Sunday, May 31, 2009

இந்தியா வோட்டு, தமிழனுக்கு வேட்டு

இத்தனை நாள் இலங்கை இனப்படுகொலையை ஏதோ கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதுபோல ரசித்துக்கொண்டிருந்த இந்திய அரசு, கடைசியாக தமிழனுக்கு அந்த துரோக செயலையும் செய்து முடித்துவிட்டது. பல ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் ஐ.நா வில் கொண்டுவந்த மனிதஉரிமை விசாரணையில் இலங்கைக்கு ஆதவாக வோட்டுபோட்டு இலங்கைக்கு தன் விசுவாசத்தை காட்டிகொண்டது. இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளுக்கு இருக்கும் உணர்வுகூட இந்தியாவுக்கு இல்லை... வெட்கக் கேடு..!


இலங்கை போரில் மனித உரிமை மீறல் எல்லாருக்கும் தெரிந்ததே.. தடை செய்யப்பட்ட வெடிகுண்டுகளை பயன்படுத்தியது, மருத்துவமனையில் கல்விநிலையங்களில் குண்டு வீசியது, சொந்த நாட்டு மக்களையே அகதிகளாய் வைத்திருப்பது, போன்றவற்றை ஊடகங்களும் செஞ்சிலுவைச்சங்கமும் படம் பிடித்துக் காட்டியது. இதோ, டைம்ஸ் பத்திரிகை கடைசி கட்ட போரில் 20000 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவலை அளித்துள்ளது. அங்கு செல்ல செஞ்சுலுவை சங்கம் உட்பட இந்த அமைப்புகளுக்கும் அனுமதி இல்லை. போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் சுட்டுத்தளியது இலங்கை இராணுவம்.


ஹிட்லருக்கு பிறகு இந்த உலகத்தில் மிகப்பெரிய மனித பேரழிவை நடத்திக்காட்டியிருகிறது இலங்கை அரசு. (ஹிட்லர் கொன்று குவித்த யூதர்களின் எண்ணிக்கை இலங்கை தமிழர்களைவிட அதிகம் என்பதால் ஹிட்லருக்கு பிறகு ராஜபக்க்ஷே அரசு என்று சொல்லலாம் -மற்றபடி இனவெறி ஒன்றுதான்). அதுபோல ஹிட்லர் நடத்திய concentration campக்கும் இலங்கை அரசு நடத்தும் அகதிகள் முகாமுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.

தக்குனூன்டு நாடு இலங்கை.. சராசரி இந்திய மாநிலங்களைவிட சிறியது. இருந்தாலும் இந்தியாவுக்கு தட்டிகேட்க திராணியில்லை... தமிழனுக்கு நாதியில்லை.. தென்கிழக்கு ஆசியாவில் இந்தியா ஒரு வல்லரசா அல்லது வலிமை இழந்த அரசா? இந்தியாவுக்கு இலங்கையினாலேயே ஆபத்து காத்திருக்கிறது என்பதை உணருகிறதா இந்திய அரசு? இதோ, சீனா இலங்கையில் கடற்படையை அமைத்துக்கொள்ள இடம் தேடிக்கொண்டுகிறது. பல துறைமுகங்கள் சீன உதவியுடன்தான் இலங்கையில் கட்டப்படுகினறன. பாகிஸ்தான் இலங்கைக்கு ஆயுதங்களை வினியோகித்துக் கொண்டேயிருக்கிறது.


இவையெல்லாம் தெரிந்தும் இந்தியா இலங்கைக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை... எல்லாவற்றுக்கும் மேலாக ஐ.நாவில் இலங்கைக்கு ஆதரவாகவும் வோட்டு போட்டுள்ளது. அடுத்தது டெல்லி வரப்போகும் ராஜபக்க்ஷேக்கு சிவப்பு கம்பளம் விரிக்க மன்மோகன் சிங்கும் எஸ்.எம்.கிருஷ்ணாவும் தயாராகி விட்டனர். ஏனென்றால் அங்கு படுகொலை செய்யப்பட்டது தமிழ் இனம்தானே.. சீக்கியர்களோ அல்லது ஆஸ்திரேலியா-வாழ் இந்தியர்களோ இல்லையே?


தமிழ்ப் பிணக்குவியல்களை ஒட்டுமொத்தமாக தகனம் செய்து அந்த சாம்பலின் மீது வெற்றிக்கொடி நட்டிருக்கும் இலங்கை ராணுவத்தினருக்கு இந்த வோட்டு மூலம் ஆறுகோடி தமிழர்களை கொண்ட இந்திய தேசம் அங்கீகாரம் அளித்திருக்கிறது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்