Showing posts with label குறுங் கவிதை. Show all posts
Showing posts with label குறுங் கவிதை. Show all posts

Sunday, November 15, 2015

தன்னை அறிதல்

ஹலோ மிஸ்டர்....
ஏம்பா... பூபோட்ட சட்டை....
ஏய்.. ஹீரோ ஹோண்டா.....
எதுவுமே என்னைக் குறிப்பதாக தோன்றவில்லை...!

மனைவியிடம் சண்டை போட்டு கிளம்பிய எனக்கு
பின்னால் வந்த சைக்கிள்காரன் கடைசியா சொன்ன வார்த்தையைத் தவிர...!
"ஏண்டா... வீட்டுல சொல்லிட்டு வந்தியா...!"


Tuesday, March 29, 2011

ஓட்டு...!


பரிதாப ஓட்டு...
பணத்துக்கு ஓட்டு...

சினிமா ஓட்டு...
சாதிக்கு ஓட்டு...

கோப ஓட்டு...
கள்ள ஓட்டு..

இப்போது-
இலவச ஓட்டுரிமையை
இலவசங்களுக்கு விற்ற ஓட்டு..

பாரதத்தில் எப்போது விழும்
பகுத்தறிவு ஓட்டு?

 

Wednesday, June 30, 2010

புன்னகை


எல்லோரிடமும் ஒரேமாதிரி
புன்னகைக்கிறாய்..
இருந்தாலும் நீ உதிர்த்த
சில கூடுதல் புன்னகைகளை
எனக்கென எண்ணி
அள்ளிக்கொண்டேன்..!

Saturday, February 20, 2010

பாம்பு பயம்

சின்ன வயதில்
பின்கதவைத் திறந்தவுடன்
பாம்பு கண்ட பயம்
ஆறாவது மாடி
குடியிருப்பில் கூட
அகலவில்லை

Thursday, November 5, 2009

திகில் ஹைக்கூ

நிலவில் இறங்கிய
ஆம்ஸ்ராங் கண்டான்
மனிதக்காலடித் தடங்கள்...!

விண்ணில் குதித்த
யூரிகாகரின் கேட்டான்
பறவைகளின் படபடப்பு...!

இடுகாட்டின்
கல்லறைக்குள்
பேச்சுச் சத்தம்...!

எதிர்வெயிலில்
முன்னால் விழுந்தது
என் நிழல்...!

நடுவானில்
ஒரு முக்கிய அறிவிப்பு
பைலட்டுக்கு நெஞ்சுவலி...!

Tuesday, October 20, 2009

கவிஞன்


மண்ணைப் பிசைபவன் குயவன்...!
மொழியைப் பிசைபவன் கவிஞன்...!
மரத்தை அறுப்பவன் தச்சன்...!
மனதை அறுப்பவன் கவிஞன்...!
செப்பைத் தட்டுவான் கொல்லன்...!
சிந்தையைத் தட்டுவான் கவிஞன்...!

Sunday, September 13, 2009

மாண்டபின் மரம்...


மாண்டபின்
மேலுலகம்
மரங்களுக்கு உண்டு...
தெண்டுல்கரின் மட்டை
சொர்க்கம் என்றது...!
தாதாவின் குண்டாந்தடி
நரகம் என்றது...!

Tuesday, August 11, 2009

இன்னொரு சுதந்திர தினம்

இந்தியாவுக்கு இன்னொரு
சுதந்திர தினம்..
பாரத மாதா
சீனியர் சிட்டிசனாகிவிட்டாள்...
வயதுக்கு
வருவதற்கு முன்பாகவே..!

Wednesday, March 4, 2009

அமெரிக்கா...!


அன்று இந்தியக் கழுதைகளுக்கும்
அமெரிக்காவிலிருந்து அழைப்பு..!
'ஜாவா' போஸ்டர் உண்டதன் விளைவு...!

இன்று அமெரிக்கர்களுக்கே வேலை விடுப்பு..!
வர்த்தகம் மந்தமடைந்ததால் திருமபு...!

Monday, December 8, 2008

நாணம்..!

மேகஆடையை அவிழ்த்து
ஆட்டம்போட்ட
மழைகண்டு
நாணத்தில்
ஒளிந்து கொண்டது ..!

ஆட்டம் முடிந்ததும்
வெட்கத்தோடு மெதுவாக
எட்டிப்பார்த்தது
ஐந்துமணிச் சூரியன்..!



Sunday, August 17, 2008

ஜனநாயகம்

ஜனநாயகத்தில்
வாக்காளர்கள்தான் நீதிபதிகளாம்..!
அப்படியானால்
வோட்டுப்போட்ட குற்றத்துக்காக
நீதிபதிகளுக்கு மட்டும் ஏன்
ஐந்தாண்டுகால
கடுங்காவல் தண்டனை?



கைரேகை

கைரேகையும் உன் கையில்...!
வாழ்க்கையும் உன் கையில்..!
கைரேகையின் கையில்
வாழ்க்கை இல்லை..!

Sunday, June 29, 2008

தெருவோரம்...

1

அந்த நடைபாதை பிச்சைக்காரனின்

மூச்சு நின்றவுடன்

அரசாங்க மருத்துவமனையின் பிணவறையில்

இடம் கிடைத்தது...!

2

கால்கள் கட்டப்பட்டு

தலைகீழாக தொங்கவிடப்பட்டு

மிதிவண்டியின் கைப்பிடியில்

பயணிக்கும்

கோழிகள் அறியாது

தன் இறுதிப்பயணத்தை...!

3

இந்த வாய்க்கரிசிமட்டும்

நேற்று கிடைத்திருந்தால்

பட்டினிச்சாவை

ஓரிருநாள்

தள்ளிப்போட்டிருக்கலாம்...!

காவிரிப் பிரச்சனை

ஆணையத்தால்
அரசியலால்
நீதிமன்றத்தால்
தீர்க்கமுடியாததை
வருடாவருடம்
தீர்த்துவைக்கிறது
மழை...!

சிகரெட்

அவன்
சிகரெட் மீது
பற்று வைத்தான்...!
சிகரெட் அவன்மீது
புற்று வைத்தது...!

Saturday, June 28, 2008

மாற்றம்

('கீற்று.காம்'ல் வெளிவந்தது)

ஏசுவின் அன்பு
மதமானது...!

புத்தரின் ஜென்
மார்கமானது...!

மார்க்சின் பொதுவுடமை
அரசியலானது...!

சங்கரரின் அத்வைதம்
தத்துவமானது...!

காந்தியின் அஹிம்சை
வெறும் சரித்திரமானது...!

கட்டுப்பாடு

('கீற்று.காம்'ல் வெளிவந்தது)

வாழ்க்கையில் எதுவுமே
என் கட்டுப்பாட்டில் இல்லை...!

எனக்கு
வாழ்கைப்பட்டவளைத் தவிர...

வளுக்கு
அதுவும் இல்லை...!