Tuesday, July 17, 2012

கட்சி கொடி இருந்தால் சுங்கம் ரத்து


கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பழைய மகாபலிபுரம் சாலையில் (ராஜீவ் காந்தி சாலை) பெருங்குடி முதல் நாவலூர் வரை சுங்கசாவடி அமைத்து கார், பஸ் மற்றும் கனரக வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்துக்கொண்டிருக்கிறார்கள். இதை நிர்வகிப்பது தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்துறை (TNRDC). ஏற்கனவே இது மிக அதிகம் என்று பலர் புலம்பிக் கொண்டிருக்கும் வேளையில் இப்போது ஜூலை முதல் கட்டணத்தை வேறு உயர்த்தியிருக்கிறார்கள். புதிய கட்டணத்தின்படி இந்த சாலையில் ஒருமுறை சென்று திரும்புவதற்கு கார்களுக்கு 38 ரூபாயும் பஸ்களுக்கு 100 ரூபாயும் வசூலிக்கப்போகின்றனர்.


ஆனால் இந்த கட்டணமெல்லாம் சில குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டும் கிடையாது... அது வேறு எதுவும் இல்லை.. கட்சி கொடியோ அரசியல் தலைவர்கள் படங்களோ உள்ள வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்பது இங்கு எழுதப்படாத விதி. அவர்கள் மட்டும் இலவசமாக எவ்வளவுமுறை வேண்டுமானாலும் இந்த சாலையை உபயோகப்படுத்தாலாம். கட்சி கொடிகள் உள்ள வாகனங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது என்பது தினமும் நடக்கும் ஒரு நிகழ்வு. நான் இதைப் பற்றி அந்த சுங்கசாவடி அதிகாரிகளிடம் பலமுறை கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்கள் "என்ன சார் செய்வது.. அவர்களிடம் கட்டணம் கேட்டால் தகராறு செய்கிறார்கள்.. அதனால் அவர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்பது மேலிடத்து உத்திரவு" என்றார்.

ஆனால் ஒன்று... இந்த 'கட்சி கொடி' சலுகையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது... எல்லோருக்கும் இந்த சலுகையில் சமத்துவம். என்ன.. போன வருடம் மே மாதம் வரை தி.மு.க வாகனங்கள் பெரும்பான்மையாக இருக்கும்.. இப்போது அ.தி.மு.க வாகனங்கள்... அவ்வளவுதான் வித்யாசம். சில தே.தி.மு.க, ப.ம.கா கொடிகள் உள்ள வாகனங்கள் கூட கட்டணம் செலுத்தாமல் செல்வதை நான் பார்த்திருக்கிறேன். இந்த நாட்டில் பொதுமக்களுக்கு ஒரு விதி, அரசியல்வாதிகளுக்கு ஒரு விதி என்பது சுங்கக்கட்டணத்திலும் கூட பிரதிபலிக்கிறது.

இந்த சாலையில் தினமும் காரில் பயணிபவர்களுக்கு ஒரு டிப்ஸ்... 50 ருபாய் செலவழித்து எதாவது ஒரு கட்சிக்கொடியை உங்கள் காரில் மாட்டிவிட்டால் போதும்... தினமும் 38 ருபாய் மிச்சப்படுத்தலாம்.

Monday, July 9, 2012

அவிழும் பிரபஞ்ச ரகசியம்

இந்த பிரபஞ்சத்தின் துவக்க புள்ளிதான் இதுவரை கண்டுபிடிக்கப்படாத ஒரு பிரம்மாண்ட ரகசியம். மனிதனின் அறிவியல் அறிவு வளரவளர அவன் தன் தோற்றத்தின் ரகசியம், தனக்கு முன் தோன்றிய உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி என்பதிலிருந்து உயிரினங்கள் தோன்றுவதற்கு முன் இந்த பூமியின் அமைப்பு, சூரியனின் பிறப்பு, பால்வீதி மண்டலம் உருவானது, அதற்கெல்லாம் முன்னதாக ஒரு மகா வெடிப்பின் மூலம் இந்த பிரபஞ்சம் உருவானது வரை எல்லாம் கண்டறிந்துவிட்டான். அனால் அந்த மகா வெடிப்பின் காரணம் மட்டும் இன்னும் கண்டுபிடிக்க படாமலே இருந்தது. அங்கேதான் கடவுள் இருக்கிறார்.. அங்கேதான் கடவுளின் படைப்பு துவங்குகிறது என்று எல்லா மதங்களும் சொல்லி வந்தன.

இந்த மகா வெடிப்பு நிகழ்ந்தது 13 .75 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு.. அங்கிருந்துதான் பிரபஞ்ச சரித்திரம் துவங்குகிறது.... அதற்க்கு முன் எந்த சரித்திரத்துக்கும் வாய்ப்பு இல்லை. பல அணுத்துகள்களின் ஒட்டுதல்-உரசுதல் காரணமாக நடந்த அந்த மகாவெடிப்பின் பயனால் பல நட்சத்திர மண்டலங்கள் உருவாகி அவற்றிலிருந்து பல நட்சத்திரங்கள், அதிலிருந்து கோள்கள், துணை கோள்கள் என்று பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. அந்த வெடிப்புக்கு உறுதுணையாக இருந்த முக்கியமாக இருந்த ஒரு அணுத்துகளை கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானிகள் குழம்பிக்கொண்டிருந்தார்கள். அந்த அணுத்துகள் இப்படிப்பட்ட தன்மைதான் கொண்டிருக்கும் என்று பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானி 1964 ல் கூறியதால் அவர் பெயரையே அதற்கு வைத்து ஹிக்ஸ் துகள் என்றார்கள். இதைப்பற்றி யாருக்கும் ஒன்றும் புரியாததால் பின் 'சரி இது ஏதோ கடவுளின் செயல் போலிருக்கிறது என்று நினைத்து 'கடவுள் துகள்' என்று நாமகரணம் சூட்டிவிட்டார்கள்.

இன்று அந்த ரகசியமும் அவிழ்ந்து விட்டது. ஐரோப்பிய அணு ஆராய்ச்சி கழகம் (CERN ) ஒரு செயற்கை மகாவெடிப்பை நிகழ்த்தி ஆய்வுசெய்து கடவுள் துகள் தன்மையை ஒத்த ஒரு அணுத்துகளை கண்டுபிடித்து விட்டார்கள். படைப்பின் மூலம் அறியப்பட்டு விட்டது. இனி இதுதான் கடவுள் துகளா என்று ஆராயவேண்டும்.. இது ஒரு ஆரம்பம்தான், இன்னும் கண்டறியவேண்டியது நிறைய இருக்கிறது. இந்த பிரபஞ்சத்துக்கு முன்னால் எதாவது இருந்ததா அல்லது இதைபோல் வேறு பிரபஞ்சகள் உண்ட என்ற கேள்விகள் விஞ்ஞானிகளின் மூளையை குடைந்துகொண்டே இருக்கும்..!

Sunday, November 13, 2011

குமரகம்... கடவுளின் தேசத்தில்...

ஏலேலோ ஐலசா
படகு வியாபாரம் 
ஓபராய் ஹோட்டலின் 10 படுக்கைஅறை படகு 
நீரில் முகம்பார்க்கும் தென்னைகள்
எழில்மிகு வேம்பநாட் ஏரி
வாழ்கையே படகில்தான்..
ஏரிக்கரையோர ரிசார்ட் 
3 படுக்கைஅறை படகு 
வீட்டுக்கு வீடு படகு
வாத்துக் கூட்டம் 
சூரிய ஒளியில் தகதகக்கும் ஏரி 
ஒற்றை படகு சவாரி

Thursday, April 14, 2011

'49ஓ'வின் நிலைமை..


நான் அடையாறிலிருந்து துறைபாக்கதுக்கு வீடு மாறி வந்ததால் வாக்காளர் பட்டியலில் என்பெயரை பதிவுசெய்ய விரும்பினேன். எங்கள் பகுதியில் நடந்த ஒரு முகாமில் மூன்று படிவங்களை கொடுத்து (நான், என் மனைவி, என் தாய்) புகைப்படத்துடன் பதிவுசெய்துகொண்டேன். ஆனால் வாக்காளர் அட்டை என் மனைவிக்கு மட்டுமே கிடத்தது.

சோளிங்கநல்லூர் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் என்  மனைவி  49ஓ பதிவு செய்ய முயன்றார். அங்கிருந்த தேர்தல் அதிகாரி அதெல்லாம் முடியாது எங்களுக்கு வேலை பளு அதிகம் என்று கூறி மறுத்துவிட்டார். " உங்களுக்கு சுலபம்தான்..நீங்கள் பாட்டுக்கு கையெழுத்து போட்டுவிட்டு போய்விடுவீர்கள்.. எங்களுக்கு எவ்வளவு வேலை...!" என்ற விளக்கம் வேறு.. எனக்கு யாருக்கும் வோட்டுபோட விருப்பம் இல்லை என்று என் மனைவி கூறியும் "அதெல்லாம் முடியாது.. வெளியில் சென்று பட்டியலைப் பார்த்துவிட்டு யாருக்காவது வோட்டு போடுங்கள்" என்று கண்டிப்பாக கூறிவிட்டார். அந்த இடத்தில் சத்தம் போட விருப்பம் இல்லாமல் என் மனைவி கடைசியில் ஏதோஒரு சுயர்சைக்கு வோட்டுபோட்டுவிட்டு வெளியில் வந்தார்.

விஷயத்தை கேள்விப்பட்டு நான் தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டேன்.. புகார் பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும் என்றேன்.. உடனே அந்த அதிகாரி "சாரி சார்.. புகார் செய்தால் எங்கள் வேலை போய்விடும்.. இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்துகொள்கிறோம்" என்று சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார்.

இதை பார்த்து வோட்டுபோட வரிசையில் நின்றவர்கள் (எங்கள் குடியிருப்பில் உள்ளவர்கள் - படித்தவர்கள்) என்ன குழப்பம் என்று கேட்டார்கள்... விளக்கினேன்.. அதற்க்கு அவர்கள் பதில்:

"என்ன... 49ஓ என்றெல்லாம் கூட ஒன்று இருக்கிறதா?"

Tuesday, March 29, 2011

ஓட்டு...!


பரிதாப ஓட்டு...
பணத்துக்கு ஓட்டு...

சினிமா ஓட்டு...
சாதிக்கு ஓட்டு...

கோப ஓட்டு...
கள்ள ஓட்டு..

இப்போது-
இலவச ஓட்டுரிமையை
இலவசங்களுக்கு விற்ற ஓட்டு..

பாரதத்தில் எப்போது விழும்
பகுத்தறிவு ஓட்டு?

 

Thursday, December 30, 2010

வாவ்... தாஜ்...


Sunday, December 26, 2010

தாஜ்மஹால் தரிசனம்

தாஜ்மஹால்.. இதை பாடாத கவிஞர்கள் இந்தியாவில் இல்லை.. இதை வரையாத ஓவியர்கள் இல்லை.. இதன் குறிப்புக்கள் இல்லாத பாடபுத்தகங்களும் இல்லை.. காலங்காலமாய் காதலின் கருப்பொருளாய் அழகின் அடையாளமாய் சித்தரிக்கப்பட்ட ஒரு மாளிகை.. இந்திய சுற்றுலாவின் சின்னம்..

சின்ன வயதிலிருந்தே ஓவியங்களாகவும் புகைப்படங்களாகவும் திரைப்படங்களாகவும் மனதில் பதிந்த ஒரு பிம்பத்தை நேரில் பார்க்கும் போது எப்படியிருக்கும்? ஆக்ரா பிரதான சாலையிலிருந்து தாஜ்மஹால் இருக்கும்  இடத்திற்கு ஒட்டகத்தில் வந்து இறங்கினோம். முன்னால் ஒரு பெரு மண்டபம்... சற்றே குறுகலான வாயில்.. அதன் வாசலை நெருங்கும் வரை தாஜ்மஹால் இருக்கும் இடமே தெரியவில்லை. அதைக்கடந்தவுடன் நம் முன்னால் வாவ்.. நிஜ தாஜ்மஹால்... உலக அதிசயத்தை தரிசித்துக்கொண்டிருகிறோம் என்கிற பிரமிப்பே வாய் பிளக்கவைகிறது.  சட்டென்று தாஜ்மஹாலை தரிசிக்கும்போது நம் உடலில் ஏற்படும் மெல்லிய சிலிர்ப்பை அடக்க முடியவில்லை.

தாஜ்மஹால் ஏன் உலக அதிசயம்? இதில் மூன்று விஷயங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.. இதன் அழகு, இதிலுள்ள அதிநுட்ப நுணுக்கம் மற்றும் இதன் நேர்த்தி.. இந்த மூன்றும் சேர்ந்துதான் இன்று தாஜ்மஹாலை உலகத்தின் சிறந்த கலைப்படைப்பாக விளங்க வைக்கிறது. தாஜ் அழகுபற்றி சொல்லவே வேண்டாம். இருபுறமும் உள்ள தோட்டங்களை ரசித்துவிட்டு தாஜ்மஹால் செல்வதற்கே கொஞ்ச நேரம் பிடிக்கிறது. தாஜ்மகாலில் ஒவ்வொன்றும் மிக நுட்பமாக  அதி கவனத்துடன்  அமைக்கப்பட்டிருகிறது. முதல் வாயிலைக்கடந்தவுடன் கொஞ்சம் சிறியதாக தெரியும், அனால் அருகே செல்ல செல்ல அதன் பிரமாண்டம் அதிகரிக்கும். பின் அந்த பளிங்கு மாளிகையின் படிகளில் ஏறினால் மேல்கூரைகூட தெரியாது. தாஜ்மஹாலை சுற்றியுள்ள நான்கு தூண்களும் சற்றே சாய்ந்து இருக்கும். ஏதாவது அசம்பாவிதம் நடந்து அந்த தூண்கள் விழுந்தாலும் தாஜ்மஹாலில் விழாது. தாஜ்மஹால் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் உலோக தூண் பாரசீக மற்றும் இந்து குறியீடுகளை கொண்டது. முதலில் தங்கத்தினால் செய்யப்பட்ட இதை எடுத்துவிட்டு  ஆங்கிலேயர்கள் பித்தளை தூணாக மாற்றினார்.

இந்த அதிஅற்புதமான கட்டிடதுக்குப்பின் 22000 பணியாளர்களின் 20 வருட உழைப்பு இருக்கிறது, உலகின் தலை சிறந்த நிபுணர்களின் கைவண்ணம் இருக்கிறது. மேலும் இதன் பணிகளுக்கு கிட்டத்தட்ட ஆயிரம் யானைகள் உபயோகப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. அந்த காலத்திலேயே 3.5 கோடி ருபாய் செலவு பிடித்தது  (அப்போது சுப்ரீம் கோர்ட் எல்லாம் இல்லை.. யாரும் பொதுநலவழக்கு தொடரமுடியாது).. இருக்காத பின்னே.. இங்கு பதிக்கப்பட்ட ஒவ்வொரு கற்களும் உலகத்தின் பலதிசைகளிருந்து எடுத்து வரப்பட்டன.. ராஜஸ்தானிலிருந்து பளிங்கு கற்கள், சீனாவிலிருந்து நீலப்பச்சை கற்கள் மற்றும் படிகங்கள், அரேபியாவிலிருந்து இரத்தினக்கல், பஞ்சாபிலிருந்து சிலிகன் கற்கள், இலங்கையிலிருந்து நீலக்கல், மற்றும் ஆப்கனிஸ்தான், திபெத், ஐரோப்பாவிலிருந்துகூட சில பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

ஆனால் இவையெல்லாம் விட அந்த வெள்ளை மாளிகையில் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது. எவ்வளவு முறை திரைப்படங்களிலும் புகைப்படங்களிலும் பார்த்திருந்தாலும், நேரில் பார்க்கும்போது தாஜ்மஹாலின் அழகிலும் நேர்த்தியிலும் லயித்துபோகாமல் இருக்கமுடியவில்லை. இதற்கு காதல் பின்னணியும் ஒரு காரணமாக இருக்கலாம்.. ஏனென்றால் முகலாய சாம்ராஜ்யத்திலும் சரி.. மற்ற சாம்ராஜ்ஜியகளிலும் சரி.. இன்று பாரம்பரிய இடங்களாக திகழ்பவை கோட்டைகளும் அரண்மனைகளும், சமாதிகளும் தான்.. கோட்டைகள் தங்கள் வெற்றியை நிலைநாட்டவும் தங்களின் பாதுகாப்புக்காகவும் கட்டப்பட்டவைகள்.. அரண்மனைகள் தான் எவ்வளவு பெரிய சக்கரவர்த்தி என்பதை உலகுக்கு காட்டுவதற்காக கட்டப்பட்டவை.. பெறும் பொருட்செலவில் கட்டப்படும் சமாதிகளும் இதே  காரணங்களுக்காகத்தான்.. ஆனால் தாஜ்மஹால் அன்பினால் காதலினால் ஈர்க்கப்பட்டு ரசித்துக் கட்டப்பட்டது.. அதனால்தான் அந்த மாளிகையில் 400 வருடங்கள் கடந்தும் இன்னும் ஒரு ஜீவன் இருப்பதை மறுக்கமுடியாது.

தாஜ்மஹால் ஒரு காதல் சின்னம் என்பதில் கருத்து வேறுபாடுகள் இல்லை. ஆனாலும் சில விஷயங்கள் நெருடுகிறது. ஷாஜஹானுக்கு மும்தாஜ் மூன்றாவது மனைவிதான். (மற்ற இரு மனைவிகளுக்கும் தாஜ்மஹலுக்கு இடப்புறமும் வலப்புறமும் 'கொஞ்சம் சாதரணமான' சமாதிகள்.. அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று தெரியவில்லை..) ஷாஜஹானுடன் வாழ்ந்த 18 வருடங்களில் 14 குழந்தைகளை ஈன்றெடுத்து, கடைசி பிரசவத்தில் இறந்து போனார் மும்தாஜ். தன் வாழ்நாளில் பாதிநாட்கள் கர்ப்பிணியாகவே இருந்திருக்கிறார். அதுமட்டும்இல்லாமல் போர்க்களத்துக்கு செல்லும்போதும் கூட ஷாஜஹான் மும்தாஜை கூடவே அழைத்துச்சென்றதாக குறிப்புகள் உள்ளது. இதனால் மும்தாஜ் ஷாஜஹானுடன் சந்தோஷமாக நிம்மதியாக வாழ்திருப்பது சந்தேகம்தான். ஷாஜஹான் மும்தாஜை ஒரு அழகுப்பதுமையாக பார்த்து கண்மூடித்தனமாக காதலித்தாரே தவிர ஒரு மனைவிக்கு  உண்டான  மரியாதையை கொடுத்திருக்கமாட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. இது ஷாஜஹானுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கலாம். இதனால்தான் மும்தாஜ் இறந்தபிறகு, தான் ஒரு சக்கரவர்த்தி என்பதையே மறந்து அரசு அலுவல்களில் கவனம் செலுத்தாமல் சில ஆண்டுகள் சோகமாக இருந்திருக்கிறார். கருமையாக இருந்த அவர் தலைமுடி திடீரென முழுவதும் நரைத்துவிட்டதாக செய்திகள் கூறுகின்றன. அதனால் திடீரென மும்தாஜ் நினைவாக ஒரு மாளிகை கட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார்.. ஏற்கனவே பர்ஹான்பூர்  என்கிற இடத்தில்  புதைக்கப்பட்ட மும்தாஜ் உடல் தோண்டிஎடுக்கப்பட்டு இபோது தாஜ்மகால் உள்ள இடத்தில்  அடக்கம்  செய்யப்பட்டது. பின் 20 ஆண்டுகள் தாஜ்மகாலை  கட்டுவதிலேயே  மும்முரமாக  இருந்தார் ஷாஜஹான்.

இது ஒருபுறம் இருக்க பின் பல காரணங்களால் எரிச்சலடைந்த ஔரங்கசீப் (மும்தாஜின் இரண்டாவது மகன்) ஆட்சியை கைப்பற்றி தன் தந்தையை சிறையில் அடைத்தார். ஔரங்கசீப் ஒரு முசுடு.. ஷாஜஹனுக்கு இருந்த கலை ஆர்வம் அவருக்கு இல்லை.. இதுபோன்று மாளிகைகள் கட்டுவதெல்லாம் வீண்செலவு என்று நினைப்பவர். ஷாஜஹானை கைது செய்து ஆக்ரா கோட்டையில் அடைத்த ஔரங்கசீப், அங்கிருந்து ஒரு ஜன்னல் வழியே தாஜ்மஹாலை பார்பதற்கு மட்டும் அனுமதி அளித்திருந்தார். பிறகு ஷாஜஹான் உடல்நலம்குன்றி படுத்தபடுக்கையானபோது ஜன்னல் அருகே ஒரு கண்ணாடி வைத்து அதில் தாஜ்மஹால் பிம்பத்தை கண்டுகொண்டிருந்தார்.  கடைசியாக அந்தக் கண்ணாடியை பார்த்த நிலையிலேயே அவர் உயிர் பிரிந்திருக்கிறது. இப்படியாக எல்லா காதல் சரித்திரங்களைப்போலவே ஷாஜகனின் காதல் கதையும் சோகமாகவே முடிந்திருகிறது. 

ஒரே ஒரு சந்தேகம்...ஷாஜஹான் மும்தாஜை நேசித்தது வேண்டுமென்றால் உண்மையாக இருக்கலாம். ஆனால் மும்தாஜ் ஷாஜஹானை எவ்வளவு தூரம் நேசித்தார் என்று தெரியவில்லை..!

எது எப்படியோ... தாஜ்மஹால் இந்தியாவின் காதல் சின்னம்.. அழகியலுக்கான ஒரு அடையாளம்.. அத்தனை வெளிநாட்டவருக்கும் இந்தியா என்றால் முதலில் நினைவுக்கு வருவது தாஜ்மகால்தான்..
 
இந்தியனாகப் பிறந்துவிட்டு தாஜ்மஹாலை தரிசிக்காமல் இருப்பதில் அர்த்தம் இல்லை.

- இனி என் கேமிரா வழியே தாஜ்மஹால்...