Thursday, April 14, 2011

'49ஓ'வின் நிலைமை..


நான் அடையாறிலிருந்து துறைபாக்கதுக்கு வீடு மாறி வந்ததால் வாக்காளர் பட்டியலில் என்பெயரை பதிவுசெய்ய விரும்பினேன். எங்கள் பகுதியில் நடந்த ஒரு முகாமில் மூன்று படிவங்களை கொடுத்து (நான், என் மனைவி, என் தாய்) புகைப்படத்துடன் பதிவுசெய்துகொண்டேன். ஆனால் வாக்காளர் அட்டை என் மனைவிக்கு மட்டுமே கிடத்தது.

சோளிங்கநல்லூர் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் என்  மனைவி  49ஓ பதிவு செய்ய முயன்றார். அங்கிருந்த தேர்தல் அதிகாரி அதெல்லாம் முடியாது எங்களுக்கு வேலை பளு அதிகம் என்று கூறி மறுத்துவிட்டார். " உங்களுக்கு சுலபம்தான்..நீங்கள் பாட்டுக்கு கையெழுத்து போட்டுவிட்டு போய்விடுவீர்கள்.. எங்களுக்கு எவ்வளவு வேலை...!" என்ற விளக்கம் வேறு.. எனக்கு யாருக்கும் வோட்டுபோட விருப்பம் இல்லை என்று என் மனைவி கூறியும் "அதெல்லாம் முடியாது.. வெளியில் சென்று பட்டியலைப் பார்த்துவிட்டு யாருக்காவது வோட்டு போடுங்கள்" என்று கண்டிப்பாக கூறிவிட்டார். அந்த இடத்தில் சத்தம் போட விருப்பம் இல்லாமல் என் மனைவி கடைசியில் ஏதோஒரு சுயர்சைக்கு வோட்டுபோட்டுவிட்டு வெளியில் வந்தார்.

விஷயத்தை கேள்விப்பட்டு நான் தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டேன்.. புகார் பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும் என்றேன்.. உடனே அந்த அதிகாரி "சாரி சார்.. புகார் செய்தால் எங்கள் வேலை போய்விடும்.. இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்துகொள்கிறோம்" என்று சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார்.

இதை பார்த்து வோட்டுபோட வரிசையில் நின்றவர்கள் (எங்கள் குடியிருப்பில் உள்ளவர்கள் - படித்தவர்கள்) என்ன குழப்பம் என்று கேட்டார்கள்... விளக்கினேன்.. அதற்க்கு அவர்கள் பதில்:

"என்ன... 49ஓ என்றெல்லாம் கூட ஒன்று இருக்கிறதா?"