Tuesday, October 19, 2010

வடஇந்தியப் பயணம் - அக்க்ஷர்தாம், தில்லி

பல வருடங்களாக முயற்சித்து கடைசியில் இந்த வருடம் அக்டோபர் மாதம் வடஇந்திய சுற்றுலா செல்வதென்று தீர்மானித்தேன்.. தில்லி, அமிர்தசரஸ், ரிஷிகேஷ், ஆக்ரா சென்றுவரலாம் என்று திட்டம்.. ஜூலை மாதத்திலிருந்து திட்டம் தீட்டி இனிதே முடிந்தது என் பயணம். ஒவ்வொரு இடமும் ஒவ்வொருவிதமான அனுபவம். இந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு இடுகை போதாது.. விவரமாக விஸ்தாரமாக பல வாரங்களுக்கு உங்களுடன் பகிர்துகொள்ள பல செய்திகள் உள்ளன.

முதலில் தில்லி...

ஆரம்பமே கொஞ்சம் பதற்றம்தான்.. 7.20  மணி விமானத்துக்கு 6.20௦க்கு சென்னை விமானநிலையத்தில் நுழைந்தபோது ஸ்பைஸ் ஜெட் அதிகாரிகள் 'counter closed ' என்றார்கள். அப்புறம் கொஞ்சம் மிஞ்சி பிறகு கெஞ்சி போர்டிங் பாஸ் வாங்கினோம். பிறகுதான் தெரிந்தது அந்த விமானம் 7 மணிக்காம்.. மூன்று மாதத்துக்கு முன்னால் பதிவு செய்த டிக்கெட்டில் 7.20 என்று இருந்தது.

புதிதாக திறக்கப்பட்ட தில்லி விமான நிலையம் சர்வதேச தரத்துக்கு இருக்கிறது. உலகில் சிறந்த விமானநிலையங்களில் ஒன்று என்று தாரளமாக சொல்லலாம்.

தில்லியில் மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆசை. கரோல் பாக் ரயில் நிலையத்திலிருந்து அக்ஷர்தாம் கோவிலுக்கு (16 ருபாய்) மெட்ரோவில் சென்றபோது ரயில் லண்டன்-சிங்கப்பூர் மெட்ரோக்களை நினைவுறுத்தினாலும் கூட்டம் மும்பை  ரயில்களை நினைவுறுத்தியது.

அக்க்ஷர்தாம்

இந்தியாவின் பிரமாண்ட ஐந்து நட்சத்திர கோவில். இதை கோவில் என்பதைவிட இந்தியாவில் ஆன்மீக கலாச்சார பண்பாட்டு மையம் என்றே அழைக்கிறார்கள். ஏனென்றால் இங்கு கோவிலுக்கு உண்டான ஆகம விதிகள் எதுவும் கிடையாது. 18ம் நூற்றாண்டில் குஜராத்தில் வாழ்ந்த சுவாமிநாராயண பகவான் பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோவிலுக்கு அவர்தான் முக்கிய மூலவர்.

100 ஏக்கர் பரபளவில் அமைந்திருக்கும் இந்த கோவில் முழுவதும் பழுப்பு கற்களாலும் இத்தாலிய பளிங்கு கற்களாலும் மட்டுமே கட்டபடிருகிறது. உருக்கு, கான்க்ரீட் எங்கும் உபயோகப்படுத்தவில்லை. இவ்வளவு கலைநயத்துடனும் சிற்பங்களுடனும் ஒரு கோவிலை இதற்குமுன் கண்டதில்லை.. ஒவ்வொரு தூணிலும் உள்ள நுணுக்கமான சிற்பங்களிலிருந்து நம் கண்கொள்ளாத அளவிற்கு பிரம்மாண்ட சிற்பங்கள் கொண்ட கலைநயம்... இழைத்து இழைத்து பார்த்து பார்த்து செய்யப்பட சிற்ப வேலைகள்.. மொத்தம் 234 அலங்கரிக்கப்பட்ட தூண்கள், 9 மாடங்கள், தத்ரூபமான பல கோணங்களில் உள்ள யானை சிலைகள் - இவையெல்லாம் எண்ணிக்கையில் வரும் சில விஷயங்கள்.. எண்ணமுடியாதவை எத்தனையோ..

இவையெல்லாம் ரசித்துவிட்டு பகவான் சுவாமிநாராயணன் சிலை இருக்கும் மண்டபத்துக்குள் நுழைந்தால்.. அப்பப்பா.. மயக்கமே வந்துவிடும் போலிருந்தது.. என்ன ஒரு ஜொலிஜொலிப்பு.. என்ன ஒரு பளபளப்பு... பெயர் சொல்லமுடியாத பல விலையுயர்ந்த கற்களாலும் ஆபரணங்களாலும் உலோகங்கழலும் மினுமினுகிறது அந்த மண்டபம். நடுவில் தங்க முலாம் பூசப்பட்ட ௧௧ அடி பகவான் சுவாமிநாராயணன் சிலை.. சுற்றி அவரின் சீடர்கள் சிலை.. அந்த இடம் பிரமிக்க வைக்கிறது.. வாய் பிளக்க வைக்கிறது.. ஆனால் தெய்வீகம்? அது மட்டும் ஏனோ வரவில்லை..!

கோவிலுக்கு உள்ளே கேமிரா, செல்போன் அனுமதி இல்லை... அதேபோல் கொஞ்சம்கூட தூசு குப்பைகள் இல்லை..ஒரு நட்சத்திர ஹோட்டல் போல் பராமரிக்கிறார்கள்.

அந்தி நேரத்தில் காட்டப்படும் இசை நீரூற்று பற்றி கண்டிப்பாக குறிப்பிடவேண்டும்.. இசைக்கு ஏற்றால் போல் நடனமாடும் வண்ண நீரூற்றுகள்... நீரூற்றின் வேகத்துக்கு முழங்கும் இசை.. ஆஹா..என்ன ஒரு கனகச்சிதம்..அற்புதமான கோர்வை..அதிலும் கடைசியாக சிவனின் ருத்ரதாண்டவத்துக்கு அதிரும் இசையும் நீரின் வேகமும் அதன் வண்ணங்களும் நம்மை மிரள வைக்கின்றன.

உள்ளே நல்ல உணவகம் உண்டு.. படகு சவாரி உண்டு..இதை ஒரு கோவில், பக்தி என்றெல்லாம் குழப்பிக்கொள்ளாமல் ஒரு அருங்காட்சியகம் போல ஜாலியாக போய் பார்த்துவிட்டு வரலாம். இருந்தாலும் என்னை குழப்பிய ஒரு கேள்வி - இதை கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் பணம் எங்கிருந்து வருகிறது?

இனி தில்லியின் மற்ற இடங்கள்...

- பயணம் தொடர்கிறது.....

Sunday, September 5, 2010

என் பின்னால் வா - மாவோ

மாவோ: என் பின்னால் வா - மருதன் எழுதிய மாவோ எனப்படும் மாவோ சேதுங்கின் வரலாறு நான் தற்போது படித்த புத்தகம்... சீனத் தலைவர் மா சேதுங்கை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இந்தப் புத்தகத்தை படிக்கலாம். 

இருநூறு ஆண்டு காலமாக ஐரோப்பா மற்றும் ஜப்பானியர்களுக்கு அடிமைப்பட்டுக்கிடந்த சீனாவை சுதந்திர காற்றை சுவாசிக்க வைத்தவர்.  முதன்முதலில் சீனாவில் உழைக்கும் மக்கள் ஆட்சியை மலர செய்தவர் என்ற பெருமைகள் மாவோவுக்கு உண்டு...

மாவோவின் பதிமூன்று வயதிலிருந்து தொடங்குகிறது இந்தப் புத்தகம். நாம் எல்லோரும் நினைப்பதுபோல மாவோ வறுமையில் வாடியவர் இல்லை. கொஞ்சம் வசதியான சூழலில்தான் வளர்ந்தார். கொஞ்சம் பிடிவாதக்காரராக வளர்ந்த மாவோவின் பள்ளிபடிப்பு, கல்லூரி வாழ்கை, விவசாயிகள்-தொழிலாளர்கள் பிரச்னையில் ஈடுபாடு, மாக்சியத்தில் ஈடுபாடு, கம்யூனிஸ்ட் கட்சியில் சேருதல், நீண்ட பயணம், சீனப் புரட்சி, சீனாவைக் கைப்பற்றுதல், அதிபரானபின் வரும் பிரச்சனைகள் என்று மாவோவின் வாழ்கைபாதையை தெளிவாக,  விவரமாக அலசுகிறது இந்தப் புத்தகம்.

'முயற்சித்தால் எதுவும் முடியும்' என்பதற்கு மாவோவின் வாழ்க்கை ஒரு உதாரணம். உலகின் பெரிய நாடான சீனாவை, மிகுந்த இறைநம்பிக்கை பல மூடநம்பிக்கைகளை கொண்ட சீன மக்களை கம்யூனிச பாதையில் அழைத்துச் செல்வது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதேபோல சீனாவில் அப்போது இருந்த ராணுவத்தையும், ஜப்பான் மற்றும் ஐரோப்பிய படையையும் தன செம்படை மூலம் விரட்டி அடித்து மொத்த சீனாவையும் மாவோ கைப்பற்றுவார் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். இன்று சீனா சிதறுண்டு போகாமல் (தைவானை தவிர) மொத்தமாக ஒரே ஆட்சியில் கீழே இருக்கிறது என்றால் அதற்க்கு மாவோ அமைத்துக்கொடுத்த அடித்தளம்தான் காரணம்.

மாவோவின் தத்துவம் எப்படி மக்களை சென்றடைந்தது? அவர் எப்படி மக்கள் தலைவரானார்? ஏனெனில் மாவோ வெறும் கொரில்லா போராளி மட்டும் அல்ல. அவர் மக்கள் பிரச்சனையை அறிந்து மக்களோடு போராடினார். எந்த காரணம் கொண்டும் மக்களை துன்புறுத்தவில்லை. தனது செம்படையை மக்கள் சேவைக்கும் ஈடுபடுத்தினார். கிராமம் கிராமமாக சென்று விவசாயிகள் நிலையை கண்டறிந்தார். வரலாற்று சிறப்பு மிக்க நெடும்பயணத்தில் மாவோவோடு விவசாயிகளும் நடந்தே சென்றனர்... கிட்டத்தட்ட ஒரு வருடம்.. பத்தாயிரம் கிலோமீட்டர்கள்... தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருந்தார்கள்... இந்த முயற்சிதான் மக்கள் மத்தியில் மாவோவின் செல்வாக்கை உயர்த்தியது. அதனால்தான் 'என் பின்னால் வா' என்று மாவோ அழைத்தவுடன் சீன தேசமே அவர் பின்னல் அணி திரண்டது. 

மாவோ மாக்சியத்தில் எப்படி ஈடுபாடு கொண்டார், எப்படி கம்யூனிசம் அவரை ஈர்த்தது என்பதுபற்றி இந்த நூலில் அதிக விளக்கங்கள் இல்லை. நூலகத்தில் பல புத்தகங்களை படித்தார்,  சோவியத்தை  உதாரணமாக  எடுத்துகொண்டார்  என்று மட்டும் இருக்கிறது. அதே போல் மாவோவுக்கு மிகுந்த அவப்பெயர் வாங்கிகொடுத்த 'கலாச்சார புரட்சி' பற்றி இதில் எதுவும் விளக்கவில்லை. சுருக்கமாக சொன்னால் மாவோவின் மறுபக்கம் இந்த புத்தகத்தில் இல்லை.

இந்தப்புத்தகத்தில் மாவோ சேதுங் என்ற முழுப்பெயர் எங்கும் இடம்பெறவில்லை. மாவோ என்றே இருக்கிறது.

'தெளிவான அரசியல் கொள்கை... தீர்க்கமான போர்த் தந்திரம், அசர வைக்கும் மக்கள் பலம்' - இந்த மூன்று ஆயுதங்களைப் பயன்படுத்தி மாவோ நிகழ்த்திக்காட்டிய புரட்சி சீனாவை ஒரு புதியதிசையில் செலுத்தியது... உழைக்கும் மக்கள் வரலாற்றில் மாவோ ஒரு வீர சகாப்தம்' என்ற பின்னூட்டத்துடன் முடிகிறது இந்த நூல்.

  

Sunday, August 29, 2010

இணைய கள்ளர்கள்

வர வர இணையத்தில் உளவு பார்க்கும் வேலை அதிகரித்துவிட்டது. நம் கணணியை இணையத்தில் இணைத்துவிட்டால் கண்டவர்கள் நம் கோப்புகளை களவாடுகிறார்கள். நம் cookies மற்றும் browsing history மூலம் பல தகவல்கள் திருடப்படுகின்றன.

எனக்கு சென்ற வாரம் ஏற்பட்ட அனுபவம் இதோ..

அக்டோபர் மாதத்தில் அமிர்தசரஸ், டேராடூன், ஆக்ரா போகலாம் என்று திட்டம். இதற்காக டேராடூனிலிருந்து  ஆக்ராவுக்கு ஏதாவது விமானம் இருகிறதா என்று ஒரு வலை பக்கத்தை மேய்ந்தேன்... என் விவரம்,   மின்அஞ்சல் எதையும்  கொடுக்கவில்லை. குறிப்பிட்ட வழித்தடத்தில் எந்த விமானமும் இல்லை என்று தெரிந்தவுடன் இணையத்தை துண்டித்துவிட்டேன். மறுநாள் என் ஹாட்மெயிலில் மின்அஞ்சல்களைப்  பார்த்துகொண்டிருந்தபோது ஓரத்தில் ஒரு விளம்பரம்.... 'Flights  from  Dehradun  to  Agra   - lowerst  fare ' என்று இருந்தது...

ஆஹா.. என் அதிஷ்டத்தை நினைத்து எனக்கே மெய்சிலிர்த்தது.. நமக்கு தேவைப்படும் நேரத்தில் ஏதோ ஒரு நிறுவனம் புதிதாக இந்த வழித்தடத்தில் விமான சேவையை தொடங்கியிருகிறதே என்று ஆசை ஆசையாய்  அந்த விளம்பரத்தை கிளிக் செய்தேன்... கடைசியில் அதே வலைப்பக்கம்.. அப்படி எந்த ஒரு விமானமும் பறக்கவில்லை. பிறகுதான் தெரிந்தது.. அந்த குறிப்பிட்ட வலைத்தளம் என் browsing history, cookies   மூலம் என் தகவல்களை களவாடி, நான் ஹாட்மெயிலை திறக்கும் போது எனக்கு மட்டுமே உரித்தான ஒரு விளம்பரத்தை கொடுத்திருக்கிறது.

பின் ஒருமுறை அமிர்தசரஸ் ஹோட்டல்களை பற்றி கூகுளில் மேய்ந்தபோது மறுநாள் அமிர்தசரஸ் ஹோட்டல்கள் பற்றிய ஒரு விளம்பரம் என் ஹாட்மெயிலில்  வந்தது.

முன்பெல்லாம் எந்த ஊரிலிருந்து இணையத்தை இணைக்கிறீர்களோ அந்த ஊர் சம்பந்தப்பட்ட தகவல்கள் வரும். ஒரு இணையத்தளத்தில் ஒரு செய்தியை தேடும்போது அது சம்பந்தமான விளம்பரம் அதே இணையத்தளத்தில் வரும். ஆனால் இந்த இணைய கள்ளர்கள் நவீன மென்பொருள் மூலம் நம் தகவல்களை நம் குணங்களை, நம் விருப்பங்களை அலசி ஆராய்ந்து இதுபோல 'தானியங்கு' விளம்பரங்களை அளிக்கிறார்கள். நமக்கு தெரியாமலேயே நம்மை பின்தொடரும் உளவாளிகள் இவர்கள்.

இணையத்தில் ரகசியம் என்பதே எதுவும் கிடையாது போலிருக்கிறது. ரகசியத்தை வெளியே சொல்லக்கூடாது என்பதற்கு 'இரண்டு என்பது சகவாசம்... மூன்று என்பது கூட்டம்' என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.. இதில் இணையம் என்பது...?

Saturday, August 21, 2010

கடைகளுக்கு தண்டனை... சினிமாவுக்கு சலுகை..

சென்னையில் எல்லா கடை பெயர்களும் இப்போது தமிழாக்கம் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் பெயர் வைக்கவேண்டும் என்று உத்தரவு போட்டதுமட்டுமல்லாமல், சென்னை மாநகராட்சி என்னென்ன கடைகளை எப்படியெல்லாம் அழைக்கலாம் என்று யோசனையும் கூறியிருக்கிறது. தமிழ் பெயர் வைக்காதவர்களுக்கு லைசன்ஸ், மன்னிக்கவும்... உரிமம் ரத்து செய்யப்படுமாம்.

மாநகராட்சியின் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.. அதே சமயம் இதை ஏன் அரசு தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் செல்லவில்லை என்றும் புரியவில்லை..

சென்னை தெருக்கள் முழுவதும் இப்போது தமிழ் மணம் வீசுகிறது.. உதாரணத்துக்குச் சில...

மெடிகல்ஸ் - மருந்தகம்
கலர் லேப் - வண்ணக் கூடம்
செல் வேர்ல்ட் - அலைபேசி உலகம்
பியுட்டி பார்லர் - அழகூட்டு நிலையம்
ஸ்டேஷனரி - எழுது பொருளகம்
பேக்கிரி -  அடுமனை அல்லது வெதுப்பகம்
ஆப்டிகல்ஸ் - கண்ணாடியகம்
பிசினஸ் சென்டர் - வர்த்தக நடுவகம்
ஸ்நாக்ஸ் - நொறுவைகள்
ஹார்ட்வேர் - வன்பொருளகம்       

இருந்தாலும் ஒரு விஷயம் நெருடுகிறது.. கடைகளில் தமிழ்ப் பெயர் இல்லையென்றால் தண்டனை.. சினிமாவுக்கு தமிழ்ப் பெயர் வைத்தால் சலுகை..

என்ன நியாயம் இது? ஏன் இந்த பாரபட்சம்?

Sunday, July 25, 2010

'மாணவ' தற்கொலைகள் - ஆசிரியர் மட்டும் காரணமா?

இந்த வாரம் ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை படித்தேன். கடலூர் மாவட்டத்தில் ஒரு பள்ளிகூட ஆசிரியை ஐந்தாம் வகுப்பு மாணவியை திட்டியதால் அவமானப்பட்ட அந்த மாணவி மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீ வைத்துகொண்டு தற்கொலை செய்துகொண்டாளாம். ஆசிரியர் திட்டியதால், மதிப்பெண் குறைந்ததால் நடக்கும் தற்கொலைகளைப் பற்றி அடிக்கடி செய்தி வந்துகொண்டிருக்கிறது.

ஆசிரியர்கள் பொதுவாக கண்டிப்பாக இருக்கவேண்டியவர்கள்தான்.. அதேசமயம், அந்த கண்டிப்பு எல்லை மீறும்போது கண்டிக்கபடவேண்டியர்வர்கள்தான்..! ஆனால் இது போன்ற தற்கொலைகளுக்கு ஆசிரியரும் பள்ளிக்கூடமும் மட்டும்தான் காரணமா? இந்த ஒரு சிறிய அவமானத்தால் சிறுமியை தற்கொலை செய்துகொள்ள தூண்டுவது எது? 'தற்கொலை செய்துகொள்' என்று எந்த ஆசிரியரும் சொன்னதும் இல்லை.. 'தற்கொலை செய்துகொள்வது எப்படி' என்று எந்த பாடபுத்தகத்திலும் விளக்கம் இல்லை.

புடவையை உத்திரத்தில் மாட்டி தூக்கு போட்டுக்கொள்வது, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துகொள்வது, அரளி விதையை சாபிடுவது, ரயிலில் தலை வைத்துப் படுப்பது போன்று விதவிதமான தற்கொலைகளை விளாவாரியாக  காட்டுவது நம் சினிமாவும் டிவி மெகா தொடர்களும்தான். இவை இல்லாமல் தற்கொலை பற்றி இவ்வளவு விவரங்கள் ஒரு 10  வயது சிறுமிக்கு தெரிய வாய்ப்பில்லை. அதுவும் நம் சினிமாக்களில் எப்படி எண்ணையை ஊற்றிகொள்வது, தூக்கு எந்த அளவுக்கு இறுக்கமாக இருக்கவேண்டும் என்று ஒரு விஷுவல் பாடமே எடுக்கிறார்கள். சினிமாவில் பாதி தற்கொலைகள் ஹீரோக்களால் காப்பற்றப்படுகின்றன. அனால் நிஜத்தில்?

தனக்கு ஒரு அவமானம் ஏற்பட்டால் தன் உடலை அழித்துக்கொள்ளவேண்டும் என்று போதிப்பதே நம் சினிமாதான். எந்த ஒரு ஆங்கில படத்திலும் தற்கொலை காட்சிகளை நான் பார்த்ததில்லை.

இதற்கும் மேலாக அரசியல் தற்கொலைகளை 'உயிர் தியாகம்' என்று கொண்டாடும் நம் அரசியல்வாதிகளும் ஒரு காரணம். கடந்த வருடம் YSR மறைந்தபோது ஆந்திராவில் நடந்த 'உயிர் தியாகங்கள்' போன்று உலகில் வேறு எங்கும் நடந்ததில்லை.

அவமானங்களை தாங்கும் உறுதியும் அதை மீண்டுவரும் மனத்திடத்தையும் திறமையையும் நம் கல்விமுறை கற்றுக்கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் இதுபோன்ற 'மாணவ' தற்கொலைகளுக்கு பள்ளிகளையும் ஆசிரியர்களையும் மட்டும் குறைசொல்லி பயனில்லை.

குறைந்த பட்சம் புகை பிடிக்கும் மது அருந்தும் காட்சிகளை தடை செய்ததுபோல சினிமாவில் தற்கொலை காட்சிகளையும் சென்சார் செய்யவேண்டும். புகை, மது போன்று இதுவும் ஒரு 'சமூக சீரழிவு' தான்..!

Wednesday, June 30, 2010

புன்னகை


எல்லோரிடமும் ஒரேமாதிரி
புன்னகைக்கிறாய்..
இருந்தாலும் நீ உதிர்த்த
சில கூடுதல் புன்னகைகளை
எனக்கென எண்ணி
அள்ளிக்கொண்டேன்..!

Sunday, March 28, 2010

குஷ்பூ விவகாரமும் நீதிமன்றத்தின் விவாதங்களும்

குஷ்பூ விவகாரத்தில் உச்சநீதி மன்றத்தின் விவாதங்கள் விநோதமாக இருக்கிறது.

'திருமணத்துக்குமுன் உறவு பற்றி குஷ்பூ பேசுவதற்கு உரிமை இருக்கிறதா இல்லையா அல்லது அவர் பேசியதால் சமூகத்தில் பெரிய பாதிப்பு ஏற்பட்டதா இல்லையா' என்பது மட்டுமே விவாதத்தின் சாராம்சமாக இருக்க முடியுமே தவிர அவர் பேசியது சரியா தவறா என்பது பற்றி அல்ல. 'இதைபற்றி பேசுவதற்கு யாருக்கும் உரிமை இருக்கிறது.. இதற்கெல்லாம் வழக்கு தொடர முடியாது' என்று சொல்வதை விட்டு விட்டு ஏதேதோ  கேள்விகள் கேட்டிருக்கிறார்கள் நீதிபதிகள்.

'எவ்வளவு பெண்கள் குஷ்பூ பேச்சை கேட்டு சீரழிந்திருக்கிரார்கள்... உங்களுக்கு மகள் உண்டா.. அப்புறம் உங்களுக்கு என்ன பிரச்னை' என்றெல்லாம் வழக்கு தொடர்ந்தவர்களைப் பார்த்து  கேட்டிருகிறார்கள்  திருமணத்துக்கு முன் உறவு, சேர்ந்து வாழுதல் என்பதெல்லாம் பெண்கள் பிரச்னை மட்டும் இல்லை. இது சமூக பிரச்னை.  அப்படியே ஓரிரு பெண்கள் நடந்துகொண்டார்கள் என்று நிரூபித்தாலும் குஷ்பூவை கைது செய்ய முடியுமா? அப்படியானால் எவ்வளவு இளைஞர்கள் நம் சினிமா கதாநாயகர்களைப் பார்த்து சிகரெட் பிடிக்க கற்றுகொண்டார்கள்? எவ்வளவு பேர் வன்முறையில் ஈடுபட்டார்கள்? (சில சினிமாக்களில் வருவதுபோலத்தான் கொலை செய்தேன் என்று சில கொலையாளிகளே வாக்குமூலம் கொடுத்திருகிறார்கள்) அதற்காக நம் கதாநாயகர்களையும் கைது செய்ய முடியுமா?

 நீதிபதிகள் கடைசியாக 'புராணத்தில் கிருஷ்ணரும் ராதையும் சேர்ந்து வாழ்ந்தார்களே' என்று கேட்டிருப்பது அபத்தத்தின் உச்சம். ஒரு புராண உதாரணத்தை எப்படி நீதிமன்றத்தில் பேசமுடியும் என்று புரியவில்லை. புராண சம்பவங்களை உதாரணம் காட்டும் நீதிபதிகள், இது சேது சமுத்திர வழக்கில் தனக்கு எதிராக திரும்பும் என்று நினைத்துப் பார்த்தார்களா? புராண சம்பவங்கள் மட்டுமல்ல... சமூக கலாச்சாரம் சம்மந்தப்பட்ட எந்த விவாதத்திலும்   இந்த  காலகட்டத்துக்கு  ஒவ்வாத  எந்த  கருத்துகளும் எடுபடாது. அக்பர் பல பெண்களை மணந்தார்... கிளியோபட்ரா பல ஆண்களை மணந்தார் என்றெல்லாம் உதாரணம் சொல்லிகொண்டிருக்க முடியுமா என்ன?

திருமணத்துக்கு முன் உறவு, சேர்ந்து வாழுதல் போன்றவையெல்லாம் சமூக கலாச்சார சிக்கல்கள். இவற்றுக்கெல்லாம் ஒரு சட்ட வடிவம் கொடுத்து 'சரியா தவறா' என்று நிர்ணயிக்க முடியாது. இவை பற்றிய பார்வையெல்லாம் ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏன் ஒவ்வொரு தனிமனிதனுக்கும்  மாறுபடும். அதே சமயம் இவைபற்றி யாரும் பேசக்கூடாது என்றும் சொல்ல முடியாது. அவரவர் கருத்துக்கு அவரவருக்கு உரிமை உண்டு.

இனி தமிழ் கலாச்சார காவலர்களுக்கு...

ஏதோ நாலு பேர் படித்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கக் கிளம்பிய ஒரு செய்தியை இவ்வளவு பெரிசாக ஊதி, உச்சநீதிமன்றமே  அதை  அங்கீகரிக்கும்  நிலையை கொண்டுவந்து, தன முகத்தில் தானே கரிபூசி... தேவையா இதெல்லாம்? குஷ்பூ பேசியதால் தமிழ் கலாச்சாரத்தின் 'moral values ' சீரழிந்துவிட்டது என்று கொடிதூக்குகிறீர்களே.. தமிழ் சினிமாவில் காமெடி என்கிற பெயரில் நடக்கும் கலாசார சீரழிவுக்கு உங்களுக்கு கோபமே வராதா?