Tuesday, August 25, 2009

குறுக்கெழுத்து - 2

இதை கிளிக் செய்து பிரிண்ட் எடுக்கவும்..




Sunday, August 16, 2009

என் சுதந்திரம்

காலை பத்துமணி விழித்து..

இந்திய
தொலைக்காட்சியில்
முதல்முறையாக வெளியாகும்
அதிரடி ஆக்க்ஷன் படம் பார்த்து..

காந்தி கொள்கைகளில்
குறையாடை மட்டும் கடைபிடிக்கும்
கவர்ச்சி நடிகைகளின் பேட்டி ரசித்து..

வெட்டுகுத்து நாயகர்களின்
அஹிம்சை விளக்கம் கேட்டு..

இரட்டைஅர்த்த
நகைச்சுவையை
குடும்பத்துடன் சிரித்து..

தமிழ்
கொல்லும் தொகுப்பாளினிகளின்
காந்தி விளக்கத்தில் மெய்மறந்து..

காந்தி
-கோட்சேவில் சிறந்தவர் யாரென்ற
பட்டிமன்ற தத்துவத்தில் மூழ்கி..

ஏதேனும்
கலவரம் உண்டாவென
செய்திசேனல்களில் அக்கறையுடன் பார்த்து..

சுகமாகக் கழிந்ததென் சுதந்திரதினம்...!

Tuesday, August 11, 2009

இன்னொரு சுதந்திர தினம்

இந்தியாவுக்கு இன்னொரு
சுதந்திர தினம்..
பாரத மாதா
சீனியர் சிட்டிசனாகிவிட்டாள்...
வயதுக்கு
வருவதற்கு முன்பாகவே..!

Sunday, August 2, 2009

நவீன குரங்கு-குல்லா கதை

குரங்கு குல்லா கதையை நாம் சின்ன வயதில் படித்திருப்போம். அதையே கொஞ்சம் நவீனமாக்கி ஒரு மின்னஞ்சல் உலவிவருகிறது.

ஒரு குல்லா வியாபாரி கூடை நிறைய குல்லாவை எடுத்துக்கொண்டு காட்டு வழியே சென்றபோது ஒரு மரத்தடியில் அமர்ந்து படுத்துத் தூங்கிவிட்டான். எழுந்து பார்த்தபோது அத்தனை குல்லாக்களும் அந்த மரத்தின் மேல் உள்ள குரங்குகளின் தலையில்.. என்ன செய்வது என்று தெரியாத குல்லா வியாபாரி தன் தலையில் உள்ள குல்லாவை எடுக்க குரங்குகளும் அதையே செய்தது. உடனே அவன் தன் குல்லாவை தரையில் போட உடனே எல்லா குரங்குகளும் குல்லாவை கழற்றி தரையில் போட்டது. அத்தனை குல்லாக்களையும் அள்ளிக்கொண்டு வியாபாரி சந்தோஷமாக புறப்பட்டான் என்பது கதை.

ஐம்பது வருடங்களுக்குப் பிறகு...

அந்த குல்லா வியாபாரியின் பேரன், தன் தாத்தா போலவே குல்லா வியாபாரம் செய்வதற்காக அதே காட்டுப்பகுதியில் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது ஒரு மரத்தடியில் உட்கார்ந்து தூங்கினான். கண் விழித்து பார்க்கும்போது அத்தனை குல்லாக்களும் குரங்குகளின் தலையில். பேரன் யோசித்தான்.. தன் தாத்தா சொன்ன கதை ஞாபகம் வந்தது.

தலையிலிருந்து தன் குல்லாவை எடுத்தான்... குரங்குகளும் அதையே செய்தது...

தன் குல்லாவை எடுத்து விசிறிக்கொண்டான்... குரங்குகளும் அதையே செய்தது...

ஆஹா.. தாத்தா வித்தை வேலை செய்கிறதே என்று நினைத்து குல்லாவை தரையில் போட்டான்... ஆனால் குரங்குகள் அதை செய்யவில்லை. மீண்டும் மீண்டும் தன் குல்லாவை தரையில் போட்டுப்பார்த்தான்.. ம்ஹூம்... குரங்குகள் அசையவே இல்லை. அவன் திகைத்துபோய் உட்கார்ந்தபோது, ஒரு குரங்கு குல்லாவை மரக்கிளையில் வைத்துவிட்டு கீழே இறங்கிவந்து அவனை ஓங்கி கன்னத்தில் அறைந்துவிட்டு இப்படிச் சொன்னது:

"உனக்கு மட்டும்தான் தாத்தா இருக்கார்ன்னு நினைப்பா...!"

நீதி 1: நம் ஒவ்வொரு வெற்றியிலிருந்தும் எதிராளி பாடம் கற்றுக்கொள்கிறான் என்பதை மறக்கக் கூடாது.

நீதி 2: ஒரே டெக்னாலஜியை ஐம்பது வருடத்துக்கெல்லாம் உபயோகிக்கக்கூடாது.