Tuesday, December 29, 2009

சென்னை இசை விழாவில் என் உலா - நான்காவது வாரம்

இந்த வாரம் சில 'இரண்டாவது தடவை' கச்சேரிகள்...

டி.எம்.கிருஷ்ணா கச்சேரியில் பக்கவாத்தியகாரர்கள்  ஐந்தடி தள்ளி உட்காருவது நல்லது. கிருஷ்ணா பாடும்போது இரண்டு கைகளையும் ஆக்ரோஷமாக நீட்டி, அசைத்து, வளைத்து, உட்கார்த்த நிலையிலேயே ஒரு சிறு நடனமே ஆடுகிறார். இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைடியில் கொஞ்சம் தாமதமாக 7.30க்கு கச்சேரியை ஆரம்பித்தவர், இரண்டு மணி நேரத்திலேயே முடித்துவிட்டார்.

சேவாக் செஞ்சுரி அடித்ததுபோல் இருந்தது கச்சேரி. முதல் பாட்டிலேயே (பலுக்குகண்ட)  விஸ்தாரமாக ஆலாபனை, ஸ்வரஸ்தானம் முடித்து, ஒரு அருமையான  தில்லானா பாடி, மூன்றாவது பாட்டிலேயே தனி ஆவர்த்தனத்துக்கு கொடுத்தார் கிருஷ்ணா. பின்னர் விஷ்ணுப்ரியா ராகத்தில் ஒரு ஆலாபனை, ஆபேரியில் ஆனந்தாமான ஒரு துக்கடா, தேஷ் ராகத்தில் ஒரு பெங்காலி பாடல், கடைசியாக ஒரு திருப்பாவை என்று ஜெட் வேகத்தில் பயணித்தது கச்சேரி.  இந்த ஜெட்  பயணத்திற்கு ஈடுகொடுத்தது சுந்தரேஸ்வரனின் வயலின்..  

ரசிகர்களின் நாடித்துடிப்பு அறிந்து, எந்த இடத்திலும்  தொய்வில்லாமல்  கச்சேரிக்கும்  கலையை  அறிந்துவைத்திருப்பதினாலோ  என்னமோ  இன்றைய  தேதியில் கர்நாடக  சங்கீதத்தின் 'டாப் 5' பாடகர்   டி.எம்.கிருஷ்ணா.

அன்று தீபாவளியோ அல்லது வேறு விசேஷமோ இல்லை. அனால் ராஜேஷ் வைத்யா வெடித்தது 10000 வாலா சரவெடி. ஒரு வீணையை வைத்துகொண்டு இதற்க்கு மேல் ஏதாவது செய்யமுடியுமா என்று தெரியவில்லை. அத்தனை வேகம்.. அத்தனை பரபரப்பு.. அவர் வாசித்தது மதுர வீணை என்னும் வீணை வகை... பக்கவாத்தியங்கள் மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கீ போர்டு மற்றும் சிறப்பு சப்தங்கள்.

நாட்டை, வலசி ராகங்களில் கொஞ்சம் ஜனரஞ்சகமாக வேகத் துடிப்புடன் ஆரம்பித்தார். பின்பு வந்த சிந்து பைரவியில் 'வசூல் ராஜா' படத்தில் 'சிணுக்கி சிணுக்கி வந்தா' பாடலில் அவர் வாசித்த வீணை இசை கொஞ்சம் தலை தூக்கியது. பின்பு காபி ராகம் (இது எக்ஸ்ப்பிரசோ காபி என்றார் வைத்யா). எக்ஸ்ப்பிரசோ காபி கொஞ்சம் காரமாக மிகக்குறைந்த அளவே  இருக்கும்.  அதேபோல  வெட்டறுத்தவாறு  இருந்தது வாசிப்பு. பிறகு  பந்துவராளியில் ஒரு  ராகம் தானம் பல்லவி, ராகமாலிகாவில் 'சின்னஞ்சிறு கிளியே'  வாசித்து நிறைவு செய்தார்.

இதுபோன்ற இசை கலவைகளை எந்த வகையில் சேர்ப்பது.. கர்நாடக சங்கீதமா அல்லது ப்யூஷன்  இசையா?  எதுவாயிருந்தாலும் வைத்யாவின் வீணை இசையில் ஒருவித ஈர்ப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

ஒரு மாறுதலுக்காக எதாவது ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு போகலாமே என்று பேப்பரை புரட்டியபோது பளீரென்று கண்ணில் பட்டது கிருஷ்ணகுமாரி  நரேந்திரன் குழுவினரின் 'சிவ ஸ்வரூப தாண்டவ லகரி'  நாட்டிய நாடகம். சிவனின் பல்வேறு தாண்டவங்களின் அழகான தமிழ் வர்ணனையுடன் நிகழ்ச்சி துவங்கியது. சிவனுக்காக ரிஷிகள் தவமிருக்கும் காட்சி திருவிளையாடல் படத்தின் முதல் காட்சியை நினைவூட்டியது. சிவனின் பல்வேறு நிலைகளை, நடனங்களை, அற்புதமாக அபிநயம் பிடித்து நடனமாடினார் நித்யா ஜகந்நாதன். ராவணன் சிவனை எண்ணி வீணைவாசிக்கும் காட்சி ரொம்பவும் அசலாக இருந்தது. (வீணை இசை ராஜேஷ் வைத்யா).

கடைசியில் பதஞ்சலி முனிவருக்காக சிவன் தில்லையில் நடனமாடிய ஆனந்த தாண்டவத்தை ஆனந்தமாக ரசிக்க முடிந்தது. நிகழ்ச்சியின் பலம் முன்னணியில் நடனமாடிய கலைஞர்களும் பின்னணி இசையும்தான்.. நடனத்துக்காக அமைக்கப்பட்ட இசை... இசைகேற்ற நடனம்... ஒன்றோடுஒன்று  பின்னிப் பிணைந்தது.. அரங்க அமைப்புகளில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் நிகழ்ச்சி இன்னும் மெருகேற்றப்படிருக்கும்.

Monday, December 21, 2009

சென்னை இசை விழாவில் என் உலா - மூன்றாவது வாரம்

இந்தமுறை நான்கு நாட்கள் முன்னதாகவே டிக்கெட் வாங்கியதால் நுங்கம்பாக்கம் கல்சுரல் அகாடெமியில் அருணா சாய்ராம் கச்சேரி கேட்கமுடிந்தது. அருணாவின் கச்சேரி டுவென்டி டுவென்டி மேட்ச் மாதிரி... முதல் ஓவரிலேயே களைகட்டும். அவரின் புகழ் மிக்க 64 நாயன்மார்களின் பாடல்களில் ஆரம்பித்தது குதூகலம். பிறகு 'சாமஜவரகமணா' பாடி இந்தொளத்தில் கொஞ்சம் தாலாட்டு, கொல்கத்தா காளியின் பள்ளியெழுச்சி பாடலான 'ஜாகோ துளி ஜாகோ' பெங்காலி பாடல், அவரின் விசேஷ உருப்படியான மராத்தி 'அபங்' பாட்டு என்று அடுத்ததடுத்து சிலிர்ப்புகளுக்கு பஞ்சம் இல்லை.

ஏற்கனவே அது ஒரு 'ஹை வோல்டேஜ்' கச்சேரி.. அதோடு தனி ஆவர்த்தனத்தில் கொன்னக்கோல் வேறு.. ஆரவாரத்துக்கு கேட்கவா வேண்டும்..

அருணா கச்சேரிகளில்  அவையினர் விண்ணப்பம் அதிகமாக உள்ளது. அதில 'விஷமக்காரக் கண்ணன்', 'மாடு மேய்க்கும்' பாடல்கள்தான் முக்கியமான நேயர் விருப்பம். இதற்க்கு அருணா 'ஒரே பாடலையே பாடுகிறேன் என்ற குற்றச்சாட்டு வருமே' என்றவர், இந்தமுறை 'விஷமம்', அடுத்தமுறை 'மாடு' என்று சமரசம் செய்தார். என்றாலும் 'விஷமம்' கொஞ்சம் மெல்லிசை ரகம்தான்...!

இனிமையான மென்மையான ஆரவாரமில்லாத கச்சேரி விரும்புகிறவர்கள் 'ரஞ்சினி காயத்ரி' போகலாம். மியூசிக் அகாடெமியில் அன்று கூட்டம் நிரம்பி வழிந்தது. அகாடெமி என்பதாலோ என்னமோ சம்பிரதாயமான வழியிலேயே பயணித்தனர் பாடகர்கள். கொஞ்சம் விறுவிறுப்பு எதிர்பார்பவர்களுக்கு அவ்வளவு பரபரப்பு இருக்காது. ஆனால்  எல்லாவற்றையும்  விட 'துர்க்கா-லக்ஷ்மி-சரஸ்வதி' மேல் ராகம் தானம் பல்லவி பாடியது எல்லாரையும் லயிக்க வைத்தது. துக்கடாவில் 'மானாட மழுவாட' என்ற பாடலை பாடினார் ('மானாட மயிலாட' எல்லாம் அகாடெமியில் பாடலாமா என்று கேட்டவுடன் பக்கத்தில் உட்கார்திருந்த ஒரு பெரியவர் முறைத்தார்). கடைசியில் ஒரு மராத்தி பஜன் பாடி நிறைவு செய்தனர் ரஞ்சினி காயத்ரி சதோதரிகள்.

கொஞ்சம் வித்தியாசமான இசை நிகழ்ச்சிக்கு போகலாமே என்று தேடியபோது கடம் கார்த்திக்கின் 'இதயத்துடிப்பின் சங்கமம்' கண்ணில் பட்டது. பல இசைக்கருவிகளுடன் ஒருங்கிணைந்த, கர்நாடக சங்கீதத்துக்கும் ஃயூஷன் இசைக்கும் இடைப்பட்ட ஒரு இசை நிகழ்ச்சி அது. கடம் மற்றும் கொன்னகொலில் கார்த்திக்.. சைலன்ட்  வயலின்  என்ற இசைக்கருவியில் எம்பார் கண்ணன்... (இது கொஞ்சம் பாதி உடைந்துபோன  வயலின்  மாதிரி இருக்கிறது.. யமஹா கம்பெனியின் தயாரிப்பாம்..வயலின் போல  கணீரென்று  ஓசை  எழுப்பும் இந்த வாத்தியத்துக்கு ஏன் 'சைலென்ட் வயலின்' என்று பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை)... கீ போர்டில் 14 வயது  சிறுவன் சத்யநாராயணன்..  எலெக்ட்ரானிக்ஸ் டிரம்சில்  அருண் குமார் மற்றும் மிருதங்கம், கஞ்சிரா.

ஐம்புலன்களை பற்றிய 'பெண்டா மியூசிக்' என்ற இசைக்கோவை, அமைதியை வலியுறுத்தி அற்புதமான ஒரு இசையமைப்பு, கரகரப்ரியா ராகத்தில் மனதை வருடும் ஒரு ஆலாபனை என்று எல்லாமே வழக்கத்துக்கு மாறுபட்டு இருந்தது. கார்த்திக் வாய்ப்பாட்டு,  கடம், கொன்னக்கோல் என்று சகலமும் செய்கிறார்.. பாட்டை மட்டும் தவிர்ப்பது நல்லது.

அருண்குமார் டிரம்ஸ்சில் அப்படி ஒரு வெறியாட்டம் நடத்தினார்.. அவர் வாத்தியத்தில்  சாதாரண டிரம்ஸ் ஓசை தவிர நம்மூர் தவில், கேரள செண்டமேளம்,  சிந்தூர் ஓசை எல்லாம் இயற்கையாக அசலாக ஒலிக்கிறது.

நிகழ்ச்சியின் சிறப்பம்சம் வகுளாபரணம் என்ற ராகத்தில் அரேபிய சங்கீதத்தை இசைத்ததுதான். இந்த ராகத்துக்கு பெர்ஷியன் சாயல் உண்டாம்.. எம்பார் கண்ணனின் மெய்மறந்து வாசித்த இசை, எல்லோருக்கும் அரேபியா பாலைவனத்தில் கொஞ்சநேரம்  சுற்றித்திரிந்த உணர்வை ஏற்படுத்தியது. கடைசியில் பல பாடல்களின் பல்லவிகளை ராகமாலிகாவாக வாசித்து பரவசப்படுத்தினார் எம்பார் கண்ணன்.

இதுபோல வித்தியாசமான இசை நிகழ்சிகளுக்கு அதிக வரவேற்ப்பு இல்லை. ராணி சீதை மன்றத்தில் அன்று கால்வாசி கூட அரங்கம் நிறையவில்லை. கொஞ்சம் மாறுபட்ட இசை வழங்கினால் இது ஏதோ கர்நாடக சங்கீதத்துக்கு சம்பந்தம் இல்லை  என்ற மனோபவத்தை நீக்கினால்தான், இதுபோல முயற்சிகள் வெற்றிபெறும்.  நம் சங்கீதம் நம் எல்லைகளைத் தாண்டி பயணிக்கும்.

Monday, December 14, 2009

சென்னை இசை விழாவில் என் உலா - இரண்டாவது வாரம்

கர்நாடக சங்கீதத்தின் 'எவர் கிரீன்' பாடகர் ஜேசுதாஸ்தான். பல வருடங்களாக ஒலித்துக்கொண்டிருக்கும் அதே குரல்.. அதே இனிமை.. அதே ரசிகர் கூட்டம்...எழுபது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் இவர் குரல் மட்டும் இன்னும் இருபதுதான். கடந்த பத்தாம் தேதி  நாரதகான சபாவில் ஜேசு கச்சேரி.  (இவர் கச்சேரிக்கு மட்டும்  டிக்கெட் பிரீமியம் விலை).

'என்ன புண்ணியம் செய்தேனோ', 'தெளியலேலு ராமா', 'இமகிரிதனையே'  என்று ஆரம்பித்தவர், 'நடசி நடசி' பாட்டுக்காக கரகரப்ரியாவில் வித்தியாசமாக ஆலாபனை செய்தார். இப்போது நடுநடுவில் பேச்சுக் கச்சேரியும் செய்கிறார். நடுவில் வயலின்காரரை 'நீ என்ன  வாசிக்கற' என்ற கண்டிப்பு வேறு.

துக்கடாவில் முழுவதும் 'ஜேசுதாஸ் பிராண்ட்' பாடல்கள்தான். புதிதாக எதுவும் இல்லை ('என் நெஞ்சில் பள்ளிகொண்டவன்', 'ஜானகி ஜானே, 'மேரோ மேரோமன')... அனால் எவ்வளவு முறை கேட்டாலும் திகட்டாத பாடல்கள். இன்னொரு முறை இந்தவருடமும் ஜேசுதாஸ் கச்சேரி அனுபவம்.

கணேஷ் குமரேஷ் வயலினுக்குள் தேன் நிரப்பிக்கொண்டு வாசிப்பார்களா என்று தெரியவில்லை... அவ்வளவு இனிமை. பாரதிய வித்யா பவனில் இந்த இருவர் சகானா, தேவகாந்தரி, இந்தோளம் போன்ற மென்மையான ராகங்களையே  கையாண்டனர்.  இந்த இருவரோடு மூவராக இணைந்த மிருதங்க  வித்வான்  அவர்களுக்கு  ஈடுகொடுத்து  வாசித்தார். கணேஷ் சிருங்கார ரசமஞ்சரி பாடலை  வாய்விட்டு பாடியது அருமை. .   

சர்வம் பிரம்ம மயம் வாசிப்பு தாலாட்டு பாடுவது போல் இருந்தது. கடைசியாக துக்கடாவில் மேற்கத்திய குறிப்புக்கள், ஹரிவராசனம் முதலியவை இடம் பெற்றிருந்தன.

கார்த்திக் பைன் ஆர்ட்ஸ்சில் சுதா ரகுநாதன் கடம் இல்லாமல்  மோர்சிங்கை  வைத்து கச்சேரித்தார் (தமிழ் அகராதியில் புதிதாக சேர்த்துக்கொள்ளலாம்). அவர் மெல்லிய தங்கக்கம்பி குரலோடு மீண்டும் ஒரு 'சுதா ஸ்டாண்டர்ட்' கச்சேரி. கடைசியிலும்  'சுதா பிராண்ட்' பாடல்கள்தான் (தீராத விளையாட்டு பிள்ளை).  'செந்தமிழ் நாடென்னும் போதினிலே'வோடு தில்லானாவும், வந்தேமாதிரத்தில்  மங்களமும் பாடியது கூடுதல் சிறப்பு.

சஞ்சய் சுப்ரமணியத்தை 'ஆலாபனை ஸ்பெஷலிஸ்ட்' என்றே வர்ணிக்கலாம். ஆந்தோளிகா, பைரவி, ரிஷபப்பிரியா (இந்த ராகம் சஞ்சய் சொல்லித்தான் தெரியும்) ராகங்களில் அவர் செய்த ஆலாபனை ஒரு அமைதியான நதியினிலே ஓடத்தில் பயணிப்பது போல இருந்தது. அதேசமயம் திடீர் ஏற்ற இறக்கத்துடன் அளவில்லாத வெள்ளம் வரும்போது ஒரு ரோலர் கோஸ்டர் பயண உணர்வையும் தந்தது.

சஞ்சயின் பலம் அவரது அசாத்திய கூட்டணி. அவர் ஆலாபனைகளுக்கு  ஈடுகொடுக்க நாகை முரளீதரனால்தான் (வயலின்) முடியும். சஞ்சய் தாலாட்டினால் நாகை தென்றலாக வீசுகிறார். அவர் வேகம் கூடினால் இவர் புயலாக மாறுகிறார்.

இவர் கச்சேரியில் துக்கடாக்கள் இல்லை. தனி ஆவர்த்தனம் முடிந்தும், விஸ்தாரமாக தில்லானா பாடினார். பாரதியாரின் 'நின்னையே ரதியென்று ' பாடலை ஆலாபனைகளுடன் பல்வேறு ராகங்களில் அவர் பாடியது எல்லோரையும் கிறங்கடித்தது.

அவர் தந்த பரவசத்துக்கு, கச்சேரி முடிந்ததும் எழுந்த கரகோஷமே சாட்சி.

Monday, December 7, 2009

சென்னை இசை விழாவில் என் உலா - முதல் வாரம்

சென்னையில் குளிரும் இசையும் ஒரே சமயத்தில் துவங்கி விடும். டிசம்பர் முதல் தேதியில் வெளியாகும் சபா விளம்பரங்களிருந்து  இசைவிழா  களைகட்ட  தொடங்கிவிடும். ஒவ்வொரு முறையும் பல கச்சேரிகளை குறித்து வைத்துக்கொண்டு அதில் பாதிதான் நிறைவேற்றுவேன்.  இந்தமுறை நூறு சதவிகிதம்  நிறைவேற்றவேண்டும்  என்று திட்டம்... பார்க்கலாம்..

கடந்த வெள்ளிகிழமை மார்கழி மகாஉற்சவம் சார்பில் டி.எம்.கிருஷ்ணா கச்சேரி.. எல்லா பாடல்களும் இயற்கையை பற்றியது... மழை, மேகம், மயில், காதல் என்று பல பல ரசங்களை சமஸ்க்ரிதம், மலையாளம், வங்காளம் என்று எல்லா மொழிகளையும் பாடி பிரமாதப்படுத்திவிட்டார். அதுவும் வங்காள மொழியில் ரவீந்திரநாத் தாகூரின் மழை பற்றிய பாடல் அற்புதம். 

தில்லி காஜு பர்பி, மலையாள பாயசம், பெங்காலி ரசகுல்லா என்று திகட்ட திகட்ட இனிப்பு கொடுத்தவர் எங்கே தமிழ்நாட்டுக்கு அல்வா கொடுத்துவிடுவரோ என்று பார்த்தால்,  கடைசியில் அல்வாதான் கொடுத்தார் ஆனால் (எஸ்.எம்.கிருஷ்ணா மாதிரி இல்லாமல்) டி.எம்.கிருஷ்ணா கொடுத்தது  ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா.. அதுவும் எட்டயபுரத்து அல்வா..  அவர் பாடியது பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே... அதுவும் வித்தியாசமான ஒரு  ராகமாலிகாவில்  பாடி  எல்லோரையும்  திருப்திப்படுத்தினார்..

கடைசியில் 'வாழிய செந்தமிழ்' பாடி கச்சேரியை நிறைவு செய்தது கூடுதல் சிறப்பு.

அடுத்த நாள் கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் சார்பில் உன்னிகிருஷ்ணன் கச்சேரி... ஏனோ அவ்வளவாக சோபிக்கவில்லை.. பாடல்கள் தேர்வும் சுமார்தான்..'சிதம்பரத்துக்கு வாருமையா' பாடல் கொஞ்சம் தேவலாம்.. அவரின் விருப்பப்பாடலாகிய காவடி சிந்துகூட ஏனோ எடுபடவில்லை..தனிஆவர்த்தனம் முடிந்து மூன்றே துக்கடாக்கள் பாடி அவசரவசரமாக இரண்டு மணி நேரத்தில் கச்சேரியை முடித்து விட்டார்...

என்ன ஆச்சு உன்னி?

சென்னையில் கூட்டம் அலைமோதும் இடங்களில் மெரினா பீச், சுற்றுலா பொருட்காட்சி, இவைகளோடு அருணா சாய்ராம் கச்சேரியும் சேர்த்துக்கொள்ளலாம். செட்டிநாடு வித்யாஷ்ரம் அரங்கில் 6.30 மணிக்கு கச்சேரி என்றால் ஐந்து மணிக்கே கூட்டம் பிதுங்கி வழிகிறது. அரங்கிற்கு வெளியே உள்ள டி.வி திரையில் கச்சேரியை மக்கள்  படிக்கட்டு, தரையெல்லாம் உட்கார்ந்து பார்கிறார்கள். (சென்ற முறை அருணா சாய்ராம் கச்சேரிக்கு  டிக்கெட் வாங்க முதல்நாள் மியூசிக் அகாடமி சென்றேன்.. அங்கு அவர்கள் சொன்னது: "நாளைக்கு காலையில் சரியா ஆறு மணிக்கு  கௌண்டர்  திறப்போம்..  கியூவில் வந்து நின்னுடுங்க சார். உங்களுக்கு லக் இருந்தா டிக்கெட் கிடைக்கலாம்").

சரி லக் இருந்தால் அருணாசாய்ராமின் அடுத்த கச்சேரிக்கு போகலாம் என்று அங்கிருந்து மெதுவாக நழுவி பக்கத்தில் இருக்கும் குன்னக்குடியின் ராகா மையத்துக்கு வந்தேன். ராஜேஷ் வைத்யாவின்  வீணை   இசை. மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங், கீ போர்டு இத்யாதிகளுடன் மனுஷன் அசுரத்தனமாக வீணை வாசித்துக்கொண்டிருந்தார். கன்னாடக சங்கீதமும் மேற்கத்திய சங்கீதமும் கலந்த ஒரு துள்ளல் இசை அது. ஒரு வீணையில் இதனை தொனிகளும்  வேகமும்  சாத்தியாமா  என்று ஆச்சரியப்படவைக்கும் அதே சமயம் ஆட்டம் போடவைக்கும் இசை.. ஒரு இனிய புதிய அனுபவம்.

இனி அடுத்த வாரம்...