Monday, July 20, 2015

சோழ நாட்டில் சில மணி நேரங்கள்....


இந்த வருடமும் எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் நடத்தும் 'பொன்னியின் செல்வன்' மெகா நாடகத்துக்கு சென்றிருந்தேன். கல்கியின் இந்த பெரும் புதினத்தை நான்கு மணிநேரத்திற்குள் அடக்கி காட்சித் திரையில் கொண்டு வந்த எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் மற்றும் மேஜிக் லாண்டேன் குழுவினருக்கும் ஒரு பெரும் பூங்கொத்துடன் வாழ்த்துக்கள்.

 வீராணம் எரிக்கரைஒரம் ஆடிபெருக்கு விழாக் கொண்டாட்டங்களுடன் துவங்கும் காட்சிகள், நம்மை அப்படியே ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. பெண்கள் ஆடிப் பாடிகொண்டே ஏரியில் விளக்குகளை மிதக்க விடுவது, அங்கு நடக்கும் பூ மற்றும் காய்கறி வணிகம், விழாவை வேடிக்கை பார்க்க வருவோர், அங்கும் இங்கும் நடந்து சென்று கொண்டிருக்கும் கோட்டை காவலர்கள் என்று அப்படியே நம் பண்டைய கலாச்சாரத்தை அப்படியே நம் கண் முன் நிறுத்துகிறது. பின் நாடகம் விறுவிறுவென வீறுநடை போட்டு நகர்கிறது. வந்திய தேவன் வருகை, கடம்பூர் மளிகை நள்ளிரவு கூட்டம்,   வந்திய தேவன் கோட்டைக்குள் நுழைதல், நந்தினி குந்தவை சந்திப்பு, இலங்கை பயணம், பொன்னியின் செல்வன் அறிமுகம், என்று தடதடவென பயணித்து  சேந்தன் அமுதன் மகுடம் சூட்டும் வரையிலான காட்சிகளை, பல அத்தியாயங்கள் கொண்ட கல்கியின் புதினத்தை, நான்கே மணி நேரத்தில் அதன் சாரமும் வீரமும் பிரமாண்டமும் சற்றும் குறையாமல் நமக்கு விருந்தளிதிருக்கிரார்கள்.

 

நாடகம் முழுவதும் ஒரேவிதமான காட்சி அமைப்புதான்... கோட்டை போன்ற ஒரு அமைப்பு.. மேடையின் இரு பக்கத்திலும் மாடம் போன்று ஒரு முகர்ப்பு... அவ்வளவுதான். அனால் அதையே கடம்பூர் கோட்டையாகவும், சோழ சக்ரவர்த்தியின் மாளிகையாகவும், ஆபத்துதவிகள் பதுங்கும் காடாகவும், வீராணம் ஏரியாகவும் மற்றும் கல்கி வர்ணித்த அதனை இடங்களையும் இந்த ஒரே காட்சி அமைப்பில் உருவகப்படுதியுள்ளர்கள்.  இவற்றுடன், காலை, அந்தி, நள்ளிரவு போன்ற பொழுதுகளை சித்தரிக்கும் ஒளி அமைப்புகளும்,  வரலாற்று காட்சிகளுக்கே உரித்தான அபாரமான இசையும் ஒரு பெரும் பிரம்மாண்டத்தை நமக்கு நாடக வடிவில் தந்திருக்கிறார்கள். பூங்குழலி உதவியுடன் வந்தியதேவனின் நள்ளிரவு இலங்கை படகுப் பயணம், பார்த்திபேந்திரனின் வாள் சண்டை, குரவைக்கூத்து, பொன்னியின் செல்வனின் யானை சவாரி போன்றவை நம் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.

பொன்னியின் செல்வன் நாடகம் நடந்த பத்து நாட்களும் மியூசிக் அகாடமி அரங்கம் நிரம்பி வழிந்தது. சென்ற வருடத்தைப் போலவே. பொன்னியின் செல்வன் நாவலை பிரமித்துப் படித்திருந்த மக்கள், தாங்கள் கற்பனை செய்து வைத்திருந்த கதாபத்திரங்களை கண்டவுடன் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தார்கள். பொன்னியின் செல்வன், வந்திய தேவன், ஆதித்ய கரிகாலன், நந்தினி, குந்தவை அறிமுகங்களின் போது ஏதோ ரஜினி படம் போல விசிலடித்து கைத்தட்டி மகிழ்ந்தார்கள். கல்கி எழுத்தின் வீச்சு எவ்வளவு தூரம் இருக்கிறது என்பது புரிகிறது.

பொன்னியின் செல்வன் என்பது சில பாகங்களாக எடுக்கவேண்டிய  திரைப்படம். அல்லது சில வருடங்கள் ஓடக்கூடிய மெகா சீரியல். அதை சில மணிநேர நாடக வடிவில் கொண்டு வந்து சாதனை புரிந்திருக்கிறார்கள்.

நாடகம் முடிந்து வெளியில் வந்தவுடன், சோழ சாம்ராஜ்யத்துக்குள் உலவி வந்த உணர்வு  ஏற்பட்டது. 

Tuesday, July 14, 2015

நால்வர் அணியின் கடைசி மனிதர்

தமிழ் திரைஇசையின் உச்சநிலை என்றால் அது அந்த நால்வர் சேர்ந்து பணியாற்றிய அந்த கால கட்டம்தான். சிவாஜி-கண்ணதாசன்-டிஎம்எஸ்-எம்எஸ்வி இந்த நால்வர் கூட்டணியில் உருவான பாடல்கள் தான் தமிழ் திரையுலகின் சாகாவரம் பெற்ற பாடல்கள். எம்எஸ்வி யின் இசை வடிவத்துக்கு கண்ணதாசன் மொழி வடிவம் கொடுக்க, டிஎம்எஸ் அதற்கு குரல் வடிவம் கொடுக்க, சிவாஜி அதற்கு நடிப்பு வடிவம் கொடுத்தார்.

பொன் ஒன்று கண்டேன் ...
ஆறு மனமே ஆறு .. அந்த ஆண்டவன் கட்டளை ஆறு..
அமைதியான நதியினிலே ஓடும் ..
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா ..
கொடி அசைந்ததும் காற்று வந்ததா ..
மலர்த்தும் மலராத பாதி மலர் போல ..


போன்ற காலம் கடந்தும் நிற்கின்ற பாடல்களை கொடுத்த கூட்டணி அது. அந்த நால்வர் அணியின் கடைசி மனிதர் மெல்லிசை மன்னர் எம்எஸ்வி இன்று மறைந்து விட்டார்.

தூய சாஸ்த்ரிய சங்கீதமாக இருந்த திரை இசையை மெல்லிசை வடிவத்துக்குள் மாற்றி  திரை பாடல்களை பாமரனுக்கும் கொண்டு சென்றவர் எம்எஸ்வி. அதேசமயம், கனமான கர்நாடக இசை ராகங்களிலும் தன்னை பொருத்திக்கொண்டார். - மாதவி பொன் மயிலாள், உள்ளத்தில் நல்ல உள்ளம், நீயே உனக்கு என்றும் நிகரானவன் போன்ற பாடல்கள் அதற்கு சாட்சி.

அதேபோல், பல மேற்கத்திய பாணி இசையும் தமிழில் புகுத்தியுள்ளார் (துள்ளுவதோ இளமை, யார் அந்த நிலவு, முத்து குளிக்க வாரீகளா). நினைத்தாலே இனிக்கும் படத்தில் அவரது புதிய பாணி இசையை கேட்க முடியும். டிஎம்எஸ் மட்டுமல்லாமல் பிபிஎஸ், பி சுசீலா போன்ற மகத்தான பாடகர்களின் உன்னதமான இசையை வெளிக்கொணர்தவர். இன்றைக்கும் நாம் லயிக்கும் பி சுசீலாவின் 'சிட்டு குருவி முத்தம் கொடுத்து', 'உன்னை ஒன்று கேட்பேன்', 'கண்கள் எங்கே', 'நாளை இந்த வேளை பார்த்து' போன்ற பாடல்கள் அவர் இசையில் உதிர்ந்த முத்துக்கள். பிபிஎஸ்ஸின் 'மயக்கமா கலக்கமா', 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்', 'ரோஜா மலரே ராஜகுமாரி' போன்ற பாடல்கள் அவர் இசையில் தெறித்த மாணிக்கங்கள்.

எம்ஜிஆரின் கவர்ச்சி பிம்பம் வளர்ந்ததற்கு எம்எஸ்வியின்  பங்கு மகத்தானது. எம்ஜிஆர் மறைந்து பல ஆண்டுகள் ஆனபிறகும் கூட, இன்றும் தேர்தல் நேரத்தில் அவர் பாடல்கள் மட்டுமே ஒலிக்கப்படுகின்றன. 'நான் ஆணையிட்டால்', 'அதோ அந்த பறவைபோல வாழவேண்டும்' என்ற பாடல்களை கேட்டு துள்ளிக்குதித்து இரட்டை இலைக்கு ஓட்டுபோடும் தலைமுறை இன்றும் இருக்கிறதென்றால் அது எம்எஸ்வி யால் மட்டுமே சாத்தியம். எம்ஜியாருக்கும் சிவாஜிக்கும் தத்துவம், காதல், சோகம் என்று எல்லா உணர்வையும் எம்எஸ்வி தன்  இசையால் தொட்டிருந்தாலும் இருவருக்கும் அவ்வளவு வித்தியாசங்களை கொண்டு வந்தார். தத்துவத்துக்கு எம்ஜிஆர்  பாணியில் 'உலகம் பிறந்தது எனக்காக' என்று உற்சாகமாகவும் சிவாஜிக்கு 'சட்டி சுட்டதடா கை  விட்டதடா...' என்று சோகமாகவும் இசைத்தார். காதல், எம்ஜியாருக்கு குதூகலத்தோடு 'நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான்' என்றும் சிவாஜிக்கு மென்மையாக 'முத்துக்களோ கண்கள்' என்றும் இசைக்கபட்டது.

"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை...
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை..."

இது கண்ணதாசன் தனக்காக எழுதிய வரிகள்... இது எம்.எஸ்.வி க்கும் பொருந்தும். இந்த காற்று மண்டலத்தில் அவரது இசை என்றும் கலந்திருக்கும். உலகம் முழுவதும் உள்ள  தமிழர்களின் காதுகளில் அவரது சங்கீதம் ஒலித்துtகொண்டே இருக்கும்...

இசைக் கலைஞர்கள் மரணிப்பதில்லை... அவர்கள் தங்கள் இசை மூலம் மக்களிடம் வாழ்ந்துகொண்டே இருகிறார்கள்...  காலம் காலமாய்... 
 

Sunday, September 9, 2012

சில டப்ளின் காட்சிகள்...

 
ஒரு புறநகர் ரயில்வே ஸ்டேஷன் 
வாழ்வின் அந்திமகாலத்தை நிம்மதியாகக்
கழிக்கும் ஒரு டப்ளின் ஜோடி 

இந்த ஊர் பறவைகளுக்கும் இப்படிதான்..
வித்தியாச வண்ணத்தில் உயரமானவர் 


சாம்பல் நிற காண்டாமிருகம் 
டப்ளின் ஜூவில் ஒரு கம்பீர புலி 

டப்ளின் சங்கமம்


நம்ம ஊர் சென்னை சங்கமம் போலவே டப்ளினில் 'திருவிழா.. எங்க தெரு விழா' நடக்கிறது. பல்வேறு பூங்காக்களில் தெருக்களில் நடக்கும் இந்த 'டப்ளின் சங்கமத்துக்கு' கூட்டம் அலை மோதுகிறது. ஒருமாத காலம் அயர்லாந்தில் தங்கியிருந்த காலத்தில் இவ்வளவு பேர் ஒரே இடத்தில்  கூடியிருந்ததை அப்போதுதான் பார்த்தேன். 

ஒரு பூங்காவில் கழைகூத்தாடி நிகழ்ச்சி, தொடர்ந்து பாட்டு நடனம் எல்லாம் நடந்துகொண்டிருந்தது. பூங்காவை சுற்றி பல பல கடைகள் - பல துரித உணவுகள், ஐஸ்கிரீம், பாப்கார்ன் எல்லாம்.. அதை சுற்றியுள்ள தெருவில் போக்குவரத்துக்கு தடை செய்பட்டு சிறுவர்களுக்கான பல விளையாடுக்கள் நடந்துகொண்டிருந்தன.

இந்த நிகழ்சிகள் பல ஆண்டுகளாக கோடையின்போது நடக்குமாம். 'பல ஆண்டுகளாக' என்று சொல்லும்போதே அரசியல் கலக்காமல், ஆட்சி மாற்றத்தால் நிறுத்தி வைக்கப்படாமல், மக்களை மட்டும் மனதில் வைத்து நடைபெற்றுவருகிறது என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. 









விக்லோ - அயர்லாந்தின் தோட்டம்


டப்ளினிளிருந்து ஒரு மணி நேர பஸ் பயணத்தில் இருக்கிறது அயர்லாந்தின் தோட்டம் என்று அழைக்கப்படும் 'விக்லோ' மாவட்டம். முழுவதும் அடர்த்தியான பச்சைப் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டிருக்கும் மலைத்தொடர்... பசுமையைத் தவிர வேறொன்றும் அறியாத பிரதேசம்.  இயற்கை வளங்கள் போதாதென்று அங்கங்கே செயற்கை புல்வெளிகள் வேறு..

விக்லோவை 'ஐரோப்பாவின் ஹாலிவுட்' என்று கூட அழைகிறார்கள்.. அந்த அளவுக்கு பல காலமாக பல சினிமா படப்பிடிப்பு இங்கு நடக்கிறது (கோலிவுட்க்கு ஊட்டி மாதிரி ஹாலிவுட்க்கு விக்லோ போல).

சாலி கேப் என்று ஒரு இடம்.. இதன் மலைப்பாதையில் சைக்கிள் ஓட்டுவது மிகப் பிரபலம்.. பல கிலோ மீட்டர்கள் நீளும் இந்த மலைபதையில் விக்லோவின் அழகை ரசித்துகொண்டே சைக்கிள் ஓட்டுவது பலரின் பொழுதுபோக்கு. சாலி கேப் பாதையில் அனைவரையும் ஈர்க்கக்கூடிய ஒரு இடம் கின்னஸ் ஏரி, கின்னஸ் எஸ்டேட் இங்கு இருப்பதால் இந்தப்பெயர்.. இங்கு கின்னஸ் பற்றி குறிப்பிட்டாக வேண்டும்.. கின்னஸ் என்பது அயர்லாந்தின் பிரபலாமான பீர் தயாரிக்கும் கம்பெனி, கிட்டத்தட்ட 250  வருடங்களாக இயங்கும் நிறுவனம் (இதற்கும் கின்னஸ் சாதனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை). பசுமை படர்ந்த மலைகளின் நடுவே உள்ள ஒரு பள்ளதாக்கில் கருநீல நிறத்தில் உறைந்து போன ஒரு தண்ணீர் பரப்பாக காட்சி அளிக்கிறது அந்த ஏரி. அதன் கரையில்  கவர்ச்சியான வெள்ளை மணல்கள்.. இந்த இயற்கை பேரழகை முழுவதும் உள்வாங்கிக்கொள்வதற்கே கொஞ்ச நேரம் பிடிக்கிறது.. இதன் அழகில் லயித்த ஒரு பீர் பிரியர் 'இந்த எரியே ஒரு பீர் கோப்பை போலவும் வெள்ளை கரைகள் பீர் நுரை போலவும் தெரிகிறது இல்லையா' என்றார். (படம் பார்க்க..) இதை பார்த்ததுமே அவருக்கு போதை ஏறிவிட்டது போலும்.

நாங்கள் பயணித்த பேருந்தின் ஓட்டுனர் நடத்துனர் எல்லாம் ஒருவரே.. மிக திறமையான ஆசாமி.. லாவகமாக பேருந்தை ஓடிக்கொண்டே ரேடியோ ஜாக்கி போல இடைவிடாது பேசிக்கொண்டே வந்தார். ஒவ்வொரு இடத்தை பற்றியும் விவரித்துக்கொண்டே வந்தவர் இந்த இடம் இந்த திரைப்படத்தில் வருகிறது, இதை பற்றி இவர் இப்படி எழுதியிருக்கிறார் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே வந்தார். அவருடைய ஆர்வமும் ஈடுபாடும் திறமையும் ரொம்பவே வியக்க வைத்தது. இங்கு காட்டுவிலங்குகள் உண்டா என்று யாரோ கேட்டதற்கு "விக்லோவில் காட்டு விலங்குகள் எல்லாம் இல்லை.. ஏன் பொதுவாகவே அயர்லாந்திலேயே ஆபத்தான விலங்குகள் எதுவும் கிடையாது".. என்றவர் கொஞ்சம் நிறுத்தி "இங்குள்ள அரசியல்வாதிகள் தவிர.." என்று கமென்ட் அடித்தார்.


ஜாலியான சைக்கிள் பயணம் 
பீர் பாட்டில் ஏரி 

அழகு சேர்க்கும் கோட்டை 
தெளிந்த நீரோடை 

வண்ண வண்ண விக்லோ 

Sunday, August 19, 2012

ஐரோப்பாவின் கடைகோடி தேசத்தில்...

அயர்லாந்து... ஐரோப்பாவின் கடைகோடி தீவு தேசம்... இதில் வட அயர்லாந்து பிரிட்டன் வசம்  இருக்க தென் அயர்லாந்து மட்டும் தனி நாடக,   அயர்லாந்து குடியரசாக இருக்கிறது. கிழக்கே பிரிட்டன் தீவு இருக்க மேற்கே 5000 கிலோமீட்டருக்கு வெறும் கடல்.. கடல்.. அட்லாண்டிக் பெருங்கடல்.  

இதன் தலைநகர்  டப்ளினில் ஒரு மாத காலம் தாங்கும் வாய்ப்பு கிடைத்தது. 

மிக அழகான சிறிய நகரம் டப்ளின். மொத்தமே 18 லட்சம் பேர் வசிக்கும் நகரம்.. (அயர்லாந்து மக்கள்தொகையே 44 லட்சம்தான்.. சென்னையை விட குறைவு). நகரின் மையப்பகுதி தவிர எங்கும் போக்குவரத்தே இல்லை.. பெரிய பெரிய கட்டிடங்கள் இல்லை... ஒரே  மாதிரியான செங்கல்  தெரியும்படியான பிரிட்டிஷ்  பாணி வீடுகள். மேலே  கண்டிப்பாக ஒரு புகைபோக்கி, வீட்டுக்கு  முன்புறம் அழகிய தோட்டம்,  தோட்டத்தில்  வண்ண வண்ண ரோஜாப்பூக்கள்.. டப்ளின் முழுவதும் இதே காட்சிகள்தான். அயர்லாந்தின் செல்லப் பெயர் 'மரகத தேசம்'. எங்கும் பசுமையாக காட்சியளிப்பதால் அதற்கு இந்த பட்டம் - டப்ளினும் இதற்கு குறைந்தது இல்லை. எங்கும் எல்லா இடத்திலும் புல்வெளி.. புல்வெளி.. மரங்கள்.. மரங்கள்.. எங்கும் செழுமையான பசுமை.. அதுவும் காலைநேர டப்ளின் அழகை 'புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா..' என்று தாராளமாகப் பாடலாம்.

டப்ளினில் பிரச்சனையான ஒரு  விஷயம் அதன் வானிலை. டப்ளின்  வானிலையைப்  பற்றி  குறிப்பிடும்போது   'ஒரே நாளில் நான்கு பருவம் (four seasons in a day ) என்று சொல்லுவார்கள். ஒரே நாளில் வெயில், மழை, குளிர், காற்று என்று மாறிக்கொண்டே இருக்கும் பருவநிலை. அதுவும் 30  நிமிடங்களுக்கு ஒருமுறை அடுத்து என்ன  வரப்போகிறது என்று கணிக்கமுடியாத வானிலை மாற்றம். மழை பெய்கிறதே என்று குடை எடுத்துக்கொண்டு போனால் நல்ல வெயில் அடிக்கும். வெயில் அடிக்கிறதே என்று ஸ்வெட்டர் போடாமல் போனால் குளிர்காற்று ஊசிபோல குத்தும். ரொம்பவும் குளிருகிறதே என்று ஜெர்கின் அணிந்துசென்றால் அப்போதுதான் நல்ல வெயில் அடித்து கடுப்பேத்தும். எனவே எப்போதும் வெளியேசெல்லும்போது   குடை, ஸ்வெட்டர், ஜெர்கின் இத்யாதிகளை கைவசம்  வைத்திருப்பது அவசியம்.

பேருக்கு ஏற்றால்போல அயர்லாந்து மக்கள் அயராது உழைப்பவர்கள் எல்லாம் கிடையாது.. எல்லோரும்  கொஞ்சம் சுகவாசிகள்தான்...! மாலை ஐந்து ஐந்தரை மணிக்கெல்லாம் வீடு வந்து சேர்ந்து நாயுடன் நடை, மெல்லோட்டம், சைக்கிள் பயிற்சி என்று வெளியே கிளம்பிவிடுவார்கள். அதுவும் கொஞ்சம் வெயில் அடித்தால் போதும்.. ஒரே கொண்டாட்டம்தான்.. வெப்பஅளவு   அதிகரிக்க அதிகரிக்க அதற்கேற்றாவாறு அவர்கள் உடைகளும்   குறைந்து கொண்டே வருவதைக் காணலாம். ஆனால் அயர்லாந்து பொருளாதாரம் இப்போது இருக்கும் மந்த நிலையில் வேலையின்மை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துவரும் இந்த நிலையில் இவர்கள் இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படியே சுகவாசிகளாக காலம்  தள்ளமுடியும் என்று தெரியவில்லை..

டப்ளின் பற்றி இன்னும் சுவாரசியமான தகவல்கள் வரும் பதிவுகளில்...

Tuesday, July 17, 2012

கட்சி கொடி இருந்தால் சுங்கம் ரத்து


கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பழைய மகாபலிபுரம் சாலையில் (ராஜீவ் காந்தி சாலை) பெருங்குடி முதல் நாவலூர் வரை சுங்கசாவடி அமைத்து கார், பஸ் மற்றும் கனரக வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்துக்கொண்டிருக்கிறார்கள். இதை நிர்வகிப்பது தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்துறை (TNRDC). ஏற்கனவே இது மிக அதிகம் என்று பலர் புலம்பிக் கொண்டிருக்கும் வேளையில் இப்போது ஜூலை முதல் கட்டணத்தை வேறு உயர்த்தியிருக்கிறார்கள். புதிய கட்டணத்தின்படி இந்த சாலையில் ஒருமுறை சென்று திரும்புவதற்கு கார்களுக்கு 38 ரூபாயும் பஸ்களுக்கு 100 ரூபாயும் வசூலிக்கப்போகின்றனர்.


ஆனால் இந்த கட்டணமெல்லாம் சில குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டும் கிடையாது... அது வேறு எதுவும் இல்லை.. கட்சி கொடியோ அரசியல் தலைவர்கள் படங்களோ உள்ள வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்பது இங்கு எழுதப்படாத விதி. அவர்கள் மட்டும் இலவசமாக எவ்வளவுமுறை வேண்டுமானாலும் இந்த சாலையை உபயோகப்படுத்தாலாம். கட்சி கொடிகள் உள்ள வாகனங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது என்பது தினமும் நடக்கும் ஒரு நிகழ்வு. நான் இதைப் பற்றி அந்த சுங்கசாவடி அதிகாரிகளிடம் பலமுறை கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்கள் "என்ன சார் செய்வது.. அவர்களிடம் கட்டணம் கேட்டால் தகராறு செய்கிறார்கள்.. அதனால் அவர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்பது மேலிடத்து உத்திரவு" என்றார்.

ஆனால் ஒன்று... இந்த 'கட்சி கொடி' சலுகையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது... எல்லோருக்கும் இந்த சலுகையில் சமத்துவம். என்ன.. போன வருடம் மே மாதம் வரை தி.மு.க வாகனங்கள் பெரும்பான்மையாக இருக்கும்.. இப்போது அ.தி.மு.க வாகனங்கள்... அவ்வளவுதான் வித்யாசம். சில தே.தி.மு.க, ப.ம.கா கொடிகள் உள்ள வாகனங்கள் கூட கட்டணம் செலுத்தாமல் செல்வதை நான் பார்த்திருக்கிறேன். இந்த நாட்டில் பொதுமக்களுக்கு ஒரு விதி, அரசியல்வாதிகளுக்கு ஒரு விதி என்பது சுங்கக்கட்டணத்திலும் கூட பிரதிபலிக்கிறது.

இந்த சாலையில் தினமும் காரில் பயணிபவர்களுக்கு ஒரு டிப்ஸ்... 50 ருபாய் செலவழித்து எதாவது ஒரு கட்சிக்கொடியை உங்கள் காரில் மாட்டிவிட்டால் போதும்... தினமும் 38 ருபாய் மிச்சப்படுத்தலாம்.