Thursday, July 31, 2008

நேர்மை... நாணயம்...நேரம் தவறாமை...


(ஆகஸ்ட் 2007 வடக்கு வாசல் இதழில் வெளிவந்தது)

சூரியன் உதிக்கும் நாட்டுக்கு செல்லப்போகிறோம்...!
உழைப்பாளர்களின் தேசம் காணப்போகிறோம்....!
சுறுசுறுப்புக்கு உதாரணமான மக்களைச் சந்திக்கப்போகிறோம்...!

ஜப்பான் பயணம் என்றதும் என்னுள் ஆர்ப்பரித்த எண்ணஅலைகள் இவை...

விமான நிலையத்திலிருந்து இத்தனை மணிக்கு கிளம்பும் பேரூந்து பிடிக்கவேண்டும்... பேரூந்தைவிட்டு இறக்கியவுடன் அருகிலிருக்கும் ஒரு டாக்சி பிடித்து இந்த வரைபடத்தைக் காண்பிக்கவேண்டும்.. இத்தனை யென் கொடுக்கவேண்டும்... ஹோட்டல் அறையின் குறியிடு இது என்று எதோ கணிணி மென்பொருள்போல மின்அஞ்சல் அனுப்பியிருந்தார்கள். இதில் எதுவும் பிசகாமல் அப்படியே நடந்தது ஜப்பானின் ஆச்சரியங்களில் ஒன்று. ஒவ்வொரு ஜப்பானியருக்கும் உள்ளே ஒரு கம்ப்யூட்டர் இயங்கிக்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் வந்தது. தொழில்நுட்பம் உச்சத்தில் இருந்தாலும் ஜப்பான் இன்னும் தன் பாரம்பரிய பழக்கவழக்கங்களை கைவிடவில்லை. இடுப்பை வளைத்து வணக்கம் சொல்லும் அழகைப்பார்க்கும்போது நாம் எத்தனைமுறை கைகூப்பி வணக்கம் சொல்லியிருக்கிறோம் என்று எண்ணத்தோன்றுகிறது. ஐரோப்பிய நாகரீகமான கைகொடுக்கும் பழக்கம் நம்மை எப்போதோ வசப்படுத்திவிட்டது.
வணங்குவது மட்டுமல்ல... எதையுமே இரண்டு கையால் கொடுப்பது.. யாரையும் 'சான்' என்று அடைமொழியுடன் அழைப்பது.. என்று ஜப்பானுக்கே உரிய பழக்கங்கள் பல...! உடையைத்தவிர ஜப்பானியர்களை மேற்கத்திய நாகரிகம் ஆக்கிரமிக்கவில்லை.

ஜப்பான் மக்களின் அடையாளங்களில் ஒன்று அவர்கள் பழகும் முறை. எப்படித்தான் அவர்களுக்குள் அவ்வளவு பவ்யம் இருக்கிறதோ தெரியவில்லை.. சகமனிதர்களிடம் வன்மம் இல்லாத ஒரு தன்மை.. எப்போதுமே மென்மையாக பேசும் ஒரு குணம்.. உலகப்பொருளாதாரத்தை தன் கைக்குள் அடக்கிவைத்திருகிறோம் என்ற கர்வம் இல்லாத ஒரு நடத்தை.. இவையெல்லாம்தான் ஜப்பானியர்களை ம்ற்ற இனங்களைவிட ஒருபடி மேலே உயர்த்திக்காட்டுகிறது.

அதிர்ந்து பேசும் ஜப்பானியர்களைப் பார்ப்பதே வெகு அபூர்வம். அவர்கள் அலைபேசிகூட அலறுவதில்லை... மௌன மொழியே பேசுகிறது.

இந்திய உணவுகள் பெரும்பாலும் ஜப்பானில் கிடைப்பதில்லை. அதிலும் தாவிரப்பட்சிணிகளுக்கு திண்டாட்டம்தான். சொற்ப எண்ணிக்கைகளில் இருக்கும் சில உணவகங்களில்கூட ஜப்பான் சாயல் படிந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்பப் புரட்சியால் ஜப்பானுக்கு பல இந்தியர்கள் வரத்தொடங்கியிருக்கிறார்கள். வருங்காலத்தில் பல இந்திய உணவகங்கள் ஜப்பானில் தோன்றலாம்.

உணவு தவிர ஜப்பானில் இந்தியர்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை மொழி. 'இங்கு ஆங்கிலத்துக்கு இடம் இல்லை' என்று எழுதிவைக்காத குறையாக அங்கு 'எங்கும் ஜப்பானியம் எதிலும் ஜப்பானியம்' என்பதுதான் கொள்கை. உணவுப்பொருட்களிலும் சரி.. தொலைக்காட்சி வாஷிங்மெஷின் போன்ற சாதனங்களிலும் சரி.. பெயர் மற்றும் விளக்கங்கள் எல்லாம் ஜப்பானியத்திலேயே இருக்கின்றது. குளிர்சாதன ரிமோட் கன்ட்ரோலை அலுவலகத்துக்கு எடுத்துச்சென்று அங்குள்ள ஜப்பானியர்களிடமிருந்து அதில் என்ன எழுதியிருக்கிறது என்று புரிந்துகொண்டு அதை சரிவர இயக்குவதற்கு ஒரு வாரம் பிடித்தது. சில சமயம் பாலுக்கு பதிலாக மோர் வாங்கிக்கொண்டு வந்த வேடிக்கைகளும் நடந்தது.

ஜப்பானில் உதவி கேட்பது நமது பிறப்புரிமை..! உதவி செய்வது அவர்கள் பிறப்புரிமை..! ஏதோ போன ஜென்மத்தில் கடன் பட்டவர்கள் போல நாம் கேட்கும் முன் தாமாகவே உதவிசெய்யும் தன்மை எல்லா ஜப்பானியர்களிடமும் உள்ளது. இதில் ரயில் நிலைய டிக்கெட் அதிகாரிகளைப்பற்றி குறிப்பிட்டாகவேண்டும். நாம் ஏதாவது கேட்டுவிட்டால் போதும்.. இருக்கையிலிருந்து எழுந்து வந்து நமக்காக டிக்கெட் எடுத்துக்கொடுத்து சரியான ரயிலை அடையாளமும் காட்டிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். சிலர் டோக்கியோ ரயில் வரைபடத்தை எடுத்து விளக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

தினம் அறுபது லட்சம் மக்களை சுமந்து செல்லும் மெட்ரோ ரயில்கள்தான் டோக்கியோவின் எலும்புக்கூடு. கிட்டத்தட்ட 200ரயில் நிலையங்கள் உள்ள டோக்கியோவில் எந்த ஒரு இடத்திற்கும் ரயில் மூலமாகவே அடையாளம் சொல்லப்படுகிறது. டோக்கியோ மற்றும் அதன் புறநகரில் எந்த பகுதியாயிருந்தாலும் ஏதாவது ஒரு ரயில் நிலையத்திலிருந்து அதிகபட்சம் 10 நிமிட நடையில் அடைந்து விடலாம். (9நிமிட நடை, 11நிமிட நடை என்றெல்லாம் குறிப்பிடிருப்பார்கள். குத்துமதிப்பாக 10நிமிட நடை என்று கூறுவதில்லை). 8.47மணிக்கு ஒரு ரயில் குறிப்பிட்ட ரயில் நிலையத்திற்கு வரும் என்று அறிவித்தால் அந்த நேரத்துக்கு அந்த ரயில் வந்தேதீரும். அதுமட்டுமல்ல.. ஒரு ரயில் நிலையத்திலிருந்து இன்னொரு ரயில் நிலையத்திற்கு சாதாரண ரயிலில் போனால் இவ்வளவு நிமிடங்கள் ஆகும்.. விரைவு ரயிலில் போனால் இவ்வளவு நிமிடங்கள் ஆகும் என்ற விவரங்கள் எல்லா ரயில் நிலையத்திலும் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கால அட்டவணையை இணையத்திலும் பார்த்து தெரிந்துகொள்ளலாம். கொஞ்சம் கூட பிசகாமல் இந்த நேரங்கள் கடைபிடிக்கப்படும்.

ஒரேயொரு விதத்தில் மட்டும் டோக்கியோ ரயில்களையும் இந்திய நகர ரயில்களையும் ஒப்பிடலாம். அது ஜனநெரிசல்.. காலை நேரங்களில் ஒரு ரயிலில் 4000பேர் சர்வசாதரணமாக பயணிக்கிறார்கள். ஆனால் ரயிலுக்கு வரிசையில் நிற்பது, இறங்குபவர்களுக்கு அழகாக பிரிந்து வழிவிடுவது என்பதையெல்லாம் நம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. டோக்கியோவில் உள்ள சின்சுகு என்ற ரயில்நிலையம்தான் உலகத்திலேயே அதிக மக்கள் நடமாட்டம் உள்ள ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தை தினமும் 20லட்சம் மக்கள் கடந்து செல்கிறார்கள்.

ஜப்பானியர்கள் நேரத்தை கடைப்பிடிப்பது மட்டுமல்லாமல் நேரத்தை எப்படி சுருக்கக் கற்றுக் கொண்டார்கள் என்பதற்கு 'ஷின்காஷன்' என்ற புல்லட் ரயில்கள் சாட்சி. மணிக்கு 200கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரயில்கள், ஜப்பானின் முக்கிய நகரங்களை சிலமணிநேரத்தில் கடந்துவிடுகிறது. 99% புல்லட் ரயில்கள் ஒருநிமிடதிற்கும் குறைவான அளவு தாமதத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறது. முப்பது நிமிடமெல்லாம் தாமதமாக வந்தால் தொலைகாட்சி செய்திகளில் அறிவிக்கப்படுமாம். இவ்வளவு வேகத்தில் பறக்கும் புல்லட் ரயில்கள் கடந்த நாற்பது வருடங்களாக எந்த ஒரு பெரிய விபத்தையும் சந்தித்ததில்லை.

பிரசித்தி பெற்ற ஜப்பானியர்களின் நேர்மையை அனுபவிப்பதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஒருமுறை என் மாத ரயில் அட்டையை தவற விட்டுவிட்டேன். பிறகு ஒருவாரத்துக்கான அட்டையை வாங்கி உபயோகித்து வந்தேன். இரண்டு நாட்கள் கழித்து என் அலுவலத்திலிருந்து என் ரயில் அட்டை குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் இருப்பதாக தகவல் வந்தது. ரயில் அட்டையை கண்டெடுத்த யாரோ ஒரு புண்ணியவான் அதை தவறாக உபயோகப்படுத்தாமல் ரயில்வே அதிகாரியிடம் கொடுத்திருக்கிறார். ரயில்வே அதிகாரியும் என் அட்டையில் பதிந்திருக்கும் என் மொபைல் எண்ணைக் கண்டுபிடித்து மொபைல் எண்ணைஅழைக்காமல் என் அலுவலகத்தை தொடர்புகொண்டு செய்தி தெரிவித்திருக்கிறார்கள். அந்த ரயில் நிலையத்திற்கு சென்றவுடன் என் பாஸ்போர்டை சரிபார்த்து ரயில் அட்டையை திருப்பிக்கொடுதார்கள்.

என் ஆச்சரியம் இதோடு நின்றுவிடவில்லை. நான் வாங்கிய வார அட்டையின் மீதமுள்ள நாட்களுக்கு பணத்தை திரும்பக் கொடுத்துவிட்டார்கள்.

நான் எதுவும் பேசமுடியாமல் அசந்துபோய் நின்றுகொண்டிருந்தேன்...!

கொஞ்சம் யோசித்துப் பார்த்தபோது இது நமக்கு மட்டுமே வியப்பான விஷயம் என்று புரிந்தது. அவர்களைப் பொறுத்தவரை அது சாதரண செயல். தங்கள் கடமையை செய்வதாகத்தான் அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் நேர்மை, நாணயம், உண்மை, தரம் இவையெல்லாம் அவர்கள் செயல்முறையிலேயே கலந்திருக்கின்றது. அவர்கள் அப்படித்தான் வளர்க்கப்படுகிறார்கள். நான் சிரமப்பட்ட ஒரே விஷயம் நான் எதற்காக வந்திருக்கின்றேன் என்று விளகுவதற்குதான். காணாமல் போன ரயில் அட்டையை தேடி வந்திருக்கிறேன் என்று அந்த அதிகாரிக்கு விளக்குவதற்கு ஒரு ஓரங்க நாடகமே நடத்தவேண்டியிருந்தது.

நாணயத்திலும் நாணயம் கடைபிடிப்பவர்கள் ஜப்பானியர்கள். அவர்களுடைய 'ஒரு யென்' நாணயத்திற்கு (currency) மதிப்பே இல்லை. 100 யென்னுக்கு குறைந்து எந்த ஒரு பொருளும் கிடைக்காது. ஆனாலும் பொருட்களின் விலை 128யென், 299 யென் என்றெல்லாம் இருக்கும். இருந்தாலும் மீதி சில்லறை துல்லியமாகக் கொடுக்கப்படும்..அது ஒரு யென்னாக இருந்தாலும்...!

ஜப்பானில் புத்த மதம் மற்றும் ஷிண்டோ என்ற மதமும் பின்பற்றப்படுகின்றன
என்று சொன்னாலும், மதம் அவர்கள் அன்றாட வாழ்வில் குறுக்கிடுவதே இல்லை. இனப்பற்று மதப்பற்றைவிட மேலோங்கியிருக்கிறது. மதம் அவர்கள் அகராதியில் கடைசிப் பக்கங்களில் மட்டுமே இருக்கிறது. எம்மதமும் சம்மதம் என்ற மதச்சார்பின்மையைவிட மதமே தேவையில்லை என்ற மதப்பற்றின்மை இவர்களை ஆட்கொள்கின்றது. திருமணம், இறப்பு போன்ற விஷயங்களுக்கு மட்டுமே மத சம்பிரதாயங்கள் தேவைப் படுகிறது. குறிப்பாக சுப காரியங்கள் ஷிண்டோ மதமுறைப்படியும், இறப்பு, மூதாதையரை வணங்குவது போன்றவைகள் புத்த மத முறைப்படியும் நடக்கிறது. இதைத்தவிர கிருஸ்துமஸ் பண்டிகையும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

ஒருசில புத்த கோவில்களைத்தவிர டோக்கியோவில் மத அடையாளங்கள் பெரிதாக எதுவும் இல்லை. ஆனால் டோக்கியோவிற்கு மிக அருகிலேயே இருக்கும் காமகுரா என்ற இடத்தில் பல புத்த கோவில்கள் உள்ளன. ஒரு காலத்தில் ஜப்பான் தலைநகரமாக இருந்த காமகுரா இன்று அதன் புண்ணியஸ்தலங்களில் ஒன்று. பதிமூன்றம் நூற்றண்டில் கட்டப்பட பிரமாண்ட வெண்கல புத்தர் சிலை இங்கு இருக்கிறது. இங்கிருந்த கோவில் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மிகப்பெரிய ஒரு சுனாமியால் சிதைந்து போனதாம். கண்களை மூடிக்கொண்டு தியான நிலையில் உள்ள புத்தர் மட்டும் இன்னும் வெயில், பனி, பூகம்பத்தால் தன்னை காத்துக்கொண்டிருக்கிறார். கெங்கோஜி, எங்ககுஜி போன்ற பிரபல ஜென் கோவில்களும் காமகுரவில்தான் உள்ளன. ஜென் கோவில்கள் டோக்கியோவின் பரபரப்புக்கு கொஞ்சம் கூட சம்மந்தம் இல்லாமல் ரம்யமான சூழலில் அடர்ந்த மரங்களுகிடையே அமைதிவழிந்தோடக்கூடிய இடமாக உள்ளது.

ஜப்பானில் மண்வளம் இல்லை... கனிம வலம் இல்லை... பூகம்பம், சுனாமி, எரிமலை போன்ற இயற்கை சீற்றங்கள் அவ்வப்போது பதம் பார்க்கும் பூமி.. எனினும் முக்கியமாக வாகனம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மட்டுமே இன்று ஜப்பானை உலகப் பொருளாதார வல்லரசாக வைத்திருக்கிறது. இரண்டாம் உலகப்போர் முடிவில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்ட ஒரு நாடு, எல்லாவற்றையும் இழந்து நிராயுதபாணியாக நின்ற ஒரு நாடு, ஐம்பத்து ஆண்டுகளில் பிரமிக்கத்தக்க வகையில் வளர்ந்து இன்று உலகையே ஆட்டிப்படைப்பது எப்படி?

அதன் தொழில்நுட்பமா.. அல்லது உழைப்பா.. அல்லது நேர்மையா...

இவையெல்லாம் விட இந்த மாற்றத்துக்கு மூலகாரணம், இது அரசும் மக்களும் செய்து காட்டிய கூட்டுமுயற்சி. அரசாங்கம் நினைப்பதையே மக்கள் நினைகிறார்கள்.. மக்கள் நினைப்பதையே அரசாங்கம் நினைக்கிறது.. எந்த ஒரு தொழில்நுட்பமும் கடைசி ஜப்பானியனைப் போய்ச் சேருகிறது. இந்தியாவில் உள்ளது போல் மக்களிடமிருந்து அரசு அன்னியப்பட்டுப்போனது இங்கு நிகழவில்லை.

ஜப்பானியர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது..!



Saturday, July 26, 2008

செப்டம்பர் 11


பயங்கரவாதத்தின் உச்சம்...
அமெரிக்காவில் அரங்கேற்றம்...

அந்த விமானம் தகர்த்து
உலக வர்த்தக மையத்தை அல்ல...
உலக மானுட மையத்தை...

புதன்கிழமை சூரியன்
பெருமையுடன் சொன்னது...
"நேற்று என் உதயத்தை மறைத்த கட்டிடங்கள்
இன்று வழி விட்டுவிட்டன... நானே என்றும் நிரந்தரம்..."

அன்றிரவு வந்த சந்திரன்
சத்தம் போட்டுச் சொன்னது:
"ஏ.. மனிதர்களே ... என்னிடம் வரவேண்டாம்..
உங்கள் பயங்கரவாதம் பூமியோடு புதையட்டும்..."

நியூயார்க் மேகங்கள்
மொத்தமாய் சொன்னது
நாங்கள் தவழுவதை தடைசெய்த கட்டிடங்கள்
எங்களோடு சேர்ந்தது ... புகைமண்டலமாய்...!

'அரிது..அரிது.. மானிடராய் பிறத்தல் அரிது.."
என்ற ஒளவையே.. நீ இன்றிருந்தால்
'எளிது..எளிது..மானிடரை மாய்த்தல் எளிது..'
என்றுரைப்பாயோ..!

உச்சம் எட்டியது பயங்கரவாதம்..
அச்சம் அடைந்தது மானுடம்..
சொச்சமானது மனித உயிர்கள்..
மிச்சமானது சாம்பல் மட்டும்..

வல்லரசுகளே..!
அப்பாவி மக்களை அழிப்பது
போர்முனையில் மட்டும் தர்மம் என்று
போதிக்காதீர்கள்..
ஜப்பான் அணுவீச்சில்..
வளைகுடாப் போரில்..
பாலஸ்தீன பிரச்சனையில்
நடந்ததுகூட 'போர்' என்ற போர்வையில்
நடந்த பயங்கரவாதம்தான்..!

பங்குச்சந்தையின் வீழ்ச்சியை..
தங்கத்தின் விலைஉயர்வை..
ஜோதிடர்களின் கணிப்பை மட்டும்
ஆராயும் வர்த்தக மனிதர்களே..
அடுத்த விமானம் அணுஉலையை அண்டினால்
ஆருடம் சொல்லக்கூட ஆள் இருக்காது
அமெரிக்காவும் இருக்காது.. அடுத்தவீடும் இருக்காது..

பயங்கரவாத இடிபாடுகளிலிருந்து
தீவிரவாத நெருப்பிலிருந்து
மானுடத்தை மீட்க முன்னேறுங்கள் ..
இப்போதைய தேவை
பாயும் ஏவுகளைகள் அல்ல..
பறக்கும் புறாக்கள்..

முதல் புறா பறக்கட்டும் வாஷிங்டன்னிலிருந்து...!

Sunday, June 29, 2008

ஊட்டி ரோஜாத் தோட்டம்






தெருவோரம்...

1

அந்த நடைபாதை பிச்சைக்காரனின்

மூச்சு நின்றவுடன்

அரசாங்க மருத்துவமனையின் பிணவறையில்

இடம் கிடைத்தது...!

2

கால்கள் கட்டப்பட்டு

தலைகீழாக தொங்கவிடப்பட்டு

மிதிவண்டியின் கைப்பிடியில்

பயணிக்கும்

கோழிகள் அறியாது

தன் இறுதிப்பயணத்தை...!

3

இந்த வாய்க்கரிசிமட்டும்

நேற்று கிடைத்திருந்தால்

பட்டினிச்சாவை

ஓரிருநாள்

தள்ளிப்போட்டிருக்கலாம்...!

காவிரிப் பிரச்சனை

ஆணையத்தால்
அரசியலால்
நீதிமன்றத்தால்
தீர்க்கமுடியாததை
வருடாவருடம்
தீர்த்துவைக்கிறது
மழை...!

சிகரெட்

அவன்
சிகரெட் மீது
பற்று வைத்தான்...!
சிகரெட் அவன்மீது
புற்று வைத்தது...!

Saturday, June 28, 2008

எகிப்திய மண்ணில் சில நாட்கள்

(2007ம் ஆண்டு அமுதசுரபி தீபாவளி மலரில் வெளிவந்தது)

இன்னும் சற்று நேரத்தில் எகிப்து தலைநகர் கைரோ விமான நிலையத்தை அடைவோம்' என்ற அறிவிப்பு வந்தபோது விமானம் எகிப்திய பாலைவனத்தை கடந்துகொண்டிருந்தது.

விமானத்திலிருந்து பாலைவனத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்... எவ்வளவு சுவாரசியமான தேசம் எகிப்து...! இதோ இந்த பாலைவன மண்ணில்தானே உலகின் பழம்பெரும் எகிப்திய நாகரீகம் தோன்றியது... இந்த மண்ணில்தானே இன்றும் நிலைத்து நிற்கும் பிரமிடுகள் கட்டப்பட்டன... அதே சமயம் 'நைல் நதியின் நன்கொடையும்' இந்த மண்தானே..! இன்று ஆப்ரிக்க கண்டத்தில் இருந்தாலும் வளைகுடாவின் ஒரு அங்கமாகவே கருதப்படும் நாடு இதுதானே..! வளைகுடாவின் அங்கமாக இருந்தாலும் மதகட்டுப்பாடுகள் இல்லாத பகுதி இதுதானே..! சூயஸ் கால்வாய் மூலம் மத்திய தரைகடலும் செங்கடலும் இணையும் இடம் இதுதானே..!

ஃபாரோஸ் மன்னர்களுக்காக கட்டப்பட்ட பிரமிடுகள், நாலாயிரம் வருடமாக பாதுகாத்துவரப்படும் எகிப்திய அரசர்களின் உடல்கள், அழகிய நைல் நதி என்று எப்போதோ எகிப்தைப் பற்றி படித்த பல செய்திகளை அசைபோட்டுகொண்டிருந்தேன். இவற்றோடு 'பட்டது ராணி பார்க்கும் பார்வை', 'நதியா நதியா நைல் நதியா..' என்ற பாடல்களும் என் நினைவுக்கு வந்தன. விமானம் கைரோவில் இறங்கி 'இவற்றையெல்லாம் நேரில் காணப்போகின்றாய்' என்று குதூகலப்படுத்தியது.

நைல் நதியைக் காண ஆசைப்பட்டுக்கொண்டிருந்த நான், கைரோவில் தங்கியிருந்தது நைல் நதிக்கரையோரம் அமைந்திருந்தன ஃபிளமெங்கோ ஹோட்டலில்.. ஜன்னலிலிருந்து பார்த்தால் அழகிய நைல் நதி ஆரவாரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. நான் கைரோவில் தங்கியிருந்த ஐந்து நாட்களும் காலையில் கண் விழிப்பது நைல் நதியில்தான். கொஞ்ச நேரம் அந்த சௌந்தர்ய நதியை உள்வாங்கிக்கொண்டால் போதும்.. தனியாக தியானம் எதுவும் தேவையில்லை. காலை நேரங்களில் மஞ்சள் வெயில் கரைந்துகொண்டிருக்கும் நதியில் விதவிதமான படகுகள் கோடுபோடும் காட்சி, நம் விழிகளை இடம் பெயர்க்க மறுக்கும்.

எதியோப்பிய மலைகளிலிருந்து புறப்படும் நைல், கைரோவை அடையும்போது கொஞ்சம் அகலம் குறைந்தாலும் அதன் அழகு குறையவில்லை. கைரோவை கடந்தவுடன் நைல் பல நதிகளாக பிரிந்து மத்தியதரைக்கடலில் கலக்கிறது. nail

நைல் நதியை மட்டும் ரசித்துக்கொண்டிருந்தால் போதுமா.. பிரமிடுகளைக்கான என் மனது துடித்தது.. கைரோவில் என் கடைசி நாளன்று என் பிரமிட் கனவு பலித்தது. எகிப்தில் பல பிரமிடுகள் இருந்தாலும் கீசா பகுதியில் உள்ள கிரேட் பிரமிடுகள்தான் உலக அதிசயமாக கருதப்படுகின்றது. கைரோ நகரத்திலிருந்து அரை மணி நேரப்பயணத்தில் அமைந்துள்ளது கிரீட் பிரமிடு. கீசா பகுதியில் நாம் காலடி வைத்ததுமே நமக்கு ஏற்படுவது 4000 வருடங்களுக்கு பின்னால் சென்ற உணர்வு. அந்த பகுதியில் உள்ள முன்று கம்பீர பிரமிடுகள் நம்மை வரவேற்கின்றன.

அதற்க்கு முன் பிரமிடுகளைப்பற்றி ஒரு சிறு விளக்கம்..

பிரமிடு என்பது பண்டைய எகிப்திய அரசர்களின் உடல்களை அடக்கம் செய்யும் இடம். எகிப்து அரசர்கள் இறந்தபிறகு சவப்பெட்டியில் அவர்கள் உடலோடு தங்கம் மற்றும் பல செல்வங்களையும் வைத்து பிரமிடுக்குள் அடக்கம் செய்துவிடுவார்கள். இப்படிப்பட்ட அரசர்கள் இறவா நிலையை அடைவார்கள் என்பது அந்தக்கால எகிப்திய நம்பிக்கை. இப்படி அடக்கம் செய்யப்பட உடல்கள் மம்மி என்று அழைக்கப்படுகிறது.. மம்மி என்பது mumification process செய்யப்பட்ட, அதாவது பதப்படுத்தப்பட்ட உடல்கள் என்று அர்த்தம். பிறகு எகிப்தில் கிருத்துவர்கள் வருகையால் இந்தப்பழக்கம் கைவிடப்பட்டது.

பிரமிடுகளில் புதையல் இருக்கும் விஷயத்தை கேள்விப்பட்ட பல கொள்ளையர்கள், அதை முற்றுகையிட்டு பல மம்மிக்களை தூக்கிஎறிந்துவிட்டு செல்வங்களை கவர்ந்து சென்றார்கள். இந்தக் கொள்ளையர்கள் விட்டுச்சென்ற ஃபாரோஸ் என்ற அரச குடும்பத்தை சேர்ந்த மம்மிக்கள்தான் இன்று உலகில் சில அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன.

நாலாயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய எகிப்திய நாகரிகத்திற்கு இன்றைய சாட்சி பிரமிடுகள். கட்டிடக்கலை வளர்ச்சியடையாத அந்த காலத்தில் வியக்கத்தக்க தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்ட பிரமிடுகள் உலகின் முதல் அதிசயம். பதிமூன்று ஏக்கர் நிலப்பரப்பில் நான்கு முக்கோண வடிவத்தில் 480 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள கிரேட் பிரமிடு போன்ற ஒரு கட்டிட அமைப்பை தற்போது கட்டுவதுகூட கடினம். கனசதுர வடிவில் அமைக்கப்பட்ட லட்சக்கணக்கான பாறைகளை அடுக்கிவைத்து கிரேட் பிரமிடை கட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு பாறையும் கிட்டத்தட்ட பல டன்கள் எடை கொண்டவை.. ஒரு லட்சம் பேர் பணிபுரிந்து 20 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அந்தப் பாறைகள் எப்படி அந்த வடிவில் அமைக்கப்பட்டது, அதை எப்படி அடுக்கி வைத்தார்கள் என்பதெல்லாம் இன்னமும் புரியாத புதிர்..!

பிரமிடுக்குள் பல இடங்களில் குகை போன்ற அமைப்பு இருக்கிறது. இதற்குள்தான் உடல்களை அடக்கம் செய்வார்களாம். குகைக்குள் குனிந்து தவழ்ந்துதான் செல்லவேண்டும். அப்படி ஒரு குகைக்குள் நுழைந்தபோது கல்லால் செய்யப்பட ஒரு சவப்பெட்டி கண்ணில் பட்டது. அதற்குள் சாம்பல் நிற மண்ணில் எலும்பு போன்ற சிலவும் இருந்தன. கைடுகளைக்கேட்டால் அங்கு ஒரு உடல் இருந்தது என்கிறார்கள். நம்புவதற்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தேவை.

மூன்று பிரமிடுகளையும் சுற்றிப்பார்க்க மூன்று மணிநேரம் பிடிக்கும். நடக்க முடியாதவர்கள் ஒட்டக அல்லது குதிரை சவாரி செய்யலாம். நம்மூர் சுற்றுலா மையங்களில் உள்ளதுபோல ஒட்டக, குதிரைகாரகள் பரிசுப்பொருட்களை விற்கும் சிறுவர்கள் நம்மைத் துரத்திகொண்டே வருகிறார்கள். நம்மைப்பார்த்த உடனேயே 'இந்தியா.. இந்தியா..' என்று கேட்டுவிட்டு 'மகாராஜா' என்று அழைக்கிறார்கள். மகாராஜாவைத்தவிர அவர்களுக்கு தெரிந்த இன்னொரு இந்தியப்பெயர் 'அமிதாப் பச்சன்'.

கைரோவில் நாம் பார்க்கவேண்டிய மற்றொரு இடம் அரசு அருங்காட்சியகம். அகழ்ந்து எடுக்கப்பட்ட பண்டைய எகிப்திய சிலைகள், நாணயங்கள், கலைப்பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப் படிருக்கின்றன. கிட்டத்தட்ட தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் போன்றது.. ஆனால் மிகப் பெரியது.

அருங்காட்சியகத்திற்கு நுழைவுக்கட்டணம் 50 பவுண்டு (ஒரு எகிப்திய பவுண்ட் கிட்டத்தட்ட 7.5 ருபாய்). மம்மிக்கள் இருக்கும் அறைக்குச் செல்வதற்கு மட்டும் 100 பவுண்டு..! 'தி ராயல் மம்மீஸ் ஹால்' என்று பெயரிடப்பட்ட அந்த அறையின் உள்ளே அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 மம்மிகள் கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டிருந்தன. எல்லோரும் 3500 வருடங்களுக்கு முன்னால இறந்து போனவர்கள். சுருங்கிப்போன உடலில் அங்க அடையாளங்கள் தெரிந்தாலும் எலும்பும் தோலும் சேர்ந்து கருகிப்போன ஒரு மரக்கட்டையைப்போல மாறியிருக்கிறது. ஆனாலும் சில மம்மிகளில் பல்லும், தலைமுடியும், நகங்களும் அப்படியே இருக்கிறது. ஒரு மம்மிக்கு அத்தனை பற்களும் கொஞ்சம் பல் எயிறும் தெரிந்தது. சிரிந்துக்கொண்டே இறந்திருப்பார் போலும்..!

இத்தனை 'வயதான' பிணங்களுக்கு நடுவே நிற்பது என்பது ஒரு பயம் கலந்த பரவசம்தான்..! 100 பவுண்டு கொடுத்ததற்காக கொஞ்சநேரம் கூடவே அந்த பரவசத்தை அனுபவித்தேன்.

மனித உடல்கள் மட்டுமல்லாது அந்த அரசர்கள் செல்லமாக வளர்த்துவந்த பிராணிகளையும் கூடவே அடக்கம் செய்து விடுவார்களாம். முவாயிரம் வருட (!)நாய், குரங்கு எல்லாம் அந்த அருங்காட்சியகத்தில் இருந்தன.

பிரமிடுகளையும் அருங்காட்சியகத்தையும் பார்த்துவிட்டு கொஞ்சநேரம் பண்டைய எகிப்திய நாகரீகத்தில் திளைத்து வெளியேவரும்போது எனக்குத் தோன்றியது... அன்றைய மனித நாகரீகம் காலத்தால் அழியாத பிரமிடுகளைக் கட்டியது. இன்றைய மனித நாகரீகம் உலகையே அழிக்கவல்ல ஆயுதங்களைக் கண்டுபிடித்திருக்கிறது..!