Monday, July 6, 2009

இரண்டு நியூயார்க் அனுபவங்கள்


அது 2004 ம ஆண்டு.. உலக வர்த்தக தலைநகரான நியூயார்க் செல்லப்போகிறோம் என்கிற குதூகலத்தில் நானும் என் நண்பனும் சென்னையில் விமானம் ஏறினோம். ஆனால் நியூயார்க்கின் முதல் அனுபவமே ஏமாற்றமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை..

கென்னடி விமான நிலையத்தில் இறங்கி டாக்சி பிடித்து மேன்ஹாட்டனில் உள்ள ஹோட்டலை அடையும்படி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.. 45 டாலர் ஆகும் என்றும் குறிப்பிடிருந்தார்கள்.

விமான நிலையத்தில் இறங்கி தொலைபேசி அட்டை வாங்க நாங்கள் கொஞ்சம் 'ஞே' என்று விழிப்பதை பார்த்து விட்டு ஒருவர் வந்தார். தன் டாக்ஸியில் வரும்படி அழைத்தார்.. அவரே சில உதவிகள் செய்தார். கொஞ்சம் பருமனான உடல்வாகும் தென்அமெரிக்க முகஅமைப்பும் கொண்டவராக இருந்தார். எங்கள் பெட்டிகளை டாக்சியில் ஏற்றினர். போகும் வழயில் அமெரிக்க ஆங்கிலத்தில் ஏதேதோ பேசினார். நியூயார்க்கின் பெருமைகளையெல்லாம் எடுத்துச் சொன்னார்.

ஹோட்டலில் இறங்கியவுடன் 90 டாலருக்கான பில்லை நீட்டினார். அது அதிகம் என்று தெரிந்தும் களைப்பு மிகுதியால் அவரிடம் விவாதம் செய்யவில்லை.. என் நண்பர் 100 டாலர் நோட்டைக்கொடுக்க, 'என்ன இது' என்றார். பார்த்தால் அவர் கையில் 10 டாலர் நோட்டுதான் இருந்தது. என் நண்பர் 'சாரி' என்று சொல்லி அதை வாங்கிக்கொண்டு இன்னொரு 100 டாலர் கொடுக்க, நம் கதாநாயகன் பத்து டாலர் மீதி கொடுத்துவிட்டு நிதானமாக பெட்டிகளை ஹோட்டலில் இறக்கிவைத்துவிட்டு, 'டாட்டா.. பைபை..' என்று சொல்லி கிளம்பிச் சென்றார்.

பிறகு ஹோட்டல் அறைக்குள் போனபிறகுதான் நாங்கள் 10 டாலர் நோட்டையே எடுத்து வரவில்லை என்று மூளையில் உரைத்தது. டாக்சி டிரைவர் கண நேரத்தில் நோட்டுகளை மாற்றிய வித்தை அப்போதுதான் புரிந்தது. எல்லா அமெரிக்க டாலர்களும் ஒரே அளவில் இருப்பதால் எங்களுக்கும் சந்தேகம் வரவில்லை.

'ஆஹா... நியூயார்க்ல ஏறங்கினஉடனே கவுத்துடாங்களே...' என்று தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்தோம். அப்போதுதான் நம்மூர் ஆட்டோகாரனிடம் ஐந்து ரூபாய்க்கு பேரம் பேசியதெல்லாம் நினைவுக்கு வந்தது.

இந்த வருடம் மீண்டும் நியூயார்க் பயணம் சென்றேன்.. தனியாக..! கென்னடி விமானநிலையத்தில் நின்றபோது கிட்டத்தட்ட அதே உடல்வாகுடன் ஒரு டாக்சி டிரைவர் வந்தார்.. அதே போல் சிலபல உதவிகள் செய்தார். இந்த முறை உஷாராக இருக்கவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன்... அவ்வப்போது கையிலிருந்த டாலர்களை எண்ணிக்கொண்டிருந்தேன்...

இது போதாதென்று நியூயார்க் பற்றி ரொம்ப தெரிந்தால்போல் டாக்சி டிரைவரிடம் காண்பித்துக்கொண்டேன். "அதாம்பா.. ஸ்டாச்சு ஆப் லிபர்ட்டி ரைட்ல ஒரு மெயின் ரோடு வருமே.. அதுல திரும்பி லெப்ட் எடுத்தா பிராட்வே குறுக்குச்சந்துல இருக்கிற ஹோட்டல்.. என்று ஏதேதோ எடுத்துவிட்டேன்.

அமைதியாக கேட்டுகொண்டிருந்த டாக்சி டிரைவர், "என்ன இந்தியாவா" என்றார்.. "ஆஹா தெரிஞ்சுபோச்சா" என்று நினைத்து ஆமாம் "நீங்களும் இந்தியாவா" என்றேன். "இந்தியா மாதிரிதான்" என்று பதில் வந்தது.. அதென்னது.. 'இந்தியா மாதிரி' என்று நான் குழம்பியபோது 'ஆனால் பாகிஸ்தான்' என்றார். இஸ்லாமாபாத்தை சேர்ந்தவராம்... நியூயார்க் வந்து ஐந்து வருடமாகிறதாம்.

பாகிஸ்தானும் இந்தியாவும் ஒன்று என்று நினைக்கும் ஒரு பாகிஸ்தானியரைப் பார்த்து ஆச்சிரியப்பட்டேன். பிறகு அவர் இந்தியாவை பற்றி நிறைய விசாரித்துக்கொண்டிருந்தார்.

ஹோட்டல் வந்ததும் நம் பழைய டாக்சி டிரைவர் போலவே, பெட்டிகளை இறக்கிவைத்துவிட்டு, ஆனால் சரியான பணம் வாங்கிக்கொண்டு, தன் விசிடிங் கார்டை கொடுத்துவிட்டு, 'உங்களை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி' என்று கைகொடுத்துவிட்டு சென்றார்.

இதனால் தெரிவிப்பது என்னவென்றால், நியூயார்க்கில் நல்ல டாக்சியும் இருக்கிறது.. கள்ள டாக்சியும் இருக்கிறது... நீங்கள் யாரிடம் மாட்டிக்கொள்வீர்கள் என்பது உங்களுடைய அதிஷ்டத்தைப் பொறுத்தது.

Saturday, June 13, 2009

கோனார்க் சூரியக் கோவில்














Sunday, May 31, 2009

இந்தியா வோட்டு, தமிழனுக்கு வேட்டு

இத்தனை நாள் இலங்கை இனப்படுகொலையை ஏதோ கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதுபோல ரசித்துக்கொண்டிருந்த இந்திய அரசு, கடைசியாக தமிழனுக்கு அந்த துரோக செயலையும் செய்து முடித்துவிட்டது. பல ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் ஐ.நா வில் கொண்டுவந்த மனிதஉரிமை விசாரணையில் இலங்கைக்கு ஆதவாக வோட்டுபோட்டு இலங்கைக்கு தன் விசுவாசத்தை காட்டிகொண்டது. இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளுக்கு இருக்கும் உணர்வுகூட இந்தியாவுக்கு இல்லை... வெட்கக் கேடு..!


இலங்கை போரில் மனித உரிமை மீறல் எல்லாருக்கும் தெரிந்ததே.. தடை செய்யப்பட்ட வெடிகுண்டுகளை பயன்படுத்தியது, மருத்துவமனையில் கல்விநிலையங்களில் குண்டு வீசியது, சொந்த நாட்டு மக்களையே அகதிகளாய் வைத்திருப்பது, போன்றவற்றை ஊடகங்களும் செஞ்சிலுவைச்சங்கமும் படம் பிடித்துக் காட்டியது. இதோ, டைம்ஸ் பத்திரிகை கடைசி கட்ட போரில் 20000 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவலை அளித்துள்ளது. அங்கு செல்ல செஞ்சுலுவை சங்கம் உட்பட இந்த அமைப்புகளுக்கும் அனுமதி இல்லை. போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் சுட்டுத்தளியது இலங்கை இராணுவம்.


ஹிட்லருக்கு பிறகு இந்த உலகத்தில் மிகப்பெரிய மனித பேரழிவை நடத்திக்காட்டியிருகிறது இலங்கை அரசு. (ஹிட்லர் கொன்று குவித்த யூதர்களின் எண்ணிக்கை இலங்கை தமிழர்களைவிட அதிகம் என்பதால் ஹிட்லருக்கு பிறகு ராஜபக்க்ஷே அரசு என்று சொல்லலாம் -மற்றபடி இனவெறி ஒன்றுதான்). அதுபோல ஹிட்லர் நடத்திய concentration campக்கும் இலங்கை அரசு நடத்தும் அகதிகள் முகாமுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.

தக்குனூன்டு நாடு இலங்கை.. சராசரி இந்திய மாநிலங்களைவிட சிறியது. இருந்தாலும் இந்தியாவுக்கு தட்டிகேட்க திராணியில்லை... தமிழனுக்கு நாதியில்லை.. தென்கிழக்கு ஆசியாவில் இந்தியா ஒரு வல்லரசா அல்லது வலிமை இழந்த அரசா? இந்தியாவுக்கு இலங்கையினாலேயே ஆபத்து காத்திருக்கிறது என்பதை உணருகிறதா இந்திய அரசு? இதோ, சீனா இலங்கையில் கடற்படையை அமைத்துக்கொள்ள இடம் தேடிக்கொண்டுகிறது. பல துறைமுகங்கள் சீன உதவியுடன்தான் இலங்கையில் கட்டப்படுகினறன. பாகிஸ்தான் இலங்கைக்கு ஆயுதங்களை வினியோகித்துக் கொண்டேயிருக்கிறது.


இவையெல்லாம் தெரிந்தும் இந்தியா இலங்கைக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை... எல்லாவற்றுக்கும் மேலாக ஐ.நாவில் இலங்கைக்கு ஆதரவாகவும் வோட்டு போட்டுள்ளது. அடுத்தது டெல்லி வரப்போகும் ராஜபக்க்ஷேக்கு சிவப்பு கம்பளம் விரிக்க மன்மோகன் சிங்கும் எஸ்.எம்.கிருஷ்ணாவும் தயாராகி விட்டனர். ஏனென்றால் அங்கு படுகொலை செய்யப்பட்டது தமிழ் இனம்தானே.. சீக்கியர்களோ அல்லது ஆஸ்திரேலியா-வாழ் இந்தியர்களோ இல்லையே?


தமிழ்ப் பிணக்குவியல்களை ஒட்டுமொத்தமாக தகனம் செய்து அந்த சாம்பலின் மீது வெற்றிக்கொடி நட்டிருக்கும் இலங்கை ராணுவத்தினருக்கு இந்த வோட்டு மூலம் ஆறுகோடி தமிழர்களை கொண்ட இந்திய தேசம் அங்கீகாரம் அளித்திருக்கிறது.

Sunday, May 17, 2009

2009 தேர்தலில் தமிழ்நாடு - ஒரு பருந்துப் பார்வை

மற்ற எந்த பாராளுமன்ற தேர்தல்களைவிட இந்த முறை தமிழக மக்கள் புத்திசாலித்தனமாக வாக்களிதிருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இந்த ஒரு முறைதான் எந்தவித உணர்ச்சிகளுக்கும் அடிபணியாமல் நிதானமாக யோசித்து செயல்பட்டிருகிறார்கள்.

ஒரு பருந்துப் பார்வை:

பாம.க தோல்வி
பாம.க இடம்பெறும் கூட்டணிதான் வெற்றிபெறும் என்ற மாயையை மக்கள் தகர்த்தெறிந்திருக்கிறார்கள். மத்திய அரசின் கட்சி சொட்டுவரை நனைந்துவிட்டு, அந்த மத்திய அரசையே குறை கூறும் பா.ம.க வின் கண்ணீரை மக்கள் விரும்பவில்லை. தங்கள் விருப்பப்படி யாரோடு வேண்டுமானாலும் சேரலாம் எப்போது வேண்டுமானாலும் விலகலாம் என்ற கொள்கையோடு இருந்த பா.ம.க.வினருக்கு இது ஒரு பாடம்.

இலங்கை பிரச்சனை
இந்த தேர்தலில் இலங்கை தமிழர்கள் படுகொலை நிச்சயமாக ஒரு உணர்ச்சிபூர்வமான பிரச்சனையாக இருந்தது... அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, ஊடகங்களும், திரைப்படத்துறையினரும் ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்தியிருந்தார்கள். தேர்தல் முடிவையே தீர்மானிக்கும் பிரச்சனையாக அது இருந்தது. ஆனால் மக்கள், தமிழர்கள் இனப்படுகொலைக்கு தி.மு.க வைவிட காங்கிரஸின் இயலாமைதான் காரணம் என்ற எண்ணத்தில் காங்கிரசை பல இடங்களின் தோற்கடித்திருகிரர்கள். 16 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 9 தொகுதிகளையே வென்றிருக்கிறது. வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் கூட சொற்ப வித்தியாசத்திலேயே வென்றிருகிறார்கள். மக்கள் கோபம் தி.மு.க வைவிட காங்கிரசையே அதிகம் பாதித்திருக்கிறது. அதே சமயம், மக்கள் மற்ற கட்சிகளையும் நம்ப தயாராக இல்லை.

தொழில் பகுதிகளில் காங்கிரஸ் தோல்வி
தமிழ்நாட்டின் தொழில் மாவட்டங்களான கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம், தென்காசி போன்ற தொகுதிகளில் தி.மு.க-காங்கிரஸ் தோல்வியை தழுவியிருக்கிறது. இந்தப் பகுதிகளில் மின்தடை, ஏற்றுமதி கொள்கைகளில் குளறுபடி, ரூபாய் டாலர் மாறுதல்கள் போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட பல பின்னலாடை நிறுவனங்கள் முடப்பட்டன.. பலர் வேலை இழந்தனர். டெக்ஸ்டைல் தொழிலை அதிகம் கண்டுகொள்ளாத மத்திய மாநில அரசுகளை மக்கள் தண்டித்திருகிறார்கள்.

மதுரை வெற்றி
எதிர்பார்த்த ஒன்று.. அழகிரி ஒருவர்தான் வெற்றிபெற்ற பிறகு தொகுதி மக்களை கவனிக்க வேண்டிய அவசியம் இல்லாதவர். ஏனென்றால் கவனிக்க வேண்டியதை தேர்தலுக்கு முன்பே கவனித்து விட்டார்.

தென் மாவட்டங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி
ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி தொகுதிகளில் தி.மு.வெற்றி பெற்றிருக்கிறது. தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம், குளைச்சல் துறைமுகம், நாந்குநேரி தொழில் பேட்டை, சேது சமுத்திர திட்டம் மற்றும் பல தொழில் திட்டங்களை கொண்டுவந்த ஆளும்கட்சிக்கு மக்கள் வாக்களிதிருகிறார்கள். இலங்கைக்கு அருகில் இருந்தும் இங்கு இலங்கை பிரச்சனை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை... ஆளும் கட்சிகள் அறிவித்த தொழில் திட்டங்கள் தொடர தங்கள் வளர்ச்சியை கருத்தில் கொண்டே வாக்களிதிருகிறார்கள் தென் மாவட்ட மக்கள்.

டெல்டா பதிகுகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி
மத்திய அரசின் விவசாய கடன்கள் தள்ளுபடி கொள்கை, டெல்டா பகுதிகளான தஞ்சை, நாகை, மயிலாடுதுறை தொகுதிகளில் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் தி.மு.போட்டியிட்ட தஞ்சை, நாகை தொகுதிகள் மட்டும் வெற்றி.. காங்கிரஸ் போட்டியிட்ட மயிலாடுதுறைக்கு தோல்வி என்பது, இலங்கை பிரச்சனையில் மக்களுக்கு காங்கிரஸ் மீது மட்டும் தான் கோபம் என்பதைக் காட்டுகிறது.

இதையெல்லாம் பார்க்கும் போது தமிழ்நாடு மக்கள் கொஞ்சம் தெளிந்த சிந்தனையோடு வாக்களிக்க தொடங்கியிருகிறார்கள் என்பது புரிகிறது. உணர்ச்சிகளின் அடிப்படையிலோ, கூட்டணிகளில் அடிப்படையிலோ இனி வாக்களிக்கமாட்டோமென்று சொல்லாமல் சொல்லியிருகிறார்கள்.

நல்ல தொடக்கம்... வரவேற்ப்போம்..!

Wednesday, May 13, 2009

கலைநயம் மிகுந்த தராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்






Tuesday, April 14, 2009

சர்ச்சில் தோற்றது ஏன்?

இந்தியாஅடுத்த பாராளுமன்ற தேர்தலை சந்திக்கப்போகிறது. என்னதான் இங்கு அரசியல் சீரழிந்தாலும் இந்திய ஜனநாயகம் அசைக்கமுடியாத தூணாக இருக்கிறது... பல பெரும் தலைவர்களையே புரட்டிப்போட்டிருக்கிறது.
ஆனால் இவை எல்லாவற்றையும் விட ஜனநாயகத்தின் வலிமையை இங்கிலாந்து மக்கள் ஒரு முறை நிரூபித்திருகிறார்கள்.

அது 1945ம் வருடம்.. இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்த நேரம். இங்கிலாந்துக்கு மட்டும் அல்ல, ஐரோப்பாவுக்கே மகத்தான வெற்றியை தேடித்தந்தார் வின்சென்ட் சர்ச்சில். போரின் இடையில் இங்கிலாந்தில் பிரதமராக பதவியேற்ற சர்ச்சில், தன் பேச்சாற்றல், அபாரமான போர்த்திறன் மூலம் மக்கள் மனதில் ஒரு மகத்தான தலைவனாக இடம் பிடித்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் 83 % மக்கள் சார்ச்சில்தான் உண்மையான் ஹீரோ என்றனர். இந்த சமயத்தில்தான் இங்கிலாந்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. சர்ச்சில் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியும் லேபர் கட்சியும் களத்தில் குதித்தன.

வெற்றிக்களிப்பில் தேர்தலை சந்தித்தார் சர்ச்சில்..! எல்லோரும் கன்சர்வேடிவ் கட்சி மாபெரும் வெற்றிபெறும், சர்ச்சில்தான் மீண்டும் பிரதமர் என்பதில் இமியளவும் சந்தேகம் இல்லை என்று நம்பினார்.

ஆனால் முடிவு எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்தது... சர்ச்சில் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அதுவரை இல்லாத அளவுக்கு தோல்வியை தழுவியது.. எதிர்கட்சியான லேபர் கட்சி மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

சர்ச்சிலை தோற்கடித்தற்கு மக்கள் சொன்ன காரணம்: "சர்ச்சில் ஒரு சிறந்த அரசியல் வித்தகர். போரை கையாள்வதில் வல்லவர்.. அவரைத்தவிர யுத்த காலத்தில் ஒரு சிறந்த பிரதமர் இருக்க முடியாது. ஆனால் இப்போது போர் முடிந்துவிட்டது. உடைந்துபோன பொருளாதாரத்தை நிலை நிறுத்தவேண்டும்.. இங்கிலாந்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.. இவற்றுக்கெல்லாம் லேபர் கட்சிதான் சரி.. சர்ச்சிலோ, கன்சர்வேடிவ் கட்சியின் கொள்கைகளோ இதற்க்கு உதவாது.. அவர்கள் போர் முனையில் கெட்டிக்காரர்கள்.. அனால் பொருளாதார சீரமைப்புக்கு அவர்கள் உதவமாட்டார்கள்..!"

தனிப்பட்ட ஒருவரின் சாதனையையும் ஒரு கட்சியின் கொள்கைகளையும் பிரித்துப்பார்க்கும் அளவுக்கு இங்கிலாந்து மக்களின் சிந்தனை மேம்பட்டு இருந்தது. சினிமா பிம்பங்களையும், வெற்று கோஷங்களையும், மரணங்களையும் நம்பி ஓட்டு போடும் நம் மக்கள் எப்போது இதுபோல் சிந்தித்து ஓட்டு போடப்போகிறார்கள்?

Saturday, April 4, 2009

தன் ஃபெராரி காரை விற்ற துறவி


சமீபத்தில்
நான் படித்த புத்தகம்... ராபின் சர்மா எழுதிய 'the monk who sold his ferrari' ... 2007ல் வெளியான பிரபலமான இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு இப்போதுதான் நேரம் கிடைத்தது.

வாழ்கையில் கொடிகட்டிப் பறந்த ஒரு கோடீஸ்வர வழக்கறிஞர் இமயமலை சென்று அங்குள்ள சிவானா யோகிகளிடம் சென்று வாழ்கையில் உண்மையை உணர்த்து கொள்கின்றார். மேர்க்கத்திய நாகரீகத்தில் திளைத்து பணம், தொழில் ஒன்றையே குறிக்கோளாக நம்பி, வாழ்கையின் இனிமையான பக்கங்களை தொலைத்த ஜுலியன் என்ற மனிதருக்கு இந்திய தத்துவங்கள் புதிய வழி காட்டுகின்றன. புத்துணர்ச்சி பெற்ற புது மனிதனாக திரும்ப வந்து தன்னுடன் பணியாற்றிய ஜானிடம் தன் அனுபவங்களைப் பகிந்ர்துகொள்வதே இந்தப் புத்தகம்.

ராபின் சர்மாவின் எழுத்துக்கள் அப்படியே சத்குரு ஜக்கி வாசுதேவின் சிந்தனைனையை ஒத்துப்போகிறது. பாசிடிவ் எண்ணங்களை வளர்த்துக்கொள்வது, எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது, வாழ்கையின் அந்தந்த நிமிடங்களை ரசிப்பது, இயற்கையை போற்றுவது, தினம் யோகா என்று சத்குருவின் தத்துவங்கள் அப்படியே இந்தப்புத்தகத்தில் பிரதிபலிக்கிறது. வறட்டு தத்துவங்களை போதிக்கும் கனத்த புத்தகமாக இல்லாமல் எளிய நாட்டையில் இயல்பான ஆங்கிலத்தில், வாழ்கையை ஆனந்தமாக வைத்துக் கொள்வதைப்பற்றி விளக்கியிருக்கிறார் ஆசிரியர். ஆனந்தமாக இருப்பதற்கு ஒன்றும் மாயவித்தைகள் தேவையில்லை... வாழ்க்கைமுறையை கொஞ்சம் மாற்றி அமைத்துகொண்டால் போதும்.. என்பது இந்தப் புத்தகத்தின் சாராம்சம்.

இதில் குறிப்பிட்டிருக்கும் வாழ்கைக்கு தேவையான உத்திகள் எல்லோருக்கும் பொதுவானவை.. எவரும் பின்பற்றக்கூடியவை.. ஒவ்வொரு பகுதியும் படித்து முடித்தவுடன் ' அட.. சரிதான்' என்று நம்மை நாமே உணரக்கூடியவை. புத்தகம் படித்து முடித்ததும் ஜுலியனைப்போல நாமும் புத்துணர்ச்சி பெற்று புது மனிதனாக உணர்வோம்... நம் எண்ணங்கள் சிறிதளவேனும் தூய்மைப்படுவது உறுதி.

இதில் எனக்கு பிடித்த ஒரு சொலவடை: "வாழ்கையின் இனிமையை அனுபவிப்பதற்கு நேரமில்லாமல் வெறும் பொருள், புகழ் ஈட்டுவதிலேயே கவனம் செலுத்துவது, 'வேகமாக கார் ஓட்டிக்கொண்டிருக்கிறேன்... பெட்ரோல் போட நேரமில்லை' என்பத்தைப் போல.."