Sunday, March 22, 2009

நாளைய விடியல் - 2

நாளைய விடியல் நிரந்தரம் ஆகும்..!
நம்பிக்கை உனக்குள் நங்கூரம் போடும்..!
வாழ்க்கை என்பது உன் வசமாகும்..!
வாழ்ந்துப்பார்த்தால் உண்மை புரியும்..!

தினம் தினம் விழித்தெழு எதிர்பார்போடு...!
நித்தம் பணிகளைப் பட்டியல் போடு...!
அன்றயபணிகளை அன்றே முடித்திடு - பின்
இல்லை உறக்கம் ஏமாற்றத்தோடு...!

மனித சரித்திரத்தைப் புரட்டிப்பார் - உன்
முன்னோரை கொஞ்சம் நினைத்துப்பார் - அவர்
பதித்த தடங்களை எண்ணிப்பார் - பின்
நீசெல்லும் பாதை விளங்கும்பார்...!

Sunday, March 8, 2009

இலவச காய்ச்சல்


கடந்த தமிழக தேர்தலின் கதாநாயகன் 'இலவச அறிவிப்புகள்'. தி.மு.க வின் கலர் டெலிவிஷன், இலவச வீடுமனை பட்டா அறிவிப்புகள் யாரும் எதிர்ப்பார்க்காதது...! கொஞ்சம் சுதாரித்துக்கொண்டஅ.தி.மு.க 'இலவச கம்யூட்டர்'களை அறிவித்தது. டி.வி., கம்யூட்டர், டேப்-ரெகார்டர், பிரிட்ஜ் என்று விவேக் அண்டு கோ கணக்காக எல்லா வீட்டு உபயோகப் பொருட்களும் இலவசமாக அறிவிக்கப்பட்டுவிட, என்ன செய்வது என்று திகைத்த விஜயகாந்த், கோவில்களில் இலவச பகவத்கீதை, மசூதிகளில் இலவச குரான் என்று ஏதேதோ சொல்லிப்பார்த்தார்.. கடைசியில் கலர் டி.வி மட்டுமே வென்றது..

இப்போது
இந்த இலவச காய்ச்சல் ஆந்திராவையும் தொற்றிக்கொண்டு விட்டது. ஏக்கர் கணக்கில் நிலம், இலவச மின்சாரம், பெண் குழந்தை பிறந்தால் ஒரு லட்சம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார் புதிதாக கட்சி ஆரம்பித்த சிரஞ்சீவி. ஐ.டி. துறையில் ஆந்திராவை தலை நிமிரச்செய்த சந்திரபாபு நாயுடுவும் இதற்க்கு விதிவிலக்கல்ல... ஏழைகளுக்கு ரொக்கப் பணம் அறிவித்திருக்கிறார். இவர் ஏழைகளை மூன்று விதமாக பிரித்திருக்கிறார். பரம ஏழைகளுக்கு மாதம் 2000 ரூபாயும், 'சுமாரான' ஏழைகளுக்கு 1500 ரூபாயும், கொஞ்சம் 'பணக்கார' ஏழைகளுக்கு 1000 ரூபாயும் கொடுக்கப்போகிறாராம். அதுவும் ஏ.டி.எம் மூலமாக பணத்தை எடுத்துக்கொள்ளலாமாம் (நாயுடு ஹை-டெக் முதல்வராயிற்றே..) இதைத்தவிர இலவச கலர் டி.வி., இலவச மின்சாரம் என்று நீண்டுகொண்டே போகிறது பட்டியல். முதல்வர் ராஜசேகர ரெட்டியின் அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை.

கடைதேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போலத்தான் இருக்கிறது இந்த இலவச அறிவிப்புகள். எந்த கட்சியும் அரசாங்க வருமானத்தை எப்படி அதிகரிப்போம் என்று தேர்தல் வாக்குறுதி தருவதில்லை... செலவழிப்பதை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருகிறது.. ஏதாவது ஒரு கட்சி 'நாங்கள் இலவசமாக எதையும் தரமாட்டோம்.. அவற்றை மக்கள் தாங்களே வாங்கும் அளவுக்கு அவர்கள் தரத்தை உயற்றுவோம்' என்று சொல்கிறதா?

தேர்தல் பிரசாரத்திற்கு ஆயிரம் விதிமுறைகளை வைத்திருக்கும் தேர்தல் ஆணையமோ அல்லது நம் அரசியல் சட்டமோ இதுபோல இலவச அறிவிப்புகளை கண்டுகொள்வதில்லை. ஓட்டுப்போடுவதற்கு பணம் கொடுப்பதற்கும் எனக்கு ஒட்டுப்போட்டால் பணம் கொடுப்பேன் என்று வாக்குறுதி அளிப்பதற்கும் என்ன வித்தியாசம்? நாளை ஏதாவது ஒரு கட்சி சென்னை பெசன்ட் நகரில் 3 பெட்ரூம் அபார்ட்மெண்ட் இலவசமாக தருகிறேன் என்று சொன்னால், குறைந்தபட்சம் நாம் வாய்விட்டு சிரிக்கலாமே தவிர அதைத் தடுப்பதற்கு நம் நாட்டில் எந்த சட்டமும் கிடையாது.

கல்வி, மருத்துவம், (சில சமயங்களில்) விவசாயம் போன்ற துறைகளைதவிர வேறு எதையும் இலவசமாககொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற இலவசங்கள் மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றுவதைத்தவிர வேறு எந்த சாதனையும் செய்யாது. மக்களை தன்மானத்தோடு வாழவைக்கவேண்டிய அரசு, ஏழைகளுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவேண்டிய அரசு, அவர்கள் வாழ்கைத்தரத்தை மேம்படுத்தவேண்டிய அரசு, இப்படி ஒரு சமூகத்தையே அரசாங்கத்திடம் கையேந்த வைப்பது கொடுமையிலும் கொடுமை. அதைவிடக் கொடுமை இது ஏதோ சாதனை போல விளம்பரபடுதிக்கொள்வது..!

ஆனால் தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் பரவியுள்ள இந்த இலவச காய்ச்சல் ஆந்திரா மட்டுமல்லமல் எல்லா மாநிலங்களுக்கும் பரவக்கூடிய வாய்ப்புகள்தான் அதிகம் உள்ளது.

Wednesday, March 4, 2009

அமெரிக்கா...!


அன்று இந்தியக் கழுதைகளுக்கும்
அமெரிக்காவிலிருந்து அழைப்பு..!
'ஜாவா' போஸ்டர் உண்டதன் விளைவு...!

இன்று அமெரிக்கர்களுக்கே வேலை விடுப்பு..!
வர்த்தகம் மந்தமடைந்ததால் திருமபு...!

Monday, February 23, 2009

ஆஸ்கார் வென்ற தமிழன்


கடைசியில்
அந்த சாதனையை நிகழ்த்திவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.

சின்ன சின்ன ஆசையாய் தன் இசை பயணத்தை துவங்கியவர், திரையுலகத்தின் உச்சகட்ட ஆசையான ஆஸ்கார் விருதை வென்றுவிட்டார். இவர் இசைப்புயல் மட்டுமல்ல... ஆடம்பரமும் கவர்ச்சியும் மிளிரும் ஆஸ்கார் விழாவில் ஆர்பாட்டமில்லாமல் விருது வாங்கிய அமைதிப்புயல்... 'எல்லாப்புகழும் இறைவனுக்கே' என்று அடக்கத்தோடு சொன்ன ஆன்மீகப்புயல்.. ! 'அடக்கம் அமரருள் உய்க்கும்' என்ற வள்ளுவர் வாக்குப்படி புகழ் தன் தலை தொடாதபடி பார்த்துக்கொண்டதனால்தான் ரஹ்மானால் இந்த உச்சத்தை அடைய முடிந்தது.

பல அரசியல் சண்டைகளால் தலை குனிந்து நிற்கும் தமிழர்களை சில அங்குலங்களாவது தலைநிமிரச்செய்த ரஹ்மானுக்கு ஒவ்வொரு தமிழனும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறான்.

ஆஸ்கார் அரங்கில் தமிழில் நன்றி சொன்னதற்காக ரஹ்மானுக்கு இன்னொரு சிறப்புப் பூங்கொத்து...!

Sunday, February 22, 2009

சென்னை முதலைப் பண்ணை



Wednesday, February 11, 2009

எது அதிசயம்?


அண்மையில் நான் படித்த புத்தகம் சத்குரு ஜக்கி வாசுதேவின் 'கேளுங்கள்... கொடுக்கப்படும்'... சத்குருவின் கேள்வி-பதில் தொகுப்பு.. அதில் ஒரு கேள்வி-பதில்.. தலையில் பொளேர் என்று அடித்தாற்போல இருந்தது .

கேள்வி: திருவண்ணாமலையில் ஒரு யோகி ஆசனத்தில் அண்ணாந்து பார்த்து அமர்ந்தபடி அப்படியே காற்றில் எழுவதை இணையதளத்தில் பார்த்தேன். என் கண்களையே நம்பமுடியவில்லை.. இது சாத்தியமா?

பதில்
: சாத்தியம்தான். அனால் உண்மையான் யோகிகள் இந்த சர்க்கஸ் வேலைகள் செய்துகாட்டிக்கொண்டு இருக்க மாட்டார்கள். வாழ்க்கை என்பதே மிக வியக்கத்தக்க அதிசயம். ஒரே மண்ணிலிருந்து ஒவ்வொரு விதையும் வெவ்வேறு மரமாக வெளிவருவது அதிசயம். உண்பதை உடலின் பகுதியாக மாற்றும் உயிரின் அமைப்பு அதிசயம். சேற்றில் செந்தாமரை பூப்பது அதிசயம்.. பூமி சுழல்வது அதிசயம்.

இத்தனை அதிசயங்களை செய்துகாட்டும் இயற்கை ஆர்ப்பாட்டமிலாமல் இருக்கிறது. இந்தப் பேரதிசயங்களின் ஆழத்தை உணரும் ஆர்வத்தை விட்டுவிட்டு, நீங்கள் என்ன அதிசயங்கள் செய்துகாட்ட விரும்புகிறீர்கள்?

இதுபோல ஏதோ கொஞ்சம் திறமையை வைத்துக்கொண்டு சித்து வேலையை காண்பிக்கும் யோகிகள் இயற்கையின் முன்னால் தோற்றுபோவார்கள் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். கையிலிருந்து விபூதி வரவழிப்பது, வாயிலிருந்து லிங்கம் எடுப்பது, அந்தரத்தில் மிதப்பதுபோல் தோற்றம் அளிப்பது.. இவையெல்லாம் என்ன பெரிய பிரமாதம்? ஒரு பூ மலர்வதை விடவும், பல மைல்கள் பறந்து வேடந்தாங்கலை அடையும் பறவைகளைவிடவும், மயிகளின் தோகை அழகை விடாவா இவையெல்லாம் அதிசயம்? நாம் ஏன் இயற்கையை மறந்து இதுபோல செயற்கை அதிசயங்களை ரசித்துக்கொண்டிருகிறோம்?

இயற்கையை விட்டுத்தள்ளுங்கள்.. மனிதன் தன் திறமையால் பல அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறான்.. கட்டிடக்கலை வளர்ச்சியடையாத காலத்தில் வெறும் பாறைகளை வைத்து கட்டப்பட்ட எதிப்திய பிரமிடுகள், காற்றின் ஒலியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இசை, ஒலியிலிருந்து முதிர்ந்த மொழி வடிவம்.. இவையெல்லாம் மனிதன் செய்துகாட்டிய அதிசயங்கள்.. இவற்றோடு ஆன்மிகம் சேரும்போதுதான் அது பிரச்சினையாகிறது.. கொல்கத்தா விக்டோரியா அரண்மனையை சில நிமிடங்கள் காணாமல்போகச்செய்த பி.சி.சர்க்காரை 'மாஜிக் நிபுணர்' என்று கூறும் நாம், சித்து விளையாட்டில் ஈடுபடுவோரை கடவுளோடு ஒப்பிடுகிறோம்..

என்ன செய்வது... கடவுள்தன்மை கொண்ட மனிதர்களை நம்புவதற்குக்கூட நமக்கு அதிசயங்கள் தேவைப்படுகிறது. நெல்லிக்கனியை தங்கமாகியவர் என்றும், உயிர்த்தெழுந்து வந்தவர் என்றும் சொன்னால்தானே நாம் ஆதிசங்கரரையும் ஏசுநாதரையும் ஏற்றுக்கொள்வோம்?

Sunday, February 1, 2009

தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின்

இத்தனை நாள்வரை நம்மையெல்லாம் சிரிக்க வைத்துக்கொண்டிருந்த நகைச்சுவை திலகம் நாகேஷ் இன்று நம்மை கண்கலங்க வைத்துவிட்டார்..! நாகேஷ் நினைவில் மூழ்கிய நான், அவரின் சில படங்களை அசைபோட்டேன்.

நீர்க்குமிழி, எதிர்நீச்சல் போன்ற படங்களில் சோகத்தை உள்ளடக்கிக்கொண்டு வெளியே கலகலப்பாக இருக்கும் கதாபாத்திரம் நாகேஷுக்கு..! கிட்டத்தட்ட இதே போன்ற பாத்திரத்தில் நடித்த 'மார்டன் டைம்ஸ்' படத்தின் சார்லி சாப்ளினுக்கு இணையாக நடித்திருப்பார். இரண்டும் கே.பாலச்சந்தரின் படங்கள். கே.பி இயக்கத்தில் அவர் மின்னிய மற்ற படங்களின் ஒன்று 'அனுபவி ராஜா அனுபவி'.. இதில் இரட்டை வேடம். இரண்டுமே மிகைபடுத்தாத இயற்கையான நடிப்பு.. (மறக்க முடியுமா 'முத்துக்குளிக்க வாரீகளா' பாடலை..!) இன்னொரு படம் 'பாமா விஜயம்'. பாலையா, மேஜர், முத்துராமனோடு கலக்கிய காமெடி..

நாகேஷின் மைல்கல் படம் கே.பி வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய 'சர்வர் சுந்தரம்'.. கதாநாயகனாகவும் காமெடியனாகவும் பின்னியெடுத்திருப்பார்..

நாகேஷின் 'கிளாசிக் காமெடி' திருவிளையாடல்தான்.. இன்றும் தமிழகத்தின் பட்டிதொடியிலும் கேட்கப்படும் ஒலிச்சித்திரம். வேறொரு புலவரின் பாடலை அரசவையில் பாடி பரிசு பெரும் அவசரத்தையும், மாட்டிக்கொண்டவுடன் உண்டான பதட்டத்தையும், தன் இயலாமையை நினைத்து தனியாக புலம்புவதையும் மிக அற்புதமாக சித்தரித்திருப்பார்..!

இயக்குனர் ஸ்ரீதரும் நாகேஷை அமர்களமாக கையாண்டிருக்கிறார்.. காதலிக்க நேரமில்லை படத்தில் ஒரு சினமா இயக்குனராகவும் (ஓஹோ ப்ரொடக்க்ஷன்ஸ்) ஊட்டி வரை உறவு படத்தில் டாக்டராகவும் நடித்திருப்பார்.

தில்லானா மோகனாம்பாள் படத்தில் நகைச்சுவை வில்லன் வேஷம் (இந்த வைத்தியை தெரியாதவங்க யாரவது இருக்க முடியுமோ..) 'காமெடி டிராக்' என்று தனியாக இல்லாமல் கதையோடு இழைந்திருக்கும் பாத்திரம். எல்லோரையும் ஏகவசனத்தில் அழைத்துக்கொண்டு சர்வசாதரணமாக நடித்திருப்பார் நாகேஷ்.

சிவாஜி படங்களில் நாகேஷ் நகைச்சுவை பிரமாதமாக இருக்கும். சிவாஜிக்கு இணையாக இருக்கும் (உ.ம் கலாட்டா கல்யாணம்). மாற்ற நடிகர்களோடு அவர் கலக்கிய முக்கியமான படங்கள் - ஜெய்சங்கரோடு பட்டினத்தில் பூதம், ஜெயலலிதாவோடு மேஜர் சந்திரகாந்த், ரவிச்சந்திரனோடு நான் (கொமட்ல குத்துவேன்). அதேசமயம் எம்.ஜி.ஆர் படங்களின் அவர் அவ்வளவாக சோபித்ததில்லை. மேலும் நாகேஷ் இயக்குனரின் நடிகர்.. கே.பி, ஸ்ரீதர் ஏ.பி.என் போன்றவர்கள்தான் நாகேஷின் நடிப்பு உச்சத்தை வெளிக்கொணர்த்திருக்கிறார்கள். நாகேஷை வீணடித்த படங்களும் உண்டு (தளபதி, தசாவதாரம்)

நாகேஷின் மாறுபட்ட நடிப்பை 'நம்மவர்' படத்தில் பார்க்கலாம். தன் பெண் தற்கொலை செய்தியை கேட்டு ஓடிவந்தவர் ஒரு சொட்டு கண்ணீர்கூட விடாமல் வெறும் வசனம் மட்டும் பேசி மற்றவர்களை கலங்கடித்துவிடுவார்..
இன்று தமிழ் திரைப்படங்களின் காமெடி மலிந்துவிட்டது. 'non-ethical' விஷயங்கள் மட்டுமே காமெடியாக கருதப்டுகிறது.. பெண்களை 'ஈவ் டீசிங்' செய்வது, தண்ணி அடித்து கும்மாளம் போடுவது , பத்துபேர் சேர்ந்து ஒருவரை அடிப்பது, காலால் எட்டி உதைப்பது, இரட்டை அர்த்த வசனங்கள்.. இவைகள்தான் இந்தக்காலத்து நகைச்சுவை காட்சிகள்.. ஒரு சிலபடங்களில் விபச்சாரமும் நகைச்சுவையாக காண்பிக்கப்பட்டிருக்கிறது. காமெடி என்ற பெயரில் இதுபோன்ற வக்கிர விஷயங்கள் நம் குழந்தைகளின் மூளையில் விஷமாக ஏறிக்கொண்டிருப்பதை நாம் தவிர்க்க முடியாது.

நாகேஷின் எந்த ஒரு படத்திலும் இந்தமாதிரி அசிங்கங்கள் இருந்ததில்லை. சார்லி சாப்ளின் படங்களைப்போன்று இன்றைக்கும் குடும்பத்தோடு ரசிக்ககூடியதுதான் நாகேஷின் நகைச்சுவை.