Thursday, December 9, 2010

ஆக்ரா பற்றி...

ஆக்ராவில் நாங்கள் தங்கியிருந்தது தாஜ் மஹால் செல்லும் வி.ஐ.பி சாலையில்.. ஆக்ரா ரயில் நிலையத்திலிருந்து தாஜ் மஹால் செல்லும் சாலை, மற்றும் இந்த வி.ஐ.பி சாலை பிரமாதமாக அமைக்கப்பட்டிருக்கிறது, பல வெளிநாட்டவர் வந்து போவதால்.  ஆனால் இந்த வி.ஐ.பி சாலையில் இருப்பது பெறும் தொல்லை என்கிறார்கள் அங்கு வசிக்கும் மக்கள். யாராவது வி.ஐ.பி வந்தால் பாதுகாப்பு கெடுபிடிகள் எக்கச்சக்கமாக இருக்குமாம். கிளிண்டன், முஷாரப் வந்தபோது நான்கு நாட்கள் வீட்டைவிட்டே வெளியில் வரமுடியவில்லையாம்.

அவர்கள் சொன்னமாதிரியே, அன்று தாஜ்மஹாலை பார்க்க காமன்வெல்த் வீரர்கள் வருவதால் அந்த சாலை  போக்குவரத்துக்கு தடை செய்யப்படிருந்தது. முதலில் ஆக்ரா கோட்டை போக தீர்மானித்தோம். ஒரு ஆட்டோக்காரர் குறுக்கு  வழியில் அழைத்துப்போவதாக சொன்னார். மெயின் ரோடுக்கே வராமல் ஆட்டோவை ஆக்ராவின் சந்து பொந்து சாக்கடை மேலெல்லாம் ஒட்டினர். இருபுறம் கழிவுநீர்களுடன் ஒருவர் மட்டும் நடந்து செல்லக்கூடிய பாதைகளில் குடிசைகளை உரசியவாறு சென்றது ஆட்டோ. சில இடங்களில் இரு சக்கரத்தில் மட்டுமே பயணித்தது. தாஜ் மகாலையும் ஆக்ரா கோட்டையையும்  ரசிக்க வந்த நாங்கள் முதலில் கண்டது ஆக்ராவின் சேரிகளைத்தான்.. ஒரு பக்கம்  வி.ஐ.பிக்களை  வரவேற்பதற்காக அழகான தூய்மையான சாலைகள்.. அதே சாலை பக்கத்தில் மிகவும் அசுத்தமான சேரிகள்...

ஆக்ரா கோட்டை.. பல முகலாய மன்னர்கள் வாழ்ந்த இடம்... ஷாஜஹான் சிறை வைக்கப்பட்ட இடம்... இன்று  யுனஸ்கோவால்  அங்கீகரிக்கப்பட்ட கலாச்சார மையம். கோட்டைக்குள் உள்ளுக்குள் பல கட்டிடங்கள் பற்பல வேலைப்பாடுகள், அலங்காரங்கள் இருக்கின்றன.. பல மன்னர்களால் புதுபிக்கப்பட்ட இந்த கோட்டையின் ஒரு மாடத்திலிருந்து தூரத்தில் அந்த பளிங்கு மாளிகை தெரிகிறது. 

ஆக்ராவில் எல்லா முகலாய மன்னர்களுக்கும் அவர்கள் மனைவிகளுக்கும் சமாதிகள் இருக்கிறது.. சில இடங்களில் பல சமாதிகள் ஒரே கட்டிடத்துக்குள் அமைந்துள்ளன. இவற்றுள் என்னை கவர்ந்தது ஆக்ரா அருகே சிகந்தரில் உள்ள அக்பர் சமாதி. இருபக்கமும் உள்ள பெரிய புல்வெளிகளில் மான்களும் மயில்களும் மேய்ந்துகொண்டிருக்க கிட்டத்தட்ட 120 ஏக்கரில் அமைந்துள்ளது. பார்பதற்கு ஹுமாயுன் சமாதி போலவே இருக்கிறது.

கடைசியாக தாஜ் மகாலுக்கு செல்வதற்கு ஆட்டோவில் ஏறினோம். முன்பு வந்தவர் அதிரடி ஆட்டோக்காரர் என்றால் இவர் அப்பாவி ஆட்டோகாரர். 20 ரூபாய் கேட்டார்..  ஏறி உட்கார்ததும் தாஜ்மகால் திறக்க இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது என்றார் 'இதை முதலிலேயே சொல்லவேண்டியதுதானே.. அத்தனை நேரம் நாங்கள் என்ன செய்வது' என்று லேசாக கடித்துகொண்டோம். அதற்கு அவர் 'பிரச்சனையில்லை.. உங்களை மார்கெட் பகுதியில் இறக்கி விடுகிறேன்.. நீங்கள் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்.. அதுவரை காத்திருக்கிறேன்' என்றார். ஒரு 20 ரூபாய்க்காக முக்கால் மணிநேரம் காத்திருந்து எங்களை தாஜ்மகால் வாசலில் இறக்கி விட்டார். அதேபோல தாஜ் வாசலிலிருந்து தாஜ்மஹால் வரை ஒட்டக சவாரி 4 பேருக்கு வெறும் 20 ருபாய்...! தாஜ்மகாலில் ஒரு கைடு 100 ரூபாய்க்கு 2 மணி நேரம் எங்களுடனே இருந்து எல்லாவற்றையும் அற்புதமாக விளக்கினார். காலையிலிருந்து நீங்கள்தான் முதல் போணி என்று வேறு சொன்னார். உலகத்தின் முக்கியமான ஒரு சுற்றுலாதலத்தில் அதுவும் வெளிநாட்டவர்கள் மொய்க்கும் ஒரு இடத்தில் ஏன் இப்படி ஒரு வறுமை என்று புரியவில்லை.

இனி தாஜ் தரிசனம்..!

- பயணம் தொடரும்

1 comment:

Priya Ravishwaran said...
This comment has been removed by the author.

Post a Comment

உங்கள் கருத்துக்கள்