனிமையான பக்கங்களை தொலைத்த ஜுலியன் என்ற மனிதருக்கு இந்திய தத்துவங்கள் புதிய வழி காட்டுகின்றன. புத்துணர்ச்சி பெற்ற புது மனிதனாக திரும்ப வந்து தன்னுடன் பணியாற்றிய ஜானிடம் தன் அனுபவங்களைப் பகிந்ர்துகொள்வதே இந்தப் புத்தகம்.

ராபின் சர்மாவின் எழுத்துக்கள் அப்படியே சத்குரு ஜக்கி வாசுதேவின் சிந்தனைனையை ஒத்துப்போகிறது. பாசிடிவ் எண்ணங்களை வளர்த்துக்கொள்வது, எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது, வாழ்கையின் அந்தந்த நிமிடங்களை ரசிப்பது, இயற்கையை போற்றுவது, தினம் யோகா என்று சத்குருவின் தத்துவங்கள் அப்படியே இந்தப்புத்தகத்தில் பிரதிபலிக்கிறது. வறட்டு தத்துவங்களை போதிக்கும் கனத்த புத்தகமாக இல்லாமல் எளிய நாட்டையில் இயல்பான ஆங்கிலத்தில், வாழ்கையை ஆனந்தமாக வைத்துக் கொள்வதைப்பற்றி விளக்கியிருக்கிறார் ஆசிரியர். ஆனந்தமாக இருப்பதற்கு ஒன்றும் மாயவித்தைகள் தேவையில்லை... வாழ்க்கைமுறையை கொஞ்சம் மாற்றி அமைத்துகொண்டால் போதும்.. என்பது இந்தப் புத்தகத்தின் சாராம்சம்.

இதில் குறிப்பிட்டிருக்கும் வாழ்கைக்கு தேவையான உத்திகள் எல்லோருக்கும் பொதுவானவை.. எவரும் பின்பற்றக்கூடியவை.. ஒவ்வொரு பகுதியும் படித்து முடித்தவுடன் ' அட.. சரிதான்' என்று நம்மை நாமே உணரக்கூடியவை. புத்தகம் படித்து முடித்ததும் ஜுலியனைப்போல நாமும் புத்துணர்ச்சி பெற்று புது மனிதனாக உணர்வோம்... நம் எண்ணங்கள் சிறிதளவேனும் தூய்மைப்படுவது உறுதி.

இதில் எனக்கு பிடித்த ஒரு சொலவடை: "வாழ்கையின் இனிமையை அனுபவிப்பதற்கு நேரமில்லாமல் வெறும் பொருள், புகழ் ஈட்டுவதிலேயே கவனம் செலுத்துவது, 'வேகமாக கார் ஓட்டிக்கொண்டிருக்கிறேன்... பெட்ரோல் போட நேரமில்லை' என்பத்தைப் போல.."