Showing posts with label தேர்தல் 2009. Show all posts
Showing posts with label தேர்தல் 2009. Show all posts

Sunday, May 17, 2009

2009 தேர்தலில் தமிழ்நாடு - ஒரு பருந்துப் பார்வை

மற்ற எந்த பாராளுமன்ற தேர்தல்களைவிட இந்த முறை தமிழக மக்கள் புத்திசாலித்தனமாக வாக்களிதிருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இந்த ஒரு முறைதான் எந்தவித உணர்ச்சிகளுக்கும் அடிபணியாமல் நிதானமாக யோசித்து செயல்பட்டிருகிறார்கள்.

ஒரு பருந்துப் பார்வை:

பாம.க தோல்வி
பாம.க இடம்பெறும் கூட்டணிதான் வெற்றிபெறும் என்ற மாயையை மக்கள் தகர்த்தெறிந்திருக்கிறார்கள். மத்திய அரசின் கட்சி சொட்டுவரை நனைந்துவிட்டு, அந்த மத்திய அரசையே குறை கூறும் பா.ம.க வின் கண்ணீரை மக்கள் விரும்பவில்லை. தங்கள் விருப்பப்படி யாரோடு வேண்டுமானாலும் சேரலாம் எப்போது வேண்டுமானாலும் விலகலாம் என்ற கொள்கையோடு இருந்த பா.ம.க.வினருக்கு இது ஒரு பாடம்.

இலங்கை பிரச்சனை
இந்த தேர்தலில் இலங்கை தமிழர்கள் படுகொலை நிச்சயமாக ஒரு உணர்ச்சிபூர்வமான பிரச்சனையாக இருந்தது... அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, ஊடகங்களும், திரைப்படத்துறையினரும் ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்தியிருந்தார்கள். தேர்தல் முடிவையே தீர்மானிக்கும் பிரச்சனையாக அது இருந்தது. ஆனால் மக்கள், தமிழர்கள் இனப்படுகொலைக்கு தி.மு.க வைவிட காங்கிரஸின் இயலாமைதான் காரணம் என்ற எண்ணத்தில் காங்கிரசை பல இடங்களின் தோற்கடித்திருகிரர்கள். 16 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 9 தொகுதிகளையே வென்றிருக்கிறது. வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் கூட சொற்ப வித்தியாசத்திலேயே வென்றிருகிறார்கள். மக்கள் கோபம் தி.மு.க வைவிட காங்கிரசையே அதிகம் பாதித்திருக்கிறது. அதே சமயம், மக்கள் மற்ற கட்சிகளையும் நம்ப தயாராக இல்லை.

தொழில் பகுதிகளில் காங்கிரஸ் தோல்வி
தமிழ்நாட்டின் தொழில் மாவட்டங்களான கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம், தென்காசி போன்ற தொகுதிகளில் தி.மு.க-காங்கிரஸ் தோல்வியை தழுவியிருக்கிறது. இந்தப் பகுதிகளில் மின்தடை, ஏற்றுமதி கொள்கைகளில் குளறுபடி, ரூபாய் டாலர் மாறுதல்கள் போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட பல பின்னலாடை நிறுவனங்கள் முடப்பட்டன.. பலர் வேலை இழந்தனர். டெக்ஸ்டைல் தொழிலை அதிகம் கண்டுகொள்ளாத மத்திய மாநில அரசுகளை மக்கள் தண்டித்திருகிறார்கள்.

மதுரை வெற்றி
எதிர்பார்த்த ஒன்று.. அழகிரி ஒருவர்தான் வெற்றிபெற்ற பிறகு தொகுதி மக்களை கவனிக்க வேண்டிய அவசியம் இல்லாதவர். ஏனென்றால் கவனிக்க வேண்டியதை தேர்தலுக்கு முன்பே கவனித்து விட்டார்.

தென் மாவட்டங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி
ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி தொகுதிகளில் தி.மு.வெற்றி பெற்றிருக்கிறது. தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம், குளைச்சல் துறைமுகம், நாந்குநேரி தொழில் பேட்டை, சேது சமுத்திர திட்டம் மற்றும் பல தொழில் திட்டங்களை கொண்டுவந்த ஆளும்கட்சிக்கு மக்கள் வாக்களிதிருகிறார்கள். இலங்கைக்கு அருகில் இருந்தும் இங்கு இலங்கை பிரச்சனை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை... ஆளும் கட்சிகள் அறிவித்த தொழில் திட்டங்கள் தொடர தங்கள் வளர்ச்சியை கருத்தில் கொண்டே வாக்களிதிருகிறார்கள் தென் மாவட்ட மக்கள்.

டெல்டா பதிகுகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி
மத்திய அரசின் விவசாய கடன்கள் தள்ளுபடி கொள்கை, டெல்டா பகுதிகளான தஞ்சை, நாகை, மயிலாடுதுறை தொகுதிகளில் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் தி.மு.போட்டியிட்ட தஞ்சை, நாகை தொகுதிகள் மட்டும் வெற்றி.. காங்கிரஸ் போட்டியிட்ட மயிலாடுதுறைக்கு தோல்வி என்பது, இலங்கை பிரச்சனையில் மக்களுக்கு காங்கிரஸ் மீது மட்டும் தான் கோபம் என்பதைக் காட்டுகிறது.

இதையெல்லாம் பார்க்கும் போது தமிழ்நாடு மக்கள் கொஞ்சம் தெளிந்த சிந்தனையோடு வாக்களிக்க தொடங்கியிருகிறார்கள் என்பது புரிகிறது. உணர்ச்சிகளின் அடிப்படையிலோ, கூட்டணிகளில் அடிப்படையிலோ இனி வாக்களிக்கமாட்டோமென்று சொல்லாமல் சொல்லியிருகிறார்கள்.

நல்ல தொடக்கம்... வரவேற்ப்போம்..!

Tuesday, April 14, 2009

சர்ச்சில் தோற்றது ஏன்?

இந்தியாஅடுத்த பாராளுமன்ற தேர்தலை சந்திக்கப்போகிறது. என்னதான் இங்கு அரசியல் சீரழிந்தாலும் இந்திய ஜனநாயகம் அசைக்கமுடியாத தூணாக இருக்கிறது... பல பெரும் தலைவர்களையே புரட்டிப்போட்டிருக்கிறது.
ஆனால் இவை எல்லாவற்றையும் விட ஜனநாயகத்தின் வலிமையை இங்கிலாந்து மக்கள் ஒரு முறை நிரூபித்திருகிறார்கள்.

அது 1945ம் வருடம்.. இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்த நேரம். இங்கிலாந்துக்கு மட்டும் அல்ல, ஐரோப்பாவுக்கே மகத்தான வெற்றியை தேடித்தந்தார் வின்சென்ட் சர்ச்சில். போரின் இடையில் இங்கிலாந்தில் பிரதமராக பதவியேற்ற சர்ச்சில், தன் பேச்சாற்றல், அபாரமான போர்த்திறன் மூலம் மக்கள் மனதில் ஒரு மகத்தான தலைவனாக இடம் பிடித்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் 83 % மக்கள் சார்ச்சில்தான் உண்மையான் ஹீரோ என்றனர். இந்த சமயத்தில்தான் இங்கிலாந்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. சர்ச்சில் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியும் லேபர் கட்சியும் களத்தில் குதித்தன.

வெற்றிக்களிப்பில் தேர்தலை சந்தித்தார் சர்ச்சில்..! எல்லோரும் கன்சர்வேடிவ் கட்சி மாபெரும் வெற்றிபெறும், சர்ச்சில்தான் மீண்டும் பிரதமர் என்பதில் இமியளவும் சந்தேகம் இல்லை என்று நம்பினார்.

ஆனால் முடிவு எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்தது... சர்ச்சில் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அதுவரை இல்லாத அளவுக்கு தோல்வியை தழுவியது.. எதிர்கட்சியான லேபர் கட்சி மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

சர்ச்சிலை தோற்கடித்தற்கு மக்கள் சொன்ன காரணம்: "சர்ச்சில் ஒரு சிறந்த அரசியல் வித்தகர். போரை கையாள்வதில் வல்லவர்.. அவரைத்தவிர யுத்த காலத்தில் ஒரு சிறந்த பிரதமர் இருக்க முடியாது. ஆனால் இப்போது போர் முடிந்துவிட்டது. உடைந்துபோன பொருளாதாரத்தை நிலை நிறுத்தவேண்டும்.. இங்கிலாந்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.. இவற்றுக்கெல்லாம் லேபர் கட்சிதான் சரி.. சர்ச்சிலோ, கன்சர்வேடிவ் கட்சியின் கொள்கைகளோ இதற்க்கு உதவாது.. அவர்கள் போர் முனையில் கெட்டிக்காரர்கள்.. அனால் பொருளாதார சீரமைப்புக்கு அவர்கள் உதவமாட்டார்கள்..!"

தனிப்பட்ட ஒருவரின் சாதனையையும் ஒரு கட்சியின் கொள்கைகளையும் பிரித்துப்பார்க்கும் அளவுக்கு இங்கிலாந்து மக்களின் சிந்தனை மேம்பட்டு இருந்தது. சினிமா பிம்பங்களையும், வெற்று கோஷங்களையும், மரணங்களையும் நம்பி ஓட்டு போடும் நம் மக்கள் எப்போது இதுபோல் சிந்தித்து ஓட்டு போடப்போகிறார்கள்?

Sunday, March 8, 2009

இலவச காய்ச்சல்


கடந்த தமிழக தேர்தலின் கதாநாயகன் 'இலவச அறிவிப்புகள்'. தி.மு.க வின் கலர் டெலிவிஷன், இலவச வீடுமனை பட்டா அறிவிப்புகள் யாரும் எதிர்ப்பார்க்காதது...! கொஞ்சம் சுதாரித்துக்கொண்டஅ.தி.மு.க 'இலவச கம்யூட்டர்'களை அறிவித்தது. டி.வி., கம்யூட்டர், டேப்-ரெகார்டர், பிரிட்ஜ் என்று விவேக் அண்டு கோ கணக்காக எல்லா வீட்டு உபயோகப் பொருட்களும் இலவசமாக அறிவிக்கப்பட்டுவிட, என்ன செய்வது என்று திகைத்த விஜயகாந்த், கோவில்களில் இலவச பகவத்கீதை, மசூதிகளில் இலவச குரான் என்று ஏதேதோ சொல்லிப்பார்த்தார்.. கடைசியில் கலர் டி.வி மட்டுமே வென்றது..

இப்போது
இந்த இலவச காய்ச்சல் ஆந்திராவையும் தொற்றிக்கொண்டு விட்டது. ஏக்கர் கணக்கில் நிலம், இலவச மின்சாரம், பெண் குழந்தை பிறந்தால் ஒரு லட்சம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார் புதிதாக கட்சி ஆரம்பித்த சிரஞ்சீவி. ஐ.டி. துறையில் ஆந்திராவை தலை நிமிரச்செய்த சந்திரபாபு நாயுடுவும் இதற்க்கு விதிவிலக்கல்ல... ஏழைகளுக்கு ரொக்கப் பணம் அறிவித்திருக்கிறார். இவர் ஏழைகளை மூன்று விதமாக பிரித்திருக்கிறார். பரம ஏழைகளுக்கு மாதம் 2000 ரூபாயும், 'சுமாரான' ஏழைகளுக்கு 1500 ரூபாயும், கொஞ்சம் 'பணக்கார' ஏழைகளுக்கு 1000 ரூபாயும் கொடுக்கப்போகிறாராம். அதுவும் ஏ.டி.எம் மூலமாக பணத்தை எடுத்துக்கொள்ளலாமாம் (நாயுடு ஹை-டெக் முதல்வராயிற்றே..) இதைத்தவிர இலவச கலர் டி.வி., இலவச மின்சாரம் என்று நீண்டுகொண்டே போகிறது பட்டியல். முதல்வர் ராஜசேகர ரெட்டியின் அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை.

கடைதேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போலத்தான் இருக்கிறது இந்த இலவச அறிவிப்புகள். எந்த கட்சியும் அரசாங்க வருமானத்தை எப்படி அதிகரிப்போம் என்று தேர்தல் வாக்குறுதி தருவதில்லை... செலவழிப்பதை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருகிறது.. ஏதாவது ஒரு கட்சி 'நாங்கள் இலவசமாக எதையும் தரமாட்டோம்.. அவற்றை மக்கள் தாங்களே வாங்கும் அளவுக்கு அவர்கள் தரத்தை உயற்றுவோம்' என்று சொல்கிறதா?

தேர்தல் பிரசாரத்திற்கு ஆயிரம் விதிமுறைகளை வைத்திருக்கும் தேர்தல் ஆணையமோ அல்லது நம் அரசியல் சட்டமோ இதுபோல இலவச அறிவிப்புகளை கண்டுகொள்வதில்லை. ஓட்டுப்போடுவதற்கு பணம் கொடுப்பதற்கும் எனக்கு ஒட்டுப்போட்டால் பணம் கொடுப்பேன் என்று வாக்குறுதி அளிப்பதற்கும் என்ன வித்தியாசம்? நாளை ஏதாவது ஒரு கட்சி சென்னை பெசன்ட் நகரில் 3 பெட்ரூம் அபார்ட்மெண்ட் இலவசமாக தருகிறேன் என்று சொன்னால், குறைந்தபட்சம் நாம் வாய்விட்டு சிரிக்கலாமே தவிர அதைத் தடுப்பதற்கு நம் நாட்டில் எந்த சட்டமும் கிடையாது.

கல்வி, மருத்துவம், (சில சமயங்களில்) விவசாயம் போன்ற துறைகளைதவிர வேறு எதையும் இலவசமாககொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற இலவசங்கள் மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றுவதைத்தவிர வேறு எந்த சாதனையும் செய்யாது. மக்களை தன்மானத்தோடு வாழவைக்கவேண்டிய அரசு, ஏழைகளுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவேண்டிய அரசு, அவர்கள் வாழ்கைத்தரத்தை மேம்படுத்தவேண்டிய அரசு, இப்படி ஒரு சமூகத்தையே அரசாங்கத்திடம் கையேந்த வைப்பது கொடுமையிலும் கொடுமை. அதைவிடக் கொடுமை இது ஏதோ சாதனை போல விளம்பரபடுதிக்கொள்வது..!

ஆனால் தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் பரவியுள்ள இந்த இலவச காய்ச்சல் ஆந்திரா மட்டுமல்லமல் எல்லா மாநிலங்களுக்கும் பரவக்கூடிய வாய்ப்புகள்தான் அதிகம் உள்ளது.