Sunday, March 8, 2009

இலவச காய்ச்சல்


கடந்த தமிழக தேர்தலின் கதாநாயகன் 'இலவச அறிவிப்புகள்'. தி.மு.க வின் கலர் டெலிவிஷன், இலவச வீடுமனை பட்டா அறிவிப்புகள் யாரும் எதிர்ப்பார்க்காதது...! கொஞ்சம் சுதாரித்துக்கொண்டஅ.தி.மு.க 'இலவச கம்யூட்டர்'களை அறிவித்தது. டி.வி., கம்யூட்டர், டேப்-ரெகார்டர், பிரிட்ஜ் என்று விவேக் அண்டு கோ கணக்காக எல்லா வீட்டு உபயோகப் பொருட்களும் இலவசமாக அறிவிக்கப்பட்டுவிட, என்ன செய்வது என்று திகைத்த விஜயகாந்த், கோவில்களில் இலவச பகவத்கீதை, மசூதிகளில் இலவச குரான் என்று ஏதேதோ சொல்லிப்பார்த்தார்.. கடைசியில் கலர் டி.வி மட்டுமே வென்றது..

இப்போது
இந்த இலவச காய்ச்சல் ஆந்திராவையும் தொற்றிக்கொண்டு விட்டது. ஏக்கர் கணக்கில் நிலம், இலவச மின்சாரம், பெண் குழந்தை பிறந்தால் ஒரு லட்சம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார் புதிதாக கட்சி ஆரம்பித்த சிரஞ்சீவி. ஐ.டி. துறையில் ஆந்திராவை தலை நிமிரச்செய்த சந்திரபாபு நாயுடுவும் இதற்க்கு விதிவிலக்கல்ல... ஏழைகளுக்கு ரொக்கப் பணம் அறிவித்திருக்கிறார். இவர் ஏழைகளை மூன்று விதமாக பிரித்திருக்கிறார். பரம ஏழைகளுக்கு மாதம் 2000 ரூபாயும், 'சுமாரான' ஏழைகளுக்கு 1500 ரூபாயும், கொஞ்சம் 'பணக்கார' ஏழைகளுக்கு 1000 ரூபாயும் கொடுக்கப்போகிறாராம். அதுவும் ஏ.டி.எம் மூலமாக பணத்தை எடுத்துக்கொள்ளலாமாம் (நாயுடு ஹை-டெக் முதல்வராயிற்றே..) இதைத்தவிர இலவச கலர் டி.வி., இலவச மின்சாரம் என்று நீண்டுகொண்டே போகிறது பட்டியல். முதல்வர் ராஜசேகர ரெட்டியின் அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை.

கடைதேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போலத்தான் இருக்கிறது இந்த இலவச அறிவிப்புகள். எந்த கட்சியும் அரசாங்க வருமானத்தை எப்படி அதிகரிப்போம் என்று தேர்தல் வாக்குறுதி தருவதில்லை... செலவழிப்பதை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருகிறது.. ஏதாவது ஒரு கட்சி 'நாங்கள் இலவசமாக எதையும் தரமாட்டோம்.. அவற்றை மக்கள் தாங்களே வாங்கும் அளவுக்கு அவர்கள் தரத்தை உயற்றுவோம்' என்று சொல்கிறதா?

தேர்தல் பிரசாரத்திற்கு ஆயிரம் விதிமுறைகளை வைத்திருக்கும் தேர்தல் ஆணையமோ அல்லது நம் அரசியல் சட்டமோ இதுபோல இலவச அறிவிப்புகளை கண்டுகொள்வதில்லை. ஓட்டுப்போடுவதற்கு பணம் கொடுப்பதற்கும் எனக்கு ஒட்டுப்போட்டால் பணம் கொடுப்பேன் என்று வாக்குறுதி அளிப்பதற்கும் என்ன வித்தியாசம்? நாளை ஏதாவது ஒரு கட்சி சென்னை பெசன்ட் நகரில் 3 பெட்ரூம் அபார்ட்மெண்ட் இலவசமாக தருகிறேன் என்று சொன்னால், குறைந்தபட்சம் நாம் வாய்விட்டு சிரிக்கலாமே தவிர அதைத் தடுப்பதற்கு நம் நாட்டில் எந்த சட்டமும் கிடையாது.

கல்வி, மருத்துவம், (சில சமயங்களில்) விவசாயம் போன்ற துறைகளைதவிர வேறு எதையும் இலவசமாககொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற இலவசங்கள் மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றுவதைத்தவிர வேறு எந்த சாதனையும் செய்யாது. மக்களை தன்மானத்தோடு வாழவைக்கவேண்டிய அரசு, ஏழைகளுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவேண்டிய அரசு, அவர்கள் வாழ்கைத்தரத்தை மேம்படுத்தவேண்டிய அரசு, இப்படி ஒரு சமூகத்தையே அரசாங்கத்திடம் கையேந்த வைப்பது கொடுமையிலும் கொடுமை. அதைவிடக் கொடுமை இது ஏதோ சாதனை போல விளம்பரபடுதிக்கொள்வது..!

ஆனால் தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் பரவியுள்ள இந்த இலவச காய்ச்சல் ஆந்திரா மட்டுமல்லமல் எல்லா மாநிலங்களுக்கும் பரவக்கூடிய வாய்ப்புகள்தான் அதிகம் உள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்