Saturday, July 26, 2008

செப்டம்பர் 11


பயங்கரவாதத்தின் உச்சம்...
அமெரிக்காவில் அரங்கேற்றம்...

அந்த விமானம் தகர்த்து
உலக வர்த்தக மையத்தை அல்ல...
உலக மானுட மையத்தை...

புதன்கிழமை சூரியன்
பெருமையுடன் சொன்னது...
"நேற்று என் உதயத்தை மறைத்த கட்டிடங்கள்
இன்று வழி விட்டுவிட்டன... நானே என்றும் நிரந்தரம்..."

அன்றிரவு வந்த சந்திரன்
சத்தம் போட்டுச் சொன்னது:
"ஏ.. மனிதர்களே ... என்னிடம் வரவேண்டாம்..
உங்கள் பயங்கரவாதம் பூமியோடு புதையட்டும்..."

நியூயார்க் மேகங்கள்
மொத்தமாய் சொன்னது
நாங்கள் தவழுவதை தடைசெய்த கட்டிடங்கள்
எங்களோடு சேர்ந்தது ... புகைமண்டலமாய்...!

'அரிது..அரிது.. மானிடராய் பிறத்தல் அரிது.."
என்ற ஒளவையே.. நீ இன்றிருந்தால்
'எளிது..எளிது..மானிடரை மாய்த்தல் எளிது..'
என்றுரைப்பாயோ..!

உச்சம் எட்டியது பயங்கரவாதம்..
அச்சம் அடைந்தது மானுடம்..
சொச்சமானது மனித உயிர்கள்..
மிச்சமானது சாம்பல் மட்டும்..

வல்லரசுகளே..!
அப்பாவி மக்களை அழிப்பது
போர்முனையில் மட்டும் தர்மம் என்று
போதிக்காதீர்கள்..
ஜப்பான் அணுவீச்சில்..
வளைகுடாப் போரில்..
பாலஸ்தீன பிரச்சனையில்
நடந்ததுகூட 'போர்' என்ற போர்வையில்
நடந்த பயங்கரவாதம்தான்..!

பங்குச்சந்தையின் வீழ்ச்சியை..
தங்கத்தின் விலைஉயர்வை..
ஜோதிடர்களின் கணிப்பை மட்டும்
ஆராயும் வர்த்தக மனிதர்களே..
அடுத்த விமானம் அணுஉலையை அண்டினால்
ஆருடம் சொல்லக்கூட ஆள் இருக்காது
அமெரிக்காவும் இருக்காது.. அடுத்தவீடும் இருக்காது..

பயங்கரவாத இடிபாடுகளிலிருந்து
தீவிரவாத நெருப்பிலிருந்து
மானுடத்தை மீட்க முன்னேறுங்கள் ..
இப்போதைய தேவை
பாயும் ஏவுகளைகள் அல்ல..
பறக்கும் புறாக்கள்..

முதல் புறா பறக்கட்டும் வாஷிங்டன்னிலிருந்து...!

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்