Sunday, September 7, 2008

ஒரு திறந்தவெளி அருங்காட்சியகம்

(2008 அமுதசுரபி தீபாவளி மலரில் வெளிவந்தது)

ஒரு நகரத்திற்கு அழகு சேர்ப்பவை அதன் புராதனமான கட்டிடங்கள். உலகின் எந்த ஒரு நகரமாக இருந்தாலும் அதன் பாரம்பரியமிக்க கட்டிடங்கள் அல்லது கோபுரங்கள்தான் அந்த நகரின் அடையாளமாகக் காட்டப்படும். உதாரணத்திற்கு சென்னைக்கு சென்ட்ரல் ரயில்நிலையம்... கொல்கத்தாவிற்கு விக்டோரியா அரண்மனை..

ஆனால் ஒரு நகரம் முழுவதுமே இதுபோல அழகான கட்டிடங்களும் தொன்மையான கோட்டைகளும் இருந்தால்.. நினைக்கவே பிரமிப்பாக இருக்கும் அந்த நகரம் ஐரோப்பாவின் மிக அழகான நகரமாகக் கருதப்படும் பிராக்.. செக் குடியரசின் தலைநகரம்.

பிராக் விமான நிலையத்திலிருந்து நகருக்குள் நுழையும் போதே 'இது என்ன.. காலச்சக்கரம் இருநூறு முன்னூறு ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்டதோ' என்ற ஐயம் ஏற்படுவதை தடுக்க முடியாது. இங்கு நம்மை வரவேற்பது வானுயர்ந்த கட்டிடங்களோ கண்ணாடி மாளிகைகளோ இல்லை. எல்லாமே பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் பழமையான கட்டிடங்கள். எல்லா கட்டிடங்களையும் ஏதாவது ஒரு அழகிய வேலைப்பாடு அல்லது சிற்பம் அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. அந்த கட்டிடங்களில் சிறிதும் பெரிதுமாக கூர்பான கோபுரங்கள், நுனி முதல் அடி வரை பல சிற்ப வேலைபாடுகள், பல கோபுரங்களில் உச்சியில் கடிகாரங்கள் என்று திரும்பிய இடங்களெல்லாம் வியாபித்திருக்கும் அற்புதங்களைக் கொண்ட இந்த பிராக் நகருக்கு 'நுறு கோபுரங்களின் நகரம்'. 'தங்க கோபுர நகரம்' என்ற பட்டப்பெயர்கள் பொருத்தமானதுதான்..!

பிராக் பத்து லட்சம் மக்களே வசிக்கும் சிறிய நகரம். அதன் மையப்பகுதியில் விசாலமான சாலைகள் எதுவும் கிடையாது. முழவதும் நிறைய சந்துபொந்துகள்தான்.. ஆனால் அவ்வளவும் கல்தரைகளால் அமைக்கப்பட்ட அழகான சந்துபொந்துகள்.. அந்தக் குறுகிய இடங்களிலும் டிராம் வண்டிகள் வளைந்து வளைந்து செல்வது இன்னும் கூடுதல் அழகு.

பிராக் மையப்பகுதியை நடந்துசென்றே காணும் அளவிற்கு அது ஒரு திறந்தவெளி அருங்கட்சியகம். எந்தப்பக்கம் திரும்பினாலும் எந்த சாலைக்குள் நுழைந்தாலும் ஏதாவது ஒரு கட்டிடம் நம்மை கவர்திழுக்கும். நிஜமாகவே 'பிராக்' பார்த்துக்கொண்டுதான் பிராக் நகர சாலைகளை கடக்கமுடியும். அதுவும் புகைப்படபிரியர்களைப்பற்றி சொல்லவே வேண்டாம்.. இந்த திறந்தவெளி அருங்கட்சியகத்தில் எந்த இடத்தில் கேமிராவை வைத்தாலும் 'வாவ்' என்று சொல்லக்கூடிய ஒரு புகைபடத்திற்கு உத்திரவாதம் உண்டு.

இங்கு எதையுமே சாதரண கட்டிடம் என்று ஒதுக்கிவிடமுடியாது. இங்குள்ள ஒவ்வொரு கட்டிடங்களிலும், கோட்டைகளிலும், கோபுரங்களிலும் எதாவது ஒரு தனித்தன்மை ஒளிந்திருக்கும். ஒவ்வொன்றும் மற்றொன்றைவிட எதாவது ஒரு விதத்தில் சிறந்ததாக இருக்கும். சாதாரண ஜன்னல்களில் கூட வியப்புமிகு வேலைப்பாடுகளுடன் இருக்கும் மேல்தடுப்பிலிருந்து அதன் கட்டிட அமைப்புவரை பல வித்தியாசங்கள்..! கட்டிடங்கள் மட்டுமல்லாமல் தெருவுக்குதெரு அமைக்கப்பட்டிருக்கும் அற்புதமான சிலைகளையும் பார்க்கும்போது அந்தக் காலகட்டங்களில் பிராக் நகரம் சிற்பிகளின் சொர்கமாக இருந்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

பிராக் நகரில் நம்மை ஈர்க்கும் விஷயங்கள் பலப்பல.. அவைகளில் முக்கியமானது அழகிய வில்தாவா நதியின் குறுக்கே அமைக்கப்படுள்ள சார்லஸ் பாலம், விண்ணை முட்டும் பிராக் கோட்டை மற்றும் வானவியல் கடிகாரம்.

நான்காம் சார்லஸ் பதினாலாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சார்லஸ் பாலத்தில் இரு பக்கங்களிலும் அழகான முப்பது சிலைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. எல்லாம் பல பாதிரியார்கள் மற்றும் கிருத்துவத்தை விளக்கும் சிலைகள்! வில்தாவா நதியில் ஏற்பட்ட பல வெள்ளங்களை தாங்கி 600 வருடங்களாக இன்னும் நிலைத்துநிற்கின்றது இந்த கற்பாலம். அந்தி நேரத்தில் வில்தாவா நதியில் கதிரவன் கரைந்து கொண்டிருக்க சார்லஸ் பலமும் அதன் பின்னணியில் தெரியும் பிராக் கோட்டையும் பார்ப்பதற்கு கொள்ளை அழகு..! இந்தக்காட்சியை புகைப்படம் எடுப்பதற்காகவே மாலை நேரங்களில் அங்கு சுற்றுலா பயணிகள் குவிகிறார்கள்.

பிராக் கோட்டை ஒன்பதாம் நுற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டு பின் பல மன்னர்களால் தொடர்ந்து விரிவாக்கப்பட்டது. கோட்டை, அரண்மனை, தேவாலயம், தோட்டங்கள் என்று பல இடங்களை உள்ளடங்கியிருக்கும் இந்தக் கோட்டையில் இருபதாம் நுற்றாண்டில் கூட சில பகுதிகள் கட்டி முடிக்கப்பட்டன. பல மன்னர்கள் ஆண்டுவந்த இந்தக் கோட்டை, என்று செக் ஜனாதிபதியின் அதிகாரபூர்வமான மையம். கின்னஸ் சாதனைப்படி உலகிலுள்ள பழம்பெரும் கோட்டைகளில் பெரியது பிராக் கோட்டைதான்..!

பிராக் நகரின் தவிர்க்க முடியாத இன்னொரு இடம் பழைய டவுன் ஹால் கோபுரத்தில் அமைந்துள்ள வானவியல் கடிகாரம். சூரியன், சந்திரன் மற்றும் பூமியின் பல நிலைப்பாட்டைக் குறிக்கும் இந்தக்கடிகரம் 1410 ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் பின்னணியில் பல கதைகள் உண்டு..! இந்தக் கடிகாரத்தை வெற்றிகரமாக நிறுவிய ஹனுஸ் என்ற மேதைக்கு பல வெளிநாடுகளிலிருந்து அழைப்பு வந்தது. இதனால் கோபமடைந்த பிராக் நகர கவுன்சிலர்கள், இவர் இதேபோல் இன்னொரு கடிகாரத்தை நிறுவக்கூடாது என்பதற்காக ஹனுஸ் கண்களை குருடாக்கிவிட்டார்களாம். ஹனுஸ் இறப்பதற்கு முன்பு இந்தக் கடிகாரத்தின் பல பாகங்களை உடைத்துவிட்டு இதை சரிசெய்பவர்கள் பைத்தியமாக அலைவார்கள் என்று சாபமும் கொடுத்துவிட்டாராம். (இதை சிலர் பின்னணிக் கதை என்கிறார்கள்... சிலர் பின்னப்பட்ட கதை என்கிறார்கள்..) பல முறை பழுது பார்க்கப்பட்டாலும், நுர்ர்ர்ரண்டுக்கணக்காக ஓடிக்கொண்டிருந்த கடிகாரத்திற்கு இரண்டாம் உலகப்போரின் இறுதி நாட்களில் மீண்டும் சோதனை ஏற்ப்பட்டது. போரில் தூற்று பிராக் நகரை விட்டு வெளியேறும் தறுவாயில் இருந்த நாஜிப்படையினரால் இந்த கடிகாரத்தின் கோபுரம் கொளுத்தப்பட்டது. கடிகாரத்தின் பல பாகங்கள் சிதைந்துபோன நிலையில் பின்னர் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

இத்தகைய புராதனமான சின்னங்களைத்தவிர, ஜொலிக்கும் முகர்ப்பைக்கொண்ட யூத கோவில், பழம்பெரும் செயின்ட் ஜார்ஜ் தேவாலயம், செக் பாரம்பரியத்தை விளக்கும் தேசிய அருங்காட்சியகம் என்று பிராக் நகரின் பார்க்கவேண்டிய பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

பிராக் நகரில் எப்படி இவ்வளவு பொக்கிஷங்கள் பல நூற்றாண்டுகளாய் பாதுகாக்கப்படுகின்றன? இது எப்படி சாத்தியமாயிற்று? மற்ற நாடுகளைப்போல் செக் குடியரசு கடந்துவந்த வரலாற்றுப் பாதை கொஞ்சம் கரடுமுரடனதுதான். ஆனால் தொன்று தொட்டு இந்த நாட்டை ஆண்ட பல மன்னர்கள் இந்த பாரம்பரியத்தை காப்பாற்றியதோடு மட்டுமல்லாமல் மெருகேற்றவும் செய்திருகிறார்கள். கடந்த நூற்றாண்டில்தான் இந்த நாட்டிற்கு பல நெருக்கடிகள் ஏற்பட்டன. முதல் உலகப்போருக்குபிறகு செக் நாடும் சுலோவோகிய நாடும் இணைந்து உருவானதுதான் 'செக்கோஸ்லோவோகியா'. (இதை ஆங்கிலத்தில் பிழையின்றி எழுதுபவர்களுக்கு பரிசு கொடுக்கலாம்)... இரண்டாம் உலகப்போரின்போது 1939ம் ஆண்டு நாஜிப்படையினர் பிராக் நகரை முற்றுகையிட்டு பிராக் கொட்ட்டையைக் கைப்பற்றினார்கள். பின்பு ஆறு வருடம் ஹிட்லரின் வெறியாட்டம் தொடர்ந்தது. இங்கு வாழ்ந்துகொண்டிருந்த யூதர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டனர். அமெரிக்கா வேறு தன் பங்கிற்கு 'குறி தவறுதலாக' குண்டு போட்டது. (83 மைல் தள்ளியிருக்கும் ஒரு ஜெர்மானிய நகரை குறி வைத்து பின் சொதப்பிவிட்டதாம்). இத்தனை துயரங்களிலும் சந்தோஷப்படக்கூடிய ஒரே விஷயம் அதிக 'குண்டு மழை' பொழியப்படாத இடங்களில் பிராக் நகரமும் ஒன்று என்பதுதான்...! மற்ற ஐரோப்பிய நகரங்களைப் போல அதிகம் பாதிப்பு இல்லாமல் தப்பித்துக்கொண்டது பிராக் நகரம். இதன் பல கட்டிடங்கள் இன்னும் 'உயிரோடு' இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

இரண்டாம் உலகப்போர் முடிந்து நாஜிக்கள் வெளியெறியதும் உள்ளே நுழைந்தது சோவியத் படை..! அதன் பிறகு நடந்த உள்நாட்டு கலவரங்களைத் தடுத்து செக்கோஸ்லோவோகியாவை சோவியத் தன் தலைமையில் கம்யூனிஸ நாடாக அறிவித்தது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு, 1993ம் ஆண்டு செக்கோஸ்லோவோகியா கலைக்கப்பட்டு மீண்டும் செக், சுலோவோக்கியா என்ற இரு குடியரசு நாடுகளாகப் பிரிக்கப்பட்டன.

இவ்வளவு வரலாற்று நிகழ்வுகளிலிருந்து மீண்டு இன்றைக்கும் நிலைத்து நிற்கும் இந்த புராதானச் சின்னங்களை, யுனெஸ்கோ உலக கலாசார மையமாக அறிவித்துள்ளது. 'சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பிராகின் மையப்பகுதி' என்று யுனெஸ்கோவால் பெயரிடப்பட்டுள்ள இந்த இடத்தில் கிட்டத்தட்ட 1300 பாரம்பரிய கட்டிடங்கள் அமைந்துள்ளன.

செக் அரசாங்கமும் இந்தப் பாரம்பரியத்தைக் காப்பாற்ற பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிராகின் மையப்பகுதியில் எந்த ஒரு கட்டிடங்களிலும் கிறுக்கல்கள் இல்லை.. சுவரொட்டிகள் இல்லை.. ஏன் சிறு சிதைவுகள்கூட இல்லை.. தெரு விளக்குகளைக்கூட பழைமையான வடிவில் அமைத்திருக்கிறார்கள். பிராக் நகரத்தில் பழைய கட்டிடங்களை இடிப்பதற்கு, புது கட்டிடங்களை கட்டுவதற்கு பல தடைகள் விதித்த அரசு, கட்டங்களில் வெளித்தோற்றம் மாறாமல் உள்ளே மட்டும் புதுப்பிப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும் சில பிராக் பெருசுகள் 'அந்தக்காலத்தைப்போல் இல்லை' என்று அங்கலாய்கிறார்கள். 'முன்பு விமானத்திலிருந்து பார்க்கும் போது நகரம் முழுவதும் அழகான சிவப்பு ஓட்டுக்கூரைகளாக மட்டும்தான் தெரியும்.. இப்போது பல புதிய அமைப்புகள் நகரின் அழகை கெடுத்து விட்டன' என்பது அவர்களின் வருத்தம்..!

எது எப்படியிருந்தாலும், ஐரோப்பிய பயணம் செல்பவர்களின் பட்டியலில் நிச்சயம் இருக்கவேண்டிய இடம் பிராக்.

1 comment:

Aruna Ravi said...

Hi Ravi,

Good to read the article. Nicely depicts the architectural and cultural values of the city in a nice way.

Post a Comment

உங்கள் கருத்துக்கள்