Thursday, November 18, 2010

ரம்யமான ரிஷிகேஷம் - ஒரு வடஇந்தியப் பயணம்

அமிர்தசரசிலிருந்து ஹரித்வார் வந்து இறங்கினோம். அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து ரிஷிகேஷ் சென்றோம். அங்கு எல்லாமே நம்மவூர் ஷேர் ஆட்டோ  அளவுக்கு  இருக்கிறது.. ஒரு மணிநேரம் அந்த 'லோட லோட' ஆட்டோவில் பயணித்து ரிஷிகேஷ் வந்து சேர்ந்தோம். நடுநடுவே கங்கையின் பல கிளை நதிகளைப் பார்க்க முடிந்தது.

ரிஷிகேஷில் வந்து இறங்கியது ஜானகிதேவி சோமானி பவன். அது ஹோட்டல் அல்ல..குறைந்த அளவில் அறைகளை கொண்டு நடத்தப்படும் ஒரு அறக்கட்டளை. அறை கிடக்க கொஞ்சம் நேரமானது. அதற்குள் எங்காவது குளித்துவிட்டு சிற்றுண்டி சாப்பிடலாமா என்று ரிசப்ஷனில் கேட்டேன். 'செய்யலாம்..பின்புறம் செல்லுங்கள்' என்றார்கள். சரி பின்னால் ஏதோ ஒரு பொது குளியலறை இருக்கும் என்று சென்றால்... என்ன ஆச்சரியம்.. என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை...

அகண்ட கங்கை  நதி  பிரவாகமெடுத்து ஓடிக்கொண்டிருகிறது.. பின்னால் ஓங்கி உயர்ந்து நிற்கும் இமயமலைச் சாரல்... 'ஒ'வென்ற ஓசையுடன் நகர்துகொண்டிருக்கும் தண்ணீரின் சலசலப்பைத்தவிர வேறெந்த சப்தமும் இல்லை. நான் என்னை மறந்த நிலையில் நின்றுகொண்டிருந்தேன். கங்கை நதியில்தான் என்ன ஒரு கம்பீரம், என்ன ஒரு ரம்யம், இந்தியாவுக்கு இயற்கை அளித்த கொடை இந்த கங்கையும் இமயமும்...  சிறிது நேரம் கழித்துதான் நான் பார்ப்பது நிஜம் என்ற உணர்வே வந்தது. ரொம்பநாள் பசியோடு இருந்தவன் அவசரஅவசரமாக உண்பதைப்போல, எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு அந்த இயற்கை கொஞ்சும் எழிலை என் இரு கண்களில் பதித்துக்கொண்டேன். கங்கையின் பயணம் மிகப்பெரியது..இயத்தில் உள்ள பனிப்பாறைகள் உருகி கங்கோத்ரியில் துவங்கி பாகிரதி நதியாக தேவப்பிரயாகை வந்து அடைகிறது. இதோடு இன்னொரு பக்கம் அலக்நந்தா நதி இணைத்துக்கொள்ள அங்கிருந்து கங்கை நதி தன் பயணத்தை துவக்குகிறது. ரிஷிகேஷத்தில் இமயமலையை விட்டு இறங்கி ஹரித்வாரம், கான்பூர், காசி, பாட்னா, கொல்கத்தா வழியாக சென்று, 2500 கி.மீ பயணித்து, வங்காள விரிகுடாவில் கலக்கிறது.. இமயத்திலிருந்து நேரடியாக வருதால் ரிஷிகேசத்தில்  மாசுபடாத கங்கை சாம்பல்நிறத்தில் ஓடிக்கொண்டிருகிறது. 


சோமானி பவன் பின்புறம்

கங்கையின் அருகே நின்று ரசிப்பதற்கு ஒரு படித்துறை.. இறங்குவதற்கு சில படிகள். கங்கையின் வளைவு நெளிவுகளூடே இந்தப்படிதுறை  கிட்டத்தட்ட  ரிஷிகேஷம் முழுவதும்  நீண்டுகொண்டே செல்கிறது. அங்கங்கு தூவப்படும் சம்மங்கிப் பூக்கள் நதியோடு  பயணித்துக்கொண்டிருகிறது. வெளியில் வெயில்.. ஆனால் கங்கையில் காலை வைத்தால் ரத்தம் உறைந்துபோகுமோ என்று நினைக்கும்  அளவுக்கு குளிர்ச்சி...!  நம் உடல் உஷ்ணம் அந்த குளிர்த நீருடன் ஒத்துபோவதற்க்கு கொஞ்ச நேரம் பிடிக்கிறது. பிறகென்ன.. ரிஷிகேஷத்தில் இருந்த இரண்டு நாட்களும் கங்கையில் ஆனந்த குளியல்தான்..அந்த சுகானுபவத்தை அனுபவிக்கத்தான்  முடியும்.. வார்த்தையில் விவரிக்க முடியாது. அனால் அங்கு கங்கையின் வேகம் அதிகம். இரண்டு படிகளுக்கு மேல் கிழே இறங்கினால் கால்  நழுவுகிறது. (ஏதோ படித்துறையில் நின்று கொண்டு குளித்ததையே பெரியதாக நினைத்துக்கொண்டிருந்தேன்.. அனால் அடுத்தநாள் நடு கங்கையில் இறங்கப்போகிறேன் என்று அப்போது தெரியாது.. அதை அடுத்த பதிவில் பாப்போம்)

 
லக்ஷ்மன் ஜுலா
 ரிஷிகேஷத்தில் கங்கையை கடக்க லக்ஷ்மன் ஜூலா, ராமன்  ஜூலா என்று இரண்டு தொங்கு பாலங்கள் இருக்கின்றன. நடந்து செல்வதற்கு மட்டுமே அமைக்கப்பட்ட மிகவும் குறுகலான இந்த பாலத்தில் இருசக்கர வாகனங்களும் செல்கின்றன..கூடவே ஆடு மாடுகளும்..கையில் உணவுப்பொருட்கள் ஏதாவது வைத்திருந்தால் லபக் என்று அபகரிக்கும் வானரங்கள்... இவற்றுக்கு நடுவே லேசாக ஆடிக்கொண்டிருக்கும் பாலம்... கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.. ஆனால் 1937ல் கட்டப்பட்ட பாலம் இன்னும் வலிமையாகத்தான் இருக்கிறது..

ரிஷிகேஷதிலும் சரி ஹரித்வரதிலும் சரி அந்தி சாயும் நேரத்தில் கங்கைக்கு மங்கள ஆரத்தி காண்பிக்கும் நிகழ்ச்சி மிகப்பிரபலம். மாலை கீழே ஹரித்வாருக்கு இறங்கி வந்தோம். ஹரித்வார கங்கை ரிஷிகேஷ் அளவுக்கு சுத்தம் இல்லை.ஆனாலும் ரிஷிகேஷ் போலவே படித்துறைகள்.. அங்கங்கு பல இடங்களில் ஆரத்தி நிகழ்ச்சி நடந்துகொண்டிருகிறது.. மக்கள் சிறு சிறு கூட்டமாக நின்று கொண்டு ஆரத்தியில் கலந்துகொள்கிறார்கள்.. பின் அனைவரும் கங்கையில் இறங்கி  ஒரு சிறிய பூக்கூடையில் விளக்கு ஏற்றி நதியில் விடுகிறார்கள்.. கங்கைக்கரை முழுவதும் இந்த பூவிளக்குகள் ஊர்ந்து செல்வதே கொள்ளை அழகு. அதுவும் இருள் சூழ்ந்த கங்கை நதியில் மின்மினிப் பூசிகள் போல அங்கங்கே கண்சிமிட்டிக்கொண்டு நகர்கிறது  பூவிளக்குகள்.  இங்கு கரை முழுவதும் சாமியார்கள் ஆதிக்கம் அதிகம். ஒரு சாமியார் சங்கு ஊதிக்கொண்டிருகிறார்.. ஒரு சாமியார் கங்கைக்கரையில் தியானத்தில் இருக்கிறார்.. ஒருவர் உடல்முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு அகோரி வேடத்தில் கோவணத்துடன் காட்சியளிக்கிறார். இவர்கள் முற்றும் துறந்த சன்யாசிகளா அல்லது பண்டாரங்களா.. இல்லை போலிச் சாமியார்களா.. என்று குழப்பம் ஏற்படுத்தும் கலவை அது.

ரிஷிகேஷிலும் இதுபோல நிறைய இடத்தில் ஆரத்தி நிகழ்சிகள் உண்டு. பரமார்த் என்ற கோவில் அருகே உள்ள படிக்கட்டில் ஆரத்தியுடன் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இங்கு பல வெளிநாட்டவர் கலந்துகொள்கின்றனர். இங்குள்ள ஆசிரமத்தைச் சேர்ந்த பல குருகுல மாணவர்கள் காவி உடை அணிந்து தினமும் மாலையில் கங்கை முன்னால் உள்ள படிக்கட்டுகளில் அமர்து இசை முழங்குகிறார்கள். இசைக்கு தாளமிட்டபடியே படித்துறையை உரசிச்செல்கிறது கங்கை. அதற்கு எதிரே  கங்கைக்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் சிவன் சிலை செவ்வானத்தில் பிரகாசிக்கிறது. சூரியன் மறைந்து இருள் கவியும் நேரத்தில் சலசலத்து ஓடும் கங்கையில் நின்று கொண்டு கேட்ட அந்த இசையில் மனம் கரைந்தது.  ஏகாந்தம் என்பார்களே.. அது இதுதானோ..

அங்கு வாழும் மக்களுக்கு கங்கைதான் தெய்வம். காலங்காலமாய்  தங்களை  வாழ்வித்துக்கொண்டிருக்கும் இந்த ஜீவநதியை தினமும் வணங்கி, மலர் தூவி, ஆரத்தி எடுத்து நன்றி தெரிவிக்கிறார்கள். இது ஏதோ சம்பிரதாயத்துக்காக   செய்யப்படும் நிகழ்ச்சி அல்ல..'ஜெய் ஜெய் கங்கா மாதா' என்று உள்ளன்புடன் கங்கையை தொட்டு கும்பிடும்போது  அவர்கள் வாழ்க்கையில் கங்கையும் ஒரு அங்கம் என்று புரிகிறது. 

இனி கங்கையின் நடுவே ஒரு சாகசம்.. பலூன் படகு பயணம்...!

- பயணம் தொடரும்... 


மங்கள ஆரத்தி

காலை நேர கங்கை
இசை நிகழ்ச்சி

Thursday, November 11, 2010

இந்திய பாகிஸ்தான் எல்லை - ஒரு வடஇந்தியப் பயணம்

ஒன்றுபட்ட இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் வாஹா என்ற கிராமம், 1947 பிரிவினைக்குபிறகு கிழக்கு பகுதி இந்தியாவுக்கும் மேற்கு பகுதி பாகிஸ்தானுக்கும் பிரிக்கப்பட்டது. இன்று இந்தியாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் ஒரே சாலைவழி மார்க்கம் இந்த வாஹா எல்லை. இங்கிருந்து 25 கி.மீ தொலைவில் இந்தப்பக்கம் அமிர்தசரஸ் நகரம்.. அந்தப்பக்கம் லாகூர் நகரம்.

தினமும் அந்தி சாயும் வேளையில் இங்கு ராணுவ மரியாதையுடன் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. அருகே சென்று பார்க்கவேண்டும் என்றால் கொஞ்சம் சீக்கிரமே சென்றால்தான் இடம் கிடைக்கும் என்று பலர் சொன்னார்கள். மாலை 5.30க்கு துவங்கும் நிகழ்ச்சிக்கு 4.45க்கு போய் நின்றேன். அனால் அதற்குள் சாலையின் இருபக்கமும் இருக்கும் பார்வையாளர்களின் மாடம் நிரம்பி வழிந்தது... மாடத்துக்கு வெளியே நின்றுகொண்டுதான் வேடிக்கை பார்க்க முடிந்தது. அதேபோல் அந்தப்பக்கம் பாகிஸ்தான் பார்வையாளர்களின் மாடத்திலும் நல்ல கூட்டம். சராசரியாக ஒரு நாளில் இந்தியப்பகுதியில் மட்டும் 8000 பேர் வருகிறார்களாம்.

இரு மாடங்களுக்கும்  இடையே  சில  அடி  தூரம்தான்..  இருபக்கமும் இரும்பு வாயிற்கதவு... இங்கு காக்கி நிற உடையிலும் அங்கு கரும்பச்சை உடையிலும் எல்லையோர காவல் படையினர்... அந்த இடமே அவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இந்திய நுழைவில் 'இந்தியா' என்று ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதப்பட்டு மேலே மூவர்ணக்கொடி பறந்துகொண்டிருகிறது.. அந்தப்பக்கம் பாகிஸ்தான் கொடி..கூடவே ஜின்னாவின் படம். (இந்தியாவில் காந்தி படம் இல்லை..காந்தி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பொதுவானவர் என்று விட்டு விட்டார்களோ?).

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்  இருபக்கமும்  வாயிற்கதவின் முன் ஒரு பெறும்   கூட்டம்  நடனமாடிக்கொண்டிருகிறது,  தங்கள்  தேசியக்   கொடியுடன்..! பல தேசபக்திப்பாடல்கள் ஒளிபரப்பப்படுகின்றன ('ஜெய் ஹோ'வும் உண்டு). நம் பக்கம் 'ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்', 'பாரத் மாதாகி ஜே', 'வந்தே மாதரம்' போன்ற கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.. ராணுவத்தை சேர்ந்த ஒரு அதிகாரி வேறு கையை உயர்த்தி 'இன்னும் இன்னும்' என்று கூட்டத்தை உசுப்பேத்திவிடுகிறார்.. இதேபோல பாகிஸ்தான் பக்கமும்...! இதெல்லாம் முடிந்தபிறகு நிகழ்ச்சி தொடங்கியது. இரண்டு இரண்டு பேராக ராணுவ வீரர்கள் அதிவேகமாக நடந்து கதவு அருகே நின்று கொள்கிறார்கள். பிறகு சிலர் கிட்டத்தட்ட தலைக்குமேல் காலை உயர்த்தி சத்தத்துடன் தரையில் அடித்து நடந்து செல்கிறார்கள்.  இதற்கு இணையாக பாகிஸ்தான் பக்கமும் அணிவகுப்பு நடைபெற்றுக்கொண்டிருகிறது. பாகிஸ்தான் வீரர்கள் வெடுக்கென தலையை திருப்பி கையை உயர்த்தி உடலை சிலிர்த்துக் கொள்கிறார்கள். அது என்ன ராணுவ சைகை என்று புரியவில்லை. பிறகு சடாரென்று கதவு திறக்கப்படுகிறது. இந்திய பாகிஸ்தான் வீரர்கள் ஏதோ போருக்கு தயாராவதுபோல நின்றுகொண்டு கைகுலுக்கிக்கொள்கிறார்கள். பிறகு சரியாக சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் இரு கொடிகளும் இறக்கப்டுகின்றன. பிறகு கதவு மீண்டும் வேகமாக மூடப்படுகிறது. அவ்வளவுதான்.. நிகழ்ச்சி முடிந்தது.

அங்கு இருக்கும் போது சில அடிதூரத்தில் இன்னொரு நாட்டைப்பார்ப்பது ஒரு திரில்லான அனுபவம்தான். கொஞ்சம் தேசப்பற்று வருவது என்னமோ உண்மைதான். ஆனால் ஒரு நாட்டின் எல்லையில் நிற்கும்போது எதற்காக இவ்வளவு கோஷங்கள், ஆர்பாட்டங்கள் ஏன் என்று புரியவில்லை. ஏதோ தேசபக்தியை வேண்டுமென்றே திணிப்பதாக எனக்குப்பட்டது. இதுபோன்ற ஒரு இடத்தை மக்காவ்-சீன எல்லையில் பார்த்திருக்கிறேன். (அப்போது மக்காவ் தனி நாடு - போர்சுகல் காலனியாக இருந்தது). அங்கு மக்கள் அமைதியாக இரு நாடுகளுக்கும் சென்று வந்து கொண்டிருப்பார்கள்.. ஆர்ப்பாட்டம் எதுவும் இருக்காது. ஐரோப்பாவிலும் இதுபோல இருநாடுகளுக்கும் சாலைப் போக்குவது இருக்கிறது எந்தவித கோஷங்களும் இல்லாமல்...! அனால் இந்தியா-பாகிஸ்தான் எல்லை என்றதும் அதற்கு ஒரு தனி வீரியம் வந்துவிடுகிறது.

நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும் போதே ஒரு பறவைக்கூட்டம் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பறந்து கொண்டிருந்தது... "ஏ மனிதப்பிறவிகளே...! ஆறறிவு படைத்த  உங்களுக்குத்தான் இத்தனை நாடுகள், இத்தனை பிரிவினைகள், இனங்கள், மதங்கள் எல்லாம்.. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல விசா, பாஸ்போர்ட் எல்லாம்.. நாங்கள் சுதந்திரப்பறவைகள்.. எங்களை எந்த எல்லையும் தடுக்கமுடியாது" என்று நம்மைப் பார்த்து ஏளனம் செய்து பறந்தன..!

இனி பஞ்சாபிலிருந்து நேராக இமயத்தின் அடிவாரத்தில் ஒரு ரம்யமான பிரதேசம்.. ரிஷிகேஷம்..

- பயணம் தொடரும்

Saturday, November 6, 2010

ஜாலியன்வாலா பாக் - ஒரு வடஇந்தியப் பயணம்

காந்தி திரைப்படத்தை எந்தனை முறை பார்த்திருப்பேன் என்று தெரியாது. ஆனால் ஒவ்வொரு முறையும் ஜாலியன் வாலாபாக் காட்சியைப் பார்க்கும் போதும் என் கண்களில்  கண்ணீர் எட்டிப்பார்ப்பதைத் தவிர்க்கமுடியாது. 91 ஆண்டுகளுக்குமுன் கொடூர நிகழ்வு நடந்த அந்த இடத்தை நேரில் காணப்போகிறோம் என்றதும், ஒரு சோகம் கலந்த படபடப்புடன் ஜாலியன்வாலா பூங்காவுக்குள் நுழைந்தேன்.

பொற்கோவிலில் இருந்து ஐந்து நிமிடநடை தூரத்தில் இருக்கிறது ஜாலியன்வாலா பாக். சென்னை ஜார்ஜ் டவுன் மாதிரியான ஒரு இடத்தில் ஒரு  குறுக்கிய  சாலையின் ஓரத்தில் இருக்கும் அந்த இடத்துக்கு வரும் மக்கள் கூட்டம் இன்னமும் அதிகம். உள்ளே நுழையும்போதே ஒரு மாபெரும் சரித்திரத்தில் காலடி வைக்கப்போகிறோம் என்ற உணர்வு மேலோங்கியது. நுழைவாயிலில் உள்ள அறிவிப்புபலகையில் அந்த சோகவரலாறு எழுதப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் 13, 1919.. அன்று 'பைசாக்கி' எனப்படும் சீக்கியர்களின் புத்தாண்டு தினம், இந்திய சரித்திரத்தில் ஒரு கனத்த நாளாக மாறிப்போனது. அது ரௌலட் சட்டம் அமலில் இருந்த காலகட்டம். அதை கண்டித்து நாடு முழுவதும் குறிப்பாக பஞ்சாபிலும் லாகூரிலும் ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக அமிர்தசரஸில் ஜாலியன்வாலா பாக் என்கிற திடலில் ஒரு கண்டனக்கூட்டம் ஏற்பாடு செய்யப்படிருந்தது. மாலை 4.30 மணிக்கு ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக கிட்டத்தட்ட 15000 மக்கள் கூடியிருந்தனர் தங்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்தை அறியாமல்..!

இதை அறிந்த பிரிட்டிஷ் ராணுவ ஜெனரல் ரெஜினால்ட் டையர் 100 சிப்பாய்களுடன்  ஜாலியன்வாலா பாக் திடலுக்குள் உள்ளே நுழைந்தான். எந்தவித முன்அறிவிப்போ எச்சரிக்கையோ இல்லாமல் கூட்டத்தை நோக்கி சுட உத்தரவிட்டான். அந்த திடலில் ஒரேஒரு குறுகலான நுழைவாயில் மட்டுமே உள்ளது. அங்கிருந்துதான் சிப்பாய்கள் மக்களை நோக்கி சுட்டனர். யாரும் வேறு எப்படியும் வெளியே செல்ல முடியாது. தொடர்ந்து 20 நிமிடங்கள் இடைவெளியே இல்லாமல் துப்பாக்கிச் சூடு... 1650 ரவுண்டு குண்டுகள் தீர்ந்தபின்னரே நிறுத்தப்பட்டன. முடிவில் கிட்டத்தட்ட 1500 மக்கள் பலியானார்கள். தப்பிப்பதற்காக அருகே உள்ள கிணற்றில் குதித்து 120 பேர் உயிரிழந்தனர்.

இன்று ஜாலியன்வாலா பாக் இந்திய அரசாங்கத்தால் பராமரிக்கப்பட்டு ஹிரோஷிமா போல கொடூரத்தின் நினைவுச் சின்னமாய் காட்சியளிகிறது. இங்கு அந்த இடத்தில் ஒரு நினைவுத்தூண் இருக்கிறது... ஒரு அணையா விளக்கு இருக்கிறது... அந்த கிணறு அப்படியே பாதுகாக்கப்படுகிறது. சுடப்பட்ட இடத்திலிருந்து  100 அடி  தள்ளி  இருக்கும் சுவர்களில் இன்னமும் குண்டு துளைத்த தடயங்கள் இருக்கிறது.  சுவரையே துளைத்திருக்கும் குண்டுகள் மனித உடலை எப்படி சல்லடையாக்கியிருக்கும் என்று நினைக்கும்போதே உள்ளம் பதபதைக்கிறது. ஜாலியன்வாலா பாக்கில் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் நெஞ்சம் கனத்துக்கொண்டே போனது...!

இந்த படுகொலைக்காக நடைபெற்ற விசாரணை கமிஷனில் நீதிபதிகள், ஜெனரல் டையரிடம் இப்படிக் கேட்டார்கள்:  "அந்த நுழைவாயில் மிக குறுகலாக இருந்ததால் நீங்கள் கொண்டுவந்திருந்த பீரங்கிகளை உள்ளே எடுத்துசெல்ல முடியவில்லை.. முடிந்திருந்தால் பீரங்கியாலும் மக்களை சுட்டிருப்பீர்கள்..இல்லையா?" - இதற்கு  டையரின் பதில் - "ஆமாம்.. நிச்சயமாக..!".. மேலும் காயமடைந்தவர்களுக்கு என்ன முதலுதவி செய்தீர்கள் என்ற கேள்விக்கு, "அது என் வேலை இல்லை.. மருத்துவமனை அருகில்தான் இருக்கிறது..வேண்டுமென்றால் அவர்கள் அங்கு சென்றிருக்கலாம்" என்று பதிலளித்தான் டையர்.

அந்த காலகட்டத்திலும் சரி.. இப்போதும் சரி.. உலகெங்கும் பல கொடுங்கோல் ஆட்சி நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்கு இந்தியாவில் இருக்கும் சாட்சி ஜாலியன்வாலா பாக். அனால் என்னதான் சாட்சிகள் இருந்தும் என்ன பலன்?  ஜெனரல் டையர்கள் ஹிட்லர்கலாகவும் ராஜபக்சேக்களாகவும் இந்த உலகில் தோன்றிக்கொண்டுதானே  இருக்கிறார்கள்?

இனி அமிர்தசரஸில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு இடம்... இந்தியாவும்  பாகிஸ்தானும் முத்தமிடும் வாஹா எல்லை... 

 - பயணம் தொடரும்...

நினைவுத்தூண்
குறுகிய நுழைவாயில்
   

குண்டு துளைத்த சுவர்

மரணக் கிணறு



Sunday, October 31, 2010

பொற்கோவில் - ஒரு வடஇந்தியப் பயணம்

தில்லி பயணத்தை முடித்துக்கொண்டு நேரே அமிர்தசரஸ் கிளம்பினோம்.. ரயில் பேரே கோல்டன் டெம்பிள் எக்ஸ்பிரஸ்.

யாரையாவது கண்ணைக்கட்டி நேரே அமிர்தசரஸில் இறக்கிவிட்டால், பஞ்சாப் மாநிலத்தில் இருக்கிறேன் என்று ஒரு நிமிடத்தில் சொல்லிவிடுவார்கள். ஆணாகட்டும் பெண்ணாகட்டும்..  நூற்றுக்கு  தொண்ணூறு  பேர்  பஞ்சாபி  உடையிலேயே திரிகிறார்கள். சில ஆண்கள் மார்பில் குறுக்கே ஒரு பட்டையில் கத்தியெல்லாம் வைத்துக்கொண்டு 'தீவிர' பஞ்சாபி உடையில் இருகிறார்கள். ஒரு பெண்ணாவது ஜீன்ஸ்-டிஷர்ட் அல்லது சேலை அணிந்துகொள்ளடுமே..ஹும்ஹும்.. எல்லோருமே பஞ்சாபி சுடிதார்தான்..

அமிர்தசரசில் எல்லா ஹோட்டலுமே பொற்கோவிலின் நடை தூரத்திலேயே இருக்கிறது. தேவைப்பட்டால் ரிக்க்ஷாவில் செல்லலாம்.


நான்கு பக்கமும் தண்ணீர் சூழ  தகதகவென  மின்னிக்கொண்டிருக்கிறது பொற்கோவில். அதை அடைவதற்கு ஒரு பக்கத்திலிருந்து மட்டும் ஒரு பாலம். எந்தப்பக்கத்தில் பார்த்தாலும் அற்புதமாக இருக்கிறது பொற்கோவில். மெல்லியதாக பக்திப்பாடல்கள் பஞ்சாபியில் ஒலித்துக்கொண்டிருக்க, அந்த சூழலே தெய்வீகமாக இருக்கிறது. தலைமுடியை மூடாமல் குருத்வாராவுக்குள் செல்லமுடியாது.. கைக்குட்டையாவது கட்டிக்கொண்டு செல்லவேண்டும். அதேபோல் கால் கழுவாமலும் உள்ளே செல்ல முடியாது. உள்ளே தூய்மை என்றால் அப்படி ஒரு தூய்மை. அந்த வளாகம் முழுவதும் மார்பிள் கற்களால் இழைக்கப்படிருக்கிறது.  பலர் புனித நீராடினாலும் அப்படி தூய்மையாக பாதுகக்கபடுகிறது அந்த குளம்.


நாங்கள் அங்கு சென்றது ஒரு  ஞாயிற்றுக் கிழமை... நல்ல கூட்டம்.. ஆனால் நெரிசல் இல்லை..கூச்சல் குழப்பம் இல்லை.. பொதுவாக எல்லோருமே அமைதியை கடைபிடிக்கிறார்கள்.. இங்கு எல்லோரும் சமம்..ஏழை பணக்காரன் வித்தியாசம் கிடையாது.. சிறப்பு கட்டணம், தரிசனம் எதுவும் கிடையாது.  யாராயிருந்தாலும்  ஒரே வரிசையில்தான் நிற்கவேண்டும். குருத்வாராவுக்குள் எந்த விதமான பணம் வசூலிக்கும் கவுண்டரையும் நான் பார்க்கவில்லை. 

குருத்வாராவுக்கு அருகிலேயே இலவச உணவு மையம். கிட்டத்தட்ட வந்தவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டுத்தான் செல்கிறார்கள்.

எண்பதுகளில்  யுத்த பூமியாக இருந்த பஞ்சாப்.. தீவிரவாதிகளில் புகலிடமாக இருந்த பொற்கோவில், இன்று அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. 1984 ல் ஆபரேஷன் புளு ஸ்டார் என்ற பெயரில் இந்திய  ராணுவம்  உள்ளே  நுழைந்த பொற்கோவிலுக்கு இன்று எந்தவித பாதுகாப்பு பரிசோதனையும் இல்லாமல் மக்கள் உள்ளே நுழைய முடிகிறது. மாற்றங்கள்தான் ஒரு இனத்தின் வளர்ச்சியை நிர்ணயிக்கிறது என்பதற்கு பஞ்சாப் ஒரு சாட்சி. இந்த பாஞ்சால பூமியில் ஏற்பட்டுள்ள  மாற்றம் மகத்தானது. ஆனால் நாம்  அதற்க்கு கொடுத்த விலை? இந்திரா காந்தியின் உயிர் மற்றும்  பல ஆயிரக்கணக்கான  சீக்கியர்களின் உயிர்... பொற்கோவிலைப்பற்றி நினைக்கும்போது ஏனோ இதை நினைக்காமல் இருக்க முடியவில்லை.. அதுவும் இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் நாள் - இந்திரா காந்தியின் நினைவு நாள்.

இனி இந்தியா சுதந்திர வரலாற்றிலேயே ஒரு கருப்பு நாள். 90 வருடங்கள் கடந்தும் நெஞ்சை பதறவைக்கும் ஒரு நிகழ்வு - ஜாலியன் வாலாபாக்...

- பயணம் தொடரும்

Monday, October 25, 2010

காந்தி நேரு வாழ்ந்த இடங்கள் - ஒரு வடஇந்தியப் பயணம்

காந்தி ஸ்மிருதி..... காந்தி கடைசியாக வாழ்ந்த பிர்லா மாளிகை..

உள்ளே நுழைந்தவுடன் காந்தி வாழ்கையில் நடந்த சில சம்பவங்களை பொம்மை வடிவில் சித்தரிக்கும் ஒரு சிறு கண்காட்சி.. தென்ஆப்ரிக்க ரயில் பயணம், தண்டி போராட்டம், அந்நிய துணிகள் எரிப்பு, கஸ்தூரிபாய் மரணம், காந்தி சுடப்பட்டது, பின் இறுதி சடங்கு என்று பல நிகழ்வுகள் தத்ரூபமாக அமைக்கப்படிருந்தன...அங்கு வந்த அனைவரின் மனதையும் கவர்ந்தது.


பொம்மை வடிவில் காந்தி கண்காட்சி
 
காந்தியின் கடைசி பயணம்
ஜனவரி 30 , 1948 .. மாலை ஐந்து மணி.. காந்தி கடைசியாக  பிரத்தனைகாக வெளியே வந்த அறை கதவு இன்றும் அப்படியே இருக்கிறது (காந்தி படத்தில் முதல்  காட்சியே  இதுதான்) அந்த அறையிலிருந்து அவர் சுட்டு கொல்லப்பட்ட இடம் வரை அவர் காலடி தடங்கள் பதிக்கப்பட்டு உள்ளது.. அவர் சுடப்பட்டு வீழ்த்த இடத்தில ஒரு சிறு மண்டபம் அமைக்கபட்டிருகிறது... பத்து பேர் அடங்கிய ஒரு வெளிநாட்டு குழுவுக்கு இந்தியா பெண்மணி ஒருவர் காந்தியின் கடைசி நிமிடங்களைப் பற்றி விவரித்துக்கொண்டிருந்தார்... கூட்டத்துக்கு நடுவே  கோட்சே  எப்படி  வந்தார்,  சுட்டவுடன் காந்தியின் என்ன சொன்னார், பின் என்ன நடந்தது  என்பதையெல்லாம்  சொல்லி கொண்டிருக்கும்போது,  ஒருவர் மிகவும் அக்கறையாக 'கோட்சேக்கு என்ன ஆயிற்று' என்று விசாரித்தார்.  'கூட்டம் அவரை எதுவும் செய்யவில்லை.. அஹிம்சையின் உச்சம் அது.. பின்னர் நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கியது' என்ற பதிலை கேட்டவுடன் அவர் முகத்தில் திருப்தி...!

இதே இடத்தில காந்தியின் மல்டி-மீடியா மியூசியம் என்று ஒன்று இருக்கிறது.. அது அவ்வளவு சுவாரசியமாக இல்லை. காந்தியை மல்டி-மீடியா விஷுவல் விளைவுகளோடு பொருத்திப்பார்க்கும் முயற்சி அது. காந்தியின் எளிமைக்கு சற்று முரண்பட்டதாக இருந்தது.

முதலில் காந்தி ஸ்மிருதி செல்லவேண்டும் என்றவுடன் டாக்ஸி டிரைவர்  இந்திரா காந்தி மெமோரியல் சென்று விட்டார்.. பிறகு 'மகாத்மா காந்தி ஸ்மிருதி' என்றவுடன் பின் சரியான இடத்துக்கு அழைத்துச் சென்றார். தில்லியில் வெறும் காந்தி என்று சொன்னால் குழப்பம் வந்து விடுமோ?  

தீன் மூர்த்தி பவன் ..பிரதமராக நேரு பவனி வந்த இடம்..  தில்லி கனார்ட் பிளேசில் காந்தி காந்தி ஸ்மிருதிக்கும் தீன் மூர்த்தி பவனுக்கும் அதிக தூரம் இல்லை.

இதில் நேருவை பற்றி 'AtoZ' இருக்கிறது - நேருவின் வாழ்க்கை கண்முன் நிறுத்தும் புகைப்படங்கள், அவர் படித்த புத்தகங்கள், அவருடைய பேச்சு ஒலி நாட்கள், அவர் எழுதிய கடிதங்கள், அவர் உபயோகித பொருட்கள்.. கடைசியாக நேரு உயிர் பிரிந்த அறை...

சின்ன வயது புகைப்படங்களில் ஒரு இளவரசனின் கம்பீரத்தோடு நேரு மிளிர்கிறார் நேரு..ஒரு 'royal family 'யில் வளர்த்தவர் என்று கண்கூடாக தெரிகிறது. அவர் தன தந்தை மோதிலால் நேருவுக்கு எழுதிய கடிதங்களில் ஆங்கிலப் புலமை வெளிப்படுகிறது. தன தாய்க்கு மட்டும் ஹிந்தியில் கடிதம் எழுதிருக்கிறார். இளம் வயதில் இந்தியப் பாரம்பரியத்தோடு மேற்கத்திய பாணியில் அவர் வாழ்கை முறை அமைந்திருகிறது.

இந்தியா சுதந்திரம் கிடைத்தபோது மற்றும் காந்தி கொலையுண்டபோது அவர் ஆற்றிய உரை ஒலி நாடாக்கள் கேட்பதற்கு சிலிர்ப்பூடுகின்றன..

தில்லி செல்லப்போகிறேன் என்றதும் 'அங்கு காமன் வெல்த் கேம்ஸ் நடக்கிறது.. எக்கச்சக்க போக்குவரத்து நெரிசல் இருக்கும்.. பாதி இடங்களுக்கு செல்லவே முடியாது...' என்று ஆளாளுக்கு பயமுறுத்தினார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லை.. போக்குவரத்து மிக சீராக இருந்தது.. முக்கிய சாலைகளில் CWG க்கு தனி பாதைகள் உண்டு. சைக்ளிங், மராத்தான் போட்டிகள் நடக்கும் தேதியில் மட்டும் சில பிராதன சாலைகள் மூடப்பட்டன. எல்லா மெட்ரோ நிலையத்திலும் உதவி மையம், அங்கங்கே அறிவுப்புகள் என்று பிரச்னை இல்லாமல் இருந்தது. நாங்கள் சென்ற பல இடங்களில் CWG விளையாட்டு வீரர்களும் வந்திருந்தார்கள். (நிறைய பேர் தென்பட்டது அக்ஷர்தாமில்). தில்லியில் நான் மெட்ரோ, ஆட்டோ, டாக்ஸி, சைக்கிள் ரிக்க்ஷா என்று எல்லாவிதமான போக்குவரத்திலும் சென்றேன். 

எல்லா இடங்களிலும் பொதுவான ஒரு விஷயம் - கோவிலாகட்டும், மசூதியாகட்டும், கோட்டைகளாகட்டும், காந்தியாகட்டும், நேருவாகட்டும் - பாதுகாப்பு எக்கச்சக்கம்.. பல பரிசோதைகளை கடந்துதான் உள்ளே செல்லவே முடிகிறது..

இனி சீக்கியர்களின் புனிதத்தலமான அமிர்தசரஸ் பொற்கோவில்...

- பயணம் தொடரும்...

 

Friday, October 22, 2010

தில்லி உலா - ஒரு வடஇந்தியப் பயணம்

காந்தி சமாதி
தில்லியில் அடுத்தநாள் காலையில் காந்தி சமாதியுடன் துவங்கினோம்.. ஒருசில வெளிநாட்டவர் தவிர யாரும் இல்லை.. அவர்களும் சமாதி அருகே வரவில்லை.. பல வருடங்களுக்கு முன்பு ஒரு முறை காந்தி சமாதி வந்திருக்கிறேன்.. விடுமுறை நாட்களில் காலைவேளையில் பலர் சமாதியை சுற்றி உள்ள புல்வெளியில் அமர்ந்திருப்பார்கள். இந்தமுறை நானும் காந்தியும் மட்டும் தனியே.. காந்தியை போலவே ஆர்ப்பாட்டம் இல்லாமல் எளிமையான இருக்கிறது அந்த இடம்... ஹே ராம் என்ற எழுத்துகளுடன்..

செங்கோட்டை
பிறகு செங்கோட்டை (Red fort)... 17ம்  நூற்றாண்டில் ஷாஜகான் கட்டிய கோட்டை.. பின்னர் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்  இருந்து  விடுதலைக்கு பிறகு இந்தியா இராணுவத்தின் கட்டுபாட்டில் இருந்தது. 2003 ல் தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.. இன்று யுனஸ்கோவால்  அங்கீகரிக்கப்பட்ட 'உலகப் பாரம்பரிய' இடங்களுள் ஒன்று.  

இதற்குள் இந்தியா விடுதலை இயக்கத்தின் கண்காட்சி வைத்திருகிறார்கள். சிப்பாய் கலகத்திலிருந்து 1947 வரை நடந்த பல நிகழ்வுகள்  புகைப்படங்களாகவும் காட்சிகளாகவும் வைக்கப்படிருந்தன. அதில் சுபாஷ் சந்திரபோசின் அறிய புகைப்படங்கள் நிறைய இருந்தன... அவர் எப்படி காங்கிரசில் இணைந்தார், பின் இந்தியா தேசிய ராணுவம்  அமைத்தது, வீட்டுக்காவலில் இருந்தவர் எப்படி தப்பித்தார், அவரின் மர்ம மரணம் போன்ற விவரங்களுடன்... அவர் தப்பியது பற்றிய விவரங்களும் அங்கே உண்டு - சுபாஷ் அறையில் எப்போதும் விளக்கு எரிந்து கொண்டிருக்குமாம்.. பல நாட்கள் சவரம் செயாமல் தாடி வளர்த்துகொண்டு உருவத்தை மாற்றி பிரிட்டிஷ் போலீசின் கண்களில் மண்ணை தூவிவிட்டு தப்பித்திருக்கிறார். வெளியே தன்னை ஒரு முஸ்லிம் இன்சூரன்ஸ் ஏஜென்ட் என்று அறிமுகம் செய்துகொண்டு இந்தியா எல்லையை கடந்திருக்கிறார். பிறகு கைபர் கணவாய் வழியாக வளைகுடா சென்று அங்கிருந்து மாஸ்கோ சென்று பின் பெர்லினை அடைந்திருக்கிறார்.. ஹிட்லைரை சந்திபதாற்காக..வெளியே வரும்போது 'சுபாஷ் எப்பேர்பட்ட போராளி..' என்று  நினைக்கத் தோன்றுகிறது..

இந்தியா கேட்
குடியரசு தினத்தன்று நாம் டி.வி யில் பார்க்கும் இந்தியா கேட்-ராஷ்டபதி பவன் சாலை நேரில் ரொம்பவே அழகு. அதை சுற்றி உள்ள புல்வெளி, தடாகங்கள் கூடுதல் அழகு. முப்படைகளின் கொடிகள் பறக்க இந்தியா கேட்டில் அமைந்துள்ள 'அமர் ஜவான்' ஜோதிக்கு ஒரு ராயல் சல்யுட்  அடித்துவிட்டு அந்த இடந்தை விட்டு நகர்ந்தோம்.

ஹுமாயுன் சமாதி
தில்லிக்கு சுற்றுலா செல்பவர்கள் நிறையபேர் ஏனோ ஹுமாயுன் சமாதியை பார்க்க தவறிவிடுவார்கள். (பிரகதி மைதான் மெட்ரோவில் இறங்கி 10 நிமிடத்தில் ஆட்டோவில் செல்லாலாம்). இது 'வாவ்' என்று வியக்கத்தக்க இடம்.. முகலாய  கட்டிடகலையின்  சிறப்பை  தெரிந்துகொள்ள  இந்த இடத்திற்கு செல்லலாம்.  பிரமாதமான வடிவமைப்பு.. முதலில் தோன்றிய ஒரு கட்டம்தான் ஹுமாயுன் சமாதி என்று அருகே சென்று பார்த்தால் அது வெறும் முகர்ப்புதான்.. அங்கிருந்து அடுத்த கட்டிடத்துக்கு கொஞ்ச தூரம் நடக்க வேண்டும். இதை கட்ட அந்த காலத்திலேயே 15 லட்ச ருபாய் ஆனதாம் (1571 ). இதுவும் யுனஸ்கோவின் உலக பாரம்பரிய இடம்.

குதுப்பினார்
12 ம்நூற்றாண்டின் அதிசயம்.. முகமது கோரியை போரில் வென்றதற்காக குத்புதீன் ஐபக் கட்டியது..  (சின்ன வயதில்  பாடப்புத்தகத்தில் படித்ததையெல்லாம் கஷ்டப்பட்டு  நினைவுக்கு  கொண்டுவர வேண்டியிருக்கிறது). மிக குறுகிய விட்டதிலிருந்து ஆரம்பித்து 237 அடி உயரத்திற்கு கட்டிடம் எழுப்பியிருக்கிறார்கள்.


 


இனி காந்தி நேரு வாழ்ந்த இடங்கள்...

....... பயணம் தொடரும்....

 

Tuesday, October 19, 2010

வடஇந்தியப் பயணம் - அக்க்ஷர்தாம், தில்லி

பல வருடங்களாக முயற்சித்து கடைசியில் இந்த வருடம் அக்டோபர் மாதம் வடஇந்திய சுற்றுலா செல்வதென்று தீர்மானித்தேன்.. தில்லி, அமிர்தசரஸ், ரிஷிகேஷ், ஆக்ரா சென்றுவரலாம் என்று திட்டம்.. ஜூலை மாதத்திலிருந்து திட்டம் தீட்டி இனிதே முடிந்தது என் பயணம். ஒவ்வொரு இடமும் ஒவ்வொருவிதமான அனுபவம். இந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு இடுகை போதாது.. விவரமாக விஸ்தாரமாக பல வாரங்களுக்கு உங்களுடன் பகிர்துகொள்ள பல செய்திகள் உள்ளன.

முதலில் தில்லி...

ஆரம்பமே கொஞ்சம் பதற்றம்தான்.. 7.20  மணி விமானத்துக்கு 6.20௦க்கு சென்னை விமானநிலையத்தில் நுழைந்தபோது ஸ்பைஸ் ஜெட் அதிகாரிகள் 'counter closed ' என்றார்கள். அப்புறம் கொஞ்சம் மிஞ்சி பிறகு கெஞ்சி போர்டிங் பாஸ் வாங்கினோம். பிறகுதான் தெரிந்தது அந்த விமானம் 7 மணிக்காம்.. மூன்று மாதத்துக்கு முன்னால் பதிவு செய்த டிக்கெட்டில் 7.20 என்று இருந்தது.

புதிதாக திறக்கப்பட்ட தில்லி விமான நிலையம் சர்வதேச தரத்துக்கு இருக்கிறது. உலகில் சிறந்த விமானநிலையங்களில் ஒன்று என்று தாரளமாக சொல்லலாம்.

தில்லியில் மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆசை. கரோல் பாக் ரயில் நிலையத்திலிருந்து அக்ஷர்தாம் கோவிலுக்கு (16 ருபாய்) மெட்ரோவில் சென்றபோது ரயில் லண்டன்-சிங்கப்பூர் மெட்ரோக்களை நினைவுறுத்தினாலும் கூட்டம் மும்பை  ரயில்களை நினைவுறுத்தியது.

அக்க்ஷர்தாம்

இந்தியாவின் பிரமாண்ட ஐந்து நட்சத்திர கோவில். இதை கோவில் என்பதைவிட இந்தியாவில் ஆன்மீக கலாச்சார பண்பாட்டு மையம் என்றே அழைக்கிறார்கள். ஏனென்றால் இங்கு கோவிலுக்கு உண்டான ஆகம விதிகள் எதுவும் கிடையாது. 18ம் நூற்றாண்டில் குஜராத்தில் வாழ்ந்த சுவாமிநாராயண பகவான் பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோவிலுக்கு அவர்தான் முக்கிய மூலவர்.

100 ஏக்கர் பரபளவில் அமைந்திருக்கும் இந்த கோவில் முழுவதும் பழுப்பு கற்களாலும் இத்தாலிய பளிங்கு கற்களாலும் மட்டுமே கட்டபடிருகிறது. உருக்கு, கான்க்ரீட் எங்கும் உபயோகப்படுத்தவில்லை. இவ்வளவு கலைநயத்துடனும் சிற்பங்களுடனும் ஒரு கோவிலை இதற்குமுன் கண்டதில்லை.. ஒவ்வொரு தூணிலும் உள்ள நுணுக்கமான சிற்பங்களிலிருந்து நம் கண்கொள்ளாத அளவிற்கு பிரம்மாண்ட சிற்பங்கள் கொண்ட கலைநயம்... இழைத்து இழைத்து பார்த்து பார்த்து செய்யப்பட சிற்ப வேலைகள்.. மொத்தம் 234 அலங்கரிக்கப்பட்ட தூண்கள், 9 மாடங்கள், தத்ரூபமான பல கோணங்களில் உள்ள யானை சிலைகள் - இவையெல்லாம் எண்ணிக்கையில் வரும் சில விஷயங்கள்.. எண்ணமுடியாதவை எத்தனையோ..

இவையெல்லாம் ரசித்துவிட்டு பகவான் சுவாமிநாராயணன் சிலை இருக்கும் மண்டபத்துக்குள் நுழைந்தால்.. அப்பப்பா.. மயக்கமே வந்துவிடும் போலிருந்தது.. என்ன ஒரு ஜொலிஜொலிப்பு.. என்ன ஒரு பளபளப்பு... பெயர் சொல்லமுடியாத பல விலையுயர்ந்த கற்களாலும் ஆபரணங்களாலும் உலோகங்கழலும் மினுமினுகிறது அந்த மண்டபம். நடுவில் தங்க முலாம் பூசப்பட்ட ௧௧ அடி பகவான் சுவாமிநாராயணன் சிலை.. சுற்றி அவரின் சீடர்கள் சிலை.. அந்த இடம் பிரமிக்க வைக்கிறது.. வாய் பிளக்க வைக்கிறது.. ஆனால் தெய்வீகம்? அது மட்டும் ஏனோ வரவில்லை..!

கோவிலுக்கு உள்ளே கேமிரா, செல்போன் அனுமதி இல்லை... அதேபோல் கொஞ்சம்கூட தூசு குப்பைகள் இல்லை..ஒரு நட்சத்திர ஹோட்டல் போல் பராமரிக்கிறார்கள்.

அந்தி நேரத்தில் காட்டப்படும் இசை நீரூற்று பற்றி கண்டிப்பாக குறிப்பிடவேண்டும்.. இசைக்கு ஏற்றால் போல் நடனமாடும் வண்ண நீரூற்றுகள்... நீரூற்றின் வேகத்துக்கு முழங்கும் இசை.. ஆஹா..என்ன ஒரு கனகச்சிதம்..அற்புதமான கோர்வை..அதிலும் கடைசியாக சிவனின் ருத்ரதாண்டவத்துக்கு அதிரும் இசையும் நீரின் வேகமும் அதன் வண்ணங்களும் நம்மை மிரள வைக்கின்றன.

உள்ளே நல்ல உணவகம் உண்டு.. படகு சவாரி உண்டு..இதை ஒரு கோவில், பக்தி என்றெல்லாம் குழப்பிக்கொள்ளாமல் ஒரு அருங்காட்சியகம் போல ஜாலியாக போய் பார்த்துவிட்டு வரலாம். இருந்தாலும் என்னை குழப்பிய ஒரு கேள்வி - இதை கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் பணம் எங்கிருந்து வருகிறது?

இனி தில்லியின் மற்ற இடங்கள்...

- பயணம் தொடர்கிறது.....