Sunday, October 31, 2010

பொற்கோவில் - ஒரு வடஇந்தியப் பயணம்

தில்லி பயணத்தை முடித்துக்கொண்டு நேரே அமிர்தசரஸ் கிளம்பினோம்.. ரயில் பேரே கோல்டன் டெம்பிள் எக்ஸ்பிரஸ்.

யாரையாவது கண்ணைக்கட்டி நேரே அமிர்தசரஸில் இறக்கிவிட்டால், பஞ்சாப் மாநிலத்தில் இருக்கிறேன் என்று ஒரு நிமிடத்தில் சொல்லிவிடுவார்கள். ஆணாகட்டும் பெண்ணாகட்டும்..  நூற்றுக்கு  தொண்ணூறு  பேர்  பஞ்சாபி  உடையிலேயே திரிகிறார்கள். சில ஆண்கள் மார்பில் குறுக்கே ஒரு பட்டையில் கத்தியெல்லாம் வைத்துக்கொண்டு 'தீவிர' பஞ்சாபி உடையில் இருகிறார்கள். ஒரு பெண்ணாவது ஜீன்ஸ்-டிஷர்ட் அல்லது சேலை அணிந்துகொள்ளடுமே..ஹும்ஹும்.. எல்லோருமே பஞ்சாபி சுடிதார்தான்..

அமிர்தசரசில் எல்லா ஹோட்டலுமே பொற்கோவிலின் நடை தூரத்திலேயே இருக்கிறது. தேவைப்பட்டால் ரிக்க்ஷாவில் செல்லலாம்.


நான்கு பக்கமும் தண்ணீர் சூழ  தகதகவென  மின்னிக்கொண்டிருக்கிறது பொற்கோவில். அதை அடைவதற்கு ஒரு பக்கத்திலிருந்து மட்டும் ஒரு பாலம். எந்தப்பக்கத்தில் பார்த்தாலும் அற்புதமாக இருக்கிறது பொற்கோவில். மெல்லியதாக பக்திப்பாடல்கள் பஞ்சாபியில் ஒலித்துக்கொண்டிருக்க, அந்த சூழலே தெய்வீகமாக இருக்கிறது. தலைமுடியை மூடாமல் குருத்வாராவுக்குள் செல்லமுடியாது.. கைக்குட்டையாவது கட்டிக்கொண்டு செல்லவேண்டும். அதேபோல் கால் கழுவாமலும் உள்ளே செல்ல முடியாது. உள்ளே தூய்மை என்றால் அப்படி ஒரு தூய்மை. அந்த வளாகம் முழுவதும் மார்பிள் கற்களால் இழைக்கப்படிருக்கிறது.  பலர் புனித நீராடினாலும் அப்படி தூய்மையாக பாதுகக்கபடுகிறது அந்த குளம்.


நாங்கள் அங்கு சென்றது ஒரு  ஞாயிற்றுக் கிழமை... நல்ல கூட்டம்.. ஆனால் நெரிசல் இல்லை..கூச்சல் குழப்பம் இல்லை.. பொதுவாக எல்லோருமே அமைதியை கடைபிடிக்கிறார்கள்.. இங்கு எல்லோரும் சமம்..ஏழை பணக்காரன் வித்தியாசம் கிடையாது.. சிறப்பு கட்டணம், தரிசனம் எதுவும் கிடையாது.  யாராயிருந்தாலும்  ஒரே வரிசையில்தான் நிற்கவேண்டும். குருத்வாராவுக்குள் எந்த விதமான பணம் வசூலிக்கும் கவுண்டரையும் நான் பார்க்கவில்லை. 

குருத்வாராவுக்கு அருகிலேயே இலவச உணவு மையம். கிட்டத்தட்ட வந்தவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டுத்தான் செல்கிறார்கள்.

எண்பதுகளில்  யுத்த பூமியாக இருந்த பஞ்சாப்.. தீவிரவாதிகளில் புகலிடமாக இருந்த பொற்கோவில், இன்று அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. 1984 ல் ஆபரேஷன் புளு ஸ்டார் என்ற பெயரில் இந்திய  ராணுவம்  உள்ளே  நுழைந்த பொற்கோவிலுக்கு இன்று எந்தவித பாதுகாப்பு பரிசோதனையும் இல்லாமல் மக்கள் உள்ளே நுழைய முடிகிறது. மாற்றங்கள்தான் ஒரு இனத்தின் வளர்ச்சியை நிர்ணயிக்கிறது என்பதற்கு பஞ்சாப் ஒரு சாட்சி. இந்த பாஞ்சால பூமியில் ஏற்பட்டுள்ள  மாற்றம் மகத்தானது. ஆனால் நாம்  அதற்க்கு கொடுத்த விலை? இந்திரா காந்தியின் உயிர் மற்றும்  பல ஆயிரக்கணக்கான  சீக்கியர்களின் உயிர்... பொற்கோவிலைப்பற்றி நினைக்கும்போது ஏனோ இதை நினைக்காமல் இருக்க முடியவில்லை.. அதுவும் இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் நாள் - இந்திரா காந்தியின் நினைவு நாள்.

இனி இந்தியா சுதந்திர வரலாற்றிலேயே ஒரு கருப்பு நாள். 90 வருடங்கள் கடந்தும் நெஞ்சை பதறவைக்கும் ஒரு நிகழ்வு - ஜாலியன் வாலாபாக்...

- பயணம் தொடரும்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்