Tuesday, April 14, 2009

சர்ச்சில் தோற்றது ஏன்?

இந்தியாஅடுத்த பாராளுமன்ற தேர்தலை சந்திக்கப்போகிறது. என்னதான் இங்கு அரசியல் சீரழிந்தாலும் இந்திய ஜனநாயகம் அசைக்கமுடியாத தூணாக இருக்கிறது... பல பெரும் தலைவர்களையே புரட்டிப்போட்டிருக்கிறது.
ஆனால் இவை எல்லாவற்றையும் விட ஜனநாயகத்தின் வலிமையை இங்கிலாந்து மக்கள் ஒரு முறை நிரூபித்திருகிறார்கள்.

அது 1945ம் வருடம்.. இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்த நேரம். இங்கிலாந்துக்கு மட்டும் அல்ல, ஐரோப்பாவுக்கே மகத்தான வெற்றியை தேடித்தந்தார் வின்சென்ட் சர்ச்சில். போரின் இடையில் இங்கிலாந்தில் பிரதமராக பதவியேற்ற சர்ச்சில், தன் பேச்சாற்றல், அபாரமான போர்த்திறன் மூலம் மக்கள் மனதில் ஒரு மகத்தான தலைவனாக இடம் பிடித்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் 83 % மக்கள் சார்ச்சில்தான் உண்மையான் ஹீரோ என்றனர். இந்த சமயத்தில்தான் இங்கிலாந்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. சர்ச்சில் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியும் லேபர் கட்சியும் களத்தில் குதித்தன.

வெற்றிக்களிப்பில் தேர்தலை சந்தித்தார் சர்ச்சில்..! எல்லோரும் கன்சர்வேடிவ் கட்சி மாபெரும் வெற்றிபெறும், சர்ச்சில்தான் மீண்டும் பிரதமர் என்பதில் இமியளவும் சந்தேகம் இல்லை என்று நம்பினார்.

ஆனால் முடிவு எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்தது... சர்ச்சில் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அதுவரை இல்லாத அளவுக்கு தோல்வியை தழுவியது.. எதிர்கட்சியான லேபர் கட்சி மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

சர்ச்சிலை தோற்கடித்தற்கு மக்கள் சொன்ன காரணம்: "சர்ச்சில் ஒரு சிறந்த அரசியல் வித்தகர். போரை கையாள்வதில் வல்லவர்.. அவரைத்தவிர யுத்த காலத்தில் ஒரு சிறந்த பிரதமர் இருக்க முடியாது. ஆனால் இப்போது போர் முடிந்துவிட்டது. உடைந்துபோன பொருளாதாரத்தை நிலை நிறுத்தவேண்டும்.. இங்கிலாந்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.. இவற்றுக்கெல்லாம் லேபர் கட்சிதான் சரி.. சர்ச்சிலோ, கன்சர்வேடிவ் கட்சியின் கொள்கைகளோ இதற்க்கு உதவாது.. அவர்கள் போர் முனையில் கெட்டிக்காரர்கள்.. அனால் பொருளாதார சீரமைப்புக்கு அவர்கள் உதவமாட்டார்கள்..!"

தனிப்பட்ட ஒருவரின் சாதனையையும் ஒரு கட்சியின் கொள்கைகளையும் பிரித்துப்பார்க்கும் அளவுக்கு இங்கிலாந்து மக்களின் சிந்தனை மேம்பட்டு இருந்தது. சினிமா பிம்பங்களையும், வெற்று கோஷங்களையும், மரணங்களையும் நம்பி ஓட்டு போடும் நம் மக்கள் எப்போது இதுபோல் சிந்தித்து ஓட்டு போடப்போகிறார்கள்?

Saturday, April 4, 2009

தன் ஃபெராரி காரை விற்ற துறவி


சமீபத்தில்
நான் படித்த புத்தகம்... ராபின் சர்மா எழுதிய 'the monk who sold his ferrari' ... 2007ல் வெளியான பிரபலமான இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு இப்போதுதான் நேரம் கிடைத்தது.

வாழ்கையில் கொடிகட்டிப் பறந்த ஒரு கோடீஸ்வர வழக்கறிஞர் இமயமலை சென்று அங்குள்ள சிவானா யோகிகளிடம் சென்று வாழ்கையில் உண்மையை உணர்த்து கொள்கின்றார். மேர்க்கத்திய நாகரீகத்தில் திளைத்து பணம், தொழில் ஒன்றையே குறிக்கோளாக நம்பி, வாழ்கையின் இனிமையான பக்கங்களை தொலைத்த ஜுலியன் என்ற மனிதருக்கு இந்திய தத்துவங்கள் புதிய வழி காட்டுகின்றன. புத்துணர்ச்சி பெற்ற புது மனிதனாக திரும்ப வந்து தன்னுடன் பணியாற்றிய ஜானிடம் தன் அனுபவங்களைப் பகிந்ர்துகொள்வதே இந்தப் புத்தகம்.

ராபின் சர்மாவின் எழுத்துக்கள் அப்படியே சத்குரு ஜக்கி வாசுதேவின் சிந்தனைனையை ஒத்துப்போகிறது. பாசிடிவ் எண்ணங்களை வளர்த்துக்கொள்வது, எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது, வாழ்கையின் அந்தந்த நிமிடங்களை ரசிப்பது, இயற்கையை போற்றுவது, தினம் யோகா என்று சத்குருவின் தத்துவங்கள் அப்படியே இந்தப்புத்தகத்தில் பிரதிபலிக்கிறது. வறட்டு தத்துவங்களை போதிக்கும் கனத்த புத்தகமாக இல்லாமல் எளிய நாட்டையில் இயல்பான ஆங்கிலத்தில், வாழ்கையை ஆனந்தமாக வைத்துக் கொள்வதைப்பற்றி விளக்கியிருக்கிறார் ஆசிரியர். ஆனந்தமாக இருப்பதற்கு ஒன்றும் மாயவித்தைகள் தேவையில்லை... வாழ்க்கைமுறையை கொஞ்சம் மாற்றி அமைத்துகொண்டால் போதும்.. என்பது இந்தப் புத்தகத்தின் சாராம்சம்.

இதில் குறிப்பிட்டிருக்கும் வாழ்கைக்கு தேவையான உத்திகள் எல்லோருக்கும் பொதுவானவை.. எவரும் பின்பற்றக்கூடியவை.. ஒவ்வொரு பகுதியும் படித்து முடித்தவுடன் ' அட.. சரிதான்' என்று நம்மை நாமே உணரக்கூடியவை. புத்தகம் படித்து முடித்ததும் ஜுலியனைப்போல நாமும் புத்துணர்ச்சி பெற்று புது மனிதனாக உணர்வோம்... நம் எண்ணங்கள் சிறிதளவேனும் தூய்மைப்படுவது உறுதி.

இதில் எனக்கு பிடித்த ஒரு சொலவடை: "வாழ்கையின் இனிமையை அனுபவிப்பதற்கு நேரமில்லாமல் வெறும் பொருள், புகழ் ஈட்டுவதிலேயே கவனம் செலுத்துவது, 'வேகமாக கார் ஓட்டிக்கொண்டிருக்கிறேன்... பெட்ரோல் போட நேரமில்லை' என்பத்தைப் போல.."

Sunday, March 22, 2009

நாளைய விடியல் - 2

நாளைய விடியல் நிரந்தரம் ஆகும்..!
நம்பிக்கை உனக்குள் நங்கூரம் போடும்..!
வாழ்க்கை என்பது உன் வசமாகும்..!
வாழ்ந்துப்பார்த்தால் உண்மை புரியும்..!

தினம் தினம் விழித்தெழு எதிர்பார்போடு...!
நித்தம் பணிகளைப் பட்டியல் போடு...!
அன்றயபணிகளை அன்றே முடித்திடு - பின்
இல்லை உறக்கம் ஏமாற்றத்தோடு...!

மனித சரித்திரத்தைப் புரட்டிப்பார் - உன்
முன்னோரை கொஞ்சம் நினைத்துப்பார் - அவர்
பதித்த தடங்களை எண்ணிப்பார் - பின்
நீசெல்லும் பாதை விளங்கும்பார்...!

Sunday, March 8, 2009

இலவச காய்ச்சல்


கடந்த தமிழக தேர்தலின் கதாநாயகன் 'இலவச அறிவிப்புகள்'. தி.மு.க வின் கலர் டெலிவிஷன், இலவச வீடுமனை பட்டா அறிவிப்புகள் யாரும் எதிர்ப்பார்க்காதது...! கொஞ்சம் சுதாரித்துக்கொண்டஅ.தி.மு.க 'இலவச கம்யூட்டர்'களை அறிவித்தது. டி.வி., கம்யூட்டர், டேப்-ரெகார்டர், பிரிட்ஜ் என்று விவேக் அண்டு கோ கணக்காக எல்லா வீட்டு உபயோகப் பொருட்களும் இலவசமாக அறிவிக்கப்பட்டுவிட, என்ன செய்வது என்று திகைத்த விஜயகாந்த், கோவில்களில் இலவச பகவத்கீதை, மசூதிகளில் இலவச குரான் என்று ஏதேதோ சொல்லிப்பார்த்தார்.. கடைசியில் கலர் டி.வி மட்டுமே வென்றது..

இப்போது
இந்த இலவச காய்ச்சல் ஆந்திராவையும் தொற்றிக்கொண்டு விட்டது. ஏக்கர் கணக்கில் நிலம், இலவச மின்சாரம், பெண் குழந்தை பிறந்தால் ஒரு லட்சம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார் புதிதாக கட்சி ஆரம்பித்த சிரஞ்சீவி. ஐ.டி. துறையில் ஆந்திராவை தலை நிமிரச்செய்த சந்திரபாபு நாயுடுவும் இதற்க்கு விதிவிலக்கல்ல... ஏழைகளுக்கு ரொக்கப் பணம் அறிவித்திருக்கிறார். இவர் ஏழைகளை மூன்று விதமாக பிரித்திருக்கிறார். பரம ஏழைகளுக்கு மாதம் 2000 ரூபாயும், 'சுமாரான' ஏழைகளுக்கு 1500 ரூபாயும், கொஞ்சம் 'பணக்கார' ஏழைகளுக்கு 1000 ரூபாயும் கொடுக்கப்போகிறாராம். அதுவும் ஏ.டி.எம் மூலமாக பணத்தை எடுத்துக்கொள்ளலாமாம் (நாயுடு ஹை-டெக் முதல்வராயிற்றே..) இதைத்தவிர இலவச கலர் டி.வி., இலவச மின்சாரம் என்று நீண்டுகொண்டே போகிறது பட்டியல். முதல்வர் ராஜசேகர ரெட்டியின் அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை.

கடைதேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போலத்தான் இருக்கிறது இந்த இலவச அறிவிப்புகள். எந்த கட்சியும் அரசாங்க வருமானத்தை எப்படி அதிகரிப்போம் என்று தேர்தல் வாக்குறுதி தருவதில்லை... செலவழிப்பதை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருகிறது.. ஏதாவது ஒரு கட்சி 'நாங்கள் இலவசமாக எதையும் தரமாட்டோம்.. அவற்றை மக்கள் தாங்களே வாங்கும் அளவுக்கு அவர்கள் தரத்தை உயற்றுவோம்' என்று சொல்கிறதா?

தேர்தல் பிரசாரத்திற்கு ஆயிரம் விதிமுறைகளை வைத்திருக்கும் தேர்தல் ஆணையமோ அல்லது நம் அரசியல் சட்டமோ இதுபோல இலவச அறிவிப்புகளை கண்டுகொள்வதில்லை. ஓட்டுப்போடுவதற்கு பணம் கொடுப்பதற்கும் எனக்கு ஒட்டுப்போட்டால் பணம் கொடுப்பேன் என்று வாக்குறுதி அளிப்பதற்கும் என்ன வித்தியாசம்? நாளை ஏதாவது ஒரு கட்சி சென்னை பெசன்ட் நகரில் 3 பெட்ரூம் அபார்ட்மெண்ட் இலவசமாக தருகிறேன் என்று சொன்னால், குறைந்தபட்சம் நாம் வாய்விட்டு சிரிக்கலாமே தவிர அதைத் தடுப்பதற்கு நம் நாட்டில் எந்த சட்டமும் கிடையாது.

கல்வி, மருத்துவம், (சில சமயங்களில்) விவசாயம் போன்ற துறைகளைதவிர வேறு எதையும் இலவசமாககொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற இலவசங்கள் மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றுவதைத்தவிர வேறு எந்த சாதனையும் செய்யாது. மக்களை தன்மானத்தோடு வாழவைக்கவேண்டிய அரசு, ஏழைகளுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவேண்டிய அரசு, அவர்கள் வாழ்கைத்தரத்தை மேம்படுத்தவேண்டிய அரசு, இப்படி ஒரு சமூகத்தையே அரசாங்கத்திடம் கையேந்த வைப்பது கொடுமையிலும் கொடுமை. அதைவிடக் கொடுமை இது ஏதோ சாதனை போல விளம்பரபடுதிக்கொள்வது..!

ஆனால் தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் பரவியுள்ள இந்த இலவச காய்ச்சல் ஆந்திரா மட்டுமல்லமல் எல்லா மாநிலங்களுக்கும் பரவக்கூடிய வாய்ப்புகள்தான் அதிகம் உள்ளது.

Wednesday, March 4, 2009

அமெரிக்கா...!


அன்று இந்தியக் கழுதைகளுக்கும்
அமெரிக்காவிலிருந்து அழைப்பு..!
'ஜாவா' போஸ்டர் உண்டதன் விளைவு...!

இன்று அமெரிக்கர்களுக்கே வேலை விடுப்பு..!
வர்த்தகம் மந்தமடைந்ததால் திருமபு...!

Monday, February 23, 2009

ஆஸ்கார் வென்ற தமிழன்


கடைசியில்
அந்த சாதனையை நிகழ்த்திவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.

சின்ன சின்ன ஆசையாய் தன் இசை பயணத்தை துவங்கியவர், திரையுலகத்தின் உச்சகட்ட ஆசையான ஆஸ்கார் விருதை வென்றுவிட்டார். இவர் இசைப்புயல் மட்டுமல்ல... ஆடம்பரமும் கவர்ச்சியும் மிளிரும் ஆஸ்கார் விழாவில் ஆர்பாட்டமில்லாமல் விருது வாங்கிய அமைதிப்புயல்... 'எல்லாப்புகழும் இறைவனுக்கே' என்று அடக்கத்தோடு சொன்ன ஆன்மீகப்புயல்.. ! 'அடக்கம் அமரருள் உய்க்கும்' என்ற வள்ளுவர் வாக்குப்படி புகழ் தன் தலை தொடாதபடி பார்த்துக்கொண்டதனால்தான் ரஹ்மானால் இந்த உச்சத்தை அடைய முடிந்தது.

பல அரசியல் சண்டைகளால் தலை குனிந்து நிற்கும் தமிழர்களை சில அங்குலங்களாவது தலைநிமிரச்செய்த ரஹ்மானுக்கு ஒவ்வொரு தமிழனும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறான்.

ஆஸ்கார் அரங்கில் தமிழில் நன்றி சொன்னதற்காக ரஹ்மானுக்கு இன்னொரு சிறப்புப் பூங்கொத்து...!

Sunday, February 22, 2009

சென்னை முதலைப் பண்ணை