Tuesday, September 29, 2009

தமிழக அரசின் ஜிங்-ஜாங் திரைப்பட விருதுகள்

முன்பெலாம் தூர்தர்ஷன் ஒளியும் ஒளியும் நிகழ்ச்சியில் எம்ஜிஆர் பாட்டுபோட்டால் உடனே ஒரு சிவாஜி பாட்டு போடுவார்கள். கமல் பாட்டு போட்டால் அடுத்தது ரஜினி பாட்டு போடுவார்கள்.. இது அவர்களே வகுத்துக்கொண்ட நியதி.

இப்போது அதே நியதியை தமிழக அரசும் கடைபிடிக்கிறது. 2007, 2008 ம் ஆண்டு சிறந்த நடிகர் விருது கமல்-ரஜினி இருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக
திரை விருதுகளில்தான் சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த வில்லன் (?) சிறந்த சண்டை பயிற்சியாளர் என்ற விருதுகள் எல்லாம் உண்டு. அதாவது ஒரு திரைப்படத்தில் கண்டிப்பாக ஒரு காமெடியன், ஒரு வில்லன், சண்டைகள் இருக்க வேண்டும் என்பது இவர்கள் கருத்து. அதேபோல் நகைச்சுவையில் சிறந்த நடிகர், நடிகை என்கிற இரண்டு விருதுகள் உண்டு. வில்லனுக்கு ஒரே விருது. வில்லி விருதெல்லாம் கிடையாது. (தமிழ் மசாலா சினிமா பார்முலாபடி பெண்கள் வில்லன் வேஷத்தில் நடிக்கக் கூடாது - அப்படியே இருந்தாலும் கடைசியில் திருந்தி விடவேண்டும்). ஆனால் நல்லவேளையாக சிறந்த அம்மா சென்டிமென்ட் படம், தாலி சென்டிமென்ட் படம், சிறந்த பன்ச் டயலாக் போன்ற விருதுகள் கொடுக்கவில்லை.

சிறந்த வில்லன் விருதை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது புரியாத புதிர். எந்த வில்லன் அதிகம் கொலை செய்கிறார், எவ்வளவு பேரை கற்பழிக்கிறார்கள் என்று ஏதாவது ஒரு கணக்கு வைத்திருப்பார்களோ?

இதில்
இன்னொரு கூத்து என்ன தெரியுமா? முதலாவது சிறந்த படம், இரண்டாவது சிறந்த படம், மூன்றாவது சிறந்த படம் என்று மூன்று பரிசுகள் கொடுப்பார்கள். இதைத்தவிர சிறப்பு சிறந்த படம் என்று ஒன்று உண்டு. இதே போல நடிகர்-நடிகைகளுக்கும் சிறப்பு பரிசு உண்டு. அதாவது கிட்டத்தட்ட முன்னணியில் இருக்கும் அத்தனை நடிகர்களுக்கும் எதாவது ஒரு விருது நிச்சயம் (அத்தனை ரசிகர் மன்றங்களையும் திருப்தி படுத்தவேண்டுமே...!)

இனி
அறிவிக்கப்பட்டுள்ள விருதுகளை பார்ப்போம்..

1
. சிறந்த படம் 'சிவாஜி'. சிறந்த இரண்டாவது படம் 'மொழி'. எந்த விதத்தில் சிவாஜி மொழியைவிட சிறந்தது என்று புரியவில்லை. மொழியே புரியாமல் 'ஒருகூடை சன்லைட் ... நான் செக்கச்செவப்பேய்..' என்று பாடியதற்க்கா அல்லது மிகுந்த மொழிப்பற்றுடன் அங்கவை-சங்கவை என்று பெயர் வைத்து 'தமிழின் நிறம் கறுப்பு' என்று அறிவித்தறக்கா? ஸ்ரேயாவின் நளினங்களுக்கா அல்லது 'பழகிப்பார்த்த' கலாச்சாரத்துக்கா?

2. அகில இந்திய அளவிலேயே சிறந்த படமாக காஞ்சிவரம் தேர்வு செயப்பட்டிருகிறபோது தமிழக அரசு அதை கண்டுகொள்ளவில்லை (என் வழி தனிவழி என்று ரஜினி படத்துக்கு விருது கொடுத்திருகிறார்கள்). தேசிய அளவில் தமிழில் சிறந்த படமாக தேர்தெடுக்கப்பட்ட 'பெரியார்' படத்துக்கு வெறும் சிறப்பு பரிசு கிடைத்திருக்கிறது. பெரியாரின் பகுத்தறிவைவிட ரஜினி ஸ்டைல்தான் முக்கியம் என்கிறது தமிழக அரசு.

3. இந்தியாவில் சிறந்த நடிகர் பிரகாஷ்ராஜ்.. ஆனால் அதை நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம்.. ரஜினியைவிட ஒரு சூப்பர் ஸ்டார் இருக்க முடியுமா என்ன? போனால் போகிறது பிரகாஷ்ராஜுக்கு குணச்சிர நடிகர் விருது கொடுத்து விடலாம்.

4. விருதுகள் இன்னும் அலுக்கவில்லை கலைஞருக்கு... சிறந்த வசனகர்த்தாவாக கலைஞரே தேர்வு செய்திருக்கிறார் (ஸாரி.. செய்யபட்டிருக்கிறார்). நல்லவேளையாக அவர் எந்தப்படத்திலும் நடிக்காததால் வாய்ப்பு கமல்-ரஜினிக்கு போனது. ஆமாம்.. விழாவில் இந்த விருதை கலைஞருக்கு யார் கொடுப்பார்கள்? அவர் காலில் அவரே விழுவாரோ?

5. சந்தடிசாக்கில் சந்தோஷ் சுப்பிரமணியம் படமும் ஒரு விருதை வாங்கியிருக்கிறது... ஒரு ரீ-மேக் படத்துக்கு எப்படி விருது அளிக்க முடியும் என்பது வியப்பு..!

6. நல்லவேளையாக சிவாஜி 2007 லும் தசாவதாரம் 2008 லும் வெளியானதால் கமல்-ரஜினி ஜோடிக்கு விருது கொடுப்பதில் சிக்கல் எதுவும் இல்லை. இவை மட்டும் ஒரே ஆண்டில் வெளிவந்திருந்தால் தமிழ்நாடு ஒரு மாபெரும் பிரச்சனையை சந்தித்திருக்கும்.. இலங்கை பிரச்சனை பின் தள்ளப்பட்டிருக்கும். இப்போதும் கமல்-ரஜினி ஜோடி விருதுகளை வாங்கியதால், விஜய்-அஜீத் ஜோடிக்கு இந்தமுறை சான்ஸ் இல்லை. குருவி, வில்லு, ஏகன் போன்ற மகாகாவியங்கள் பரிசீலிக்கப்படவில்லை.

7. தமிழக அரசுக்கு ஒரு யோசனை... விருது கொடுக்க முடியாத நடிகைகளுக்கு முதல் சிறந்த கவர்ச்சி நடிகை விருது, இரண்டாம் சிறந்த கவர்ச்சி நடிகை விருது என்று அள்ளி வீசலாம். அப்படியும் சிலர் விடுபட்டுவிடர்களா? கவலையே இல்லை.. இருக்கவே இருக்கிறது கலைமாமணி விருது..!

இந்த விருதை யார் தேர்வு செய்தார்கள்.. அந்த கமிட்டி மெம்பர்கள் யார் என்று எந்த விவரமும் தெரிவிக்கவில்லை. அது யாராக இருந்தாலும் அவர்களுக்கு கொடுக்க வேண்டியது.. 'சிறந்த ஜிங்-ஜாங்' விருது.


Sunday, September 13, 2009

மாண்டபின் மரம்...


மாண்டபின்
மேலுலகம்
மரங்களுக்கு உண்டு...
தெண்டுல்கரின் மட்டை
சொர்க்கம் என்றது...!
தாதாவின் குண்டாந்தடி
நரகம் என்றது...!

Tuesday, August 25, 2009

குறுக்கெழுத்து - 2

இதை கிளிக் செய்து பிரிண்ட் எடுக்கவும்..




Sunday, August 16, 2009

என் சுதந்திரம்

காலை பத்துமணி விழித்து..

இந்திய
தொலைக்காட்சியில்
முதல்முறையாக வெளியாகும்
அதிரடி ஆக்க்ஷன் படம் பார்த்து..

காந்தி கொள்கைகளில்
குறையாடை மட்டும் கடைபிடிக்கும்
கவர்ச்சி நடிகைகளின் பேட்டி ரசித்து..

வெட்டுகுத்து நாயகர்களின்
அஹிம்சை விளக்கம் கேட்டு..

இரட்டைஅர்த்த
நகைச்சுவையை
குடும்பத்துடன் சிரித்து..

தமிழ்
கொல்லும் தொகுப்பாளினிகளின்
காந்தி விளக்கத்தில் மெய்மறந்து..

காந்தி
-கோட்சேவில் சிறந்தவர் யாரென்ற
பட்டிமன்ற தத்துவத்தில் மூழ்கி..

ஏதேனும்
கலவரம் உண்டாவென
செய்திசேனல்களில் அக்கறையுடன் பார்த்து..

சுகமாகக் கழிந்ததென் சுதந்திரதினம்...!

Tuesday, August 11, 2009

இன்னொரு சுதந்திர தினம்

இந்தியாவுக்கு இன்னொரு
சுதந்திர தினம்..
பாரத மாதா
சீனியர் சிட்டிசனாகிவிட்டாள்...
வயதுக்கு
வருவதற்கு முன்பாகவே..!

Sunday, August 2, 2009

நவீன குரங்கு-குல்லா கதை

குரங்கு குல்லா கதையை நாம் சின்ன வயதில் படித்திருப்போம். அதையே கொஞ்சம் நவீனமாக்கி ஒரு மின்னஞ்சல் உலவிவருகிறது.

ஒரு குல்லா வியாபாரி கூடை நிறைய குல்லாவை எடுத்துக்கொண்டு காட்டு வழியே சென்றபோது ஒரு மரத்தடியில் அமர்ந்து படுத்துத் தூங்கிவிட்டான். எழுந்து பார்த்தபோது அத்தனை குல்லாக்களும் அந்த மரத்தின் மேல் உள்ள குரங்குகளின் தலையில்.. என்ன செய்வது என்று தெரியாத குல்லா வியாபாரி தன் தலையில் உள்ள குல்லாவை எடுக்க குரங்குகளும் அதையே செய்தது. உடனே அவன் தன் குல்லாவை தரையில் போட உடனே எல்லா குரங்குகளும் குல்லாவை கழற்றி தரையில் போட்டது. அத்தனை குல்லாக்களையும் அள்ளிக்கொண்டு வியாபாரி சந்தோஷமாக புறப்பட்டான் என்பது கதை.

ஐம்பது வருடங்களுக்குப் பிறகு...

அந்த குல்லா வியாபாரியின் பேரன், தன் தாத்தா போலவே குல்லா வியாபாரம் செய்வதற்காக அதே காட்டுப்பகுதியில் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது ஒரு மரத்தடியில் உட்கார்ந்து தூங்கினான். கண் விழித்து பார்க்கும்போது அத்தனை குல்லாக்களும் குரங்குகளின் தலையில். பேரன் யோசித்தான்.. தன் தாத்தா சொன்ன கதை ஞாபகம் வந்தது.

தலையிலிருந்து தன் குல்லாவை எடுத்தான்... குரங்குகளும் அதையே செய்தது...

தன் குல்லாவை எடுத்து விசிறிக்கொண்டான்... குரங்குகளும் அதையே செய்தது...

ஆஹா.. தாத்தா வித்தை வேலை செய்கிறதே என்று நினைத்து குல்லாவை தரையில் போட்டான்... ஆனால் குரங்குகள் அதை செய்யவில்லை. மீண்டும் மீண்டும் தன் குல்லாவை தரையில் போட்டுப்பார்த்தான்.. ம்ஹூம்... குரங்குகள் அசையவே இல்லை. அவன் திகைத்துபோய் உட்கார்ந்தபோது, ஒரு குரங்கு குல்லாவை மரக்கிளையில் வைத்துவிட்டு கீழே இறங்கிவந்து அவனை ஓங்கி கன்னத்தில் அறைந்துவிட்டு இப்படிச் சொன்னது:

"உனக்கு மட்டும்தான் தாத்தா இருக்கார்ன்னு நினைப்பா...!"

நீதி 1: நம் ஒவ்வொரு வெற்றியிலிருந்தும் எதிராளி பாடம் கற்றுக்கொள்கிறான் என்பதை மறக்கக் கூடாது.

நீதி 2: ஒரே டெக்னாலஜியை ஐம்பது வருடத்துக்கெல்லாம் உபயோகிக்கக்கூடாது.

Monday, July 20, 2009

தூக்கத்துக்கு விலை என்ன?


கடந்த வாரம் ஓமன் தலைநகர் மஸ்கட் சென்றிருந்தேன். மூன்று நாள் வேலைகளை முடித்துவிட்டு அடுத்த நாள் காலை கிளம்ப வேண்டும். மறு நாள் காலை 10.45 க்கு துபாய்க்கு விமானம். அங்கிருந்து மதியம் 3 மணிக்கு சென்னைக்கு விமானம். முதல் நாள் இரவு டின்னரை முடித்துவிட்டு ஹோட்டல் ரூமில் ரொம்ப நேரம் தொலைக்காட்சியில் மைகேல் ஜாக்ஸனைப் பற்றி ஒரு நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தேன். இரவு 12 மணிக்கு டி.வியை அணைத்துவிட்டு என் அலைபேசியில் காலை 6 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு தூங்கினேன். 6 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு காலை உணவை முடித்துக்கொண்டு ஹோட்டல் பில் செட்டில் செய்துவிட்டு நிதானமாக கிளம்பலாம் என்று திட்டம்.

பொதுவாக அலாரம் அடிப்பதற்கு அரைமணி நேரம் முன்னதாக எனக்கே விழிப்பு வந்துவிடும். அலாரம் அடிக்கட்டும் என்று சும்மா படுத்துக்கொண்டிருப்பேன். இங்கேயும் கொஞ்சம் தூக்கத்துக்கு பிறகு விழிப்பு வந்தது. மணி நாலோ ஐந்தோ இருக்கும் என்று நினைத்து அலாரம் அடிக்கட்டும் என்று கொஞ்சம் புரண்டு படுத்தேன். ரொம்ப நேரமாக அலாரம் அடிக்கவில்லை. இன்னும் அறை இருட்டாகத்தான் இருந்தது. சரி மணி ஆறு ஆக இன்னும் ஐந்து பத்து நிமிடங்கள்தான் இருக்கும் என்று எழுந்து கொண்டேன். பல் துலக்க போனவன் மணி என்னதான் ஆகிறது பார்த்துவிடலாம் என்று நினைத்து அலைபேசியை கையில் எடுத்தேன். அலைபேசி அலாரம் அடிக்கவில்லை... ஷாக் அடித்தது.

மணி காலை 9.45. இன்னும் ஒரு மணி நேரத்தில் விமானம் கிளம்பிவிடும்.

என்னை என்னாலேயே நம்ப முடியவில்லை.. ஜன்னல் திரையை கொஞ்சம் விலக்கிப் பார்த்தேன்.. வெயில் சுளீர் என்று அடித்தது. உண்மைதான்.. கிட்டத்தட்ட பத்து மணி ஆகப்போகிறது. நான்தான் அலாரம் சரியாக வைக்கவில்லை. எனக்கு தலை சுற்றியது... எங்கிருந்து கிளம்பி எப்படி விமானத்தை பிடிப்பது.. அதுவும் பன்னாட்டு விமானம். மூளை வேலை செய்வதற்கு கொஞ்ச நேரம் பிடித்தது..!

சரி.. அடுத்து என்ன செய்வது?

நிச்சயம் இந்த விமானத்தை பிடிக்க முடியாது.. சரி 3மணிக்கு கிளம்பும் துபாய் விமானத்தை பிடித்தால் என்ன? அதற்க்கு மஸ்கட்டிலிருந்து துபாய்க்கு காரில் செல்லவேண்டும்.. அதிவேகத்தில் போனால் கூட 4 மணி நேரமாகும் என்றார் ஹோட்டல் ஊழியர்..! இக்கட்டான நேரத்தில் அந்த ரிஸ்க்கை எடுப்பது என்று முடிவு செய்தேன். சிதறிக்கிடந்த துணிகளையெல்லாம் பெட்டியில் அள்ளிப்போட்டுக்கொண்டு ஹோட்டல் பில் கட்டிவிட்டு காரில் உட்கார்ந்தபோது மணி 10.30.

துபாய்-மஸ்கட் எல்லையில் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருக்கும்... சில சமயம் ஒரு மணி நேரம் கூட கரை நிறுத்திவிடுவார்கள் என்று திடீரென்று கார் டிரைவர் ஒரு வெடிகுண்டைப் போட்டார். கொஞ்சம் குழம்பிய நான் என்ன ஆனாலும் சரி மஸ்கட் விமான நிலயத்துக்கே செல்வது என்று மாற்றி முடிவெடுத்தேன். அடுத்து ஏதாவது ஒரு விமானம் பிடித்து துபாய் சென்றுவிடலாம் என்று திட்டம்.

ஆனால் எந்த ஒரு விமானத்திலேயும் இடம் இல்லை. மஸ்கட்-சென்னை நேரடி விமானத்திலும் இடம் இல்லை.. (இன்று போய் நாளை வா என்றார்கள்). ஒரு சில விமானத்தில் (பஹரின் வழியாக, கத்தார் வழியாக) ஒரே ஒரு டிக்கெட் இருக்கிறது என்பார்கள்..பதிவு செய்யப்போகும்போது "சாரி.. தீர்ந்துவிட்டது" என்பார்கள். இப்படியே மூன்று மணி நேரம் கழிந்தது. கடைசியாக ஒரு டிராவல் ஏஜெண்ட் "ஜெட் விமானத்தில் ஒரு டிக்கெட் இருக்கிறது.. மும்பை வழியாக பயணிக்கவேண்டும்" என்றார்.

யோசிக்கவேஇல்லை.. சரி என்றேன். 106 ரியால் ஆகும் என்றார் (14000 ரூபாய்).. தண்டம் அழுதேன்.. இரவு ஒரு மணிக்குத்தான் விமானம்.. கடைசியாக 12 மணிநேரம் மஸ்கட் விமான நிலையத்திலேயே குப்பைகொட்டி அந்த ஜெட் விமானத்தை பிடித்து மும்பை வந்து சென்னை வந்து சேரும்போது அடுத்தநாள் காலை மணி பத்து.

தூக்கத்துக்கு விலை உண்டா? உண்டு... என் தூக்கத்துக்கு விலை 14000 ரூபாய்...!