Friday, February 26, 2010

சச்சின் டெண்டுல்கரின் ஆனந்த தாண்டவம்

அது 1997ம்  ஆண்டு.. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டி.முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் மளமளவென ரன்களை குவித்துக்கொண்டிருந்தார்.  பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிக்கொன்டிருந்தார். அனில் கும்ப்ளேவின் ஒரு ஓவரில்  வரிசையாக மூன்று சிக்சர்கள் அடித்தார்.

50 , 100 , 150  என்று ரன்களை கடந்துகொண்டிருந்தார் சயீத் அன்வர். ஸ்டேடியத்தில் உட்கார்ந்து மேட்ச் பார்த்துகொண்டிருந்த எனக்கும் என் நண்பர்களுக்கும் எங்கேயாவது 200 ௦ரன்கள் எடுத்துவிடுவாரோ பக் பக் என்று அடித்துகொண்டிருந்ததது... கடைச்யாக 194  ரன்களில் அவுட் ஆனார் அன்வர். அப்போது என்றாவது ஒருநாள் இந்த சாதனையை சச்சின் முறியடிப்பார் என்று நினைத்தேன்.  13 வருடங்கள் கழித்து குவாலியர் மாட்சில் சச்சின் அந்த சாதனையை நிகழ்த்தியிருகிறார்.

ஆனால் அன்வரின் ஆட்டத்துக்கும் சச்சினின் ஆட்டத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. சயீத் அன்வர் அதிரடியாகவும் அதே சமயம் ஆர்ப்பாட்டதுடனும் ஆடினார். அவருக்கு முந்தய சாதனையான வீவியன் ரிச்சர்ட்சின் 189  ரன்களை கடந்தபோது பேட்-அப் செய்தார். 200 ௦ ரன்கள் எடுக்கவேண்டும் என்ற பதட்டத்தில் 194 ரன்களில் அவுட் ஆனார். அன்று அவர் பொறுமையாக ஆடியிருந்தால் 200 ரன்கள் எடுத்திருக்க முடியும். சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற குறிக்கோளில் விளையாடியதால் பதட்டம் அவரை  தொற்றிக்கொண்டது. அவுட் ஆனதும் மனமில்லாமல் மைதானத்தைவிட்டு வெளியேறியது கண்கூடாகத் தெரிந்தது.

அதற்க்கு நேர் எதிர் சச்சின். குவாலியர் மாட்ச்சில் 194 ரன்களை கடந்தபோது சச்சின் பேட்-அப் செய்யவில்லை. 200  ரன்களை கடக்க அவசரப்படவில்லை. சச்சின் 190  ௦ ரன்களில் இருக்கும்போது கேப்டன் தோனியே அதிகம் விளையாடினர்.. சச்சினுக்கு வாய்ப்பே வரவில்லை. 50வது ஓவரின் நடுவில் கிடைத்த ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்து சரியாக 200 ரன்கள் எடுத்தார். அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் கூட போயிருக்கலாம். அதற்காக சச்சின் கவலைப்படவில்லை. இதே போல் போன மாதம் பங்களாதேஷ் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றிபெற சொற்ப ரன்களே இருந்தபோது, சச்சின் 96  ரன்களில் இருந்தார். அப்போது எதிர்முனையில் விளையாடிக்கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்து இலக்கை கடந்தார். சச்சின் நினைத்திருந்தால் தான் 100 எடுக்கவேண்டும் என்ற விருப்பத்தை தினேஷ் கார்த்திக்கிடம் வெளிப்படுத்தியிருக்க முடியும். ஆனால் கடைசிவரை '96 நாட்-அவுட்' ஆகவே இருந்தார். இதுவே சச்சின் சாதனைகளை குறிவைத்து ஆடவில்லை என்பதற்கு சாட்சி. சாதனைக்கு ஆடாததால்தான் அவரால் சாதிக்க முடிகிறது.

அன்று அன்வர் ஆடியது ருத்ர தாண்டவம். இன்று சச்சின் ஆடியது ஆனந்த தாண்டவம். நாளை சச்சினின் சாதனையை யாரவது முறியடிக்கலாம்.. ஆனால் சச்சின் மாதிரி அடக்கமான பணிவான ஒரு கிரிக்கெட் வீரரை பார்ப்பது அரிது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்